Published : 23 Oct 2020 09:50 PM
Last Updated : 23 Oct 2020 09:50 PM

குருப்பெயர்ச்சி பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே! கடனெல்லாம் அடைப்பீர்கள்; வருமானம் பெருகும்; ஆரோக்கியம் கூடும்; ஏமாந்துவிடாதீர்கள்; மன நிம்மதி கிடைக்கும்! 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


ரிஷப ராசி :-

பொறுமையும் புத்திசாலித்தனமும் மிக்க ரிஷப ராசி அன்பர்களே!

இது வரை அஷ்டமத்துச் சனி, அஷ்டமத்து குரு, அஷ்டமத்து கேது என முக்கியமான கிரகங்கள் 3-ம் அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாமிடத்தில் அமர்ந்து உங்கள் மன நிம்மதியைக் குலைத்து, கடும் பிரச்சினைகளில் சிக்க வைத்திருப்பார். கடுமையான உடல்நல பாதிப்புகள், மருத்துவச் செலவுகள், குடும்பத்தினரிடம் தேவையில்லாத சச்சரவுகள், பிரச்சினைகள், பிரிவுகள், இழப்புகள், பொருளாதாரக் கஷ்டங்கள் என அனுபவித்து வந்த நீங்கள்... என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வந்தீர்கள்.
இனி உங்களுக்கு நல்லகாலம்தான். இப்போது எட்டாம் இடத்தில் எந்த முக்கிய கிரகமும் இல்லாமல், மனநிம்மதியை தரக்கூடிய காலம் வந்துவிட்டது.

பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் இடத்தில் குரு பகவான் வருவதும், அவருடைய பார்வை உங்கள் ராசியில் படுவதும், கூடவே சனி பகவானும் 9-ஆம் இடத்தில் இருப்பதும்... இனி சிறப்பான பலன்களை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்த வேதனைகள் அனைத்தும் இப்போது முடிவுக்கு வரப்போகிறது.

இனி நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த குடும்பத்தினர் ஒன்று சேர்வார்கள். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். இனி மருத்துவச் செலவுகள் என்பதே இருக்காது. அறுவை சிகிச்சை போன்ற மிகப்பெரிய அளவிலான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தவர்கள், இனி அறுவை சிகிச்சை தேவைப்படாமல், மருந்து மாத்திரைகளால் குணமாகக் கூடிய அளவிற்கு உடல் நலம் நல்ல முன்னேற்றத்தை அடையும்.

கடன் பிரச்சினைகளால் கடுமையான நெருக்கடிக்கும், அவமானத்திற்கும் ஆளான நீங்கள், இனி கடன்கள் அனைத்தையும் அடைத்து சுதந்திர மனிதனாக மாறுவீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக திருமண முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தடைகள் முற்றிலுமாக விலகும். காரணம் தெரியாமலேயே நிராகரிக்கப்பட்டு வந்தீர்கள். இனி வரன்கள் உங்கள் வீடு தேடி வரும். திருமணமான தம்பதியர்களுக்கு இப்போது புத்திரபாக்கியம் உண்டாகும். ஆண் வாரிசுக்காக ஏங்கியவர்களுக்கு இப்போது ஆண் வாரிசு உண்டாகும்.

பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களால், உயர் அதிகாரிகளால் நெருக்கடிக்கு ஆளாகி மன உளைச்சலில் இருந்த நிலை முடிவுக்கு வரப்போகிறது. ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். தொல்லை தந்த ஊழியர்கள் விலகிச் செல்வார்கள். உயரதிகாரிகள் உங்கள் மீதான தவறான அபிப்ராயத்தை மாற்றிக்கொள்வார்கள். உங்களுடைய திறமை அங்கீகரிக்கப்படும். உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். உங்கள் தகுதிக்கும், திறமைக்குமான சரியான வேலை கிடைக்கும்.

தொழிலில் ஏற்கெனவே நெருக்கடிகளில் இருந்த நீங்கள், இந்த கரோனா காலத்தில் மேலும் பல விதமான நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பீர்கள். இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஒத்துழைப்பு தராத ஊழியர்கள் கூட, இப்போது உண்மையாகவும் உங்களைப் புரிந்துகொண்டும் ஒத்துழைப்பார்கள். உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உற்பத்தியான பொருட்கள் விற்பனையாகும். கேட்காமலேயே முதலீடுகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கடுமையான நெருக்கடியில் இருந்து மீண்டு வருவீர்கள். பல மடங்கு லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உணவுத் தொழில் செய்பவர்களுக்கும், பயணத் தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்கள் நடக்கும். புதிதாக உணவகங்கள் ஆரம்பித்தல், டிராவல்ஸ் தொழிலில் வாகனங்களை அதிகப்படுத்துதல், வருடாந்திர ஒப்பந்தங்கள் கிடைத்தல் போன்றவை நடக்கும்.

பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்கள் ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்து இருப்பீர்கள். இனி அதிகப்படியான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடை ஆபரணத் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் பல மடங்காகும். வெளிநாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவிலான தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்து தரப்பு வியாபாரிகளுக்கும் இனி நஷ்டம் என்பதே இல்லாமல், லாபம் மட்டுமே கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு சிறப்பான வியாபார வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல், லாபம் பல மடங்காகப் பெருகப் போகிறது. கடன்கள் முழுவதும் தீரும். புதிய வியாபாரங்களைத் தொடங்குவது, கிளைகள் தொடங்குவது என சிறப்பான நன்மைகளும் வளர்ச்சியும் நடக்கும்.

சொந்த வீடு எனும் கனவு நனவாகும். பாதியில் நின்ற கட்டடப் பணிகள் தடையின்றித் தொடரும். உங்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும். அல்லது வழக்கு உங்களுக்கு சாதகமாகும். திருமண முயற்சிகள் சாதகமாகும். தாமதப்பட்ட புத்திர பாக்கியம் கிடைக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சீராக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும்.

அரசியலில் இருப்பவர்களுக்கு இழந்த பதவி திரும்பக் கிடைக்கும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி இருந்தவர்கள் அந்தப் பிரச்சினைகளில் இருந்து வெளி வருவார்கள். நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். மேலும் உயர்பதவிகள் தேடிவரும். உங்களுக்கான முக்கியத்துவம் இப்போது அதிகரிக்கத் தொடங்கும்.

பெண்கள், அளவிட முடியாத அளவுக்கு நன்மைகளை பெறப்போகிறீர்கள். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்... எப்படி எல்லாம் முதலீடுகள் செய்யலாம் என்று! ஆடை ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும், தாமதப்பட்டு வந்த திருமணம் நடந்தேறும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுய தொழில் தொடங்க சரியான நேரமிது. தயக்கம் இல்லாமல் தொழிலைத் தொடங்குங்கள். . சாதித்துக் காட்டூவீர்கள். சொத்து தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து உங்களுக்கான பங்கு கிடைக்கும்.

சகோதர ஒற்றுமை பலப்படும். இளைய சகோதரர் பக்கபலமாக இருப்பார். மூத்த சகோதரரும் உதவிகரமாக இருப்பார். மணவாழ்வில் தோல்வியடைந்த பெண்களுக்கு மறுமணம் நடக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதேசமயம் புதிய நட்புக்களைத் தவிர்க்க வேண்டும். எவருக்கும் பணம் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் வைத்துகொள்ளக் கூடாது. ஆண் நண்பர்களிடம் இடைவெளியுடன் ஜாக்கிரதையாகப் பழகுவது நல்லது, இல்லையென்றால் தேவையில்லாத விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும். இந்த ஒரு விஷயத்தைத் தவிர மற்ற அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான நன்மைகள் உண்டாகும், அதேசமயம் கூடா நட்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், கவனச் சிதறல் உண்டாகும்படியாக சில நட்புகள் ஏற்படும். கவனமாக இருந்தால் கல்வி சிறக்கும். இல்லையென்றால் ஆடம்பர நாட்டங்களால் கல்வியில் பின்னடைவு ஏற்படும்.

கலைஞர்களுக்கு மனநிறைவான, உற்சாகமான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டம் உங்கள் வாழ்வின் பொன்னான நேரம் என்பதை மறக்காதீர்கள். உங்கள் ஆயுளுக்குமான பொருளாதார செல்வாக்கு உறுதியாகும் காலம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். இமாலய வெற்றி கிடைக்கும்.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சாதனைகள் பல செய்து உங்களை நிரூபிக்க இருக்கிறீர்கள். உங்கள் திறமை முழுமையாக வெளிப்படும். உங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்கும். புகழ் வெளிச்சம் கிடைக்கப் பெறுவீர்கள். பரபரப்பாக இருப்பீர்கள். இந்த பரபரப்பில் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த மறந்துவிடாதீர்கள்.

பொதுவாக ரிஷப ராசியினர், அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து விலகி இருங்கள். எந்த முயற்சியில் இறங்கினாலும் வெற்றியைக் காணலாம். ஆனாலும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் : - திருச்சி உறையூர் வெக்காளியம்மன்.

மேலும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள். சாதுக்கள், இறையடியார்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தாருங்கள். இந்த குருப்பெயர்ச்சி, நன்மைகளை அதிகப் படுத்தித் தரும். வாழ்வில் ஏற்றங்களை சந்திப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x