Published : 09 Apr 2020 01:43 PM
Last Updated : 09 Apr 2020 01:43 PM

சார்வரி வருஷ பலன்கள் - இந்த வருடம் புயல், மழை எப்படி? இந்தியா எப்படி இருக்கும்? 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலா நக்ஷத்ரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.

கிரக பாதசார விபரங்கள்:
லக்னம் - ஸ்வாதி 4ம் பாதம் - ராகு சாரம்
சூர்யன் - அசுபதி 1ம் பாதம் - கேது சாரம்
சந்திரன் - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்
செவ்வாய் - திருவோணம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்
புதன் - ரேவதி 2ம் பாதம் - புதன் சாரம்
குரு - உத்திராடம் 2ம் பாதம் - சூரியன் சாரம் - அதிசாரம்
சுக்ரன் - ரோகினி 2ம் பாதம் - சந்திரன் சாரம்
சனி - உத்திராடம் 1ம் பாதம் - சூரியன் சாரம்
ராகு - திருவாதிரை 1ம் பாதம் - ராகு சாரம்
கேது - மூலம் 3ம் பாதம் - கேது சாரம்

கேது தசை இருப்பு: 01 வருஷம் - 04 மாதம் - 20 நாள்

சார்வரி வருஷத்தின் நவநாயகர்கள்:
ராஜா - புதன்
மந்திரி - சந்திரன்
அர்க்காதிபதி - சந்திரன்
மேகாதிபதி - சந்திரன்
ஸஸ்யாதிபதி - குரு
சேனாதிபதி - சந்திரன்
இரஸாதிபதி - சனி
தான்யாதிபதி - புதன்
நீரஸாதிபதி - குரு
பசுநாயகர் - கோபாலன்

சார்வரி வருஷ வெண்பா:
சார்வரி யாண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரம றுநோயற் றிரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரு மற்றவரும்
ஏம மின்றிச் சாவா ரியல்பு.

- இடைக்காடர் வாக்கு

பொது பலன்கள்:
இந்த சார்வரி ஆண்டை பொறுத்தவரை மிதமான மழை பெய்யும். மத்திய அரசின் நிலையான ஆட்சி அமையும். முக்கிய தலைவர்களுக்கு பல புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும்.
மாநில அரசுகளில் உட்பூசல்கள் சிக்கல்கள் குழப்பங்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு 9 புயல்கள் உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை ஏற்படும். ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்களில் ஓரளவு தண்ணீர் நிரம்பும்.
இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும். இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி மூலம் வருவாய் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு பூமி, நிலம், வீடு மனை விலை சற்று குறையும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு, தங்கம் விலை அதிகரிக்கும்.
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஓரளவு மழையும் - கடல் கொந்தளிப்பும் - கடல் சீற்றங்களும் ஏற்படும். ராகு பகவானுடைய சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அதிக காற்று ஏற்படும். இதனால் கடலோர மக்களுக்கு உயிர்ச் சேதம், பொருள் சேதம் ஏற்படும்.
இந்த ஆண்டு மேற்குப் பகுதியில் ஏற்படக்கூடிய காற்று, கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தலாம். அயல்நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, வளைகுடா நாடுகளில் ஓரளவு பொருள் சேதம் ஏற்படலாம்.
இந்த ஆண்டு ராஜாவாக புதன் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும். அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும்.
மந்திரியாக சந்திரன் வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள் சேர்க்கப்படும். காவல்துறை நவீனமாகும். கார், லாரி, பஸ் இதர வாகனங்கள் நவீன மயமாக்கப்பட்டு விலை ஏறும்.
இந்த ஆண்டு சேனாதிபதியாக சந்திரன் வருவதால் போர் பதற்றம் தணிந்து பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில் சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம், காவல்துறை, ஊர்க்காவல்படை ,இதரத் துறைகளில் பெண்கள் அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.
மேக அதிபதியாக சந்திரன் இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி ஓரளவு மழை பெய்யும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள் - பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம் அதிகரிக்கும்.
நீரஸாதிபதியாக குரு இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி - லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள், மனக்கசப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூமி வெடிப்பும் நிலநடுக்கமும் ஏற்படும். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும். இந்த ஆண்டு மத்திய அரசு வரிகளில் மதிப்பை உயர்த்தும்.

ராஜா புதன் பலன்
கல்வி நவீன படுத்தப்படும். சர்வதேச உறவுகள் மேம்படுத்தப்படும். பொருளாதாரத்தின் விகிதத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்

மந்திரி சந்திரனின் பலன்
இந்த ஆண்டு மந்திரியாக சந்திர பகவான் வருவதால், நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், பெயிண்ட், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் விலை சற்று உயரும்

அதிபதி சந்திரன் பலன்
இந்த ஆண்டு அதிபதியாக சந்திரபகவான் வருவதால் பெண்களுக்கு எல்லாத்துறையிலும் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கு அதிகமாக சலுகைகள் வழங்கப்படும்.

மேக அதிபதி சந்திரன் பலன்
இந்த ஆண்டு மேக அதிபதியாக சந்திரபகவான் வருவதால் நெல், கோதுமை, தானியங்கள், சோளம், நவ தானியங்கள் நன்கு விளையும்.

ஸஸ்யாதிபதி குருபகவான் பலன்
இந்த ஆண்டு சஷ்டி அதிபதியாக குருபகவான் இருப்பதால் மங்கல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும் மேலும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய பூசல்கள் குறையும்

சேனாதிபதி சந்திரன் பலன்
சந்திரன் பலத்தால் இந்த ஆண்டு போர் பதற்றம் குறையும்.

ரஸாதிபதி சனி பகவான் பலன்
துவர்ப்புச் சுவையுள்ள பொருட்கள் - கசப்புச் சுவையுள்ள பொருட்கள் மருத்துவ குணமுள்ள பொருட்கள் ஆகியவை விளைச்சல் அதிகரிக்கும்

தனாதிபதி புதன் பகவான் பலன்
இந்த ஆண்டு கம்பு, கேழ்வரகு, சோளம், சிறு தானியங்கள் அதிகமாக விளையும், அதற்கேற்றார் போல் மழையும் இருக்கும்.

நீரஸாதிபதி குருபகவான் பலன்
இந்த ஆண்டு மஞ்சள், குங்குமப்பூ, வாசனை கஸ்தூரி, சந்தனம் போன்றவை நன்கு உற்பத்தியாகும். விலை சற்று ஏறும்

சித்திரை மாதப் பிறப்பின் பலன்
இந்த ஆண்டு சித்திரை மாதம் திங்கட்கிழமை அன்று வருவதால் ஓரளவு மறையும். மத்திய மாநில அரசுகளின் திட்டங்களினால் மக்களுக்கு நல்ல பலன்களும் ஏற்படும். பெண்கள் சம்பந்தப்பட்ட பணிகளில் அதிகமாக ஈடுபாடு கொள்வார்கள். பெண்களை மதிப்பவர்கள் ஏற்றம் காண்பார்கள்

மகர சங்கராந்தி பலன்
இந்த ஆண்டு வியாழக்கிழமை தை மாதம் பிறப்பதால் நல்ல மழை பெய்யும். மங்கல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

முக்கிய பலன் - பாவங்களின் அடிப்படையில்:
லக்னத்திற்கு ஒன்று எட்டு உடையவரான லக்னாதிபதி சுக்கிர பகவான் லக்னத்திற்கு அட்டம ஸ்தானத்தில் ஆட்சியாக அமர்ந்திருக்கிறார். அவர் மறைந்தாலும் அவருடைய பார்வையின் மூலமாக பல நல்ல பலன்கள் ஏற்படும்.
முக்கியமாக அவர் தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாட்டு உறவுகள் மேன்மையடையும். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். இந்திய தொழில் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் அடையும்.
முக்கிய பதவியில் உள்ளவர்கள் நாடு முன்னேற சிறப்பாக பணியாற்றுவார்கள். நேர்மையுடனும் மன வலிமையுடனும் தன்னம்பிக்கையுடனும் அதிகாரிகள் செயல்படுவார்கள். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்.

லக்னத்திற்கு 2 மற்றும் 7-க்குடையவர் ஆன செவ்வாய் பகவான், இந்த ஆண்டு பிறக்கும்போது உச்சமாக இருக்கிறார். புதிய நவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். புதிய வகை விமானங்கள் இணைக்கப்படும். புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். நல்ல மழை பெய்யும். உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விலை ஏறும். மருத்துவத்துறை மிக அபரிதமான வளர்ச்சியை பெறும்.

லக்னத்திற்கு 3 6க்கு உடையவரான குரு பகவான் இந்த ஆண்டு பிறக்கும் போது அதிசாரம் நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் இந்த ஆண்டின் நீரஸாதிபதியாகவும் இருக்கிறார்.
கல்வி ஸ்தானத்தில் இருப்பதால் புதிய சீர்திருத்தம் கல்வியில் செய்யப்படும். மாணவ மாணவிகள் நன்றாக படிப்பார்கள். முக்கியமாக அது பெண் ராசியாக இருப்பதால் மாணவிகள் விளையாட்டிலும் சிறந்து விளங்குவார்கள்.
அந்நிய நாடுகளில் அதிகமாக வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். போற்றத்தக்க வகையில் இந்தியா முன்னேறும்.

லக்னத்திற்கு சுக ஸ்தான அதிபதியான பஞ்சமாதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு லக்னத்திற்கு தைரிய வீரிய ஸ்தானத்தில் கேதுவுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். மேலும் அவர் இரஸாதிபதியாகவும் இருக்கிறார். இந்தியாவில் வடக்கில் இருக்கக்கூடிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். நெல், கோதுமை, கம்பு, சோளம், நவதானியங்கள் நன்கு விளையும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் நன்கு வளர்ச்சி பெறும். மேலும் அவர் விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் எந்த ஒரு விஷயத்தையும் மிக அதிகமான உழைப்பின் மூலமாகவே செய்ய முடியும்.

லக்கினத்திற்கு பாக்கிய விரயாதிபதி புத பகவான் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். காற்றின் மூலமாக இந்த ஆண்டு அழிவு ஏற்படலாம். காற்றின் மூலமாக மேற்கு திசையிலிருந்து வைரஸ் ஒன்று பரவலாம்.

லக்னத்திற்கு தொழில் ஸ்தானாதிபதியான சந்திர பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். தொழில் சம்பந்தப்பட்ட துறை நல்லபடியாக முன்னேற்றத்தைப் பெறும். புதிய தொழில் வேலைகளை பலபேர் தொடங்குவார்கள். நீர் சம்பந்தமான தொழில்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும்.

லக்னத்திற்கு லாபாதிபதியான சூரிய பகவான் லக்னத்திற்கு 7ஆம் இடத்தில் உச்ச நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். உலக அளவில் அரசாங்கங்கள் பலவிதமான புதிய சட்டங்களைக் கொண்டு வரும்!
********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x