Published : 20 Jun 2020 02:25 PM
Last Updated : 20 Jun 2020 02:25 PM

டிசம்பரில் கிரகணம் ‘கரோனா’ ஆரம்பம்; நாளைய கிரகணத்தில் வீரியம் குறையும்!  - குடை, செருப்பு, கோதுமை உணவு தானம் ; தோஷ நட்சத்திர பரிகாரங்கள் 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

நாளை ஞாயிற்றுக்கிழமை 21.06. 2020 அன்று ஏற்படும் சூரிய கிரகணம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? கோள்களின் நிலையைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டதைப் பார்ப்போம்.


கடந்த முறை, சூரிய கிரகணம் 26.12.2019 அன்று ஏற்பட்டது நினைவிருக்கிறதுதானே. அப்போது அனைத்து கோள்களும் ராகு கேதுவுக்குள்ளாக அடைந்து கிடந்தன. அதாவது கால சர்ப்ப தோஷத்தில் இருந்தது.

பொதுவாகவே, காலசர்ப்ப தோஷத்தில் ஏற்பட்ட கிரகணமானது உலக மக்களுக்கு கடுமையான பாதிப்புகளைத் தரும் என்பது விதி. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வந்த கிரகணம், காலசர்ப்பதோஷத்தால், கடும் பாதிப்புகளை மக்களுக்குத் தந்தது. இன்னமும் தந்துகொண்டிருக்கிறது.
காரணம்... ஒரு கிரகம் கூட ராகு கேதுவைத் தாண்டவில்லை. அனைத்தும் ராகு கேதுவுக்குள் அடக்கமாகிவிட்டதால், அனைத்து கிரகங்களும் தங்களின் வலிமையை முற்றிலுமாக இழந்துவிட்டிருந்தன. இதன் காரணமாகவே ராகு கேதுவின் ஆட்டம் ஆரம்பமானது.

கேது என்பது கண்ணுக்கு தெரியாத, மறைமுகமான பாதிப்புகளைத் தரக்கூடியது. ராகு சிறிய விஷயத்தையும் பிரமாண்டமாக மாற்றக்கூடிய வல்லமை கொண்டது.

உலக அளவிலான செய்திகளை உற்று கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கரோனா வைரஸ் உருவான காலகட்டம் கடந்த டிசம்பர் மாதத்தில்தான் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

அதாவது கடந்த சூரிய கிரகண காலகட்டத்தில், எல்லா கிரகமும் ராகுகேதுவுக்கு முன்னே பிணை கைதிகளாக இருந்ததால், எந்த கிரகமும் நமக்கு உதவி செய்ய முடியவில்லை. இதை நம் நாடு உட்பட உலகநாடுகள் அனைத்தின் நிலையையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
கரோனா பாதிப்பில் உலகம் முழுக்க எல்லா நாடுகளும் என்ன செய்வது, ஏது செய்வது என்று எதுவும் புரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன. கையறு நிலையில் தவிக்கின்றன. வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கலங்குகின்றன.
இவையெல்லாம் இன்றைய நாள் வரையான உலக சோகம்; உலக நடப்பு. கால சர்ப்ப ஆதிக்கத்தால் விளைந்த ஆட்டம். .

நாளை சூரிய கிரகணம். டிசம்பரில் சூரிய கிரகணத்தின் போதுதான், கரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின. நாளைய சூரிய கிரகணத்தான் என்னென்ன நடக்கும்? நாளைய தினம் 21ம் தேதி வரக்கூடிய சூரிய கிரகணம், நல்லதா... கெட்டதா?
நிச்சயமாக நல்லதுதான். கவலைவேண்டாம். கரோனா குறித்த கவலையே வேண்டாம்.

நாளைய தினம் வரக்கூடிய சூரிய கிரகணம், லேசுப்பட்டதல்ல .கடந்த டிசம்பரில் வந்தது போல, பத்தோடு பதினொன்று வகையைச் சேர்ந்த கிரகணம் அல்ல. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு வரக்கூடிய சூரிய கிரகணம். மிக மிக வலிமை மிக்க சூரிய கிரகணம். ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய சூரிய கிரகணம்.

நாளைய தினம் வரக்கூடிய விசேஷமான சூரிய கிரகணத்தை அடுத்து, காலசர்ப்ப தோஷம் என்ற சங்கிலி உடையும். நாளைய தினம், கிரகணம் முடிந்த உடனேயே, சூரியன் ராகுவை விட்டு விலகி வெளியே வருகிறார். நவகிரகங்களின் தலைவன் சூரியன் என்பதுதான் நமக்குத் தெரியுமே! அப்பேர்ப்பட்ட சூரியன், தன் பலமிழந்து செயல்பட முடியாமல் இருந்த நிலை கடந்த சூரிய கிரகண காலகட்டத்தில் தொடங்கியது. இந்த நிலை இப்போது மாறப்போகிறது. இனி தன் சுய பலத்தை அடையப் போகிறார் சூரியன். இதனால் ராகு கேது சர்ப்பங்கள் இதுவரை பெற்றிருந்த பலத்தில் கணிசமான அளவு பலத்தை இழப்பார்கள். இதையடுத்து, கரோனா பாதிப்பு என்பதும் படிப்படியாக குறையும் என்று நிச்சயமாக நம்பலாம்.

ஆடி மாதம் (ஜூலை 16ம் தேதிக்குப் பிறகு) சூரியன் கடக ராசியில் இருக்கும் போது, நோய் தீர்க்கும் மருந்து, தடுப்பு மருந்துகள் சோதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். இதனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். கரோனா நோய்த்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல மக்கள் விடுபடுவார்கள். அதாவது ராகு கேது பலம் இழப்பது போல, கரோனாவைரஸும் தன் வீரியத்தை இழந்துகொண்டே வரும்.
ஆவணி மாதத்திற்கு பின் (ஆகஸ்ட் 17ம் தேதிக்குப் பிறகு) உலகம் முழுக்க பரவலாக கரோனா தாக்காமல் இருப்பதற்கான மருந்துகள் உபயோகப்படுத்தபடும்.

ஒரு கிரகணத்தால் உண்டான பாதிப்பு, அடுத்த கிரகணத்தில் சரிசெய்யப்படும் என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் கணக்கு.இறைவனால் சாபம் கொடுக்கப்பட்டு, சாப விமோசனமும் இறைவனாலேயே தரப்படுவதை புராணம் எடுத்துரைக்கின்றன. ஆகவே, கரோனா நோய் எனும் சாபத்தில் இருந்தும் தாக்கத்தில் இருந்தும் விமோசனம் கிடைத்து வெல்வோம் என்பது உறுதி!
.

இன்னொரு விஷயம்... சூரியன்... மனோ தைரியம், பொருளாதாரம், மருத்துவம், அரசாங்கம் என அனைத்துக்கும் காரகம். அவர் இப்போது பாம்பின் வளையத்திலிருந்து வெளி வருகிறார். வரும்போது, புதிய சக்தியோடு, உத்வேகத்தோடு தன் முழு பலத்தையும் வெளிப்படுத்துவார் சூரியன்.

உலகுக்கும் உலக மக்களுக்கும் சூரிய பகவான் பக்கபலமாக, பக்கத்துணையாக இருக்கிறார். நாம் அவரின் பலத்தை இன்னும் வலுவாக்க பிரார்த்தனைகளிலும் வேண்டுதல்களிலும் வழிபாடுகளிலும் ஈடுபடுவோம். சூரியபகவானுக்கு என்னெவல்லாம் விருப்பமோ அவற்றைச் செய்வோம்.
கிருமி நாசினியாக பலவித ரசாயனப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும் நூறு சதவீத கிருமி நாசினி சக்தியை கொண்டவர் சூரிய பகவான் என்பது தெரியும்தானே உங்களுக்கு.
அப்படியானால் இந்த கரோனா வைரஸையும் அழித்திருக்க வேண்டியதுதானே?
இதுவரை சூரியனின் சக்தி ராகு எனும் நிழலை தாண்டி வந்ததால் சூரிய ஒளியின் வீரிய சக்தி பலமிழந்து போயிருந்தது. இனி நாளை முதல் தன் சூரிய கதிர்களின் மூலமாக தீராத நோய்களையும் தீர்க்க கூடியதாக மாறுவார். மாற்றுவார்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, ரோகிணி, மூலம் இந்த நட்சத்திரக்காரர்கள் அவசியம் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

சூரியனின் தானியம் கோதுமை. எனவே, கோதுமையால் செய்த உணவுகளை சப்பாத்தி, பூரி, கோதுமை அல்வா முதலானவற்றை இயலாதவர்களுக்கு தானம் வழங்குங்கள். இளம் பெண்களுக்கு குடையும் ஆண்களுக்கு காலணியும் தானம் செய்யலாம். விசிறி தானமும் செய்யலாம்.


குடை தானம் தருவது சிறப்பு. குடை சூரியனின் அம்சம். ஊர்வலங்களில் சுவாமிக்கு குடை இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது சூரியனின் அடையாளம்.
காலணிகளைத் தருவதும் சிறந்த பரிகாரம். காரணம், காலணி என்பது சனி பகவானின் அம்சம். சனி பகவான் ஆயுள் காரகன். செருப்பு தானம் செய்வது மகா புண்ணியம். ஒருவேளை நோய் தொற்றே வந்தாலும் நம் ஆயுளை காப்பாற்றுவார் சனி பகவான் என்கிறது சாஸ்திரம்.

பூஜையறையில், கிழக்கு முகமாக தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து தானம் தாருங்கள். எல்லா நல்லதுகளையும் இந்த சூரிய கிரகணம் தரும். கிரகண தோஷமே இல்லாமல் செய்யும். அரவணைத்துக் காக்கும்.

நம்பிக்கை... இதுதான் நமது பலம். நம்பிக்கையோடு இருப்போம். கரோனாவை வெல்வோம்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x