Published : 15 Apr 2020 12:16 PM
Last Updated : 15 Apr 2020 12:16 PM

சார்வரி ஆண்டு; கடக ராசிக்காரர்களே! கடன் தீரும், தேவையான உதவி கிடைக்கும், நல்லவேலை கிடைக்கும்! - 12 மாதத்துக்குமான ஏ டூ இஸட் பலன்கள்!

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


கருணை வடிவமும் இரக்க குணமும் உடைய கடக ராசி வாசகர்களே.
பலவிதமான சாதனைகளையும் சில சோதனைகளையும் கடந்து வந்திருப்பீர்கள். இந்த புத்தாண்டு பலவிதத்திலும் நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் எளிதாக வென்று வந்த நீங்கள் இப்போது சிறிய பிரச்சினையைக் கூட கையாள முடியாமல் திகைத்து நின்று கொண்டிருப்பீர்கள்.
வேலையில் பாதிப்புகள், சில பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கக் கூடும். இந்த ஆண்டு உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய ஆண்டாக இருக்கும். வேலை இழந்தவர்களுக்கும் வேலையில்லாமல் இருந்தவர்களுக்கும் ஜூலை மாதத்தில் வேலை கிடைக்கும். பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் பணிபுரிபவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகள் கிடைக்கும்.

வேலையின் காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்தவர்கள் இப்போது குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேருவர். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஜூன் மாதத்திற்குள் புத்திர பாக்கியம் உண்டாகும்.

சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் ஒழுங்காகும். சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைப்பு தருவார்கள். இளைய சகோதரருக்காக சில உதவிகளை செய்து தருவீர்கள்.

சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி தொழில், உற்பத்தித் தொழில் சிறப்பான வளர்ச்சியை தரும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு படிப்படியான வளர்ச்சி ஏற்படும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு அதிகம் ஒப்பந்தம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவி பொறுப்பு கிடைக்கும்.

பெண்களுக்கு இயல்பாக சொத்து சேரும். திருமணம் உறுதியாகும். திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சொந்தமாகத் தொழில் செய்ய தேவையான உதவிகள் கிடைக்கும். அரசு சலுகைகள், வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். புதிதாக கலை தொடர்பான கல்வி கற்க ஆர்வம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் பெரிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் பொருளாதாரம் மேம்படும்.

சித்திரை மாதம்-
ஏராளமான நன்மைகள் நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் வலுப்படும். ஆரோக்கிய பிரச்சினைகள் முற்றிலும் தீரும். மருத்துவச் செலவுகள் இல்லாமலேயே போகும். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக உதவிகள் தேடிவரும். பற்றாக்குறை என்பதே இருக்காது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் முடிவாகும்.

வைகாசி மாதம்-
எந்த வேலை செய்தாலும், வியாபாரம் செய்தாலும் அனைத்திலும் லாபம் இருமடங்காக இருக்கும். சேமிப்புகள் உயரும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். அலுவலக வேலையில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும், உங்கள் மீதான மரியாதை உயரும். திருமணம் உள்ளிட்ட சுப பகாரியங்கள் பேசி முடிக்கப்படும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் உண்டாகும்.

ஆனி மாதம்-
சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும். வீட்டு பராமரிப்புச் செலவுகள், வாகனச் செலவுகள் போன்றவை ஏற்படும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் ஆனாலும் கடனாகக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். பெண்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஆடி மாதம்-
வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தினரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். கடல் கடந்து செல்வது அல்லது அங்கிருந்து நல்ல தகவல் கிடைப்பது போன்றவை நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபார நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முற்படுவீர்கள். புதிய வியாபாரத் தொடர்புகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்கான வங்கிக் கடன் கிடைக்கும். அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும்.

ஆவணி மாதம்-
ஆதாயம் தரக்கூடிய வருமானம் பெருகும். பணம் பல வழிகளிலும் வரும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல் உற்சாகத்தைத் தரும். புதிய தொழில் வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும். கட்டுமானத் தொழில் பங்கு வர்த்தகத் தொழில் ரியல் எஸ்டேட் தொழில் அனைத்தும் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். சகோதரரின் பிரச்சினையை நீங்கள் சரிசெய்து தருவீர்கள். நண்பர்களின் துணையோடு புதிய முயற்சியில் ஈடுபட திட்டங்களை வகுப்பீர்கள்.

புரட்டாசி மாதம்-
புதிய முயற்சிகளில் ஈடுபட வாழ்க்கைத்துணையிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் பக்கபலமாக இருப்பார்கள். அலுவலகப் பணியில் முக்கிய வேலையை குறித்த நேரத்திற்கு முன் முடித்து ஆதாயம் பெறுவீர்கள். ஆடிட்டர்கள், வங்கிப் பணியாளர்கள், இன்சூரன்ஸ் நிறுவனம் தொடர்பானவர்களுக்கு ஆதாயம் தரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் நல்ல வளர்ச்சி உண்டாகும். தரகு மற்றும் கமிஷன் ஏஜென்ட்கள் லாபம் கிடைக்கக்கூடிய வியாபார ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். சிறுதூர பயணங்கள் ஏற்படும். அந்த பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

ஐப்பசி மாதம்-
ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வீடு தொடர்பான விஷயங்கள் சுமூகமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும், அதற்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உறவினர்கள் வருகை ஏற்படும், சகோதரிகளால் பணத்தேவைகள் அதிகரிக்கும், அவர்களுக்கு உதவ வேண்டியது வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கிய பதவி கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.

கார்த்திகை மாதம்-

அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். எந்தத் தொழில் செய்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். சகோதரர்களுக்கு அதிக அளவில் நன்மைகள் நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மார்கழி மாதம்-
மனதில் தேவையில்லாத அச்சம் உணர்வு ஏற்படும். மன சஞ்சலம் ஏற்படும். குழப்பமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது கூடவே கூடாது. நண்பர்களிடம் கவனமாக பழக வேண்டும் அவர்களுக்கு உதவப் போய் நீங்கள் சிக்கலில் மாட்ட வேண்டியது வரும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். அயல்நாட்டில் இருந்து வரும் தகவல் மன திருப்தியைத் தரும். மாமன் வகை உறவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய அளவிலான வருத்தங்கள் கூட பெரிய அளவில் பிரச்சினை ஆகிவிடும். வாழ்க்கைத்துணையிடமும் குடும்பத்தாரிடமும் அன்பாக இருங்கள். கோபத்தைக் காட்டக் கூடாது. எரிச்சலை வெளிப்படுத்தக் கூடாது. அது குடும்பத்தில் கருத்து வேற்றுமைக்கு வழிவகுத்துவிடும். எனவே கவனமாக இருங்கள்.

தை மாதம்-
வாழ்க்கைத் துணையின் வழியே பெரிய உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் தீரும். வருமான வரி போன்ற பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகள் ஏதும் இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

மாசி மாதம்-

எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடக்கூடாது, மற்றவர்களை குறை கூறிப் பேசாதீர்கள். அது உங்களுக்கு எதிராகத் திரும்பும். அலுவலக வேலைகளில் அதிக கவனம் வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் வேலையில் பிரச்சினை ஏற்படும். வங்கிப் பணியாளராக இருந்தால் பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுக்கக்கூடாது, வாங்கவும் கூடாது. வழக்கு ஏதேனும் இருந்தால் வாய்தா வாங்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் இருக்க வேண்டும். ஒருசில பின்னடைவு ஏற்படும் வாய்ப்புள்ளது, எனவே அதிக கவனம், எச்சரிக்கை உணர்வு மிகமிக அவசியம்.

பங்குனி மாதம்-
கடந்த சில தினங்களாக இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். உங்கள் மீது குற்றம் இல்லை என விடுவிக்கப்படுவீர்கள். வேலைகள் அனைத்தும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வேலையில் ஏற்பட்ட சில தவறுகளை இப்போது சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் திரும்ப வருவார்கள். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் ஏற்படும்.பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் போன்றவை கிடைக்கும். குடும்பத்தோடு வெளிநாடு அல்லது வெளியூர் சுற்றுப் பயணம் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை மற்றும் நீலம்

அதிர்ஷ்ட எண்- 1, 2, 5, 9

வீட்டில் செய்யும் எளிய பரிகாரம் -
சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கும், அக்கம்பக்கத்தினரும் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.

வணங்கவேண்டிய ஆலய இறைவன்-
வடலூர் வள்ளலார் ஆலயம் சென்று தரிசனம் செய்யுங்கள். அங்கு அன்னதானத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். மேலும் தேனி குச்சனூர் சனிபகவான் ஆலயத்திற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x