Published : 31 Mar 2020 01:46 PM
Last Updated : 31 Mar 2020 01:46 PM

ஆயில்யம் நட்சத்திரத்துக்கு ஆகாத நட்சத்திரங்கள்; எந்த நட்சத்திர நண்பனும் மனைவியும் பலம்? ஆயில்யத்தால் நன்மை கிடைக்கும் நட்சத்திரக்காரர்கள்! - 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 26 - 

ஆயில்யம் நட்சத்திரத்துக்கு ஆகாத நட்சத்திரங்கள்; எந்த நட்சத்திர நண்பனும் மனைவியும் பலம்? ஆயில்யத்தால் நன்மை கிடைக்கும் நட்சத்திரக்காரர்கள்! - 27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 26 -


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


ஆயில்யம் நட்சத்திரம் பற்றி பார்த்து வருகிறோம்.


இந்த நட்சத்திரத்தில் பிறந்த இன்னும் சிலரைப் பார்ப்போம்.


தர்மராஜா. இவர் பாண்டவர்களின் மூத்தவரான தர்மர் அல்ல. அந்த தர்மர் கேட்டை நட்சத்திரம். அப்படியானால் எமதர்மராஜனா? அவரும் இல்லை. தர்மத்தின் அடையாளமாக கருதப்படுபவர், அதாவது உருவகப்படுத்தப்பட்டவர் இந்த தர்மராஜா.


சிம்பிளாக சொன்னால் தர்மகுணத்தின் அடையாளம்... இவர்தான்! எனவேதான் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் தனக்கு இருக்கிறதோ இல்லையோ கேட்டவுடனே உதவி செய்யத் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.


ராமாயணத்தில் லக்குமணன் ஆயில்யம் என்று பார்த்தோம். இவரோடு பிறந்த சத்ருக்னன் ஆயில்யம் நட்சத்திரமே. ஆனால் இவரின் பங்கு ராமாயணத்தில் வெகு குறைவாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அதிக முக்கியத்துவம் இல்லாமல் ஒதுக்கியே வைக்கப்பட்டிருப்பார்.

சென்ற பதிவில் ஆயில்யத்தின் அடையாளங்களாக சில குறிப்புகள் தந்திருந்தேன். அதில் “குப்பைக்கூடை” யும் ஒன்று.
ஏன் குப்பைக்கூடை? அப்ப ஆயில்யம் என்ன குப்பையா? என நீங்கள் கேட்கலாம்.

வேண்டாதவைகளை ஒதுக்கி வைக்கும் இடம்தான் குப்பைக்கூடை. இந்த ஆயில்யக்காரர்கள் துடைத்து தூக்கி எறிய வேண்டிய விஷயங்களை மனதிற்க்குள் போட்டு வைத்துக்கொண்டு அதையே அசை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் (சென்ற பதிவில்) காத்திருந்து பழி தீர்ப்பவர்கள் என்று ஆயில்யக்காரர்களைச் சொன்னேன்.


உடனே நீங்கள் பழி வாங்குவது என்றால் வெட்டு குத்து என கற்பனை செய்ய வேண்டாம். தனது செய்கை மற்றும் நடத்தையால் பழி வாங்குவார்கள்.

மேலும், பாற்கடலை கடைந்தபோது வந்த விஷத்தை சிவபெருமான் அருந்தினார் என்கிறது புராணம். ஆனால் கசிந்து கடலில் பரவிய விஷத்தை என்ன செய்வது? கயிறாக இருந்த வாசுகி பாம்பிடம் அந்த விஷத்தை உறிந்து குடிக்கச் சொன்னார்கள். அதன்படியே வாசுகியும் அந்த கசிந்த விஷத்தை, தான் உறிஞ்சிக்குடித்தது. எனவேதான் பாம்புக்கு விஷத்தன்மை வந்ததாக ஒரு கதை உண்டு.

எனவேதான் இந்த ஆயில்யத்தில் பிறந்தவர்கள் நல்ல கலகலப்பான சூழ்நிலையில் சட்டென்று மாறினால் அவ்வளவுதான். அந்த மகிழ்வான இடத்தில், வார்த்தையால் சுட்டு அந்த கலகலப்பை முற்றிலும் மாற்றிவிடுவார்கள். இந்த மாதிரியான குணத்தாலேயே மற்றவர்களால் விலக்கி வைக்கப்படுவார்கள்.

இதை மேலோட்டமாக பார்த்தால் இந்த ஆயில்ய நட்சத்தினர் செய்வது எதிர்மறை செய்கைகளாகத் தெரியலாம். உண்மையில் இவர்களுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது. மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசுவதால் வரக்கூடிய பிரச்சினைகள் இவை. இந்த குணத்தை மாற்றிக்கொண்டாலே போதும்... இவர்களை அனைவரும் ஆராதிப்பார்கள்.

ஆயில்யம் நட்சத்திரம் குறித்த மேலும் சில விபரங்களைப் பார்க்கலாம்-

இவர்களின் தெய்வம் - மகாவிஷ்ணு

அதிதேவதை - ஆதிசேஷன் மற்றும் நாகம்

மிருகம்- பெண் பூனை

பறவை - கிச்சிலி

விருட்சம் - புன்னை மரம். இந்த புன்னை மரமானது கோடைகாலத்திலும் இலைகள் உதிராமல் நிழல் தரும் மரம். முடிந்தவரை எங்கெல்லாம் இந்த மரத்தின் செடியை நட்டு வளர்க்க முடியுமோ வளர்த்து வாருங்கள். நன்மைகள் பெருகும்.

மலர் - வெண்காந்தள் மலர்

ஆயில்யம் நட்சத்திரத்திற்கு அதிக நன்மைகளையும், பணவரவையும், முயற்சிகளில் முழு வெற்றியையும் தரக்கூடிய நட்சத்திரங்கள் எவையெவை தெரியுமா?

அசுவினி - மகம் - மூலம்.
இந்த நட்சத்திர நண்பர்கள் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்களில் ஒருவர் வாழ்க்கைத்துணையாக அமைந்தால், இவர்களின் வாழ்வில் எல்லாமே ஏறுமுகம்தான்! முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு, இந்த நட்சத்திரம் வரும் நாட்களும் காரிய அனுகூலம் நிறைந்த நாட்களாக அமையும். புதியதாக எதுவும் தொடங்கலாம். பணவரவு சரளமாக இருக்கும்.

அசையும் மற்றும் அசையா சொத்து வாங்கவும், வீடு குடி புகவும், நோய் நீங்க மருந்து உட்கொள்ளத் தொடங்கவும், சகோதரர்களுடன் சொத்து பாகப்பிரிவினைகள் செய்யவும், பயன் தரக்கூடிய நட்சத்திரங்கள் - கார்த்திகை - உத்திரம் - உத்திராடம்.
இந்த நட்சத்திரம் வரும் நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த நட்சத்திர நண்பர்களும், வாழ்க்கைத்துணையும் அமைந்தால் மிகுந்த நன்மைகள் நடைபெறும்.

கடன்கள் அடைக்கவும், கடன் பெறவும், வங்கி தொடர்பான அனைத்து விஷயங்களைச் செய்வதற்கும், வேலையில் சேர்வதற்கும், உடல் நலத்திற்காக மருத்துவம் தொடர்பான சிகிச்சைகளை தொடங்கவும், எதிரிகளை வெல்லவும், எதிர்ப்புகளே இல்லாமல் செய்யவும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் முதலான நட்சத்திர நாட்களைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை பயன்படுத்தி மேற்சொன்ன விஷயங்களை செய்து கொள்ளுங்கள். மேற்கண்ட இந்த மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட நபர்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கவும், எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கவும், அதிக நன்மைகள் நடக்கவும் உதவும் நட்சத்திரங்கள் -புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உங்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணையாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் அமைந்தால் நற்பலன்களும், உதவிகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

அதிக நன்மைகள் நடக்கவும், பயணங்களை மேற்கொள்ளவும், பயணங்களால் ஆதாயம் அடையவும், எடுத்துக்கொண்ட முயற்சிகளில் தேவையான உதவிகள் கிடைக்கவும், வியாபார நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி நட்சத்திர நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த நட்சத்திர நாட்களில், உங்களுக்கு வெகுவாக நன்மைகள் நடக்கும். நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணையாகவும் அமைவது மேலும் சிறப்பைத் தரும்.


பரணி - பூரம் - பூராடம்... புதிய முயற்சிகள் எதுவும் செய்யக்கூடாத நாட்கள் இவை. ஆயில்ய நட்சத்திரக்காரர்களான உங்களுக்குக் கடுமையான பிரச்சினைகளையும், மன வேதனைகளையும் தரக்கூடிய, நண்பர்களாக இருக்கக் கூடாத, வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கக் கூடாத நட்சத்திரங்கள் இவை!

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த முயற்சிகளும் செய்ய வேண்டாம். அந்த முயற்சிகள் தோல்வியில்தான் முடியும். அது மட்டுமல்ல... இந்த நட்சத்திர நாட்களில் செய்கிற எந்த வேலையும் உங்களுக்கு எதிராகவே திரும்பும். மனவேதனையை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். நண்பர்களாக அமைந்தால் நிறைய பிரச்சினைகளை சிக்கல்களைச் சிக்க வேண்டியது வரும். வாழ்க்கைத் துணையாக அமைந்தால் ஒவ்வொரு நாளும் கடும் பிரச்சினைகளையும் கருத்தொற்றுமை இல்லாத நிலையையும் சந்திக்க வேண்டியது வரும்.

உங்களுக்கு எந்த விதத்திலும் லாபமாக இல்லாத, அதேசமயம் உங்களால் மற்றவர்கள் லாபம் சம்பாதிக்கக் கூடிய, ஆலய வழிபாடுகளை தவிர மற்ற எந்த வகையிலும் உங்களுக்கு உதவாத நட்சத்திரங்கள் - ரோகிணி - அஸ்தம் - திருவோணம்.


இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடவேண்டாம். பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். உடல் நலம் சார்ந்த சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டாம். இந்த நட்சத்திரக்காரகள் ஆயில்யக்காரர்களுக்கு நண்பர்களாக இருக்கமுடியாது; கூடவும் கூடாது. வாழ்க்கைத் துணையும் அப்படித்தான்! மொத்த நிம்மதியையும் இழக்க நேரிடும்!

ரண வேதனையை தரக்கூடிய, உங்களை பிரச்சினைகளில் வலிய கொண்டுபோய் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்- திருவாதிரை - சுவாதி - சதயம்.
இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு வேலையை செய்தாலும் அல்லது எந்த முயற்சிகளை எடுத்தாலும் அது உங்களுக்கு எதிராக திரும்புவது மட்டுமல்லாமல் அதனால் நிறைய இழப்புகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியது வரும்.


இந்த நட்சத்திரத்தைக் கொண்ட நண்பர்கள் இருந்தால் அவர்களால் கடுமையான பிரச்சினைக்கு உள்ளாவீர்கள். கடும் வேதனைகளையும் அனுபவிக்க வேண்டியது வரும். வாழ்க்கைத் துணையாக இருந்தால் நித்தம் நித்தம் சண்டை சச்சரவுகள் என மன நிம்மதி இல்லாமல் போகும்.

அன்பார்ந்த வாசகர்களே...! இந்த நட்சத்திர தகவல்கள் உங்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பயன்படும் படியாக இதை அவர்களுக்கும் அனுப்பிவையுங்கள், அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

அடுத்த பதிவில் ஆயில்யம் நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதங்களுக்குமான விரிவான விளக்கங்களைச் சொல்கிறேன்.


- வளரும்
******************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x