Published : 01 May 2020 03:43 PM
Last Updated : 01 May 2020 03:43 PM

வீட்டோடு மாப்பிள்ளைக்கும் உத்திர நட்சத்திரத்துக்கும் என்ன சம்பந்தம்?

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 35;

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


உத்திரம் நட்சத்திரம் பற்றிய விவரங்களைச் சொல்லுகிறேன்.


இன்னும் தொடர்ந்து சொல்கிறேன்.

வீட்டைத் தாங்கும் நட்சத்திரம் இந்த உத்திரம் என பார்த்தோம். அப்படியானால் குடும்பச் சுமையை முழுதும் தாங்க வேண்டியது வருமா? என பலரும் கேட்கிறார்கள்! அப்படியல்ல.. குடும்பத்தையே வளமாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள் இந்த உத்திர நட்சத்திரக்காரர்கள். உதாரணமாக பெரும் தொழிலதிபராக முன்னேறிய ஒருவர், தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன் உறவினர்கள் அனைவரையும் உயர்த்தி விடுவார். இந்த உதாரணப்படி, நீங்களே பலரையும் அறிந்து வைத்திருப்பீர்கள். இதைப் படிக்கும் போதே, அதெல்லாம் உங்கள் கண் முன்னால் வந்து போகும். இதைப்போலத்தான் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தி விடுவார்கள்.

பொதுவாக உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு, பயணத்தில் ஆர்வம் இருக்கும். அதேபோல, வேலையில் அடிக்கடி இடமாற்றத்தையும் சந்திப்பார்கள். கற்ற கல்வி ஒன்று, பார்க்கும் வேலை வேறு ஒன்றாக இருக்கும். அதாவது படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இருக்காது. அதற்கு சிறிதும் சம்பந்தமில்லாத வேலையில் இருப்பார்கள்.

தாய்மாமன் வகையில் நிறைய உதவிகளைப் பெறுவார்கள். அதற்கு நன்றிக் கடனாக மாமனுக்கு பெரிதும் கைமாறு செய்வார்கள். மனைவியிடம் பணிந்து போவார்கள். இன்னும் சொல்லப்போனால் மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள். ஒருசிலர் வீட்டோடு மாப்பிள்ளையாகக் கூட இருப்பார்கள். இல்லையென்றால் மாமனார் குடும்பத்தை தன்னோடு வைத்துக்கொள்வார்கள்.

இவர்களுக்கு வாழ்க்கைத்துணையாக வரக்கூடியவர்கள் எந்த நட்சத்திரமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று பார்ப்போமா?

ரோகிணி- அஸ்தம் - திருவோணம் ; இந்த நட்சத்திர வரன்கள் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புதல் தரலாம். 100% மிகச்சரியான வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.


பரணி - பூரம் - பூராடம் ; இந்த நட்சத்திர வரன்கள் அமையும் வாழ்க்கை அருமையான, ஆனந்தமான வாழ்க்கை அமையும். 98%.

சுவாதி - சதயம் ; இந்த நட்சத்திர வரன்கள் கிடைத்தால் யோகம்தான். மனமொத்த தம்பதிகளாக இருப்பார்கள். 90% பொருத்தமான ஜோடி இவர்கள்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி ; இந்த நட்சத்திர வரன்கள் வாழ்க்கைத்துணையாக அமைந்தால் நற்பலன்கள் நடக்கும். 85% இணையான ஜோடியாகத் திகழ்வார்கள்.

அஸ்வினி - மகம் - மூலம் ; இந்த நட்சத்திர வரன்கள் சிறப்பான நன்மைகளைத்தரும். 80% சரியான ஜோடியாக இருப்பார்கள்.

முக்கியமான விஷயம்... திருவாதிரை, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களை உத்திர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

இதில் குறிப்பிடாத மற்ற நட்சத்திரங்களின் ஜாதகங்கள் வந்தால், ஜாதக பலன்களையெல்லாம் ஜோதிடரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொண்டு, முடிவெடுங்கள்.

அடுத்து, உங்களுக்கு நன்மை தருவதும், அதிர்ஷ்டகரமாக இருக்கும் நட்சத்திரங்களையும், தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்களையும் பார்ப்போம்..!


ரோகிணி - அஸ்தம் - திருவோணம்
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். பணவரவையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தரும். இந்த நட்சத்திர நண்பர்கள் உங்களுக்கு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வார்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். தொழில், வியாபாரங்கள் ஆரம்பித்தால், ஆல் போல் தழைத்தோங்கும்.


சுவாதி - சதயம்
இந்த நட்சத்திர நாட்களில் எந்த சுப காரியங்களும் செய்யலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்க ஏற்றது. பத்திரப் பதிவுகள் செய்யவும், வீடுகட்டவும் ஏற்றது. வாகனங்கள் வாங்கவும் ஏற்ற நட்சத்திர நாட்கள். தாய்வழி சொத்துக்களாலும், உறவுகளாலும் லாபம் உண்டாகும். நோய் நீங்க மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், மருந்துண்ணவும் ஏற்ற நாட்கள். இந்த நட்சத்திர நண்பர்கள் பேருதவியாக இருப்பார்கள். அவர்களால் பல ஆதாயங்கள் உண்டாகும்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் தொழில், வியாபாரம், வீடுகட்ட என அனைத்திற்கும் வங்கிக்கடன் வாங்கலாம். இந்தக் கடன் மூலம் நன்மை நடக்குமே தவிர, கடுகளவும் பிரச்சினைகள் வராது. இந்த நட்சத்திர நண்பர்கள் உங்களுக்கு ஆபத்பாந்தவனாக இருப்பார்கள். உங்களின் இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து உதவுவார்கள். நோய் நீங்குவதற்காக மருந்துண்ண விரைவில் நோய் நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்க போடும் திட்டங்கள் அனைத்துமே வெற்றியாகும்.


அஸ்வினி - மகம் - மூலம்
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் நீண்டதூரப் பயணங்கள் செய்ய, வீடு மாற்றம், வேலையில் இடமாற்றம் ஆகியவை நல்லவிதமாக நடந்தேறும். விண்ணப்பம் செய்ய, அயல்நாடு பயணம், அயல்நாட்டில் வேலைக்காக மனு செய்ய, முதல் மணம் முறிவு ஏற்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள் மறுமணம் தொடர்பாக முயற்சி செய்ய, சொத்து பாகப்பிரிவினைகள் செய்ய உகந்த நாட்களாகும். இந்த நட்சத்திரக்காரர்கள், உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களாக அமைந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம். ஆனால் கூட்டுத்தொழிலுக்கு ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பரணி - பூரம் - பூராடம்
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வியாபார, தொழில் ரீதியாக பயணங்கள் செய்ய, வீடு மற்றும் வேலை தொடர்பாக இடமாற்றம் செய்ய, வெளிநாடுகளுக்குச் செல்ல, நீண்ட சிகிச்சைக்கு பின் வீடு திரும்ப, ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ள, சுற்றுலா செல்ல, பூர்வீகச் சொத்துக்களை விற்க உகந்த நாட்களாகும். இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக இருந்தால் மிக அதிக நன்மைகளும், உதவிகளும் கிடைத்துக்கொண்டே இருக்கும்.


மிருக சீரிடம்- சித்திரை - அவிட்டம்
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த முயற்சிகளும் செய்யக்கூடாது. எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது. பயணம் தவிர்ப்பது நல்லது. நண்பர்களாக இருந்தால் கடுமையான சிக்கலில் சிக்கி தவிக்க வேண்டி வரும். ஆக, அறவே விலக்க வேண்டிய நட்சத்திரம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.


புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த விஷயமும் உங்களுக்கு எந்த ஆதாயத்தையும் கிடைக்காது. ஏமாற்றமே மிஞ்சும். அல்லது உங்கள் பெயரை பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். நண்பர்களாக இருந்தால் நன்மையும் இருக்காது. அதேசமயம் தீமையும் இருக்காது. வீண் அரட்டைக்கு மட்டுமே பயன்தரும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள்.


ஆயில்யம் - கேட்டை - ரேவதி
இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு எதிராக திரும்பும். நல்லது நினைத்து செய்திருந்தாலும் வீண் பழி சுமக்க வேண்டி வரும். நண்பர்களாக அமைந்தால் ரண வேதனையை சந்திக்க நேரிடும். சிறை வரைக்கும் கூட செல்லும் சந்தர்ப்பங்கள் அமையும்.


கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்
இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் சவரம் செய்தல், முடி திருத்துதல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம், திருமணம் (ஆண்களுக்கு மட்டும்) போன்றவை செய்யக்கூடாது. மற்ற காரியங்கள் செய்யலாம்.

உத்திரம் நட்சத்திரத்தின் தேவதை - பகன்

அதிதேவதை - ஐயப்பன்

மிருகம் - எருது

பறவை - கிளுவை

விருட்சம் - அலரி மரம்

மலர் - செந்தாமரை

தானியம் - கோதுமை

பொதுவாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஏழைகளின் கல்விக்கு உதவி செய்வார்கள். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வார்கள். குறிப்பாக மணமக்களுக்கு கட்டில் மெத்தை வாங்கித் தருவது பெரும் நன்மைகளை தரும்.

உத்திரம் நட்சத்திரம் 4 பாதங்களுக்கும் உள்ள பலன்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.


- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x