Published : 23 Oct 2020 09:10 PM
Last Updated : 23 Oct 2020 09:10 PM

குருப்பெயர்ச்சி பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே! மாற்றம் நிச்சயம்; கடன் பிரச்சினை தீரும்; வாக்குறுதி வேண்டாம்; பொறுமை அவசியம்! 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மேஷ ராசி :-

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் செயல் வீரர்களான மேஷ ராசி வாசகர்களே!

இந்த குருப் பெயர்ச்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். குரு பத்தாம் இடத்திற்கு வந்தால் பதவி பறி போகும் என்கிற ஜோதிட விதியை நினைத்து கலக்கத்தில் இருப்பீர்கள். ஏற்கெனவே இரண்டாம் இடத்தில் ராகு, எட்டாம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் சனி என கிரகங்கள் நன்மை தரக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். இந்த நன்மைகளை 10-ம் இடத்து குரு பகவான் கெடுத்து விடுவாரோ... என்ற பயம் இருக்கும்.

ஆமாம்... பத்தாமிடத்து குரு உங்கள் பதவியை மாற்றுவார். நீங்கள் உத்தியோகத்தில் இருந்தால், உத்தியோகத்தை உதறிவிட்டு சொந்தத் தொழில் செய்ய வைப்பார். வாடகை வீட்டில் குடியிருந்தால் சொந்த வீட்டிற்கு மாற வைப்பார். திருமணமாகாதவர் என்றால், குடும்பஸ்தன் என்ற அந்தஸ்தை ஏற்படுத்த்க் கொடுப்பார். திருமணமானவராக இருந்தால் தந்தை என்ற அந்தஸ்தை உயர்த்தி அருளுவார். இப்படி மாற்றங்கள் சிறப்பாகவே இருக்கும். எனவே கவலையே படாதீர்கள்.

குடும்ப உறவுகள் பலமாக இருக்கும். சகோதரரின் உதவிகள் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். இப்போது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு முதலீடுகள் கிடைக்கும். அல்லது கூட்டாளிகள் கிடைப்பார்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இருக்கும் முடக்கமான நிலை மாறி அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் இருந்த வீடுகள் விற்பனையாகும். மனை பிரித்து போட்டு விற்பனையாகாமல் இருந்தால் இப்போது மனைகள் விறுவிறுப்பாக விற்பனையாகும். எந்த மாதிரியான வியாபாரம் செய்து வந்தாலும் இனி, வியாபார வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். இப்போது இருக்கும் இடத்தை மாற்றி புதிய இடத்தில் வியாபாரத்தைச் செய்வீர்கள்.

நீங்கள் எந்த மாதிரியான தொழில் அல்லது வியாபாரம் செய்தாலும் மிகப்பெரிய முன்னேற்றமான மாற்றத்தைக் காண்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். சுபக் கடன்கள் மட்டுமே இருக்கும். அதாவது சொந்தமாக வீடு வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல், வாகனங்கள் வாங்குதல், திருமணம் செய்தல், திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடக்கும். இது போன்ற கடன்கள் மட்டுமே இருக்கும்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது, பதட்டமாக இருப்பது போன்றவை கூடாது. எல்லாம் இறைவன் செயல் என்ற மன நிலைக்கு மாற வேண்டும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய தேவைகளை அவர்கள் கேட்காமலேயே பூர்த்தி செய்து தாருங்கள்.

அரசியலில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும், நிதானத்தோடும் இருக்கவேண்டும். சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து கூறாமல் இருக்க வேண்டும். தலைமையின் கட்டளைக்கு பணிந்து செல்ல வேண்டும். ஆசை வார்த்தைகளில் மயங்கி உங்களுடைய மதிப்பு மரியாதையை இழக்க வேண்டாம். ஆயிரம் சோதனைகள் இருந்தாலும் பொறுமையாக இருந்தால் மிகப் பெரிய பதவிகள் தேடி வரும்.

பெண்களுக்கு கனவுகள் நிறைவேறும். சொந்தவீடு வாங்குதல், சொத்தில் பங்கு கிடைத்தல், கல்வித் தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைப்பது என அனைத்தும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மன வருத்தம் ஏற்பட்ட இளைய சகோதர உறவு மீண்டும் பலப்படும். மூத்த சகோதரரால் சுபச் செலவுகள் ஏற்படும், மூத்த சகோதரத்திற்கு அவர்களின் சுப காரிய விசேஷங்களுக்காக பண உதவி செய்வீர்கள். அயல்நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு உண்டாகும். தந்தையின் உதவியோடு ஒரு சில தேவைகள் பூர்த்தியாகும். வீட்டு உபயோகப் பொருட்கள் புதிதாக வாங்கிவீர்கள். எந்த வகையிலாவது சுய தொழில் தொடங்குவீர்கள். இப்போதே அது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பீர்கள், நிச்சயமான வெற்றி உண்டாகும்.

மாணவர்களுக்கு - இதுவரை இருந்த தடைகள் நீங்கும். கவனமின்மையால் பலவித நெருக்கடிக்கு ஆளாகியிருப்பீர்கள். இப்போது அந்த நெருக்கடிகள் விலகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு ஆலோசனையில் இருந்த வாய்ப்புகள் தாமதமாகும், ஆனால் எதிர்பாராத புதிய வாய்ப்பு கிடைக்கும். இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பயிற்சி நிலையங்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது. எந்த வாய்ப்புகள் வந்தாலும் ஏற்றுக்கொள்வது நல்லது.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இப்போது இருக்கும் நிறுவனத்திலிருந்து வெளியேறி வேறு நிறுவனத்திற்குச் செல்வீர்கள். உங்கள் திறமைகள் வெளிப்படும். வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு பேர் புகழ் கிடைக்க பெறுவீர்கள்.

பொதுவாக மேஷ ராசியினர் யாருக்கும் வாக்கு கொடுப்பது, கடன் கொடுப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வெளியிடங்களில் உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுவரை சொன்னதை சரியாக பின்பற்றினாலே அதிகப்படியான நன்மைகளை நீங்கள் பெற முடியும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
திருச்செந்தூர் முருகன் மற்றும் ஆலயப் பிராகாரத்தில் இருக்கும் குருபகவானை தரிசனம் செய்யுங்கள். பல விதமான நன்மைகளைத் தரும். துவரம் பருப்பில் செய்யப்பட்ட உணவு வகைகளை ஆதரவற்றவர்களுக்கு தானமாக வழங்குங்கள். அளப்பரிய நன்மைகளைப் பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x