Published : 17 Apr 2020 11:46 AM
Last Updated : 17 Apr 2020 11:46 AM

சார்வரி ஆண்டு; கும்ப ராசிக்காரர்களே! தூள்கிளப்பும் வருடம், தொழிலில் ஜிவ், பிரிந்தவர்கள் சேருவர், பால்கொழுக்கட்டை கொடுங்க! - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

எந்தச் சூழ்நிலையிலும் தன் கவுரவத்தையும் சுயமரியாதையையும் விட்டுக்கொடுக்காத கும்ப ராசி வாசகர்களே.
இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு என்ன பலன்களைத் தரும் என்பதை பார்ப்போம்.
எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல், எடுத்த முடிவுகளில் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வந்த நீங்கள், இனி அந்த பிரச்சினைகள் அனைத்தில் இருந்தும் விடுபடப் போகிறீர்கள். உங்கள் செயல்களால் ஜெயிக்கப் போகிறீர்கள்.
உத்தியோகத்தில் வேலை இழப்பு அல்லது உங்களுக்கு பொருந்தாத வேலையில் இருந்திருப்பீர்கள். இப்போது அந்த நிலை மாறி உங்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலை இழந்த நிறுவனத்திலிருந்து மீண்டும் அழைப்பு கிடைக்கப்பெறுவீர்கள். இவை அனைத்தும் ஜூலை மாதத்திற்குப் பின் நடைபெறும்.
குடும்பப் பிரச்சினைகளால் விபரீத எண்ணங்கள் தோன்றி இருக்கும். இனி குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து மனநிம்மதி ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களுடைய செயல்பாடுகளைக் கண்டு அச்சம் ஏற்பட்டிருக்கும். இனி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்களைப் பற்றிய கவலை நீங்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் கடுமையான நெருக்கடிகள், பின்னடைவுகளைச் சந்தித்திருந்த நீங்கள், இப்போது மெல்ல உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து முன்னேற்றப் பாதைக்குச் செல்வீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். அதுவும் வெளியூர் அல்லது வெளிநாட்டுத் தொடர்புடையதாக இருக்கும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் சரி செய்யும் விதமாக புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வியாபாரத்தில் புதிய உச்சத்தைத் தொடுவீர்கள். இதற்கான வாய்ப்புகள் ஜூலை மாதத்திற்குப் பின் அமையும். அதுவரை வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பான முன்னேற்பாடுகளை செய்து வாருங்கள். உங்கள் தொழிலுக்கு தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் பெரிதும் உதவுவார்கள்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது கடுமையான தேக்க நிலமையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். இப்போது உங்களுடைய ஏற்றுமதித் தொழில் விறுவிறுப்பாக மாறும். தேங்கி நின்ற பொருட்கள் அனைத்தும் விற்பனையாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருந்த அவர்களுக்கு கடுமையான பாதிப்புகள், கடன் பிரச்சினைகள் மிக அழுத்தத்தைத் தந்து கொண்டிருக்கும். இனி படிப்படியாக உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்படி வியாபாரம் நல்ல வளர்ச்சியை நோக்கிப் போகும்.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்களாக நீங்கள் இருந்தாலும், அல்லது உங்கள் மகன் உங்களிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்று இருந்தாலும் இப்போது குடும்பத்தோடு ஒன்று சேரும் வாய்ப்பு நெருங்கி வருகிறது.
பெண்களுக்கு தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள், சகோதரர்களால் நன்மைகள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணம் நடந்து புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும். மருத்துவ சிகிச்சை மூலம் முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இப்போது இயற்கையாகவே புத்திரபாக்கியம் உண்டாகும். இனி மருத்துவ உதவி தேவைப்படாது. இப்போது பிரசவ நேரமாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதுவும் இரட்டை குழந்தைகளாக இருக்கும் வாய்ப்பு அதிகம்.
மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சிறிய தடை ஏற்பட்டு மீண்டும் புத்துணர்வோடு கல்வியைத் தொடர்வார்கள். அயல்நாட்டில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு அதிகம். அது செப்டம்பர் மாதத்திற்குப் பின் நடக்கும். கலைத்துறை சார்ந்தவர்களாக இருந்தால் உங்களுக்கு நல்ல அருமையான வாய்ப்புகள் ஜூன் மாதம் ஏழாம் தேதிக்குப் பின் கிடைக்கும்.

சித்திரை மாதம்-
எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். எந்தவிதத் தடையும் இருக்காது. உங்களுடைய தொழில் அல்லது வியாபார முயற்சிகளுக்கு உங்கள் வாழ்க்கைத் துணை மிக பக்கபலமாக இருப்பார். தேவையான உதவிகளைச் செய்வார். மேலும் உங்கள் தொழிலுக்கு கூட்டாகவும் இருந்து தொழிலை சிறப்பாக நடத்துவதில் பெரும்பங்கு புரிவார். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இதுவரை யாரும் சிந்திக்காத ஒன்றை செயல்படுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஒரு சில நிபந்தனைகளோடு அரசே உங்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்து தரும். பெண்களுக்கு மிகப் பெரிய யோகங்கள் இந்த மாதம் நடக்கும் செல்வச் சேர்க்கை, சொந்த வீடு, பாகப்பிரிவினைகள் என அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்கள் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஒரு சில உதவிகள் தானாகக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்குவீர்கள்.ஒருசிலருக்கு தந்தையின் தொழிலை மேற்கொள்ள வேண்டியது வரும். பூர்வீக இடத்தில் வீடு அல்லது வணிக வளாகங்கள் கட்டும் எண்ணம் ஏற்படும்.

வைகாசி மாதம்-
சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான தேவையான உதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். தாய்வழி உறவுகள், மாமன் வகை உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள், தேவையான உதவிகளை செய்து தருவார்கள். சகோதரர்கள் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவார்கள். தொழில் அல்லது வியாபாரம் அல்லது பணி நிமித்தமாக நிமிர்த்தமாக வெளியூரில் இருப்பவர்கள் மீண்டும் குடும்பத்தினரோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். பெண்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வெளியூரிலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து நண்பர்களால் நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். டிராவல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது தொழில் வாய்ப்புகள் அமையும். மொத்த வியாபாரிகளுக்கு தங்களுடைய பொருள்கள் அனைத்தும் மொத்தமாக ஒரே இடத்தில் விற்பனை செய்யுமளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஒருசில சிறிய அளவிலான கடன்களை அடைக்க வாய்ப்புகள் உண்டாகும்.

ஆனி மாதம்-
மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படும். பிள்ளைகளின் நடத்தை குறித்து மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது, ஆனால் தேவையில்லாமல் சக ஊழியர்கள் மேல் சந்தேக கண்கொண்டு பார்ப்பீர்கள், அவர்கள் மீது உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். இப்போதிருக்கும் நிலையை தொடர்ந்து தொழிலிலும் வியாபாரத்திலும் செய்து கொண்டிருங்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும், அது மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும்,' எனவே எந்த விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும், அலட்சியமாக இருந்தால் பதவிக்கு ஆபத்து நேரிடும். பெண்களுக்கு புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் ஆனால் அவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும். திருமணமான பெண்களுக்கு இப்போது புத்திரபாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது திருமணம் உறுதியாகும். சிறு வணிக நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நிறுவனத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவிகளும் முதலீடுகளும் கிடைக்கும்.

ஆடி மாதம்-
மனதை வருத்திக் கொண்டு இருந்த கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். அல்லது ஒரு பகுதியை அடைப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக வங்கிக் கடன்கள் உடனடியாக கிடைக்கும். இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். ஒரு சிலர் சொந்த வீடு வாங்குதல், மனை வாங்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவார்கள். குலதெய்வ வழிபாடு செய்ய முற்படுவீர்கள். குடும்பத்தோடு சென்று வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கி வெற்றி காண்பீர்கள். மூத்த சகோதரிகள் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் ஏற்படும். ஒரு பெரிய தொகையை முன்பணமாக பெறுவீர்கள்.

ஆவணி மாதம்-
வாழ்க்கைத் துணை வழியே நிறைய நன்மைகள் நடக்கும். உங்களுடைய குடும்பத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும், பணியில் சேர்வதற்கான உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஆனால் பணியில் சேர்வதற்கு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தொழிலுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் அரசு செய்து தரும் நல்ல தொழில் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அரசு விருது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். வியாபார கிளைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
அரசுத் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். காவல் மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஆண் வாரிசுகளிடம் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும் அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கும் எனவே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் சொத்து தொடர்பான வழக்குகள் ஏதும் நடந்து கொண்டிருந்தால் இப்பொழுது நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக்கொள்ள முற்படுவீர்கள், அந்த முயற்சி திருப்திகரமாக இருக்கும். மிக முக்கியமான பிரச்சினையில் பிரபலமான நபர் ஒருவரால் தீர்வு கிடைக்கும்.


புரட்டாசி மாதம்-
எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தையும் பொறுமையும் கடைபிடிக்கவேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஒருவேளை அவசர முடிவுகளை எடுத்தால் பின்னாளில் பெரிய பிரச்சினையில் சந்திக்க வேண்டியது வரும். அலுவலகத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் பொறுமையும் நிதானமும் தேவை. சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஒப்பந்தங்கள் போடுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக சிந்தித்து, முழுமையாக படித்துப் பார்த்தபின் கையெழுத்திட வேண்டும். காசோலைகள் தரும்போது அதிக கவனமும் எச்சரிக்கை உணர்வும் தேவை. வியாபாரிகளுக்கு புதிய வியாபார வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் அதில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்ந்த பிறகே ஏற்கவேண்டும். வெளிநாடு தொடர்புடைய தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் ஒப்பந்தப்படி கொடுக்கல்வாங்கல் இருந்தால் வியாபாரத்தைத் தொடரலாம். இல்லையென்றால் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது நல்லது. அரசு வழியில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் ஏற்படும். தொழில் ற்றும் வியாபார இடத்தை சரியாக பராமரிக்க வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்கள் எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தித் தரும். பெண்கள் தங்கள் குடும்ப விஷயங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். கணவரைப் பற்றி குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைதள நண்பர்களிடம் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். ஆடம்பர நாட்டங்கள் வேண்டாம்.


ஐப்பசி மாதம்-
அதிக நன்மைகள் ஏற்படும். சென்ற மாதம் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் இந்த மாதத்தில் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் தீரும். தொழில் தொடர்பாக ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசின் கெடுபிடிகளால் ஒரு சில பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இப்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் வேலை தொடர்பாக ஏற்பட்டிருந்த ஒருசில நெருக்கடியான பிரச்சினைகள் இந்த மாதம் முடிவுக்கு வரும். அலுவலகத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலில் உங்களோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த நிறுவனம் பின்வாங்கும். அதேபோல வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்த வியாபாரிகள் விலகிச்செல்வார்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். தந்தையின் உதவியோடு சுய தொழில் தொடங்குவீர்கள். ஒரு சிலருக்கு வயிறு மற்றும் முதுகு தண்டுவட பிரச்சினைகள் வந்து நீங்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத பெரிய நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஏற்படும்.


கார்த்திகை மாதம்-
நல்ல பலன்கள் நடைபெறும் மாதம். நினைத்ததை நினைத்தபடி செய்து காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்று நடத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்படும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சொத்துக்கள் சேரும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். அடகு வைத்த பொருட்களை அனைத்தையும் மீட்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இப்பொழுது வேலையும் கிடைப்பதற்கு சந்தர்ப்பங்கள் கூடிவரும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். அது பதவி உயர்வோடு கூடியதாக இருக்கும். வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் நீதிபதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. அதுதொடர்பான தேர்வுகளில் எளிதான வெற்றியைக் காண்பீர்கள். கல்வியாளர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணியாற்றும் நிறுவனத்தின் சார்பாக மதிப்பு, மரியாதை, கௌரவம் கிடைக்கும்.


மார்கழி மாதம்-
எந்த முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும் அல்லது எந்த ஒரு வியாபார நோக்கமாக இருந்தாலும் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அந்த லாபத்தை மிகச்சரியாக பெறுவீர்கள். தொழில் தொடர்பாக மிக அற்புதமான வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அது அதிகப்படியான லாப நோக்கோடு இருக்கும். உங்கள் தொழிலுக்கு கூட்டு சேரவும் அல்லது உங்கள் தொழிலில் முதலீடு செய்யவும் பலரும் முன்வருவார்கள். இப்படி பெறப்படும் முதலீடுகளால் தொழில் மேலும் விரிவடையும். உங்கள் தொழிலோடு இணைந்த புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் பல மடங்காக இருக்கும். பணிபுரியும் நிறுவனத்தில் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் மூத்தவருக்கு திருமணம் நடக்கும். குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது வெளிநாடு தொடர்புடைய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி , முன்னேற்றம் ஏற்படும். சிறந்த சாதனை புரியக்கூடிய மதிப்பெண்கள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்து உடனடியாக வேலையில் சேர்வார்கள். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். ஒரு சிலர் வீடு மனை வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவதும் நடக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். இசை மற்றும் நாட்டியத் துறை சார்ந்தவர்களுக்கு கௌரவப் பதவி கிடைக்கும். அரசு கவுரவம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். லாப நோக்கோடு பலவித ஒப்பந்தங்கள் ஏற்படும்.

தை மாதம்-
இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் சகோதரர் அல்லது சகோதரி திருமணம் நடக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேரவேண்டிய பங்கு மிகச் சரியாக கிடைக்கும். உடல்நல பிரச்சினைகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் அறவே இல்லாமல் போகும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவராக இருந்தால் இப்போது முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்புவார்கள். அறுவை சிகிச்சை வரை சென்ற பிரச்சினைகள் அனைத்தும் அறுவை சிகிச்சையின்றி எளிய மருந்து மாத்திரைகளால் குணமாகும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். சகோதரர்கள் தாமாக முன் வந்து உதவுவார்கள். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். சுயதொழில் செய்யும் ஆர்வமுள்ள பெண்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்து சுய தொழில் தொடங்குவார்கள். ஆடை, ஆபரண வியாபாரம் செய்பவர்கள், ஜவுளிக்கடை நடத்திக் கொண்டிருப்பவர்கள், ஸ்டேஷனரி ஸ்டோர் போன்ற வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாக இருக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கலைஞர்களுக்கு மிக அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். ஓவியம் மற்றும் சிற்பக்கலை கலைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளும், மிகப்பெரிய அளவிலான ஒப்பந்தங்களும் ஏற்படும்.


மாசி மாதம்-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களாலும் வாழ்க்கைத்துணையாலும் அதிக உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் ஆதாயம் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். இல்லத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகப் பணியில் மிகச் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழிலுக்கு தேவையான முதலீடுகள் மிக எளிதாக கிடைக்கும். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களால் முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழிலில் மிகப் பெரிய பிரமாண்டமான வளர்ச்சி ஏற்படும். தரகு மற்றும் கமிஷன் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும். பெண்களுக்கு அற்புதமான பலன்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். திருமண முயற்சிகள் கைகூடும். சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் தங்கள் வீடுகளை விரிவுபடுத்துவார்கள் அல்லது மாடியில் மேலும் ஒரு தளத்தை கட்டுவார்கள். வணிகரீதியான கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடுவது போன்றவையும் நடக்கும். மிக அதிக அளவிலான நன்மைகளும், வருமானமும் தரக்கூடிய மாதமாக இருக்கும்.

பங்குனி மாதம்-
எதிர்பார்த்த வருமானத்தை விட இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினர் தேவைகள் பூர்த்தியாகும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையின் வழியே மிகப் பெரிய ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் வருமானமும் கிடைக்கும். அவர்களால் பெருமையும் கௌரவமும் உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு லாபம் இரட்டிப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்தும் நண்பர்களோடு இணைந்து புதிய தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாமல் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான உதவிகள் மிக எளிதாக கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக தீரும். வங்கிக்கடன் உள்ளிட்டவை கூட இப்போது முடிவுக்கு வரும். வருமான வரி போன்ற பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இந்த மாதம் அது தொடர்பான பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் அளவுக்கு ஒரு சில உதவிகள் கிடைக்கும். அரசும் அரசு வழியில் ஆதரவும் உதவிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். அந்த பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் அது தொடர்பான தகவல் உறுதியாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.


அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு


அதிர்ஷ்ட எண்கள் 5 7 8 9


வீட்டில் செய்யக்கூடிய எளிமையான பரிகாரம் -
பால் கொழுக்கட்டை செய்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுங்கள். இதை மாதம் ஒருமுறை செய்து வாருங்கள். வாரம் ஒருமுறை பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, வெல்லம் போன்றவற்றை கொடுங்கள். இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.


வணங்கவேண்டிய ஆலய தெய்வம்-
ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடும், ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை 21 முறை உச்சரித்துக் கொண்டு இருப்பதும் நன்மை தரும். திருச்செங்கோட்டில் இருக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்யுங்கள். நன்மைகள் அதிகம் பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x