Published : 28 Jul 2020 03:58 PM
Last Updated : 28 Jul 2020 03:58 PM

’பூராடம் நூலாடும்?’, ‘பூராடம் போராடும்?’, ‘குட்டி சுக்ரன்? 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 60;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் பூராடம்!

இந்த பூராடம் நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்று. நட்சத்திர வரிசையில் 20 வது நட்சத்திரமாகும். இந்த பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் இடம்பெற்றிருக்கும்.

“பூராடம் போராடும்” , “பூராடம் நூலாடாது” அல்லது “நூலாடும்” என்று ஜோதிட மொழியாகச் சொல்வார்கள்!
இதன் விளக்கம் என்ன? இந்த விஷயங்கள் அனைத்தும் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே, ஆண் பிள்ளைகளுக்கு பொருந்தாது.

பூராடத்தில் பெண் பிறந்தால் போராட்டமான வாழ்க்கை அந்த குடும்பத்திற்கு ஏற்படும் என்று அர்த்தம் அல்ல! போராட்டமான வாழ்க்கை முடிவுக்கு வந்து வசதியான வாழ்வு ஆரம்பமாகும் என்பதுதான் உண்மை!

பூராடம் நூலாடாது என்றால் மாங்கல்யம் என்னும் நூல் நிலைக்காது என்றும் சொல்வார்கள். அப்படிச் சொல்பவர்கள் விவரம் அறியாதவர்கள் என்றுதான் அர்த்தம். உண்மையில் இதன் விளக்கமே வேறு. பூராடத்தில் பிறந்தவர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள். கல்விப் பாட நூல்களை தொடக்கூட மாட்டார்கள் என்பதுதான் உண்மையான பொருள்.

அடுத்து... பூராடம் நூலாடும் என்றும் சொல்வார்கள். இதற்கு அவர்கள் தரும் விளக்கம்..! வறுமை வாட்டும், அடுப்பில் கூட நூலாம்படை என்னும் ஒட்டடை பிடித்திருக்கும் என்று விளக்கம் தருவார்கள். உண்மையில் இதன் விளக்கம்... இதோ.. பூராடத்தில் பிறந்த பெண்கள் சோம்பல் குணம் உடையவர்கள். மற்றவர்கள் சமைத்துக் கொடுத்தால் சாப்பிட்டு சொகுசாகவே வாழ்வார்கள். இதற்கு இவர்களின் வசதியான வாழ்வே காரணம்! ஆக பூராடத்தில் பிறந்தால் செல்வச் செழிப்போடு வாழலாம் என்பதுதான் உண்மை.

அடுத்ததாக, “குட்டி சுக்ரன்” என்ற வார்த்தையையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இதன் விளக்கம்..

ஒரு வீட்டில் பெண் குழந்தை பரணி, பூரம், பூராடம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தால்.., அதிலும் குறிப்பாக பூராடத்தில் பிறந்தால் அந்தக் குழந்தை “குட்டி சுக்ரன்” ஆகும்.

இது என்ன செய்யும்? பொதுவான கருத்து.. குடும்பம் கஷ்டத்திற்கு ஆட்படும். அடுத்த குழந்தை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே பரிகாரம் என்றெல்லாம் சொல்வார்கள். உண்மையான விளக்கம் என்ன?

பூராடத்தில் பெண் குழந்தை பிறந்தால் தந்தையை பூர்வீக ஊரைவிட்டு வெளியூர் சென்று சம்பாதிக்க வைக்கும். அதுவும் தொழிலதிபராக மாற்றி பெரும் பணக்காரர் ஆக்கும். நன்றாக கவனித்து பாருங்கள்... உள்ளூரில் சாதிக்க முடியாதவர்கள், வெளியூர் சென்று பெரும் சாதனை செய்து பிரமாண்ட வளர்ச்சி பெற்றிருப்பார்கள். அதிலும் குறிப்பாக வடக்கு நோக்கிச் சென்றவர்களே பெரும் பணக்காரராக இருப்பார்கள். இவை அனைத்திற்க்கும் குட்டி சுக்ரனே காரணம்.

பூராடத்தில் பிறந்தவர்கள் சுகவாசிகள், கஷ்டத்தைக் காணாதவர்கள். தேவை எதுவோ அதை எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்கப்பெறுவார்கள். கல்வியில் சிறந்தவர்கள்தான். ஆனால், அதிக சிரத்தை எடுக்காதவர்கள். ஒரு கட்டத்தில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு கல்வியில் பிரகாசிப்பார்கள். கல்வி பெரிய அளவில் இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் சாதிப்பார்கள்.

பூர்வீகச் சொத்து இருந்தாலும் அதை எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் அழிக்க மாட்டார்கள். அந்த சொத்துக்களை அதிகப்படுத்துவார்களே ஒழிய எக்காரணம் கொண்டும் விற்க மாட்டார்கள்.

குடும்ப அமைப்பில் சிறப்பானவர்களாக, கூட்டுக்குடும்ப முறையில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தந்தையின் அடிதொற்றி வளர்பவர்கள். தாயாரின் அன்புக்கு முழுமையாக ஆட்படுவார்கள். சகோதர ஒற்றுமை வலுவாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் சகோதரர்கள் கருத்தைக் கேட்காமால் எதையும் செய்ய மாட்டார்கள். அவ்வளவு ஒற்றுமை இருக்கும். வருத்தம் வந்தாலும் சகோதர பாசம் போகவே போகாது.

பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமண வாழ்வில் ஆரம்ப கட்டத்தில் புரிதல் இல்லாமல் சின்னச்சின்ன தகராறுகள் ஏற்படும். புரிதல் ஏற்பட்ட பின் மனமொத்த தம்பதியினராய் இருப்பார்கள். இவர்களின் முன்னேற்றத்திற்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை முக்கியமானதாக இருக்கும்.

அதிகம் அலட்டிக்கொள்ளாத, உடலை வருத்திக்கொள்ளாத வேலையில் இருப்பார்கள். தொழிலும் அப்படித்தான். அதிக அலைச்சல் இல்லாத உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கும் திறமை இவர்களுக்கு இருக்கும்.

ஆசிரியர், கல்வி ஆலோசகர், வங்கிப்பணி, இன்சூரன்ஸ் ஏஜென்ட், நூலகர், கணக்காளர், காசாளர், வரி ஆலோசகர், பட்டய கணக்காளர், நிதிநிறுவனம், வட்டித்தொழில், அடகுக் கடை, வாகன விற்பனை, ஆடம்பர பொருள் விற்பனை, ஆலய பிரசாத கடை, புத்தக வெளியீட்டாளர், டிராவல் ஏஜென்சி, ஆன்மிக பயண ஏற்பாட்டுத் தொழில், அரசியல் தொடர்பான காரியங்கள், பினாமியாக இருத்தல், நில அளவையாளர், நில அளவீட்டு பொருள் விற்பனை, கல்வி நிலையங்கள் நடத்துதல், மருத்துவமனை நிர்வாகம், ஷேர் மார்க்கெட் தொடர்பான தொழில், மனை பிரித்து விற்பனை, பழமையான பொருள் சேகரிப்பு மற்றும் விற்பனை, நம்பிக்கை கட்டுரைகள் எழுதுவது, பத்திரிகை துறை, பணமாற்று தொழில், புதுவித ஆடை வடிவமைப்பாளர், ரெடிமேட் ஷோரூம், மின்சாதன ஆடம்பர பொருட்கள் விற்பனை போன்ற தொழில் அமையும்.

இந்த பூராடம் நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு நுகத்தடி போன்றும், மாட்டின் கொம்பு போன்றும் இருக்கும், தேவலோக கோமாதா பூராடம் நட்சத்திரமே (காமதேனு அல்ல). இந்த கோமாதாவின் கொம்பில் தேவர்கள் இருப்பதாக ஐதீகம். பூராடம் உடலில் தொடைப்பகுதியை குறிக்கும். தொடைப் பகுதி செல்வ வளத்தைக் குறிக்கும். தொடை பருத்து இருப்பவர்கள் அசையா சொத்துக்களாக வாங்கி குவிப்பவர்களாக இருப்பார்கள். எளிமையான வீடாக இருந்தாலும் ஆடம்பரமான வீடாக வைத்திருப்பார்கள்.

அளவற்ற இறை நம்பிக்கை உடையவர்கள், அனைத்து ஆலயங்களை தரிசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஒரு ஆலயத்தின் பெருமை அறிந்தவுடன் அந்த ஆலயத்திற்கு உடனே கிளம்பி போய்விடுவார்கள். அனைத்துவிதமான பூஜா பரிகாரங்கள் செய்வதில் முழுமையான ஈடுபாடு காட்டுவார்கள்.

பூராடம் நட்சத்திரக்காரர்கள், திறமையானவர்களை ஊக்குவிப்பார்கள். அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்பார்கள்., அந்த திறமைகள் வெளிப்படும்போது அதை மொத்தமாக அறுவடை செய்துவிடுவார்கள். பூராடக்காரர்களின் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். செல்வம் சேர்ப்பதில் இன்னும்இன்னும் என தேடிக்கொண்டே இருக்கும். பிரகஸ்பதி என்னும் குருவருள் முழுமையாக இருப்பதால் எதிலும் சோடை போகமாட்டார்கள். கச்சிதமான ஆடை அலங்காரம், பொருத்தமான நகை அலங்காரம், தோற்றத்திலேயே எதிரில் இருப்பவர்களை வசீகரிக்கச் செய்தல் இவர்களின் குணம்.

இன்னும் இருக்கிறது பூராடத்தின் மகிமை....

அடுத்த பதிவில் பார்ப்போம்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x