Published : 22 Jun 2020 09:36 AM
Last Updated : 22 Jun 2020 09:36 AM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை; வார நட்சத்திர பலன்கள் - (ஜூன் 22 முதல் 28ம் தேதி வரை)


- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் வாரம்.
இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதர ஒற்றுமை பலப்படும். உறவினர்களால் ஆதாயமும் கிடைக்கப்பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் சுமுகமாக தீர்வதற்கு வழி கிடைக்கும்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்ப ஒற்றுமை பலப்படும். அலுவலகப் பணியில் இயல்பான நிலை தொடரும். ஒரு சிலருக்கு வேறு வேலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில் தொடர்பாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி முன்னேற்றப் பாதைக்கு திரும்பும். வியாபாரத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும். தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு விலகும். கலைஞர்களுக்கு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
பொறுமையைக் கையாண்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். கோபத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். வரவுக்கு மீறிய செலவு ஏற்படக்கூடிய நாள்.

செவ்வாய் -
எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய நபர்களால் வியாபார ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். அலுவலகப் பணிகளில் மனநிறைவு ஏற்படும். பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் இன்று பேசித் தீர்ப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

புதன் -
சேமிப்புகளையும் எடுத்துச் செலவு செய்ய வேண்டிய நாளாக இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களுக்கு உதவி செய்ய வேண்டியது வரும். வியாபாரத்தில் கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டியது வரும். ஒருசிலருக்கு சிறிய அளவிலான மருத்துவச் செலவு ஏற்படும்.

வியாழன் -
உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் தேங்கி நின்ற அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். பழைய கடனை அடைத்து, புதிய கடன் வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும்.

வெள்ளி -
சக பணியாளர்கள் முதல் அக்கம்பக்கத்தினர் வரை அனைவரிடமும் கவனமாக இருக்கவேண்டும். தேவையற்ற சர்ச்சைகளை நீங்களாக உருவாக்க வேண்டாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடக் கூடாது. நிதானமாக செயல்படுவது மிக மிக அவசியம்.

சனி -
கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் உற்சாகத்தைத் தருவதாக இருக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு சரளமாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொடுத்து குடும்பத்தினரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்குவீர்கள்.

ஞாயிறு -
நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாளை வழிபாடு செய்வதும், பெருமாளுக்கு துளசிமாலை கொண்டு தரிசிப்பதும் நன்மைகளை அதிகப்படுத்தித் தரும்.
***************************


மிருகசீரிடம் -
நிதானமாக செயல்பட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறலாம்.
குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் பெரிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
சகோதரர்களிடம் இணக்கமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். தவறுகள் நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருசிலருக்கு வேலையைத் தொடர்வதில் சிக்கல் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகளை செய்வதோ, புதிய முயற்சிகளில் ஈடுபடுவதோ இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.
சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். பெண்களுக்கு இன்னும் ஒரு சில வாரங்கள் பொறுத்திருந்தால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.
அவசரப்படுவது, உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுப்பது கூடாது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டும். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளைத் தவறவிடக்கூடாது.

இந்த வாரம் -

திங்கள் -
எதிர்பார்த்த உதவிகளும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிடைக்கும். சிறப்பான பலன்களும் நன்மைகளும் நடைபெறக்கூடிய நாளாக இருக்கும்.

செவ்வாய் -
பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

புதன் -
அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மாற்று மொழி பேசுவோர் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகளைத் தருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சலசலப்புகள் தீரும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

வியாழன் -
சராசரியான நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளில் இயல்பான நிலை தொடரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வெள்ளி -
சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகப்படியான லாபம் கிடைக்கும். சகோதரர்களிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு உண்டாகும். தந்தை அல்லது மாமனார் உடல்நலத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும்.

சனி -
எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டாம். மூத்தோர்களின் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

ஞாயிறு -
மனக் குறைகள் நீங்கும்படியாக பண வரவு இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழ்நிலை உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் -
பைரவர் வழிபாடு செய்வதும், பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். மனதில் நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும்.
*****************************


திருவாதிரை -
இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்களிலிருந்து படிப்படியாக வெளியே வருவீர்கள்.
தாமதப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனி விரைவாக முடியும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்வார்கள்.
கடன் பிரச்சினையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். இனி படிப்படியாக கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வருவீர்கள். அலுவலகப் பணிகளில் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்கள் இனி நிம்மதியாக வேலையைத் தொடர்வார்கள். வேலை நீக்கம் பற்றிய அச்சம் நீங்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். அரசு மற்றும் வங்கியின் உதவி எளிதாக கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குழந்தை பாக்கியம் தாமதமானவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.
மாணவர்கள் இன்னமும் கல்வியில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டியதிருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -

திங்கள் -
கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்று, இனி அந்தத் தவறுகளைச் செய்யாத வண்ணம் சரியாக திட்டமிடல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். எடுத்துக்கொண்ட வேலைகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். மனநிறைவு ஏற்படக் கூடிய வகையில் பணவரவு இருக்கும்.

செவ்வாய் -
திட்டமிடாத காரியங்களிலும் வெற்றி காணக்கூடிய நாள், எனவே எடுத்துக்கொண்ட எந்த முயற்சிகளிலும் முழுமையான வெற்றியைக் காண்பீர்கள். பணவரவு சரளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள்.

புதன் -
நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். முக்கிய ஒப்பந்தங்கள் ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். அலுவலகப் பணிகளில் அழுத்தம் அதிகரித்தாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும்.

வியாழன் -
மன நிறைவைத் தரக் கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு உதவிகள் கிடைக்கும். சொத்து பிரச்சினையில் சகோதரர்களுடன் சமாதானம் பேசி சாதகமாக பிரச்சினையை முடிப்பதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தங்கள் அனைத்தும் நீங்கும். தாயாரின் உதவிகளும் ஆதரவும் கிடைக்கும்.

வெள்ளி -
ஒரு சராசரியான நாளாகத்தான் இருக்கும். அலுவலகப் பணிகளை சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இயல்பான நிலை இருக்கும். செலவுகள் சற்று அதிகமாக ஏற்படக்கூடிய நாள்.

சனி -
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடனை அடைத்து புதிய கடன் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீரும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியம் பிரச்சினைக்கு மாற்று மருத்துவம் தொடர்பான மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள்.

ஞாயிறு -
குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட வேண்டும். நண்பர்களுடன் வெளியே செல்வது ஒரு சில பிரச்சினைகளை ஏற்படுத்தித் தரும். நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய நாள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது நல்ல பலன்களை தரும்.
*****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x