Published : 28 Sep 2020 01:11 PM
Last Updated : 28 Sep 2020 01:11 PM

மேஷ ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; நிதானம் தேவை; பணவரவு; கோபம் வேண்டாம்; கவனமாக இருங்கள்! 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் மேஷ ராசியினரே.

இந்த காலகட்டத்தில் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.

குடும்பாதிபதி சுக்கிரன் ஐந்தாம் ராசியில் இருப்பது பலம். குடும்பத்தில் மனவருத்தங்கள் மறையும். கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம்.கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.

பெண்கள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும்.


அஸ்வினி:
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாகப் பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பரிகாரம்: முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி வாருங்கள். பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
*************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x