Published : 15 Sep 2020 12:21 PM
Last Updated : 15 Sep 2020 12:21 PM

சதய நட்சத்திரக்காரர்களுக்கு ஆகாத நட்சத்திரங்கள்; உறுதுணையானவர்கள்; வாழ்க்கைத்துணையாக யார் வந்தால் சூப்பர் வாழ்க்கை?

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 74;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

சதயம் நட்சத்திர தகவல்கள் இந்த அத்தியாயத்திலும் தொடர்கின்றன.

சதயத்தில் பிறந்தவர்கள் என்ன வேலை பார்ப்பார்கள், எந்த மாதிரியான தொழில்களைச் செய்வார்கள் என்றெல்லாம் பார்த்தோம்.

இந்தப் பதிவில் மேலும் சில தகவல்களையும், வாழ்க்கைத்துணையாக வரக்கூடிய நட்சத்திரங்களையும், சிறந்த தோழமைகள் யார் யார் என்பதையும், சதயம் நட்சத்திரக்காரர்கள் யாரிடம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பாவ புண்ணியம் இரண்டுக்கும் சொந்தக்காரர்கள் சதய நட்சத்திரத்தினர். அளவிட முடியாத புண்ணிய காரியங்களையும் செய்வார்கள். அதேசமயம், தயக்கமே இல்லாமல் பாவ காரியங்களையும் (பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் மட்டுமே) செய்வார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை சுகபோகங்களை அனுபவித்தல் என்பதே சதய நட்சத்திரக்காரர்களின் நோக்கமாக இருக்கும். இறைவழிபாடும் சுகமே! புற இன்பங்களும் சுகமே! இதில் எதை இவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இவர்களின் ஜாதகமே முடிவு செய்யும்.

எமதர்மனின் நட்சத்திரம் என்பதால் சதய நட்சத்திரக்கார்கள், மரண பயம் என்பதே இல்லாதவர்கள், “கரணம் தப்பினால் மரணம்” என்பது போன்ற சாகசங்களைச் செய்பவர்கள். இந்த பயமற்ற குணத்தால் அதிகாரத்தில் இருப்பவர்களையும் துணிந்து எதிர்ப்பவர்கள். பின்விளைவுகளைப் பற்றி கவலையே படாதவர்கள். இந்த நெஞ்சுரமே எதையும் எதிர்கொள்ள வைக்கும். நோய் பயம் இல்லாதவர்கள். குறிப்பிட்ட சில நோயினால் பெரும்பான்மாயனவர்கள் முடங்கிப் போகிற நிலையில், அந்த நோயை வென்று இயல்பு நிலைக்கு திரும்புபவர்கள் சதய நட்சத்திரக்கார்கள்.

இதற்கு எமதர்மன் காரணமல்ல! இந்த நட்சத்திரத்தின் இஷ்ட தெய்வமான மிருத்யுஞ்சேஸ்வரரே காரணம்.

ஆமாம்... மரணத்தை வெல்லும் மிருத்யுஞ்சேஸ்வரர் இந்த சதய நட்சத்திரத்தைக் காப்பாற்றும் தெய்வம் ஆவார். முரண்பாடான, இரு துருவங்களாக செயல்களை செய்பவர்களான இரு தெய்வங்கள் ஒரே நட்சத்திரத்திற்கு இறைவனாக இருப்பது ஆச்சரியம்தானே! இப்படி இருவேறான குணங்களையும் செயல்களையும் ஒருங்கே பெற்றவர்கள்தான் சதய நட்சத்திரக்கார்களும்!

பெற்றோரே ஆனாலும், உடன் பிறந்த சகோதரரானாலும், உற்ற நண்பராகவே இருந்தாலும் கணக்கென்றால் கணக்குதான் என்று இருப்பார்கள். நாளைக்கு என்ன உடை அணியவேண்டும், என்ன உணவு உண்ணவேண்டும் என்பதை இன்றே தீர்மானிப்பவர்கள். தன் பணிகளை திட்டமிட்டு வகுத்துக்கொள்பவர்கள். நேரத்தை வீண்டிக்காதவர்கள். ஆதாயம் வருவதாக இருந்தால் எவ்வளவு தூரமானாலும் பயணிப்பவர்கள். அதிகம்பேர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள். வெளிநாடுகளிலேயே நிரந்தரமாக தங்கிவிடுபவர்கள். தொழிலோ பணியோ அதில் உச்சத்தைத் தொடாமல் ஓயமாட்டார்கள். சிறந்த லட்சியவாதிகள்.

மேலும் சில தகவல்கள்...!

தேவதை - எமதர்மன் (பேராவூரணி திருசிற்றம்பலம் ஆலயத்தில் எமதர்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. ஆயிரமாண்டு பழைமையான கோயில், மற்றும் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம்)

அதிதேவதை - மிருத்யுஞ்சேஸ்வரர்

மிருகம் - பெண் குதிரை

விருட்சம் - கடம்ப மரம்

பறவை - அண்டங்காக்கை

சதய நட்சத்திரக்காரர்களுக்கு திருமணத்திற்கு ஏற்ற நட்சத்திரம் எவை என பார்ப்போம்.


ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-
இந்த நட்சத்திரத்தைக் கொண்ட வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பானதாக இருக்கும். தேவை எதுவோ எந்தத் தடையும் இல்லாமல் கிடைக்கும். பட்டம், பதவி, பணம், கௌரவம் என எல்லாம் தேடிவரும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 95%


மிருகசீரிடம் - சித்திரை- அவிட்டம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பான நன்மைகளைத் தரும். ஒருவருக்கொருவர் மனமொத்த தம்பதியாக இருப்பார்கள். மனைவியால் கணவருக்கு ஏற்றம், கணவனால் மனைவிக்கு ஏற்றம் என சிறப்பான வாழ்க்கை அமையும். 90%


புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-
இந்த நட்சத்திர துணையும் சிறப்பானதே! மேலே சொன்ன அதே பண்புகள் இதற்கும் உண்டு. அதிக சிரமமில்லாத, பொருளாதார பிரச்சினைகள் இல்லாத, ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பான வாழ்க்கை வாழ்வார்கள். 90%


பூரம் - பூராடம் - உத்திராடம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது கடனில்லாத நிம்மதியான வாழ்வையும் அனைத்துவித சுகபோகங்களையும் கொடுக்கவல்லது. எதிரிகளோ எதிர்ப்புகளோ இல்லாத நிலையும் நோயற்ற வாழ்வும் அமையும். 85%

இனி பொருந்தாத நட்சத்திரங்கள் :-

திருவாதிரை- சுவாதி - சதயம் - ரோகிணி - அஸ்தம் - திருவோணம் இந்த நட்சத்திரங்களை வாழ்க்கைத் துணையாக இணைக்கவே கூடாது. இவை துன்பதுயரங்களைத் தரும். மன நிம்மதி கெடும்.


பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி:-
இந்த நட்சத்திரங்களையும் தவிர்ப்பது நல்லது. மன ஒற்றுமை இருக்காது, சதா சண்டை சச்சரவு, பிடிவாதம் இருக்கும்.


அஸ்வினி - மகம் - மூலம்:-
அவ்வளவு சிறப்பாக இருக்காது. மத்திம பலன் இருக்கும். தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை - உத்திரம் :- எதிர்வினைகளை மட்டுமே செய்யும். இந்த நட்சத்திரக்காரர்களால் நிம்மதி இருக்காது.

இந்த பட்டியலில் வராத நட்சத்திரங்களை ஜோதிடரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.


நட்பாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்:-

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி :-
இந்த நட்சத்திர நண்பர்களே சிறப்பானவர்கள். ஆபத்பாந்தவர்கள். பக்கபலமாக இருப்பவர்கள். எந்த நேரத்திலும் உதவி செய்யத் தயங்காதவர்கள்.


ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-
இவர்களும் நட்பின் அடையாளமாகத் திகழ்பவர்கள். அகால வேளையிலும், நடுநிசியிலும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்கள். ஆத்மார்த்தமான நண்பர்கள். எப்போதும் எந்தத் தருணத்திலும் விட்டுக்கொடுக்காதவர்கள். உண்மையானவர்கள்.

பரணி - பூரம் - பூராடம் :-
இவர்களும் சிறந்த நண்பர்களே. உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். கஷ்டத்தில் உதவுபவர்கள். நம்பிக்கையானவர்கள்.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-
இவர்களும் நட்பில் சிறந்தவர்களே, இவர்களால் நன்மைகள் உண்டாகும். ஆதாயம் கிடைக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்து தருபவர்களாக இருப்பார்கள்.


விலக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :-

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-
இவர்களால் தேவையற்ற பிரச்சினைகளும், சிரமங்களும் உண்டாகும். பிரச்சினைகளை கையோடு இழுத்துக்கொண்டு உங்களிடம் வருபவர்கள். விலகியிருப்பது நல்லது.

அஸ்வினி - மகம் - மூலம் :-
இந்த நட்சத்திரக்காரர்கள், உங்களால் லாபம் அடைபவர்கள். உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை தராதவர்கள். முகத்திற்கு நேராக புகழ்வதும், முதுகுக்குப் பின்னால் இகழ்வதும் செய்பவர்கள்.

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் :-
இவர்களும் நன்மை தராதவர்களே. துன்பங்களை மட்டுமே தருபவர்கள். விரக்தியும் வேதனையும் உண்டாக்குபவர்கள்.

பொதுவாக சதயத்தில் பிறந்தவர்களுக்கு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். கண்ட இடத்தில் கண்ட உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிற்றின்ப போகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். சபலத்திற்கு இடம் தராமல் இருக்க வேண்டும். ரகசிய நட்புக்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். குறிப்பாக முதுகுத் தண்டுவட பிரச்சினைகள், நரம்புக் கோளாறுகள், ஒவ்வாமை, தோல் தொடர்பான நோய்கள் போன்றவற்றை சரியான மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். அலட்சியம் அதிக பிரச்சினைகளைத் தரும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அடுத்த பதிவில் சதயம் நட்சத்திர நான்கு பாதங்களுக்கும் பலன்களைப் பார்ப்போம்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x