Published : 22 Jul 2020 11:47 AM
Last Updated : 22 Jul 2020 11:47 AM

கண் அசைவில் புரிந்துகொள்ளும் மனைவி; சேர்க்கவே சேர்க்கக் கூடாதவர்கள் யார் யார்? - 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 58;

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

மூலம் நட்சத்திரம் பற்றிய தகவல்களை பார்த்து வருகிறோம்.

தொடர்ந்து மேலும் பல தகவல்களைப் பார்க்கலாம்.

மூலம், அனுமன் மற்றும் ராவணனின் நட்சத்திரம் என்று பார்த்தோம். மூலம் அனைத்து நட்சத்திரங்களுக்கும் மூலம் என்றும் பார்த்தோம்.
இந்தப் பதிவில் மூலம் நட்சத்திரத்திற்கு பொருந்தக்கூடிய வாழ்க்கைத்துணை நட்சத்திரங்கள் எவை என்பதையும், நண்பர்களாக எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அமைவார்கள் என்பதையும் பார்ப்போம். மேலும் இந்த மூல நட்சத்திரக்காரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் தெய்வம் எது, அவர்களுக்கு உகந்த மரம், பறவை எது, மிருகம் எது என்றெல்லாம் பார்ப்போம்.

திருமணத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள் :-

பரணி - பூரம்- பூராடம் =
மூல நட்சத்திரக்காரர்களுக்கு, இந்த நட்சத்திரத் துணை அமைவது சிறப்பாக இருக்கும். வாழ்க்கை முழுவதும் உற்ற துணையாக, வளர்ச்சியில் பக்கபலமாக, முயற்சிகளில் ஊக்கம் தருபவராக, பொருளாதாரத்தில் தக்க ஆலோசகராக இருப்பார். 90%

ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-
இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக அமைவது நற்பலன்கள் தரக்கூடியதாக இருக்கும். மன நிறைவான வாழ்க்கை, வசதியான வாழ்வு, ஆடம்பர வாழ்க்கை, தாராள பணப்புழக்கம் என வாழ்க்கை அமையும். 90%


கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் :-
இந்த நட்சத்திரக்காரர்களில் ஒருவர் வாழ்க்கைத்துணையாக அமைவதும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள், அயல்நாடு செல்லும் யோகம், பலமான சேமிப்பு என இருக்கும். 85%


திருவாதிரை - சுவாதி - சதயம் :-
இந்த நட்சத்திரக்காரர்களில் யார் வாழ்க்கைத்துணையாக அமைந்தாலும் நல்ல பலன்களைத் தருவதாக இருக்கும். கண் அசைவில் உணர்ந்து புரிந்து கொள்ளும் தம்பதியாக இருப்பார்கள். நோயற்ற வாழ்வு, மன நிறைவான உத்தியோகம், சிக்கல் இல்லாத தொழில், அளவற்ற மக்கட்பேறு என வாழ்வார்கள். 85%


பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-
இந்த நட்சத்திரக்காரர்களில் ஒருவர், மூல நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்தால்.., வாழ்நாள் முழுவதும் எல்லாம் இன்ப மயம் என வாழலாம். சகல சௌகரியங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கும். 85%

இணையக்கூடாத நட்சத்திரங்கள் -

ஆயில்யம் - கேட்டை - ரேவதி - அஸ்வினி - மகம்:-

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை சேர்க்கக்கூடாது. முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வாழ்க்கை ரணமாகும். பிரிவு ஏற்படும்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-

இந்த நட்சத்திரக்காரர்களைத் தவிர்க்க வேண்டும், ஒருவேளை... அமைந்தால்... வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல்... கடமைக்கு வாழ வேண்டியது வரும். இப்படி ஒரு உப்புசப்பில்லாத வாழ்க்கை வாழ யாருக்குத்தான் பிடிக்கும்?

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-

நீங்கள் பெண்ணாக இருந்தால், இந்த நட்சத்திரக்காரர் கணவர் அமைந்தால் நிம்மதி என்பதே இருக்காது. கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என அவஸ்தைகளை சந்திக்க வேண்டியது வரும். உங்களின் ஆதாயங்கள் அனைத்தையும் அனுபவித்து உங்களையே குறை சொல்பவராக இருப்பார். (ஆண்களுக்கு இது பொருந்தாது)

உற்ற நண்பர்களாக யார் இருப்பார்கள்? :-

பரணி, பூரம், பூராடம், திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திர நண்பர்கள் மூல நட்சத்திரக்காரர்களுக்கு உண்மையானவர்களாகவும், முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள்.

ரோகிணி - திருவோணம்- அஸ்தம் :-

இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால், உங்கள் தொழிலுக்கும், உத்தியோகத்திற்கும் நல்ல துணையாக இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகளில் எதிர்பார்ப்பில்லாத உதவிகளைச் செய்வார்கள்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி :-
இந்த நட்சத்திர நண்பர்கள் மூலம் நட்சத்திரக்காரர்களுக்குக் கிடைப்பது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் இவர்கள் கை உதவிக்கொண்டே இருக்கும். நீங்கள் உயர்வு அடையும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள். நல்ல நட்பின் அடையாளம் இவர்கள்தான்.

இதில் இடம்பெறாத நட்சத்திரங்களை ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


நண்பர்களாக இருக்கக்கூடாத நட்சத்திரங்கள்:-

கார்த்திகை - உத்திரம் - உத்திராடம் :-
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாக அமைத்தால் தினம்தினம் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியது வரும். நிம்மதி பறிபோகும். தூக்கமில்லாமல் தவிக்க வேண்டியது வரும்.


மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-
இந்த நட்சத்திர நண்பர்கள் அமைந்தால், உங்களின் கடைசி காசு வரை சுரண்டிவிடுவார்கள், எந்த ஆதாயத்தையும் உங்களை அடைய விடமாட்டார்கள்.


புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி :-
இந்த நட்சத்திர நண்பர்கள் அமைந்தால், மரண அவஸ்தை என்பார்களே... அதை கண்ணில் காட்டுபவர்கள். அவர்கள் பிரச்சினைகளை உண்டுபண்ணி உங்களைச் சிக்க வைத்து விடுவார்கள். இரக்கமில்லாமல் நடுவழியில் இறக்கிவிடுவார்கள். துன்பத்தை தினம்தினம் தருவார்கள். இவர்களை விட்டு விலகிச் செல்வதே உத்தமம்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி :- இந்த நட்சத்திரத்தில் நண்பர்கள் அமைந்தால் அநாவசியமான விரயங்கள் ஏற்படும். ஊர்ஊராகச் சுற்றி சுகபோகங்கள் அனுபவிக்க வைத்து நோயை பரிசாக கிடைக்க வைக்கும். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.


மூல நட்சத்திரத்தின் இறைவன் - நிருதி( குபேரன் மற்றும் அசுர பெண்)

அதிதேவதை - அனுமன்

விருட்சம் - மாமரம்

பறவை - செம்போத்து
இந்தப் பறவை காகம் போன்றும், கழுகைப் போன்றும் இருக்கும். இந்த பறவைதான் சஞ்சீவி வேர் இருக்கும் இடத்தை அறிந்து வைத்திருக்கிறது என்கிறது புராணம். அனுமன் - சஞ்சீவிமலை- செம்போத்து - சஞ்சீவி வேர் இந்த தொடர்பு இப்போது புரிகிறது அல்லவா!

மிருகம் - பெண் நாய் (நாய்களுக்கு உணவளிக்க தவறாதீரகள்)

மலர் - வெண்சங்கு மலர்

அடுத்த பதிவில் மூலம் நட்சத்திரம் நான்கு பாதங்களுக்குமான பலன்களை விரிவாக பார்ப்போம்!

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x