Published : 14 Apr 2020 03:39 PM
Last Updated : 14 Apr 2020 03:39 PM

சார்வரி ஆண்டு; இந்தியா எப்படி இருக்கும்?  அக்டோபருக்குப் பிறகு பொருளாதாரம் உயரும்! 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம்.
எல்லோருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
சார்வரி ஆண்டு சித்திரைப் பிறப்பு தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம், துலாம் லக்னம் என்ற அமைப்பில் பிறக்கிறது. ( இது திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் கணிக்கப்பட்டது. வாக்கிய பஞ்சாங்கம் அல்ல).

சார்வரி ஆண்டுக்கான இடைக்காட்டு சித்தர் பாடல் :
“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றி சாவார் இயம்பு”

இதன் பொருள் -
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகை சாதியினர் தீராத நோயால் அவதிப்படுவார்கள். மழையில்லை, விளைச்சல் விற்க முடியாமல் போகும். குழந்தைகளும் மற்றவர்களும் (ஏமமன்றி) பாதுகாப்பின்றி இறப்பர் என்று சொல் என்று அர்த்தம்.

இதைப் படிக்கும்போது அச்சம் ஏற்படுகிறது அல்லவா? ஆனாலும் பயம் தேவையில்லை! அதேசமயம் இந்த பாடலில் உண்மையில்லாமலும் இல்லை.

சரி... இப்போதைய கேள்வி...
விகாரி ஆண்டிலேயே சார்வரி ஆண்டுப் பாடலின் கருத்துகள் நடக்கிறதே.. அது எப்படி?
இதற்கு பதில் இதுதான்...
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே, என்ற பழமொழியின்படி விகாரி ஆண்டின் முடிவில் இதன் பாதிப்பு தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனாலும் மே மாதம் 20ம் தேதிக்குப் பின் வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கும். இது நம் இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல... உலக நாடுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

கரோனா வைரஸ் நோயிலிருந்து மீள்வதற்கு, வெகு நிச்சயமாக மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அதாவது கட்டுப்படுத்தும் மருந்து கிடைக்கும். அதுமட்டுமல்ல... அந்த மருந்து இந்திய மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சித்திரை மாத பிறப்பின் அடிப்படையில் கிரகங்கள் தரும் பலன்கள் என்ன?

சித்திரை பிறப்பின் ஜாதகம்-


கிரக அமைப்பு -
லக்னம் - துலாம்
சூரியன் - மேசம்
சந்திரன் - தனுசு
செவ்வாய் - மகரம்
புதன் - மீனம்
குரு - மகரம்
சுக்கிரன் - ரிசபம்
சனி - மகரம்
ராகு - மிதுனம்
கேது - தனுசு


நமது இந்தியத் திருநாட்டுக்கு இந்த சார்வரி ஆண்டில் நடக்கும் பலன்கள் என்னென்ன?
உலக நாடுகளிலிருந்து தொழில் வாய்ப்புகள் நம் இந்தியாவுக்குக் கிடைக்கும். இதனால் இந்தியத் திருநாட்டில் வேலை வாய்ப்பு பெருகும்.
இப்போது மளமளவென பின் தங்கிக் கொண்டிருக்கிற பொருளாதாரம், அக்டோபர் மாதத்திலிருந்து மிக வேகமாக முன்னேறும்.
உலக அரங்கில் நமக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். ஏற்றுமதி தொழில் புதிய உச்சம் பெறும். பங்கு வர்த்தகத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் பல துறைகளிலும் உருவாகும்.


தொழில்துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உலோகம் தொடர்பான தொழில் சிறந்து விளங்கும். உணவகங்கள் அதிகரிக்கும். உணவு தொடர்பான தொழில் உலகளவில் விரிவடையும். ரியல் எஸ்டேட் தொழிலானது, புத்துணர்ச்சி பெறும். கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் இருந்த தேக்க நிலை யாவும் மாறும்.

மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அத்துடன் சேமிப்பில் மிகுந்த அக்கறையுடனும் ஆர்வத்துடனும் செயல்படுவார்கள். சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் இந்த வருடம் மழை அதிகமிருக்கும். தண்ணீர் பஞ்சம் இருக்காது. விவசாய விளைபொருட்கள் அறுவடை நேரத்தில் மாமழை பெய்து வீணாகும் சூழலும் உருவாகும். விளைபொருட்கள் தட்டுப்பாடு உண்டாகும்.
இந்த வருடம், தங்கத்தின் விலை மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும். பெட்ரோலிய பொருட்கள் விலை சராசரியாகவே இருக்கும். விலை உயர்வு இருக்காது. உற்பத்தித் திறன் அதிகரிக்கும். அதேபோல், நூதனப் பொருட்கள் உற்பத்திக்கு ஆதரவு பெருகும்.

இந்த சார்வரி ஆண்டில், இந்திய விண்வெளித்துறையில் புதிய சாதனை நடைபெறும். ராணுவம் உள்ளிட்ட துறைகளில் புதுமையான ஆயுதங்கள் சேரும். அண்டை நாடுகளுடன் இதுவரை இருந்த பகையும் எதிர்ப்பும் குறையும்.

தலைநகரிலும், குஜராத் மற்றும் மும்பையிலும் நிலநடுக்க பாதிப்புகள் உண்டாகும். அரசியலில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். அவை இந்திய அளவில் அதிர்ச்சியை உருவாக்கும். மிக முக்கியமான தலைவர்களின் இழப்பு ஏற்படும்.
சுரங்கம் உள்ளிட்ட இடங்களில் பேரிடர் பாதிப்புகள் ஏற்படும். விளைபொருட்கள் வீணாகும். எண்ணெய், பெட்ரோலிய நிறுவனங்களில் மிகப்பெரிய தீவிபத்து நேரிடும்.
வனங்களில் உள்ள மிருகங்களுக்கு ஆபத்து அதிகரிக்கும். வனவளம் குறையும் சூழலும் ஏற்படும்.

மக்களிடம் ஒருவித சலிப்பும் கோபமும் வெளிப்படும். வட மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவற்றை ராணுவத்தால் அடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தொலைத்தொடர்புத் துறை கடும் பாதிப்புகளை சந்திக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சட்ட சிக்கலில் சிக்க் கொள்ளும்.

ஆண்டின் தொடக்கத்தில் மருத்துவத்துறை சில பாதிப்புகளைச் சந்தித்தாலும் பின்னர் அவற்றில் இருந்து மீண்டெழும்.
கல்வித்துறை கடுமையான பாதிப்பிலிருந்து மீளும். விவசாய இடு பொருட்களின் விலை கடுமையாக உயரும். ஆட்சியாளர்கள் மேல் அதிருப்தி ஏற்படும். இதை சமாளிக்க அரசும் கடும் நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்த பிரச்சினைகளிலிருந்து இந்தியநாடும் நாமும் விடுபட, அனைவரும் செய்ய வேண்டியது பைரவர் வழிபாடு மட்டுமே!
பைரவருக்கு மிளகு சாதம், வெண் பொங்கல் நிவேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கவேண்டும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும் பைரவர் வழிபாடு செய்வதும் இந்தியத் திருநாட்டுக்காக வேண்டிக் கொள்வதும் நல்லதொரு நிலைக்கு நம் தேசத்தைக் கொண்டு வரும்!

எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்து, பிரார்த்தனைகள் மூலம், நம் நாட்டை இன்னும் வளப்படுத்துவோம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x