Published : 29 Sep 2020 05:07 PM
Last Updated : 29 Sep 2020 05:07 PM

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 78 ; பூரட்டாதி நட்சத்திர மகிமை; நல்ல நண்பர்கள் யார்? உதவி செய்பவர்கள் யார்? சிக்கலில் சிக்கவைப்பவர்கள் யார்? உதவியைப் பெறுபவர்கள் யார்? 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.

பூரட்டாதி நட்சத்திரம் பற்றிய தகவல்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்ப்போமா?

பூரட்டாதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை என்பதே இருக்காது. பொருளாதாரச் சிக்கல் ஏற்படும் போதெல்லாம் எந்த வகையிலாவது உதவிகள் இவர்களைத் தேடி வந்துவிடும். ஆடம்பரச் செலவுகளும் செய்வார்கள். அதேசமயம், சேமிப்பையும் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், பெரும்பாலும் குடும்பத்திற்கே தெரியாமல் சொத்துகள் சேர்த்து வைத்திருப்பார்கள். வீட்டில் கூட ஆங்காங்கே பணத்தை ஒளித்து வைத்திருப்பார்கள். இப்படி ரகசியமாக வைத்திருக்கும் பணத்தை அவர்கள் மறந்துதே விடுவார்கள். இக்கட்டான நேரத்தில் இப்படி மறந்து போன பணம் கண்ணில் பட்டு நெருக்கடியை தீர்த்துவைக்கும்.

நண்பர் ஒருவர் தன் மகள் திருமணத்தின்போது ஒரு பையில் வைத்த மிகப்பெரிய தொகை, 7 வருடம் கழித்து ஏதோ ஒன்றைத் தேடும்போது இந்த பணம் கிடைத்தது என்று தெரிவித்தார். இது போன்ற நிகழ்வுகள் பூரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு அடிக்கடி நடக்கும்.

கடந்த அத்தியாயத்தில், திருமணத்திற்கு ஏற்ற நட்சத்திரங்களைப் பார்த்தோம்.

நல்ல நண்பர்கள் யார்? விலக்க வேண்டிய நபர்கள் யார்? என்ற விபரத்தை இப்போது பார்ப்போம்.

அஸ்வினி - மகம் - மூலம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் பூரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு அமைவது நல்ல நட்பாகவும், உங்கள் தேவைகளுக்கு உதவுபவராகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு உங்களால் எந்த நன்மையும் கிடைக்காது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நட்சத்திரக்காரர்கள் தேடிவந்து பலவித உதவிகளைச் செய்வார்கள். தங்களது நகை, பணம், சொத்து என எதை வைத்தாவது உங்களின் நெருக்கடிக்கு உதவுபவர்களாக இருப்பார்கள். ஆனால் நீங்கள்தான் இவர்களை அலட்சியமாகவே நடத்துவீர்கள். நல்ல நண்பர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-

இந்த நட்சத்திரம் கொண்ட நண்பர்கள் அமைவது சிறப்பான நட்பாக இருக்கும். நீங்களும் அவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி உதவிகளைச் செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களுக்கு அவர் ஏணியாகவும், நீங்கள் அவருக்கு ஏணியாகவும் இருப்பீர்கள். உங்கள் மனதில் நீங்கள் நினைப்பதை அவர் நீங்கள் சொல்லாமலே உணர்ந்துகொள்வார். அவரின் எண்ணங்கள் உங்களின் மனதில் பிரதிபலிக்கும். அப்படியான நட்பு பலம் வாய்ந்ததாக இருக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், தங்களின் வாழ்வில் தவிர்க்கவே கூடாத நண்பர்கள் இவர்கள்.

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவது சிறப்பான நன்மைகளைத் தருவார்கள். உங்களுடைய தொழில், வியாபாரம், உத்தியோக ரீதியாக பலவிதத்திலும் உதவிகரமாக இருப்பார்கள். கேட்கும்போதெல்லாம் கடன் தருபவர்களாக இருப்பார்கள். ஒரு கடன் இருக்கும்போதே இன்னொரு கடன் கேட்டாலும் தருவார்கள். உங்கள் முன்னேற்றத்தில் இவர்களின் பங்கு அதிகமாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் உங்களை ஏற்றி உயரத்துக்குக் கொண்டுவந்து வைத்து, அழகு பார்ப்பவர்கள்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவதும் சிறப்பாகவே இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உதவி செய்பவர்கள் இவர்கள். உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய விஷயங்களை மட்டுமே செய்து தருவார்கள். லாபம் தரக்கூடிய விஷயங்களில் உங்களை அவர்களாகவே சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுடைய பணத்தை உங்களை நம்பி உங்களிடம் கொடுத்து வைப்பார்கள். லாபகரமாக இருப்பார்களே தவிர ஒருபோதும் இழப்பைத் தருபவர்களாக இருக்க மாட்டார்கள்.

திருவாதிரை - சுவாதி - சதயம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் அமைவது மிகச்சிறந்த நட்பாக.. நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். உங்களை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக, உங்கள் எண்ணத்திற்கு தகுந்தாற்போல் செயல்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களின் குணாதிசயம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்களிடம் உண்மையாக. மிக மிக நேர்மையாக இருப்பார்கள். எந்த ஆபத்திலும் ஓடிவந்து உங்களைக் காப்பாற்றுபவர்களாக இருப்பார்கள். உங்களின் உயர்வுக்கு இந்த நட்சத்திரக்காரர்களே காரணமாக இருப்பார்கள்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு, நல்ல நட்பு நட்சத்திரங்கள் எவை என்பதைப் பார்த்தோம். இனி, யாரை விலக்கி வைப்பது? யாரை நம்பக்கூடாது? என்பதைப் பார்ப்போம்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-

இந்த நட்சத்திரக்காரர்கள் உங்களால் ஆதாயம் அடைபவர்கள். உங்களின் லாபங்களில் பங்கெடுப்பவராகவும், பிரச்சினை என்று வரும்போது உங்களைக் காட்டிக்கொடுத்து விட்டு தப்பித்துச் செல்பவராகவும் இருப்பார்கள். அதாவது குளம் வற்றியதும் பறந்து செல்லும் பறவைகளாக இருப்பார்கள். என்றாவது ஒருநாள் கடுமையான சிக்கலில் உங்களைச் சிக்க வைப்பவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்களிடம் விலகி இருப்பதே நல்லது.

பரணி - பூரம் - பூராடம் :-

இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருப்பது உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மையைத் தராது. “பத்தோடு பதினொண்ணு அத்தோடு இதுவும் ஒண்ணு” என்ற வகையில்தான் அளவோடு பழகுவார்கள். உங்களிடம் அடிக்கடி உதவிகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நன்மையும் இல்லை; தீமையும் இல்லை எனும் வகையைச் சேர்ந்தவர்கள்.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-

இந்த நட்சத்திர நண்பர்கள் இருந்தால்... துன்பத்தை முதுகில் தூக்கிச் சுமப்பதற்குச் சமம்.

ஆமாம்... தீராத துயரத்தைக் கொடுப்பவர்கள் இவர்கள். நிம்மதி இல்லாமல் போகும். முக்கியமான நேரத்தில் கைவிரிப்பார்கள்.நீங்கள் செய்த உதவியை மறப்பவர்கள். விலகி இருப்பது நல்லது.

’அட... இப்படியெல்லாமா இருக்கும்’ என்று வியப்பாக இருக்கிறதுதானே. நீங்களே கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்வீர்கள்.

௮டுத்து பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான பலன் மற்றும் குணங்களைப் பார்ப்போம்.

என்னிடம் நிறைய வாசகர்கள் கேட்கும் கேள்வி.. நட்சத்திரம்தான் நாங்கள் அறிவோம். ஆனால் பாதம் இதுவரை அறிந்து கொள்ளவில்லை. மனதில் பதித்துக்கொள்ளவுமில்லை. அப்படியே பாதம் அறிந்தாலும், ஒரு நட்சத்திரம் தன் குணத்தை மட்டும்தானே கொண்டிருக்கும். அதில் உள்ள பாதங்களின் அடிப்படையில் குணம் எப்படி மாறும்? அப்படியானால் அடிப்படைத் தன்மையும் குணாதிசயங்களும் மாறுமா?’ என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்காகவும் அவர்களைப் போல் சந்தேகம் உங்களுக்கும் வரலாம். எனவே, என் அன்பினிய வாசகர்களுக்காகவும் சொல்கிறேன்.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களை எடுத்துக்கொள்வோம். பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் செயல்வீரர்கள். காரியத்தில் கண்ணாயிருந்து கச்சிதமாக முடிப்பவர்கள். குறைந்த தூக்கமும் நிறைந்த செயல்களும் கொண்டவர்கள்.

அதேசமயம், பூரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள், கருணையே வடிவானவர்கள். தர்மம் செய்வதில் சிறந்தவர்கள். எந்தச் செயலையும் அந்தச் செயலின் போக்கிலேயே சென்று முடிப்பவர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உடையவர்கள். ஒழுக்கம் தவறாதவர்கள். சிறிதும் மனதில் கல்மிஷம் இல்லாத வெள்ளந்தியான மனம் கொண்டவர்கள்.

இரண்டுமே பூரட்டாதி நட்சத்திரம்தான். ஆனால் பாதம் மாறும்போது எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்று புரிகிறதுதானே. ஒரே நட்சத்திரத்தில் பிறந்த இருவரில் ஒருவர் செல்வாக்கான வாழ்வும், மற்றொருவர் நெருக்கடியான வாழ்க்கை வாழ்வதற்கும் இந்த பாத வித்தியாசங்களே காரணம்!

ஆனால், பொதுகுணம் என்ற ஒன்று மெல்லியதாக இருந்தே தீரும் என்பதும் உண்மை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தர்மவான்கள்தான். ஆனால் தர்மத்தின் அளவு மாறுபடும். யாரும் அறியாமல் உதவி செய்வதும், உதவி செய்கிறேன் என்ற பெயரில் புகழ் தேடுவதும் ஒன்றாகாது என்பது தெரியும்தானே உங்களுக்கு? உதவி பெறுபவர்கள் நன்மை அடைவார்கள் என்பதை மட்டுமே பொதுக்குணமாக பார்க்கப்பட வேண்டும்.

சரி வாசகர்களே,

அடுத்த அத்தியாயத்தில், நான்கு பாதங்களுக்கும் உள்ள தனித்தனிப் பலன்களையும், வணங்க வேண்டிய இறைவனையும், அவர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மரத்தையும் அறிந்து கொள்வோம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x