Published : 11 Aug 2020 10:43 AM
Last Updated : 11 Aug 2020 10:43 AM

வாழ்க்கைத் துணையின் பேச்சுக்கு கப்சிப்; எதிரிகளால் ஒன்றும் செய்யமுடியாத நட்சத்திரம்; நண்பர்களாக சேர்க்கவே கூடாத நட்சத்திரக்காரர்கள் யார் யார்?; உத்திராட நட்சத்திர மகிமை!

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 64;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

விநாயகப்பெருமானின் திரு அவதார நட்சத்திரமான உத்திராட நட்சத்திரம் பற்றிப் பார்த்து வருகிறோம்.

மேலும் அபிஜித் என்னும் அற்புதமான சூட்சும நட்சத்திரத்தை தன்னுள் வைத்திருக்கும் நட்சத்திரமாகவும் அறிந்து கொண்டோம், நினைவிருக்கிறதுதானே.

எதிரியை நேரிடையாக தாக்கித்தான் வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. எதிரியை மனதளவில் பலவீனப்படுத்தியும் வெற்றி பெறமுடியும் என்பதை சல்லியன் மூலமாக அறிந்தோம். இப்போது இவர்களின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள், வாழ்க்கைத்துணை, உண்மையான நண்பர்கள், வணங்க வேண்டிய இறைவன் போன்ற தகவல்களையெல்லாம் பார்ப்போம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களில் பெரும்பாலோனோர் சொந்தத் தொழில் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார்கள். பணியில் இருந்தாலும் ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் செய்ய தொடங்கிவிடுவார்கள். பணியில் இருந்தாலும் அது அரசு வேலை அல்லது அரசு நிறுவனங்களில் உள்ள வேலையாக இருக்கும்.

உயர் பதவிகள், கல்லூரிப் பேராசிரியர், நூலகர், வரலாற்று ஆய்வாளர், மொழி ஆராய்ச்சி, மனிதவள மேம்பாடு, அரசியல் மற்றும் அரசின் செயலாளர், கௌரவப் பதவிகள், நியமனப் பதவிகள், வழக்கறிஞர், நீதிபதி, காவல்துறை, ராணுவம், பாதுகாப்பு அதிகாரி, ஆயுதங்கள் கையாளுதல், கனரக வாகன ஓட்டுநர், விவசாய இயந்திரங்கள் தொடர்பான தொழில். வட்டித்தொழில், அடகுக் கடை, மலையகங்களில் பணி, தேயிலை மற்றும் காபி பயிரிடுதல், மிளகு - மிளகாய் பயிரிடுதல், உணவகத்தொழில், நிதி நிர்வாகம், நிதி மேலாண்மை, ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வாகனம், சவப்பெட்டி தயாரித்தல் போன்ற தொழில், போர்க்களத்தில் மருத்துவச் சேவை, செவிலியர், மருந்தாளுநர், சலவையகம், ரத்த வங்கி, துப்பறிதல் போன்ற தொழில் அல்லது பணியில் இருப்பார்கள்.

ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு தனக்குத்தானே சமாதானம் செய்து உணவு விஷயத்தில் கோட்டை விடுபவர்கள். அளவற்ற கார உணவில் விருப்பம் கொண்டிருப்பார்கள். சுகாதாரமற்ற கடையாக இருந்தாலும் கவலைப்படாமல் சாப்பிடுவார்கள். இதனால் அடிக்கடி மருத்துவரைச் சந்திப்பவர்கள்.

இவர்களுக்கு முதுகுப் பகுதியில் வாய்வுப் பிடிப்பு, செரிமானக் கோளாறு, முதுகு தண்டுவட பிரச்சினை, உடல் சூடு, பித்த வாந்தி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

வாழ்க்கைத்துணையாக வருபவருக்கு கட்டுப்பட்டவராக இருப்பார்கள். துணையின் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. திருமணத்திற்கு பிறகே இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அதிகபட்ச பேருக்கு ஆண் வாரிசுகளாகத்தான் இருக்கும். (இது பொது விதி, ஜாதக ரீதியாக மாற்றம் இருக்கலாம்).

இனி வாழ்க்கைத்துணையாக எந்த நட்சத்திரம் பொருந்தும் என்பதை பார்ப்போம்-


ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பான நன்மைகளையும், பொருளாதார பிரச்சினையே இல்லாத வாழ்க்கை அமையும். 90%


திருவாதிரை - சுவாதி - சதயம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். பரிபூரணமான செல்வவளம் உண்டாகும். 90%

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது அனைத்துவிதமான செல்வமும் கிடைக்கும். வீடு, வாகனம் என செல்வாக்கான வாழ்க்கை அமையும். 90%


அஸ்வினி - மகம் - மூலம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை கிடைப்பது ஈருடல் ஓருயிர் என்றே சொல்லலாம். அப்படி ஒரு பிணைப்பு, புரிதல் இருக்கும். 90%


பரணி - பூரம் - பூராடம் :-
இந்த நட்சத்திர வாழ்க்கைத்துணை அமைவது சிறப்பான வாழ்க்கை, சௌகர்யமான வாழ்வு, மனமொத்த சிந்தனை, இன்பமயமான வாழ்வு என்றெல்லாம் அமையும். 89.5%


வாழ்க்கைத்துணையாக சேர்க்கக் கூடாத நட்சத்திரங்கள் -

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் -புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-
உத்திராட நட்சத்திரக்காரர்கள், இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை வாழ்க்கைத் துணையாக இணைக்கக்கூடாது. பிரச்சினைகளும், புத்திரதோஷமும், இதன் காரணமாக பிரிவினைகளும் உண்டாகும்.


மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைப்பதால் மனதளவில் குறை இருக்கும். ஒட்டுதல் இல்லாத வாழ்வுதான் மிஞ்சும். சின்ன விஷயமும் பெரிதாக மாறும். தகுந்த ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் தகுந்த ஜோதிட ஆலோசனை பெற்று இணைப்பது நல்லது, பொதுவாக, சங்கடங்களும் வருத்தங்களும் ஏற்படும் என்பது விதி. ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை பெற்று வாழ்க்கைத் துணையாக அமைப்பதற்கு முடிவு செய்துகொள்ளலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு, நண்பர்களாக இருப்பவர்கள் யார்?

ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் :-
இந்த நட்சத்திரக்கார நண்பர்களால் அனைத்துவிதமான உதவிகளும், நன்மைகளும் கிடைக்கும். ஆபத்தில் உதவுபவராகவும் இவர்கள் இருப்பார்கள்.

மிருகசீரிடம் - சித்திரை- அவிட்டம்- புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி - ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நண்பர்களாக சேர்க்காமல் இருப்பதே நல்லது.

பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யாரும் கெடுதல் செய்யமுடியாது, கெடுதல் செய்ய நினைப்பவர்கள்தான் கெடுபலனை அனுபவிப்பார்கள். இவர்களிடம் எந்தவிதமான வினைகளும் அண்டாது. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அபூர்வ சக்தி கொண்டவர்கள். எதிர்மறை சிந்தனையுடன் எவரும் இவர்களை நெருங்கக்கூட முடியாது என்பதுதான் உண்மை.

இவர்களின் தேவதை - விநாயகர்
( வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான நன்மைகளைத் தரும்)

அதிதேவதை - பிரம்மா (திருப்பட்டூர்)

வருடம் ஒருமுறை, அல்லது முடிந்த போதெல்லாம், குறிப்பாக உத்திராட நட்சத்திர நாளன்று இந்த ஆலயம் சென்று வருவது துன்பதுயரங்களை நீக்கி நிம்மதியான வாழ்க்கையைத் தரும்.

மிருகம் - கீரி, பசு (பால் வற்றியது)
உத்திராட நட்சத்திரக்காரர்கள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பசுக்களை காப்பாற்றி வருவது பெரும் நன்மைகளைத் தரும்.
இந்த நட்சத்திரத்திற்கு மட்டுமே இரண்டு விலங்குகள் உண்டு என்பது கூடுதல் தகவல்.

இவர்களுக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள் என நான் மேலே சொன்னேன் அல்லவா. அதற்கு இந்த கீரியும் ஒரு காரணம். கொடிய விஷ பாம்பையும் உணவாகவே மாற்றிக்கொள்ளும் குணம்தான் இவர்களுக்கும் இருக்கும். எதிரிகளை எளிதில் வீழ்த்திவிடும் சக்தி பெற்றவர்கள் இந்த உத்திராடக்காரர்கள்.


பறவை - வலியன்

விருட்சம் - பலாமரம்

அடுத்த பதிவில் உத்திராடம் நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் உள்ள தனித்தனிப் பலன்களைப் பார்ப்போம்.


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x