Published : 03 Apr 2020 10:34 AM
Last Updated : 03 Apr 2020 10:34 AM

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு இப்படியெல்லாம் குணங்களா? ;  ஆயில்யக்காரர்களின் தெய்வங்கள், விருட்சங்கள்!  - 27 நட்சத்திரங்கள் - ஏ டூ இஸட் தகவல்கள் 27; 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.
ஆயில்யம் நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம். இப்போது, ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான தனித்தனி குணங்கள், செயல்கள் என்னென்ன என்பது பற்றிச் சொல்லுகிறேன்.

ஆயில்யம் 1ம் பாதம்-
ஆயில்யம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், அறிவாளிகள். விஷய ஞானம் அதிகமுடையவர்கள். தர்ம சிந்தனை கொண்டவர்கள். விடாமுயற்சி உடையவர்கள். யாருடைய உதவிகளையும் எதிர்பார்க்காதவர்கள். தன் சுய முயற்சியில் முன்னேறுபவர்கள். தன்தேவைகள் எவ்வளவோ அந்த அளவிற்கு மேல் அதிகம் ஆசைப்படாதவர்கள்.

இவர்களில் பெரும்பாலும் கணிதத்துறையில் கோலோச்சுவார்கள். ஆடிட்டர், கணக்காளர், வங்கி, இன்சூரன்ஸ், ஆசிரியர், விரிவுரையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், மனிதவள மேம்பாட்டாளர், யோகா ஆசிரியர் போன்ற வேலைகளில் இருப்பார்கள்.

தொழில் துறை என்று பார்த்தால், இவர்கள் அதிகம் பிரகாசிப்பது மருத்துவத்துறையில்தான். சித்த மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், மூலிகை மருந்துத் தயாரிப்பு, ஆயுதங்கள் உற்பத்தி, போர்க்கால அவசர சேவைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பங்குவர்த்தகம் போன்ற துறைகளை தொழிலாகக் கொண்டிருப்பார்கள்.

அளவான, ஆரோக்கியமான உணவுகள் இவர்களின் விருப்பமாக இருக்கும்.

ஆரோக்கியம் என பார்த்தால், இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள், இடுப்பு மற்றும் அடிவயிறு தொடர்பான பிரச்சினைகள் வரும்.

இவர்களுக்கான இறைவன்- ஶ்ரீதத்தாத்ரேயர் மற்றும் தட்சிணாமூர்த்தி

விருட்சம் - புன்னை மரம்

வண்ணம் - இள மஞ்சள்

திசை - வடகிழக்கு
************************************************************

ஆயில்யம் 2ம் பாதம் -

ஆயில்யம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சுயநலத்தின் உச்சம்.
தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் எதற்கும் தயாராக இருப்பார்கள். எதைச் செய்யவும் தயங்கமாட்டார்கள். தயக்கம் இல்லாதவர்கள். சபை நாகரீகம் அறியாதவர்கள். கருமித்தனம் மிக்கவர்கள், பணத்தை பல இடங்களிலும் பதுக்கி வைப்பவர்கள்.
ஆனால் சமயத்தில் அதை மறந்துவிடுவார்கள். முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவார்கள். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் கட்டமைப்பதில் கில்லாடிகள் இவர்கள். இதெல்லாம் இருந்தாலும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பவர்கள். ஆயில்யம் 2ம் பாதக்காரர்கள், செயல் வீரர்கள். துணிச்சல் மிக்கவர்கள். எதிரில் யானையே வந்தாலும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள். எப்படியும் பணம் சேர்த்து விடுவதில் வல்லவர்கள்.

எந்த வேலையையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் காவல், ராணுவம், துப்பறிதல், ரகசிய உளவுத் துறை, எந்த அடையாளமும் இல்லாத ஊடுருவல் பணிகள் போன்ற வேலைகளிலும்.விவசாயம் சார்ந்த வாகனங்கள், இயந்திரங்கள் இயக்குதல், கட்டுமானத் தொழில், நிலத்தை ஆழப்படுத்தும் தொழில், சுரங்கம் தொடர்பான தொழில், முடி திருத்துதல் முதல் சுத்தப்படுத்தும் எல்லா வேலைகள், சாராயம் முதல் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் வியாபாரம். மதுபான விடுதி போன்ற தொழில் மற்றும் வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.

உணவு விஷயத்தில் எந்த எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருக்காது. எந்த உணவும் இவர்களுக்கு ஏற்றதுதான். இதனால்தான் இவர்களுக்கு தீராத வயிற்றுவலி, மலச்சிக்கல், மூட்டுவலிகள், வலு இல்லாத எலும்புகள், அடிக்கடி எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

இவர்களுக்கான இறைவன் - திருமலை திருப்பதி வெங்கடசேபெருமாள்.

விருட்சம் - முசுக்கட்டை மரம்

வண்ணம் - நீலம் இளம் பச்சை

திசை - தெற்கு
*******************************************************

ஆயில்யம் 3ம் பாதம் -
ஆயில்யம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் மரியாதை, கௌரவம் மிக்கவர்கள். கவரிமான் போன்றவர்கள். தனக்கான மரியாதை இல்லாத இடத்தில் ஒருகணம் கூட இருக்க மாட்டார்கள், உழைப்பால் மிகப்பெரிய உச்சத்தை அடைவார்கள். ஓயாமல் உழைத்து பெரும் செல்வம் சேர்ப்பார்கள், ஒருசிலர் குறுக்கு வழியிலும் செல்வம் சேர்ப்பார்கள்.

உயர் பதவிகளில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருந்து காரியங்களை சாதிப்பார்கள். மற்றவர்களுக்கு காரியம் சாதித்துக் கொடுத்து அதில் லாபம் பார்ப்பார்கள். ஒரு கட்டத்தில் அந்த உயர் பதவிக்கு இவர்களே வருவார்கள். உள்ளத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாகப் பேசுவார்கள்.

இவர்களில் பெரும்பாலும் இடைத்தரகராக, அரசின் உயர் பதவிகளில், பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சூதாட்ட விடுதி முதல் மது விடுதிகள் வரை தொழில் செய்வார்கள். களவுப் பொருட்கள் வாங்கி விற்பது, சட்ட விரோத தொழில், மோசடி தொழில், போன்ற தொழில் மற்றும் வேலைகளில் இருப்பார்கள்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இது எதுவும் வெளி உலகத்திற்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள். என்றாவது சட்டத்தின் முன் சிக்கும் போது “இவரா?! சான்சே இல்ல இதெல்லாம் பொய்க் குற்றச்சாட்டு” என மற்றவர்கள் நற்சான்றிதழ் தரும் அளவுக்கு இருப்பார்கள்.

இவர்களுக்கான இறைவன் - வன காளி

விருட்சம் - இலந்தை மரம்

வண்ணம் - கரு நீலம், கருப்பு

திசை - மேற்கு
***********************************************


ஆயில்யம் 4ம் பாதம் -

ஆயில்யம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், தான் வாழ்வதே பிறருக்காகத்தான் என்ற எண்ணம் உடையவர்கள். இரக்க குணம், தேடிப்போய் உதவுதல். கல்வி கேள்விகளில் அபார ஞானம், மறை பொருள்அறிவு, அதாவது தத்துவ ஞானம், சித்தாந்த ஞானம், ஜோதிடப் புலமை, அடுத்தது என்ன நிகழும் என்பதை உணரும் உள்ளுணர்வு, தேவையான அளவு செல்வம் சேர்த்தல், சேர்த்த செல்வத்தை தொண்டு நிறுவனம் அமைத்து மற்றவர்களுக்கு உதவுதல் என இருப்பார்கள். இவர்களுக்கு எப்படியும் ஒரு குருவின் அண்மை ஏற்படும். அந்த குருவின் வழிகாட்டுதல் படியே வாழ்வார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் கடல் கடந்து வேலை மற்றும் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணம் செய்தவர்களாக இருப்பார்கள். முதல் வேலையே வெளிநாட்டில் கிடைக்கும், அடுத்த வேலை அடுத்த நாட்டில் என நாடுகள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

புதிய முயற்சிகள், புதிய ஆய்வுகள், மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, மருத்துவர், விஞ்ஞானிகள், குறிப்பாக வான்வெளி ( வானியல்) ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி, கடல் ஆராய்ச்சி, கப்பல் தொழில்நுட்பம், ஆசிரியர், வங்கிப்பணி, பிரசங்கம், ஆதரவற்றோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம், மன நல மையம், போன்ற தொழில் மற்றும் வேலையில் இருப்பார்கள்.

அளவான உணவு, பெரிய விருப்பங்கள் ஏதும் இருக்காது. ஆரோக்கியம் என்று பார்த்தால் தோல் நமைச்சல், நரம்பு தளர்ச்சி, அதிக முடி கொட்டுதல், வழுக்கை, தொப்பை போன்ற பிரச்சினைகள் இருக்கும்.


இறைவன் - மீனாட்சி

விருட்சம் - பலா மரம்

வண்ணம் - வெள்ளை மற்றும் இளம் பச்சை

திசை - வடக்கு
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், அவர்களின் பாதங்களுக்கு ஏற்ப, விரிவாகச் சொல்லப்பட்டதைப் புரிந்து உணர்ந்து உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் ஜெகம் ஆளும் மகம் நட்சத்திரம் பற்றிச் சொல்லுகிறேன்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x