Published : 14 Jul 2020 12:44 PM
Last Updated : 14 Jul 2020 12:44 PM

’ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்’ என்பது பொய்! 27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 56; 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

இந்தப் பதிவில் மூலம் எனும் மகா உன்னதமான நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.

இந்த நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்று. இது நட்சத்திர வரிசையில் 19 வது நட்சத்திரம். மூலம் நட்சத்திரம் தனுசு எனும் பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ராசியில் இடம்பெற்றிருக்கும்.

மூல நட்சத்திரம் அனைத்திற்கும் மூலமாக விளங்கக் கூடியது. உங்கள் பரம்பரைப் பாரம்பரியம் 14 தலைமுறைக்கு நீடிக்குமா என்பது குறித்து உங்களுக்குக் தெரியுமா?
எளிமையான வழி உண்டு. உங்கள் குடும்பத்தில் மூல நட்சத்திரத்தில் ஒரு குழந்தை... ஒரேயொரு குழந்தை பிறந்திருந்தாலும் ... ’என் பரம்பரை 14 தலைமுறைக்கும் நீடிக்கும்’ என்று உறுதியாகச் சொல்லலாம். உங்கள் 14 தலைமுறையைக் காணும் பரம்பரையாக உங்கள் குடும்பம் இருக்கும் என்பது சத்தியம்.

மூல நட்சத்திரப் பெண்ணை திருமணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்கிறார்களே...

எனவே மூலம் நட்சத்திரத்தைக்கொண்டிருக்கும் பெண்ணை நிராகரிப்பது என்பது இன்னும் தொடர்கிறது. இந்த கிறுக்குத்தனம் இப்போது ஆண்களுக்கு மூலம் நட்சத்திரம் என்றாலும் வேண்டாமென நிராகரிக்கத் தொடங்கி வளர்ந்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய பாவச்செயல் என்பதை உணருவதே இல்லை.

ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்!

இந்தப் பழமொழியை தலைக்கு மேல் சுமந்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் பலரும். இதன் உண்மையான பொருள் என்ன என்பதை அறிந்துகொள்ளவே இல்லை.

சரி... ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நீர்மூலம். இது சரியா தவறா? இதற்கு என்ன அர்த்தம்?

நாம் நினைத்துக் கொண்டிருப்பது முற்றிலும் தவறு. “ஆனி மூலம் அரசாளும்,பின் மூலம் நிர்மூலம்” என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனைப்போல் வாழ்வார்கள். பின் மூலம்.. அதாவது மூலம் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் நிர்மூலமாக்குவார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்.

‘இதுதான் எங்களுக்கே தெரியுமே! வேற ஏதாவது விளக்கம் இருந்தா சொல்லுங்க...’ என்று சொல்லுபவர்களும் இருக்கலாம்.

மூலம் நட்சத்திரம் தனுசு எனும் 9வது வீட்டில் இருக்கும் முதல் நட்சத்திரம். இந்த 9ம் வீடு தான் பாக்கியஸ்தானம் என்கிற நல்ல யோகங்களை தரக்கூடியதாகும். மேலும் பூர்வீகச் சொத்து, தந்தை வழி மூதாதையர் நிலை என்னும் பிதுர் ஸ்தானம் என்பதைக் குறிக்கிறது. பரம்பரையின் தொடர்ச்சியையும் சொல்லக் கூடியதாக அமைந்திருக்கிறது. ஆக பரம்பரையின் தொடர்ச்சிக்கான ஆணிவேர் எனும் மூலம் தான், அதாவது அஸ்திவாரம்தான் தனுசு மூலம் நட்சத்திரம்.

நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என சொல்லப்படுவது உண்டு.

ஆமாம்... மூலம் நட்சத்திரத்தைக் கொண்டவர்களுக்கு ஜாதகம் என்ற ஒன்றை எழுதவே கூடாது, எழுதவும் அவசியமில்லை. அந்த நட்சத்திரத்துக்குப் பலன் பார்க்கவும் கூடாது. பலன் சொன்னாலும் பலிக்காது. அவ்வளவு பரிசுத்தமான உன்னதமான நட்சத்திரம் மூலம்!

ஒரு ரகசியம் தெரியுமா?

மூலம் நட்சத்திரம் தவிர மற்ற எல்லா நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். அதுமட்டுமல்ல ஒரே நட்சத்திர ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக்கூடாது என்பதும் ஜோதிட விதி. ஆனால், மூல நட்சத்திர ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்பது தெரியுமா உங்களுக்கு? அதுமட்டுமல்ல “மூல நட்சத்திர பெண்ணுக்கு மூல நட்சத்திர ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம்” என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி.

என்னுடைய மதுரை நண்பர் ஒருவரின் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் மூலம் நட்சத்திரம்தான்! இருவருக்கும் வயது 70-ஐ நெருங்கியிருக்க, இன்று வரை ஆத்மார்த்த தம்பதியாக எல்லா செல்வ வளத்துடன் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த தம்பதி ஒரேயொரு உதாரணம். இன்னும் பல ’மூலம்’ நட்சத்திர ஜாதகங்கள். தம்பதிகள் விவரம் என்னிடம் உள்ளது.

ஜோதிடம் என்பது கடல். அதை நுனிப்புல் மேய்ந்த கதையாக எடுத்துக் கொண்ட ஒருசில ஜோதிடர்களின் மிகப்பெரிய குறைபாடு இது. எனக்கும் ஜோதிடம் தெரியும் என்று புத்தகங்களையும் கூகுளையும் வைத்துக் கொண்ட மனிதர்களாலும், இந்த மூல நட்சத்திரத்தின் பெருமை உலகிற்கு தெரியாமலேயே போய்விட்டது, சோகம்தான்!
மூலம் அனைத்திற்கும் மூலம். அவ்வளவு ஏன் ஜோதிடத்திற்கே மூலம் நட்சத்திரம்தான் மூலம். ஆமாம்... ஜோதிடத்தை முழுமையாக அறிய வேண்டுமானால் இந்த மூல நட்சத்திரத்தில் ஏதாவதொரு கிரகம் இருக்க வேண்டும். அல்லது இந்த மூல நட்சத்திரத்தின் அனுஜென்ம, திரிஜென்ம நட்சத்திரமான அஸ்வினி, மகம் ஆகிய நட்சத்திரங்களிலாவது கிரகம் இருக்க வேண்டும். அது குரு, புதன் அல்லது சந்திரனாக இருந்தால் ஜோதிடம் மிக நன்றாகவே வசமாகும். ஆக ஜோதிடத்திற்கே மூலம்தான் மூலமாக இருக்கிறது.

சாஸ்திரங்களுக்கு முதன்மையானவரான குரு பகவான் வீடுதான் தனுசு ராசி. அந்த தனுசில் முதல் நட்சத்திரமாக இருப்பது தான் மூல நட்சத்திரம்.

இந்த மூல நட்சத்திரம் சிங்கத்தின் வால் போன்றும், மலை போன்ற யானையை அடக்கும் அங்குசம் போலவும், வெற்றியைக் குறிக்கும் Y வடிவத்தையும் கொண்டிருக்கும்.

இதன் மூலமாகவே நாம் அறிந்து கொள்ளலாம்.

மூலம் நட்சத்திரக்காரர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். எவரையும் அடக்கி ஆள்பவர்கள். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாதவர்கள்.

இன்னொரு சிறப்பம்சமும் மூல நட்சத்திரத்துக்கு உண்டு.

தோல்வியே சந்திக்காத, நிகரற்ற சக்தியை தன்னுள் வைத்திருக்கிறம், சூரியனையே பழம் என நினைத்து விழுங்கப்போன ஶ்ரீராம பக்த அனுமன் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். சிவபெருமானின் அம்சமாகவும், மகாவிஷ்ணுவின் சேவகனாகவும் இருக்கும் அனுமனை வழிபட்ட எவரும் எந்த நிலையிலும் கைவிடப்படுவதில்லை, தோல்வியைச் சந்திப்பதில்லை என்பது நிதர்சனம்.

எனவே தான் இந்த மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயம் என்பதே அறியாதவர்களாகவும், தோல்வி என்பதை சந்திக்காதவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அதாவது மூல நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் வேறு எந்த நட்சத்திரக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் வெற்றியைத் தவிர வேறு எதையுமே வாழ்க்கையில் சந்திக்க மாட்டார்கள்.

மூலம் வெற்றியின் அடையாளம். மூலம் அஞ்சாமையின் அடையாளம். மூலம் சிங்கத்தின் ஒப்பற்ற சக்தியின் அடையாளம்.

இன்னும் இருக்கிறது மூலம் நட்சத்திரத்தின் பெருமைகள்...

அடுத்த பதிவில் இன்னும் சொல்கிறேன்.

- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x