Published : 25 Oct 2020 02:26 PM
Last Updated : 25 Oct 2020 02:26 PM

குருப்பெயர்ச்சி பலன்கள்; சிம்ம ராசி அன்பர்களே! மகாசக்தி யோகம்; மகாலக்ஷ்மி யோகம்; கடன் தொல்லை இல்லை; எதிலும் வெற்றி; தொழிலில் முன்னேற்றம்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் சிம்ம ராசி வாசகர்களே.

வர இருக்கும் குருப் பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை உங்களுக்குத் தர இருக்கிறது என்று பார்ப்போம்.

இதுவரை ஐந்தாம் இடத்தில் இருந்த குருபகவான் பலவித நன்மைகளையும் சிறப்பான பலன்களையும் கொடுத்திருப்பார். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தந்திருப்பார். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர உதவி செய்திருப்பார். சொந்த வீடு வாங்குதல், திருமணம் செய்து வைத்தல், புத்திரபாக்கியம் உண்டாகுதல் போன்ற சுப விஷயங்களைச் செய்து தந்திருப்பார். ஒரு சில விஷயங்கள் முழுமையடையாமல் இருந்தாலும் முன்னேற்றத்திற்கான வழி வகைகளைச் செய்து தந்திருப்பார்.

இப்போது குரு பகவான் ஐந்தாம் இடத்தை விட்டு ஆறாமிடம் செல்கிறார். "ஆறில் குரு ஊரிலேயே பகை" என்பார்கள். இதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்! இப்போது உங்களுக்கு ஒரு அச்சம் தோன்றலாம். 6-ஆம் இடத்தில் குரு வருவது ஒருபுறம் இருந்தாலும், ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் வருமா? கடன் அதிகமாகுமா? பிரச்சினைகளால் மனநிம்மதி இல்லாமல் போய்விடுமா? என்றெல்லாம் கலக்கம் வந்திருக்கும்.

நான் உறுதியாகச் சொல்கிறேன்... உங்களுக்கு ஒரு குறைவும் வராது. ஒரு பிரச்சினையும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் மகாசக்தி யோகமும், அஷ்டலட்சுமி யோகமும் உங்களுக்குக் கிடைக்கப் போகிறது. செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது. வருமானத்தில் உங்களுக்குத் தடையே இருக்காது. ஆரோக்கிய பாதிப்புகள் நிச்சயமாக வராது. யாரிடமும் எதற்காகவும் பகை கொள்ள வேண்டியது வராது. இவை அனைத்தும் எப்படி நடக்கும் என்ற கேள்வி உங்களுக்குள் வருவது நியாயம்தான்.

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்லும் குரு பகவான் அங்கே சனி பகவானுடன் இணைகிறார் ஆறில் சனி பகவான் இருப்பது மேலே சொன்ன மஹாசக்தி யோகம், மகாலட்சுமி யோகம் என்றெல்லாம் தருவதற்கான இடம். உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதும் மிகப் பெரிய பலத்தை உங்களுக்குத் தரும். சிரமம் இல்லாத வாழ்க்கையை நடத்த துணையிருக்கும்.

எனவே குரு பகவான் 6-ஆம் இடத்திற்கு வந்தாலும் நிச்சயமாக அவர் உங்களுக்கு எந்த பாதிப்பையும் தரமாட்டார். இன்னொரு விஷயம்... உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியாக இருப்பவர் குருபகவான். ஆகவே பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி எந்த இடத்தில் போய் அமர்ந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்ய முடியும். தீமைகளைச் செய்ய முடியாது என்பது ஜோதிடத்தில் கூறப்பட்டிருக்கும் அடிப்படை விதி. எனவே குரு பகவான் எந்த இடத்திற்குச் சென்றாலும் எந்த பிரச்சினைகளும் வராது. பாதிப்பும் தராது. எனவே எந்தவிதமான அச்சமும் கவலையும் தேவையே இல்லை.

உங்களுடைய இயல்பான வேலைகளைத் தொடர்ந்து பார்க்கலாம். குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சினைகளும் வராது. ஒருவேளை பிரச்சினைகள் வந்தாலும் கண்டும் காணாமல் இருந்தால் எளிதாகக் கடந்து செல்ல முடியும். ஆரோக்கியப் பிரச்சினைகள் எதுவும் வராது என்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சித்தப்பா மற்றும் பங்காளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சொத்து விஷயங்களில் வீண் பிரச்சினைகளைக் கிளப்புவார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வதும், அனுசரித்துச் செல்வதும் நல்லது.

கடன் பிரச்சினைகள் தொல்லை தராது என்றாலும் புதிய கடன்கள் வாங்காமல் இருக்க வேண்டும். சுப செலவுகளுக்காக கடன் வாங்குவதில் தவறில்லை. திருமணம், சொந்தமாக வீடு வாங்குதல், வீடு கட்டுதல் போன்ற முயற்சிகளுக்கு கடன் வாங்குவதில் எந்த பாதிப்பும் வராது. தனி நபரிடம் கடன் வாங்காதீர்கள். வங்கிக் கடன் பெற்றுக் கொள்வது நல்லது. தந்தையின் சொத்துகளை பாகப்பிரிவினைகள் செய்யும் பொழுது சற்றேறக்குறைய இருந்தாலும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதேசமயம் தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறுதல், வெளிநாடு தொடர்பு உடைய நிறுவனங்களில் பணி செய்தல், அந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேருதல் போன்றவை சிறப்பாக இருக்கும். அந்த முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கூடுதலாக தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இப்போது தனியாகவே தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு அதிகப்படியான மகசூல், அதிகப்படியான லாபம் கிடைக்கும். புதிய பயிர்களை பயிரிடுவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். அது நல்ல பலனையே தரும்.

வியாபார விஷயங்கள் சிறப்பாக இருக்கும். சிறு வியாபாரிகள் முதல் பெரும் வியாபாரிகள் வரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதும் அல்லது புதிய வியாபார வாய்ப்புகளைப் பெறுவதும் நல்ல பலன்களைத் தரக் கூடியதாக இருக்கும். அதேசமயம் மாற்று மொழி அல்லது மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அவர்களுடைய வியாபாரத் தொடர்புகள் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். எனவே கவனமாக இருந்தால் அந்த பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிப்பதன் காரணமாக உடலில் சோர்வு ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகமாக இருக்கும். அவர்களை இனம் கண்டு விலகி இருக்க வேண்டும்.

பெண்களுக்கு சிறப்பான நன்மைகள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடந்தேறும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கல்வித் தகுதிக்குத் தகுந்த வேலை இல்லாமல் இருந்த பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். தந்தைவழி சொத்துகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதேசமயம் சகோதரர்கள் சற்று சுயநலத்தோடு நடந்து கொள்வது மன வருத்தத்தைத் தரும். ஆரோக்கிய பாதிப்புகள் பெரிதாக இருக்காது. ஆனாலும் ஒரு சில தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாதவிடாய் பிரச்சினைகளும், முதுகெலும்பில் வலி போன்ற பிரச்சினைகளும் வரும். தகுந்த மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் சென்று படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். கல்விக்கான வங்கிக் கடன் கிடைக்கும். ஞாபகமறதி பிரச்சினைகள் ஒருசிலருக்கு வரலாம். மனதை ஒரு நிலைப்படுத்தி கல்வி பயின்றால் சிறப்பாக இருக்கும்.

கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதில் ஒரு சில குறைகளும் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமானாலும், வருமானத்திற்கு குறை இல்லாமல் இருக்கும்.

பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை இப்போது தவறாமல் செய்ய வேண்டும்.

நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் - சிதம்பரம் தில்லை காளி

சிம்ம ராசிக்காரர்கள் முடிந்தவரை குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கித் தருதல், இனிப்பு வகை உணவுகள் தானம் தருதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து தானம் தருதல் முதலானவை சிறப்பான நன்மைகள் கிடைக்கக் காரணமாக இருக்கும்.
****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x