Published : 17 Apr 2020 01:15 PM
Last Updated : 17 Apr 2020 01:15 PM

சார்வரி ஆண்டு; மீன ராசிக்காரர்களே! கோபம் குறையும், லாபம் அதிகரிக்கும், புளியோதரை சாதம் கொடுங்க, தியானம் பண்ணுங்க, திருப்பட்டூர் போயிட்டு வாங்க! - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கக் கூடிய அபார ஞானம் உடைய மீன ராசி வாசகர்களே.
இந்த சார்வரி புத்தாண்டு உங்களுக்கு தரக்கூடிய பலன்களைப் பார்ப்போம்.

கடந்த சில மாதங்களாக ஆரோக்கிய பாதிப்புகளும் தொழிலில் ஒருசில பின்னடைவுகளும் குடும்ப உறவுகளில் தேவையற்ற எரிச்சலும் இருந்ததுதானே. இதனால், எப்போதும் எல்லோரிடமும் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தீர்கள். இந்த புத்தாண்டு முதல் அனைத்து விஷயங்களும் மாறப்போகிறது. அந்த மாற்றம் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் கடந்த மாதம் குடும்பத்தில் மிகப் பெரிய பிரளயமே ஏற்பட்டு இருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்கள் சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும். இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுமுகமான நிலை தொடரும். வருமானத்தில் நிறைய தடைகளும், பிரச்சினைகளும் இருந்திருக்கும். இனி வருமானத்திற்கு தடை இருக்காது.
பணிபுரியும் இடத்தில் அதிகப்படியான நெருக்கடிகளை சந்தித்திருப்பீர்கள். வேலையை விட்டு சென்று விடலாமா என்ற எண்ணம் தோன்றி இருக்கும். இப்போது அந்த பிரச்சினைகள், வேலையில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் தீரும். வேலையை விட்டுச் செல்லும் எண்ணம் மாறி இருக்கும். இனி உத்தியோகத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும்.
எடுத்துக்கொண்ட வேலைகளை குறித்த நேரத்தில், குறித்த நாளில் செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான தவறான பார்வை மாறும். உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கான பதவி உயர்வு ஊதிய உயர்வு உள்ளிட்டவை ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும்.
தொழிலில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் படிப்படியாக விலகும். போட்டி நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிகளை தந்திருக்கும். இப்போது அவர்கள் போட்டியிலிருந்து விலகிக் கொள்வார்கள். இனி உங்கள் தொழிலுக்கு நீங்களே ராஜா. இப்போது தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது மட்டுமல்லாது தொழில் வளர்ச்சிக்கு தேவையான வங்கிக்கடன், பிற நபர்களின் முதலீடு போன்றவை கிடைக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு பெருகும்.
வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இன்னும் 2 மாதத்தில் தொழில் வளர்ச்சி நீங்களே எதிர்பாராத வண்ணம் இருக்கும். புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக இருக்கும். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் போன்றவை இந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் மிகப்பிரம்மாண்டமாக வளர்ச்சியடையும். தேங்கி நின்ற கட்டுமானங்கள் அனைத்தும் இப்போது விறுவிறுப்பாக விற்பனையாகும். பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இரட்டிப்பான லாபத்துடன் கிடைக்கும்.

வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். இப்போதே பலதரப்பட்ட வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வியாபார உத்திகளை மாற்றியமைத்து வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். குடும்பத்தில் பெண் பிள்ளைகளால் பெருமையும் புகழும் கிடைக்கும். அவர்களின் திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்புகள் சற்று அச்சுறுத்துவது போல் இருந்திருக்கும். இப்போது உடல்நிலை பாதிப்புகள் படிப்படியாக குறையும். மருத்துவ செலவுகள் வெகுவாக குறையும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை மாறி இப்போது வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சைகளை தொடர்வீர்கள். அதனால் பெரிய பாதிப்பு பிரச்சினைகளோ வராது. உங்கள் இயல்பான வாழ்க்கையை நீங்கள் தொடரும்படியாகவே இருக்கும்.
சகோதர வழியில் ஆதரவும் அனுசரணையும் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக தீரும். எப்போதோ வாங்கி வைத்த சொத்துக்களின் மதிப்பு இப்போது பலமடங்காக கூடி மிகப்பெரிய லாபத்தைத் தரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முழுமையாக நீங்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். மூத்த சகோதரரால் உதவிகள் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆனாலும் ஒரு சில பிரச்சினைகளால் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை இருக்கும். எனவே யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவைகளை தொடர்ந்து செய்யுங்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதுவும் ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பே நடக்கும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். முயற்சிகளை கைவிடக்கூடாது.


சித்திரை மாதம்-
வரவு தாராளமாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். இனி தடை தாமதம் இருக்காது. கிடைக்கின்ற லாபங்கள் அனைத்தும் தனியார் கடன்கள் முழுவதையும் தீர்க்க பயன்படுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்த சொத்துக்களை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெறுவீர்கள். உரிய நபர் ஒருவரின் உதவியால் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். எதிர்ப்புகளைக் காட்டிவந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், உங்களுடன் சமாதானமாகப் போவார்கள். ஒருசிலருக்கு வீட்டுப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏதும் இருந்தால் இந்த மாதம் முழுமையாக குணமாகும். பெண்களுக்கு சொத்துக்கள் சேரும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். பிரசவ நேரத்தில் இருக்கக்கூடிய பெண்களாக இருந்தால் இப்போது சுகப்பிரசவம் நடக்கும். அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படாது. கலைஞர்களுக்கு புதிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள்.


வைகாசி மாதம்-
சிறிய அளவிலான முயற்சிகளே மிகப்பெரிய வெற்றியை உண்டாக்கி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வீர்கள். கிடைக்க வேண்டிய லாபம் முழுமையாகக் கிடைக்கும். தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். உணவு தொழில் சார்ந்தவர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆசிரியர்கள், குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்குத் தேவையான உதவிகள் மாணவர்களால் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தடையில்லாமல் வேலை கிடைத்துக் கொண்டே இருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். ஆடிட்டர்கள், கணக்காளர்கள் போன்ற தொழிலில் இருப்பவர்கள், இப்போது தனியாக தொழில் செய்ய முற்படுவார்கள். மளிகை, வியாபாரம் போன்ற வியாபாரங்களைச் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது லாபம் திருப்திகரமாக இருக்கும்.


ஆனி மாதம்-
தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணங்களால் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் சேவையில் உங்களுடைய சேவை திருப்திகரமாக இருக்கும். மக்களால் பாராட்டப்படுவீர்கள். கட்சித் தலைமைக்குத் தெரிந்து உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் கட்சியில் பதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளைக் கையாண்டு வியாபார வளர்ச்சியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீகத்தில் இருக்கும் சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

ஆடி மாதம்-
அதிக நன்மைகள் ஏற்படும் மாதம். மனதில் நினைத்தவை யாவும் செயல்வடிவம் பெறும். அதிக முயற்சிகள் இல்லாமலேயே அனைத்து வேலைகளும் எளிதாக முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசு ஒப்பந்ததாரராக இருந்தால் புதிய அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய கட்டுமான ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் வழியை மிகப்பெரிய உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமண தேதிகள் குறிக்கப்படும். பெண்களுக்கு இயல்பாக சொத்து சேர்க்கை ஏற்படும். மூத்த சகோதரரால் மிகப்பெரிய உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமண முயற்சிகள் கைகூடும். ஒருசிலருக்கு கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படும். கலைஞர்களுக்கு நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.

ஆவணி மாதம்-
நெருக்கடி தந்து கொண்டிருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அடகு வைத்த பொருட்கள் அனைத்தையும் மீட்பதற்குத் தேவையான பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். நீங்கள் விரும்பியதாக இருக்கும். ஒரு சிலர் தங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து மாற்று நிறுவனத்திற்கோ அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவது போன்றவை நடக்கும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் முதலீடுகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். பத்திரிகை மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் எதிர்பார்த்த பெரிய அளவிலான உதவிகள் கிடைக்கும். கடன் கொடுத்திருந்தால் இப்போது அந்தக் கடன் திரும்பக் கிடைக்கும்.


புரட்டாசி மாதம்-
தொழில் மற்றும் உத்தியோகத்தில் மனைவியின் உதவி கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் தொழிலுக்கு நண்பர்கள், உறவினர்கள் கூட்டு சேர முன்வருவார்கள். வியாபாரத்திலும் இந்தநிலை ஏற்படும். ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு மிக அதிக அளவிலான வியாபாரங்கள் நடைபெறும். ரியல் எஸ்டேட் துறை இருப்பவர்களுக்கு வருமானம் இருமடங்காக இருக்கும். மொத்த ஏஜென்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் அதிகப்படியான லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஐப்பசி மாதம்-
எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அது மனநிறைவைத் தரும் ஒப்பந்தங்களாக இருக்கும். வியாபாரத்தில் இருமடங்கு லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். நோய் பிரச்சனைகள் இனி இல்லாத நிலை ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அவர்களின் கல்வி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். பெண்களுக்கு சகோதர வழியில் வேண்டிய உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் யோகமும். உண்டு அதற்கு சகோதரர்கள் பண உதவி செய்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் புதிய வியாபார நிறுவனத்தோடு ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடுகளுக்குச் செல்லும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும். உணவகம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு உண்டு. அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். போக்குவரத்துத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புதிய கட்டுமான ஒப்பந்தங்கள் ஏற்படும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று நீதிபதியாவார்கள். உதவி பேராசிரியர்களாக இருப்பவர்கள் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவார்கள்.


கார்த்திகை மாதம்-
மனதில் நினைத்ததை செயல் வடிவமாக மாற அதிக முயற்சிகள் இல்லாமலேயே நடக்கும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமைக்குத் தகுந்த பதவி உயர்வு கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும். தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபமும் முன்னேற்றமும் ஏற்படும். உற்பத்தியான பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். இனி தேக்கநிலை என்பதே இருக்காது. வியாபாரத்தில் சீரான வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுப விசேஷங்கள் சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்துகொள்வார்கள். சகோதரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சேவை சார்ந்த வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் ஏற்படும். வெளிநாட்டுப் பயண ஏற்பாட்டாளர்களுக்கு தொழிலில் உள்ள மந்தநிலை மாறி தொழில் மீண்டும் வளர்ச்சி பெறும். மளிகை வியாபாரம், ஜெனரல் ஸ்டோர், பாத்திர வியாபாரம் போன்ற வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இழந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். காய்கறி வியாபாரம், உணவு பொருள் வியாபாரம், தேநீர் கடை போன்ற வியாபாரிகளுக்கு லாபம் இரட்டிப்பாகக் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவர்களுடைய பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும்.


மார்கழி மாதம்-
தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான நன்மைகளை ஏற்படுத்தி தரக்கூடிய மாதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அனைத்துவித நன்மைகளும் நடக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் இந்த மாதம் முடிவுக்கு வரும். பிள்ளைகளைப் பற்றிய கவலை தோன்றும். ஆனாலும் நம்பிக்கை தரக்கூடிய வகையில் உங்கள் பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். எனவே அவர்களைப் பற்றிய கவலை, அச்சம் முழுமையாக நீங்கும். அவர்களுடைய செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியை உண்டாக்கும். பெண்பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

தை மாதம்-
இந்த மாதத்தில் எடுத்துக்கொள்ளும் எந்த வேலைகளும் முயற்சிகளும் ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்புகள் உயரும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு மாற்றம் ஏற்படும் அல்லது இருக்கின்ற வீட்டை முழுமையாக புதுப்பித்தல் போன்ற வேலைகளைச் செய்வீர்கள். வேலையில் இருந்த ஒரு சில பிரச்சினைகளும் இந்த மாதம் முடிவுக்கு வரும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் தேவையான உதவிகள் கிடைத்து சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பலவிதமான சலுகைகளைச் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் அதிகப்படியான லாபமும் கிடைக்கும். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அதிகப்படியான ஆட்களைப் பணிக்கு அமர்த்துவீர்கள். வியாபாரத்தில் புதிய முறைகளைக் கையாண்டு வியாபார வளர்ச்சியை அதிகமாக்குவீர்கள். பெண்களுக்குத் தேவையான சொத்து சேர்க்கை, ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிக்கு இந்த மாதம் புத்திரபாக்கியம் உறுதியாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் கூடும். ரியல் எஸ்டேட் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் காணும். பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகரிக்கும். கட்டுமானத் தொழிலில் புதிய உச்சம் காண்பார்கள்.

மாசி மாதம்-
தொட்டதெல்லாம் துலங்கும் மாதம். எந்த முயற்சிகள் எடுத்தாலும் முழுமையான வெற்றி கிடைக்கும். அதன் மூலம் அதிகப்படியான ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். ஆதாயம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இப்போதே வேலையை உறுதிசெய்யும்படியாக வேலைக்கான உத்தரவுகளைப் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் எதிர்பாராத அளவு லாபம் கிடைக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த மாதத்தில் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பாராத புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதுவும் பெரிய நிறுவனங்களோடு ஏற்படுவதாக இருக்கும். பெண்களுக்கு சொத்துக்கள் சேரும். கணவன் வீட்டாருக்கு உங்களால் அதிகப்படியான உதவிகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நோய்கள் முற்றிலுமாக நீங்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இப்போது முழுமையாக நோய் நீங்கி வீட்டிற்கு வருவார்கள். மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ்வார்கள். தந்தைவழி சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். தந்தையின் தொழிலை மேற்கொள்ள வேண்டியது வரும். அந்த பொறுப்புகள் முழுமையாக உங்களை வந்து சேரும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அதிக அளவில் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.


பங்குனி மாதம்-
பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். நீங்கள் கொடுத்திருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் ஒருசில அச்சுறுத்தல்கள் ஏற்படும். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. குறிப்பாக வயிறு மற்றும் முதுகெலும்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பதாக தோன்றும், மருத்துவ ஆலோசனைக்குப் பின் அது ஒன்றுமில்லை என்று மருத்துவர்களால் நம்பிக்கை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு வங்கிக் கடன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் நீங்களும் உங்களுடைய சேமிப்பிலிருந்து முதலீடுகளைச் செய்வீர்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்துப் பிரச்சினைகளை சுமுகமாகப் பேசி முடிப்பீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் நேர்ந்தாலும் அதை பொருட்படுத்த மாட்டீர்கள். மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இசை மற்றும் நாட்டியத் துறையினருக்கு வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். அதற்கு உண்டான ஆதாயத்தையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் -
வெள்ளை மற்றும் மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்கள் - 1, 2, 3, 5, 9

வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகாரம் -
புளியோதரை சாதம் செய்து அக்கம்பக்கத்தினருக்கு கொடுங்கள். குறிப்பாக வயதில் மூத்தவருக்குக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு உதவக் கூடிய பொருட்களை வாங்கித் தாருங்கள். மிகப்பெரும் நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய ஆலய தெய்வம்-
கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். ஒரு வியாழக்கிழமை அன்று திருப்பட்டூர் பிரம்மா ஆலயத்திற்குச் சென்று, உங்கள் ஜாதகங்களை அவர் காலடியில் வைத்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x