Published : 25 Oct 2020 06:51 PM
Last Updated : 25 Oct 2020 06:51 PM

குருப்பெயர்ச்சி பலன்கள்; தனுசு ராசி அன்பர்களே! சொத்து சேரும்; ஆரோக்கியம் கூடும்; வியாபார லாபம்; உத்தியோகத்தில் மேன்மை; சாதிப்பீர்கள்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

இலக்கை குறித்து வைத்து வெற்றிகளைக் குவிக்கும் தனுசு ராசி வாசகர்களே!

வர இருக்கும் குருப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்று பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் இப்போது இரண்டாம் இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இரண்டாம் இடத்தில் குருபகவான் வருவது மிகப்பெரிய நன்மைகளையும் சிறப்பான பலன்களையும் தரும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் பலவிதமான குழப்பங்கள், மன நிம்மதி இல்லாத போக்கு, எப்படிப்பட்ட விஷயத்திலும் எளிதாகத் தீர்வு காணக்கூடிய நீங்கள் எந்தவொரு விஷயத்தையும் தீர்வு தெரியாமல் திக்குமுக்காடி இருந்திருப்பீர்கள். இனி உங்களுடைய திறமைகள், இயல்பான குணம் வெளிப்படப் போகிறது.

பொருளாதாரப் பிரச்சினைகளால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளையும், சிக்கல்களைச் சந்தித்து வந்த உங்களுக்கு இனி குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மன நிம்மதியும், மனநிறைவும் தரக்கூடியதாக இருக்கும். தேவையில்லாத அவதூறுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். இப்போது அந்த அவதூறு நீங்கும். உங்கள் மீதான மதிப்பு மரியாதை கூடும். தெளிவான சிந்தனை ஏற்படும் .ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். குடும்ப ஸ்தானம் வலுவடைவதால் சொத்துகள் வாங்குவது, சொந்த வீடு வாங்குவது போன்றவை நடக்கும். சகோதரர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். சிறிய பிரச்சினையில் பகைத்துக் கொண்ட நண்பர்களைக் கூட சமாதானப்படுத்தி மீண்டும் நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள். பெற்றோர்களின் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

இனி எந்த முயற்சி எடுத்தாலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்டிருந்த கடுமையான நெருக்கடிகள் இனி இருக்காது. மறைமுக எதிரிகளால் கடும் துயரத்தை அனுபவித்த நீங்கள், இப்போது மறைமுக எதிரிகளெல்லோரும் காணாமல் போகும் அளவுக்கு சூழ்நிலைகள் மாறும். உயரதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். முக்கியமான அலுவலகப் பணிகளை உங்களை நம்பிக் கொடுப்பார்கள். நீங்களும் சிறப்பாக செயல்பட்டு கொடுத்த பணியை நிறைவேற்றித் தருவீர்கள்.

சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள், இதுவரை இருந்த கடுமையான போக்குகள் மாறி தொழிலில் நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் காண்பீர்கள். தேங்கி நின்ற உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக விற்பனையாகும். ஊழியர்கள் பிரச்சினையில் செய்வதறியாமல் திகைத்து இருந்திருப்பீர்கள். இனி ஊழியர்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல், ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

பங்கு வர்த்தகத்தில் ஏகப்பட்ட இழப்புகளை சந்தித்து வந்த நீங்கள் இனி லாபத்தை மட்டுமே பார்க்கப் போகிறீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் முடங்கிக் கிடந்த அனைத்து வியாபாரங்களும் இப்போது படிப்படியாக விற்பனையாகும். லாபம் கொழிக்கும்.

வியாபாரிகளுக்கு சிறப்பான வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் தேடிவரும். கடன்கள் அனைத்தும் தீரும். மளிகைக் கடை, பலசரக்குக் கடை, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, காய்கறி வியாபாரம், போன்ற தொழில் வியாபாரக் கடைகளை நடத்தி வருபவர்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கும். உங்கள் வியாபாரத்தில் அதிகப்படியான வருமானம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அலுவலக ரீதியாக இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். இப்போது பணிபுரியும் நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைக்கும். அல்லது வேறு நிறுவனங்களில் நல்ல பதவியும், நல்ல ஊதியத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். சிறப்புமிக்க சாதனை ஒன்றைச் செய்து மிகப் பெரிய புகழ் வெளிச்சம் உங்கள் மீது விழக் காத்திருக்கிறது.

பெண்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கும். ஒருவித மன உளைச்சல், மன நிம்மதி இல்லாமல் தவித்து வந்திருப்பீர்கள். இப்போது உங்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான பெண்களுக்கு இப்போது புத்திர பாக்கியம் உண்டாகும். செல்வவளம் பெருகும். சொத்துகள் சேரும். ஆடை ஆபரணங்களை வாங்கிக் குவிப்பீர்கள். சொந்த வீடு கிடைக்கும். பாகப்பிரிவினையில் மிகப்பெரிய பங்கு கிடைக்கும். சகோதரர்கள் உங்களுக்காக பல உதவிகளையும் செய்து தருவார்கள். சுயமாக தொழில் செய்யும் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் தாமதப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சரியான கல்வியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாறியவர்களுக்கு இப்போது விரும்பிய கல்வி வாய்ப்பு கிடைக்கும். உயர்கல்வி கற்பதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். அயல்நாடுகளில் சென்று படிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

கலைஞர்களுக்கு இதுவரை இருந்த மந்தமான நிலை மாறி, இயல்பான நிலை திரும்பும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பல நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துகள் சேரும்.

பொதுவாக தனுசு ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் எந்த உடல் உபாதைகளும் வராது ஆரோக்கிய பாதிப்புகள் இனி அறவே இல்லாமல் போகும். நீண்டநாள் மருத்துவ பரிசோதனையில் இருப்பவர்களுக்கும், அதிகப்படியான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டவர்களுக்கும் இப்பொழுது அதில் பாதி அளவு குறையும். செயல்பட முடியாமல் இருந்தவர்கள் கூட இப்போது சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் - திட்டை குரு பகவான்

வேலையில்லாமல் இருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு ஏதாவது ஒருவகையில் வேலை வாய்ப்புகளை வாங்கித் தருவது நல்ல பலன்களைத் தரும். கல்வி தொடர்பான இலவசப் பயிற்சி வகுப்புகளை எடுப்பதும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x