Published : 30 Jul 2020 12:59 PM
Last Updated : 30 Jul 2020 12:59 PM

மகரம், கும்பம், மீனம்; வார ராசிபலன்; ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மகரம்:

எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் சமாளிக்கும் மகரம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் இருக்கும். இந்த வாரம் விரும்பாத இடமாற்றம் உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

மனோதைரியம் கூடும்.புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல் உதவிகளும் கிடைக்கப்பெறும்.
தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆயுள் அபிவிருத்தி அடைவதற்கான வகையில் கிரகங்கள் கெயல்பட உள்ளதால் அதற்கேற்றவாறு பழக்கவழக்கங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகஸ்தர்களும் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இதுவரை இருந்த ஆடம்பர செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்கலச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவு தரும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள்
எண்கள்: 3, 5, 6
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பக் கவலை தீரும்.
***************************
கும்பம்:

தனது திறமையை மட்டும் நம்பும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த வாரம் எந்த இடத்தில் பேசும்போதும் கவனமாகப் பேசுவது நல்லது. வாக்குறுதிகளைக் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம்.
குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

அரசின் ஆதரவு உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் புத்தி சாதுர்யத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: நீலம், மஞ்சள்
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
*************************
மீனம்:

எந்த முடிவையும் பொறுமையாக எடுக்கும் மீன ராசி அன்பர்களே!

நீங்கள் அடுத்தவரின் தராதரம் அறிந்து உதவிகள் செய்யக்கூடியவர். இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் நடக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

எதிலும் கவனமாகப் பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கூட்டுத் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமுகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.

நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவார்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: வெள்ளை, சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x