Published : 21 Apr 2020 03:39 PM
Last Updated : 21 Apr 2020 03:39 PM

நொறுக்குத்தீனி பிரியர்கள், அப்டேட் ஆசாமிகள் பூர நட்சத்திரக்காரர்கள்!  27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள்; 31 - 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
இப்போது நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் பூரம் என்னும் மிக உன்னதமான நட்சத்திரம்.

இந்த நட்சத்திரமானது நட்சத்திர வரிசையில் 11வது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான். இது சிம்ம ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவர் மதுரையை ஆண்டாண்டுகாலமாக ஆட்சி செய்து வருகிறார். அவ்வளவு ஏன்... மதுரையில் இருந்துகொண்டே மொத்த அகிலத்தையும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அவர்... மதுரை மீனாட்சி அம்மன்!

ஈசனின் சரி பாதியை எடுத்துக்கொண்ட பார்வதி அன்னை பிறந்ததும் இந்த பூரம் நட்சத்திரத்தில்தான்.

நமக்கெல்லாம் திருப்பாவையைத் தந்தருளி, ஶ்ரீரங்கநாதருடன் இரண்டறக் கலந்த வில்லிப்புத்தூர் ஶ்ரீஆண்டாள் தாயார் பிறந்ததும் இந்த பூரம் நட்சத்திரத்தில்தான்.

இதில் ஒரு ஆச்சரியம் உண்டு. அதாவது இறைவனுக்கும் பூரம் நட்சத்திரத்துக்கும் அதிக தொடர்பு இருக்கிறதோ இல்லையோ, பெண் தெய்வங்களுக்கும் பூரம் நட்சத்திரத்துக்கும் ட்ஒற்றுமை இருக்கிறது, இறைவனை விட இறைவிகளுக்கே முக்கியத்துவம் இருப்பது புரியும்.

மதுரையில் மீனாட்சியின் ஆட்சி என்றுதான் நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். உண்மையில் எட்டு மாதம் சுந்தரேஸ்வரர் ஆட்சியும், நான்கு மாதம் அன்னை மீனாட்சியின் ஆட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெரியுமா நமக்கு?
இந்த ஆட்சி மாற்றம் ஏற்படும் ஒவ்வொரு வருடமும் இந்த ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன் ஈசன் தன்னையே பூஜித்து தான் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இப்படி அவரை அவரே பூஜிக்கும் கோயில்... அதாவது ஈசன் ஈசனையே பூஜித்து வணங்கும் ஆலயம்... மதுரையில் இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்துக்கும் பெரியார் பேருந்து நிலையத்துக்கும் அருகில் இருக்கிறது. அந்தக் கோயில்... இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில்.
பஞ்சபூத ஆலயங்களில் மண் தலம் என்று போற்றப்படுகிறது இம்மையில் நன்மை தருவார் கோயில். .
அதேபோல சிவபெருமானின் இடபாகத்தை முழுமையாக பெற்றவர் பார்வதி அன்னை. நமது மூளையின் செயல்பாடு இடது பக்கம்தான் என்பதும், நம் எல்லோருக்குமே இதயம் இருப்பதும் இடது பாகத்தில் தான் என்பதும் நமக்குத்தெரியும். இப்படி உயிரும் உணர்வும் தரக்கூடிய சக்தி சக்தியிடம் இருப்பது பெண்களுக்கான பெருமை தானே!

ஆண்டாள் அருளிய திருப்பாவை ஏதோ மார்கழி மாதத்திற்கு மட்டுமே படிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. திருப்பாவை தினம்தினம் படிக்கவேண்டிய ஒன்றாகும்.

ஒரு ரகசியம் சொல்கிறேன்...
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிற எவரும் (ஆண்,பெண்) திருப்பாவை படித்து ஆண்டாளையும் பெருமாளையும் மனதாரப் பிரார்த்தனை செய்துவந்தால், மிக விரைவில் திருமணம் நடக்கும். அதுமட்டுமல்ல... கடன் பிரச்சினை, நோய்த்தாக்கம் என எதுவும் விரைவில் தீரும். விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

பூரத்தின் பெருமைகள் நிறையவே இருக்கின்றன. முதலில், பூரத்தின் குணங்களைப் பார்ப்போம்.
முகத்தில் தேஜஸ், கண்களில் பிரகாசம், பேச்சில் இனிமை, எப்போதும் இளமையான தோற்றம் இதுதான் பூரம் நட்சத்திரம்.
செல்வவளம் மிக்கவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கை இயல்பாகவே இருக்கும். சொந்த வீட்டில்தான் பிறந்திருப்பார்கள். அதாவது பிறக்கும்போதே சொந்தவீடு என்றுதான் பிறப்பார்கள்.
இவர்கள் பிறந்த பிறகுதான், தந்தைக்கு இன்னும் வசதிகள் பெருகும். பூர நட்சத்திரக்காரர்களின் தந்தையை விட தாயார் அதிகாரம் உள்ளவராக இருப்பார். இளையவராக சகோதரிகள் தான் இருப்பார்கள். சகோதரர் வாய்ப்பு மிக மிகக் குறைவு. தந்தையிடம் அளவாகவே இருப்பார்கள். அளவாகவே பேசுவார்கள், எது வேண்டும் என்றாலும் தாயாரிடமே கேட்பார்கள், பூர நட்சத்திரக்காரர்கள்.

கல்வியில் சிறந்தவர்கள் பூர நட்சத்திரக்காரர்கள். படிக்கும்போதே வேலைவாய்ப்பைப் பெறும் திறனும் பூர நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு. வேலையில் அதிக சிரத்தையல்லாம் எடுக்க மாட்டார்கள். கலகலப்பாக இருப்பார்கள். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள். அனாயசமாக எதையும் செய்து முடிப்பவர்களாக இருப்பார்கள். அரசு பணி பூர நட்சத்திரக்காரர்களுக்கு மிக மிக எளிதாகக் கிடைக்கும். தனியார் துறையாக இருந்தால் உயர் பதவிகளில் இருப்பார்கள்.

பொதுவாகவே, பூர நட்சத்திரக்காரர்களில் பலரும் வியாபாரத்தில்தான் இருப்பார்கள். ஆடை ஆபரண வியாபாரம், குழந்தைகள் தொடர்பான கடைகள், மருத்துவர்கள், அக்குபஞ்சர், பிஸோயோதெரபி, ரத்த பரிசோதனை மையம் வைத்திருப்பவர்கள், பிரசவ மருத்துவர், மருந்துக்கடை வைத்திருப்பவர்கள், வழக்கறிஞர், நீதிபதி, புத்தக வெளியீட்டாளர், சித்த மருத்துவர்கள், பாரம்பரிய கலைப் பயிற்சியாளர், தொல்பொருள் ஆய்வாளர், கட்டிடக் கலை வல்லுநர்கள், அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் என்பதில் பூர நட்சத்திரக்காரர்கள் பணியாற்றுவார்கள்.
மென்பொருள் வடிவமைப்பு, ஃபேஷன் டிசைனர், கலைத்துறைகள், திரைப்பட இயக்குநர், ஹைடெக் தொழில்கள் என பூர நட்சத்திரக்காரர்கள் இந்தத் துறைகளிலெல்லாம் ஜொலிப்பார்கள்.
பூர நட்சத்திரக்காரர்கள், சூடான சுவையான உணவுகளை மட்டுமே உண்பார்கள். அதிலும் காரமான உணவில் அதிகம் விருப்பம் கொண்டவர்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு தேவையான சக்திகளை கொடுக்கும் பழங்கள், காய்கறிகள் என்பதிலும் ஈடுபாடு கொண்டவர்கள்.
ஆடைகளை அணிவதில் அதிக நேர்த்தி கொண்டவர்கள். பிறர் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருப்பதில் வல்லவர்கள். இவர்கள் சாதாரண நடைபாதையில் விற்கும் பொருளை அணிந்தாலும் அது கவர்ச்சியைத் தரும்.
பூர நட்சத்திரக்காரர்களின் இன்னொரு சிறப்பு... சந்தைக்கு வரும் புதுமையான பொருட்கள் யாவும் இவர்களை தாண்டிதான் மற்றவர்களுக்குக் கிடைக்கும். அந்தளவிற்கு up to date ஆக இருப்பார்கள்.
அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்டவர்கள் பூர நட்சத்திரக்காரர்கள். சிரித்த முகத்துடன் இருப்பார்கள். இதனாலேயே, எப்படிப்பட்ட வியாபாரப் பேச்சுக்களும் இவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். அதேசமயம் எந்த விதத்திலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவே மாட்டார்கள். அதாவது எதன் பொருட்டும் எதையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.

இவர்கள் குறுக்கு வழியில் சென்றால் மிதமிஞ்சிய செல்வம் சேர்ப்பார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அனைத்தையும் இழந்து பூஜ்ஜியம் ஆகிவிடுவார்கள். பூர நட்சத்திரக்காரர்கள், முடிந்த வரை நேர்மையாக இருப்பதுதான் நல்லது.

ஆனால் ஒன்று... இறைக்க இறைக்க கிணறு நீர் சுரப்பதுபோல், எவ்வளவு செலவு செய்தாலும் இருப்பு குறையவே குறையாது. யாரிடம் எவரிடம் பண உதவி கேட்டாலும் பூர நட்சத்திரக்காரர்களுக்கு உடனே கிடைத்து விடும்.

இவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் சிறிய அளவில் தொடங்க மாட்டார்கள். பிரமாண்டமான தொடக்கம் என்பதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி. வீடு கூட எளிமையாக, சிறியதாக, சாதாரணமானதாக இருக்காது. ஆடம்பரமாகத்தான் இருக்கும். அழகாகவும் பார்க்க பிரமிப்பாகவும்தான் இருக்கும். எதையும் கேட்டுப் பெறமாட்டார்கள். அதிகார தோரணையோடுதான் கேட்பார்கள்.

பூர நட்சத்திரக்காரர்கள், நொறுக்குத் தீனி பிரியர்கள், சதா ஏதாவதொன்றை கொறித்துக்கொண்டே இருப்பார்கள். பையில், வாகனத்தில் என எதிலும் ஏதாவது ஒரு உணவுப் பண்டம் எப்போது இருக்கும்.
இது ஏன்? எதனால் இப்படி சிறுதீனிகளில் விருப்பம்?
அடுத்த பதிவில் சொல்கிறேன்.
- வளரும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x