Published : 28 Feb 2020 02:55 PM
Last Updated : 28 Feb 2020 02:55 PM

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 17 ; திருவாதிரைக்காரர்களுக்கு யாரெல்லாம் நண்பர்கள், எதிரிகள்? எந்த நாள் சிறந்தநாள்?  ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 17 ;
திருவாதிரைக்காரர்களுக்கு யாரெல்லாம் நண்பர்கள், எதிரிகள்? எந்த நாள் சிறந்தநாள்?

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
திருவாதிரை நட்சத்திரம் பற்றி உங்களுக்குச் சொல்லிவருகிறேன். ஞாபகம் இருக்கிறதுதானே.
திருவாதிரை நட்சத்திரம் குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் இன்னும் பார்க்கலாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மிக முக்கியமானவர்கள் யார் தெரியுமா? கருடன் என்னும் கருடாழ்வார் மற்றும் ஶ்ரீராமானுஜர்.
மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர் கருடன், வானில் மிக உயரத்தில் பறக்க முடிந்த ஒரே பறவை கருடன் என்பது நமக்குத் தெரிந்ததுதான். றெக்கைகளை அசைக்காமலே பறக்கும் வல்லமை கருடனுக்கு உண்டு. மழை பெய்யும்போது அனைத்து பறவைகளும் கூட்டிற்கு சென்றுவிடும். தங்கள் இனத்தை குரலெழுப்பி அழைத்து, கூட்டுக்குச் செல்லும் பறவைகளைப் பார்த்திருப்போம். ஆனால் கருடன் மழை மேகத்தையும் விட உயர பறப்பதால் மழையில் நனையாது. மழையோ வெயிலோ... கருடனுக்கு இவையெல்லாம் பொருட்டே இல்லை.

மேலே சொன்ன கருத்திற்கும் திருவாதிரைக்கும் தொடர்பு உள்ளது.


எண்ணங்கள், கற்பனைகள், கனவுகள் எல்லாவற்றுக்கும் திருவாதிரைக்காரர்களுக்கு வானமே எல்லை என்பதுதான் மிகச்சரியான உதாரணமாக இருக்கும். பரந்த எண்ணங்களுக்கு சொந்தக்காரர்கள் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள். அதேபோல, எல்லோரும், ஒரு பிரச்சினைக்கு வழி தெரியாமல் வழக்கமான வழியையே கையாளுவார்கள். பின்பற்றுவார்கள். ஆனால் திருவாதிரைக்காரர்கள் தனிவழியைக் கையாண்டு தீர்வு காண்பார்கள். புத்தம்புதிய எண்ணங்கள், கருத்துக்களைத் தோற்றுவிக்கிற சாதுர்யமும் திருவாதிரைக்காரர்களின் ஸ்பெஷல்!


ஶ்ரீராமானுஜர் வைணவத்திற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. வைணவ ஆலயங்களில் நித்ய பூஜா முறைகளை வகைப்படுத்தி சீராக்கியவர் ராமானுஜர் என்று போற்றிக் கொண்டாடுகிறோம். . திருவாதிரையில் பிறந்தவர்கள் ஒழுங்கற்ற எதையும் ஒழுங்காக்கும் திறன் படைத்தவர்கள்.
ஶ்ரீராமானுஜர் திருவாதிரையில் தோன்றி 120 ஆண்டுகள் வாழ்ந்து அதே திருவாதிரை நட்சத்திர தினத்தன்று முக்தி அடைந்தவர்
ஒரு மனிதனின் சரியான ஆயுட்காலம் என்பது 120 ஆண்டுகள் என்கின்றன ஞானநூல்கள்.


இதை எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்? என நீங்கள் கேட்கலாம்.
நவகிரகங்களின் திசா காலம் என்பது 120 ஆண்டுகள். திசா வரிசையில் முதலில் வருவது கேது திசை. இதன் திசா ஆண்டு -7, அடுத்து சுக்கிரன் திசை - 20 ஆண்டுகள், சூரியன் - 6 ஆண்டுகள், சந்திர திசை - 10 ஆண்டுகள், செவ்வாய் திசை - 7 ஆண்டுகள். ராகு திசை - 18 ஆண்டுகள், குரு திசை- 16 ஆண்டுகள், சனி திசை - 19 ஆண்டுகள், புதன்திசை - 17 ஆண்டுகள். இவை அனைத்தையும் மொத்தமாகக் கூட்டினால் 120 ஆண்டுகள் வரும்.
ஒருமனிதனின் சரியான ஆயுட்காலம் இதுவே. இதை மிகச்சரியாக வாழ்ந்து காட்டியவர் ஶ்ரீராமனுஜர். எனவே திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், தன்னுடைய வாழ்க்கையை மிகச்சரியாக, யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து காட்டுபவர்கள்.

800 ஆண்டுகளாக மூலிகைகளால் பதப்படுத்தப்பட்ட ஶ்ரீராமானுஜரின் திருமேனி இன்றும் ஶ்ரீரங்கம் ஆலயத்தில் இருக்கிறது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளன்று இவரைத் தரிசிப்பது மிகப்பெரிய நன்மைகளைத் தந்தருளும். கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
சரி, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை பார்ப்போம்.

முதலில் அடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். அதையும் முழுமையாகக் கேட்க வேண்டும். அந்த அறிவுரைகளை ஏற்க வேண்டும். அதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆராய்ந்து பின் முடிவெடுக்க வேண்டும். மொத்தமாகச் சொல்வதென்றால் அலட்சிய குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அப்படி மாற்றுவதுதான் உங்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் செல்லும்!


அதேபோல, எந்தக் காரியத்தையும் முழுமையாக செய்து முடியுங்கள். உங்களின் பலவீனமே அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலைகளை அரைகுறையாக செய்வதுதான். எனவே எந்த வேலையையும் முழுமையாக முடித்த பின் அடுத்த வேலையில் இறங்குங்கள். வெற்றி உங்களுடையாதாகும்.

நண்பர்களுடனும், புதிதாக அறிமுகமாகும் நபர்களுடனும் சற்று தள்ளியே இருங்கள். கணவன்/மனைவியின் சொல்லுக்கு கட்டுப்படுங்கள். “நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? “ என்ற மனோபாவத்தை விட்டுவிடுங்கள்.


பணியில் இருப்பவராக இருந்தால் உயரதிகாரிகளைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சித்து பேசாதீர்கள். நீங்கள் பாதிப்படையும் இடம் இதுதான்.
தொழிலதிபராக இருந்தால் ஊழியர்களிடம் நட்பாக இருங்கள், அவர்களிடம் இணக்கமாக இருந்தால் உங்கள் தொழில் வளர்ச்சியடையும். ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் வீழச்சியை சந்தித்த நிறுவனங்கள் ஏராளம் ஏராளம்.
பணியிடத்திலும், தொழிலகத்திலும் நடராஜர் படத்தை வைத்துக்கொள்ளுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.


திருவாதிரையின் மிருகம்- நாய்.
பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்யுங்கள், பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். தெரு நாய்களுக்கு தவறாமல் உணவு வழங்குங்கள். நீங்கள் சாப்பிடும்முன், முதல் கவளம் உணவை நாய்களுக்கு வழங்குவதால் உங்களிடம் இருக்கும் துர்தேவதைகள் விலகிச்செல்லும்., துர்தேவதைகள் உங்களை அணுகாது.


பறவை - சிட்டுக்குருவி, உங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளுக்கு இடம்கொடுங்கள்.


விருட்சம்- செங்காலி மரம், உங்களுக்கு வசதியான இடத்தில் நட்டு வளர்த்து வாருங்கள். அல்லது செங்காலி மரத்தால் செய்த பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

தேவதை - சிவன்

அதிதேவதை - நடராஜர். அனைத்து சிவாலய வழிபாடுகளும் நன்மையைத் தரும். சிவபுராணம் வாசிப்பதும், நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது உச்சரிப்பதும் மனதை தெளிவாக்கும். பதட்டத்தைக் குறைக்கும்.

இவர்களுக்கு அனைத்து வகையிலும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்கள்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -
இந்த நட்சத்திர நாட்களில் எந்தக் காரியம் செய்தாலும் முழு வெற்றி கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணையாகவும், தொழில் கூட்டாளிகளாகவும் வைத்துக்கொள்ளுங்கள், வாழ்க்கை சிறக்கும்.

அசையும், அசையா சொத்துக்கள் வாங்க, விற்க. பத்திரம் பதிவுகள் செய்ய, உயர்கல்வியில் சேர, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள-
ஆயில்யம், கேட்டை, ரேவதி இந்த நட்சத்திர நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கடன்கள் வாங்க, கடன்கள் அடைக்க, புதிய வேலையில் சேர, வேலைக்கு மனு செய்ய, தொழில் தொடர்பான பொருட்கள் வாங்க, உங்கள் அலுவலகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள.. பரணி, பூரம், பூராடம்
இந்த நட்சத்திர நாட்களை பயன்படுத்துங்கள். நல்ல பலன்கள் நடப்பதை உணர்வீர்கள்.

எடுத்துக்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், அதிகப்படியான நன்மைகள் நடக்கவும், வெளிநாடுகளுக்கு செல்லவும், அரசாங்க விஷயங்களில் சாதகம் பெறவும்- ரோகிணி, அஸ்தம், இந்த நட்சத்திர நாட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பயணங்கள் செல்லவும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லவும், வீடு வாகனம் போன்றவை வாங்கவும், வங்கியில் முதலீடுகள், தங்க ஆபரணங்கள் வாங்கவும், குடும்பத்தில் சுப விசேஷங்கள் செய்யவும்- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திர நாட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், மேலே சொன்ன நட்சத்திரங்கள் வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுக்கவும் ஏற்ற நட்சத்திரங்களாகும்.

விலக்க வேண்டிய மற்றும் ஆகாத நட்சத்திரங்கள்-

முயற்சிகளை தொடங்கக்கூடாத, பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டிய, நண்பர்களாக, கூட்டாளிகளாக,வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கக்கூடாத நட்சத்திரங்கள்-

பூசம், அனுஷம், உத்திரட்டாதி.
இந்த நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும்.


உங்களுக்கு எந்தப் பயனும் இல்லாத, உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடையும் நட்சத்திரங்கள்-
அஸ்வினி, மகம், மூலம்.


கோடி கொடுத்தாலும் நீங்கள் விலகிச்செல்ல வேண்டிய நட்சத்திரங்கள் -
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்


இந்த நட்சத்திர நபர்கள் யாராயினும் பழகினால், என்றாவது ஒருநாள் சரியான இக்கட்டில் நீங்கள் இவர்களால் மாட்ட வேண்டியது வரும். வாழ்க்கைத்துணையாக வந்தால் ஒவ்வொரு நாளும் வேதனைதான் மிஞ்சும்.

எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாத நட்சத்திரம்- திருவோணம். இந்த நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் உங்களுக்கு எதிராகத்தான்்இருக்கும். அந்த நபர், உங்களுக்கு கெட்டபெயரை வாங்கித் தருவார். அவர்களால் மதிப்பு இழப்பீர்கள். நல்ல தோழமைகளை இழப்பீர்கள்.

திருவாதிரையின் நான்கு பாதங்கள்... அவர்களுக்கான தனித்தனி குணங்கள் அவற்றையெல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x