Published : 28 Aug 2020 06:59 PM
Last Updated : 28 Aug 2020 06:59 PM

ராகு - கேது பெயர்ச்சி; மிதுன ராசி அன்பர்களே!  ராஜயோகம்; எதிரிகள் ஓடுவார்கள்; அதிக சம்பளத்தில் வேலை; அதிர்ஷடமான காலம்! 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மிதுன ராசி அன்பர்களே வணக்கம்.

ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களை தரப்போகிறது என்று பார்ப்போமா?

இதுவரை உங்கள் ராசியிலேயே இருந்த ராகுவும் ஏழாமிடத்து கேதுவும் கடும் நெருக்கடிகளைத் தந்திருப்பார். நாம் என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என எதுவும் புரிபடாமல், உங்கள் கோபத்தையும், இயலாமையையும் குடும்பத்தில் காட்டி வந்திருப்பீர்கள். இதனால் குடும்ப வாழ்வில் மன நிம்மதியற்ற போக்குடன் வேதனைப்பட்டு வந்திருப்பீர்கள். இனி, அனைத்திலும் வெற்றி, எதிலும் வெற்றி என்று குதூகலம் அடையப்போகிறீர்கள்.

கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர், வாழ்க்கைத்துணையின் உடல் நலக் கவலை, நம்பிக்கையான நண்பர்கள் கூட துரோகத்தைப் பரிசாக தந்தது என விரக்தியின் விளிம்பில் இருந்த உங்களுக்கு ராகு பகவான் உன்னதமான வாழ்க்கையைப் பரிசாக தரக் காத்திருக்கிறார்.

இப்போது ராகு பகவான், உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கும், கேது 6ம் இடத்திற்கும் வர இருக்கிறார்கள். ராகுவின் 12ம் இட பெயர்ச்சி “மகாசக்தி யோகம்” எனப்படும். அதாவது இனி எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும். எதிர்ப்புகளும், எதிரிகளும் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என தலைதெறிக்க ஓடுவதைப் பார்க்கப் போகிறீர்கள்.

அகலக்கால் வைத்து, சேராத இடம் சேர்ந்து பலவித இழப்புகளை சந்தித்தீர்கள். இனி இழந்தவற்றையெல்லாம் ஒன்றுக்கு பத்தாக திரும்ப பெறப்போகிறீர்கள். இனி சாப்பிடக்கூட நேரமில்லாத அளவுக்கு ஓடிஓடி உழைக்கப் போகிறீர்கள். நீங்கள் பகைத்துக் கொண்டவர்களையும் அரவணைக்கப் போகிறீர்கள். உங்களை பகைத்துக்கொண்டவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டு வருவார்கள்.

தொழில் முடக்கம், வியாபார முடக்கம் என பரிதவித்த நிலை மாறப் போகிறது. முன்னேற்றப் பாதைக்குச் செல்லப்போகிறீர்கள். ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். முடங்கிப்போன முதலீடுகள் பல மடங்கு லாபம் கொடுக்கத் தொடங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டும். எதிர்பாராத அளவுக்கு வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

தகவல் தொழில்நுட்பப் பணியில் இருப்பவர்கள், பத்திரிகை, ஊடக துறையினர் முதலானோருக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள், மறைமுகத் தொல்லைகள், பதவி இறக்கம், வேலையை விட்டு விலகச் சொல்லிக் கொடுத்த நெருக்கடிகள் எல்லாம் இனி இல்லாமலே போகும். வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவி, அதிக ஊதியம் என கௌரவமாக நடத்தப்படுவீர்கள். இது இந்தத் துறை என்றில்லாமல் அனைத்து வகையான துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

இல்லாத நோயை இருப்பதாக கற்பனை செய்து மனக்குழப்பம் அடைந்தவர்களுக்கு இப்போது நோயே இல்லை என்பது ஊர்ஜிதமாகும். இனி மருத்துவச் செலவு என்பதே இல்லாமல் போகும். தடைபட்ட திருமணம் நடக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டில் வசிப்பவர்களுக்கு பணிநீட்டிப்பு, குடியுரிமை உள்ளிட்டவை நடந்தேறும்.

விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் இனி இருக்காது. விவசாயத்தில் லாபம் இருமடங்காக கிடைக்கும். அருகில் இருக்கும் நிலங்களை விலைக்கு வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள்.

ரியல்எஸ்டேட், கட்டுமானத் தொழில் செய்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். விற்க முடியாமல் இருந்த சொத்துகள் இப்போது நல்ல விலைக்கு விற்று மாற்று சொத்துகளை வாங்குவீர்கள். பலவிதங்களில் வருமானம் வரும் அளவுக்கு திட்டமிட்டு பலவித முதலீடுகள் செய்வீர்கள். கடன் பிரச்சினை இனி இல்லை என்ற நிலை உருவாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் அபாரமான வளர்ச்சியைக் காண்பார்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. சரியாகத் திட்டமிட்டால் சிந்தாமல் சிதறாமல் வெற்றியைக் குவிக்கலாம். எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். அரசியல் எதிரிகள் உங்களிடம் சரணடைவார்கள்.

பெண்களுக்கு இனி வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் நடக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேலை நிமித்தமாக பிரிந்திருந்தவர்களும் இப்போது ஒன்று சேருவார்கள். கடன் தொல்லைகள் முற்றிலும் நீங்கும். சிறப்பான வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் தொடங்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சரியான ஆலோசனை பெற்று தாராளமாக தொழில் தொடங்கலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஞாபகசக்தி அதிகரிக்கும். சிந்தனை ஒருமுகப்படும். விரும்பிய கல்வி கிடைக்கும். புதிய மொழி கற்பது, வெளிநாட்டில் கல்வி பயில வழி கிடைப்பது போன்றவை நடக்கும்.

பொதுவாக தேவையற்ற ரகசிய நட்புகளை தவிர்ப்பதும், எதிர் பாலினத்தவரிடம் விலகி இருப்பதும் நல்லது, இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
கலைத்துறையில் இனி எவரும் எட்ட முடியாத உயரத்தை தொடப்போகிறீர்கள். எல்லா வாய்ப்புகளும் ஆதாயம் தருவதாகவே இருக்கும். எதையும் தவிர்க்காமல் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ’இப்போ சம்பாதிக்கலேன்னா எப்போ சம்பாதிக்க முடியும்? இப்போ செட்டில் ஆயிடனும்’ என்று முடிவெடுத்து சம்பாதியுங்கள்.

கேதுவால் ஏற்படும் பலன்கள் -

துவரை ஏழாமிடத்தில் இருந்து நிலையற்ற தன்மையை தந்து வந்த கேது, தற்போது ஆறாம் இடத்திற்கு வருகிறார். ஆறாமிடம் என்பது “மகாலட்சுமி யோகம்.” இனி செல்வம் சேரும். நோய் நீங்கும். பிரிந்த தம்பதி மீண்டும் இணைவார்கள். கடன் முற்றிலும் தீரும். சேமிப்பு உயரும். எதிரிகள் காணாமல் போவார்கள். அல்லது எதிரிகளாலேயே லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியால் முழுமையான யோகத்தைப் பெறப் போகிறவர்கள் நீங்கள்தான் என்பதில் சந்தேகமே இல்லை. அதிர்ஷ்டமான இந்தக் காலகட்டத்தை தவறவிடாதீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்- சமயபுரம் மாரியம்மன்

******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x