Published : 26 Feb 2020 09:56 AM
Last Updated : 26 Feb 2020 09:56 AM

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 16;  ’ திருவாதிரைக்காரர்கள் பிரச்சினைகளில் சிக்குவார்களா, சேமிக்கவே மாட்டார்களா? - 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


வணக்கம் வாசகர்களே.


இப்போது நாம் பார்க்க இருப்பது எந்த நட்சத்திரத்தைத் தெரியுமா? யாருடைய நட்சத்திரத்தைத் தெரியுமா?

ஆடல் வல்லான், தில்லைக் கூத்தன் எனும் நடராஜபெருமானின் நட்சத்திரமான ஆதிரை என்கிற திருவாதிரை நட்சத்திரப் பெருமைகளைத்தான் பார்க்கப் போகிறோம்.

ஆதிரை என்பதுதான் நட்சத்திரத்தின் பெயர். ’திரு’ என்பது மரியாதை விகுதி. இது சிவபெருமானின் நட்சத்திரம் என்பதால் திரு என்பதும் இணைந்தது.


இதேபோல ஶ்ரீநிவாச பெருமாளின் நட்சத்திரம் ஓணம். இதற்கும் ’திரு’ என்கிற மரியாதையும் புனிதமும் இணைந்து திருவோணம் என்று அழைக்கப்படுகிறது.

சரி, திருவாதிரை பற்றி பார்ப்போம்.

ஆதிரை- ஆ என்றால் பசு, செல்வம் ஆகியவற்றைக் குறிக்கும். திரை என்றால் திரண்ட மற்றும் அளவற்ற என்று பொருள். ஆக, திருவாதிரை என்றாலே அளவற்ற செல்வம் என்று அர்த்தம்.

தில்லை பொன்னம்பலநாதர் சிலை முழுக்க தங்கத்தால் ஆனது. அதன் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டது (இந்தியாவிலேயே தங்கத்தால் மேற்கூரை கொண்ட முதல் ஆலயம் சிதம்பரம் நடராஜர் ஆலயம் என்பர்).


இந்தச் சிலையை வடிவமைத்தவர் போகர் சித்தரின் சீடர்களில் ஒருவரான கருவூர் சித்தர் ஆவார். அதுமட்டுமல்ல மூலவராகவும், உற்ஸவராகவும் இருக்கும் ஒரே தலமும் இதுதான்.

மேற்கண்ட தகவல்களுக்கும் இந்த நட்சத்திரத்திற்கும் நெருக்கமான தகவல்கள் உள்ளன.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வ வளம் உடையவர்களாக இருப்பார்கள். பொருளாதார பிரச்சினைகள் இருக்காது. இவர்களின் தேவைகள் உடனுக்குடன் தீரும். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள். சுதந்திர மனப்போக்கு கொண்டவர்கள். எவருக்கும் கட்டுப்படாதவர்கள், திருவாதிரைக்காரர்கள்.

அதுமட்டுமா? திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், சுயமாக முடிவெடுப்பார்கள். அது சரியோ, தவறோ அதில் மிக உறுதியாக இருப்பார்கள். எவரின் அறிவுரைகளையும் ஏற்கமாட்டார்கள். தனக்கே எல்லாம் தெரியும் என்ற போக்கு கொண்டவர்கள். சற்றே அகந்தை உடையவர்கள்.

இவர்கள் சிதம்பர நடராஜர் தத்துவத்தை அப்படியே எதிரொலிப்பவர்கள். நடராஜர் ஆக்கல், காத்தல், அழித்தல் என மூன்று செயல்களையும் சரணாகதி அடைந்தவர்களை அரவணைப்பதும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறார்.


அதுபோல இவர்களை, இவர்களே செதுக்கிக்கொள்வார்கள். இவர்களை இவர்களே காத்துக்கொள்வார்கள். முக்கியமாக, வேறுயாரும் அழிக்கத்தேவையே இல்லாமல், இவர்களுக்கு இவர்களே அழிவையும் தேடிக் கொள்வார்கள். இதற்கு எவருடைய அறிவுரையும் கேட்காமல் அலட்சியப்படுத்துவதுதான் மிக முக்கியமான காரணம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கற்பனை வளம் மிக்கவர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்கள். இசை மற்றும் நடனத்தில் ஆர்வம் அதிகமிருக்கும். கல்வியில் குறைந்தளவே ஆர்வம் இருக்கும். கல்வியறிவைவிட அனுபவ அறிவு அதிகம் கொண்டிருப்பார்கள்.

சுயமாக ஜொலிப்பவர்கள், எனவே இவர்களைப்பற்றி கவலைப்படத்தேவையே இல்லை. மூலவராகவும், உற்ஸவராகவும் இருக்கவேண்டும் நினைப்பவர்கள். அதாவது தனக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று எல்லா இடங்களிலும் எதிர்பார்ப்பார்கள். சுய பச்சாதாபம் உடையவர்கள். பழைய விஷயங்களை நினைத்தே புலம்புபவர்கள்.

கலைத்துறை ஆர்வம், இசைக்கருவிகள் இசைப்பதில் வல்லமை, பாடகர்களாக இருப்பது, தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஊடகத்துறை, காது,மூக்கு, தொண்டை மருத்துவர், ஒன்றுக்கும் மேற்பட்ட காரியங்களைச் செய்தல் அதாவது அஷ்டாவதானி திறமை, அபார ஞாபக சக்தி, கணிதவல்லுநர், ஆடிட்டர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளில் இருப்பார்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.

இவர்களிடம் ஒரு வேலையை வாங்க வேண்டும் என்றால் உத்தரவாகச் சொன்னால் கேட்க மாட்டார்கள். மாறாக, அன்பாக வேண்டுகோள் வைத்தால் விரைந்து முடித்து தருவார்கள். அன்புக்குக் கட்டுபட்டவர்கள் இவர்கள்.

சேமிப்பு பழக்கம் என்பது அறவே இருக்காது. அன்றைய பிரச்சினை அன்றைக்கு தீர்ந்தாலே போதும் என நினைப்பார்கள். எதிர்காலம் பற்றிய பயமே இல்லாதவர்கள். பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தராதவர்கள். பணத்தேவைகளை தன் திறமையால் பூர்த்தி செய்து கொள்பவர்கள்.

நண்பர்களால் நம்பி கெட்டுப்போவார்கள். ஆனாலும் நண்பர்களை விட்டுத்தராதவர்கள். எளிதில் எதையும் நம்பும் அப்பாவிகள் திருவாதிரைக்காரர்கள். இதன்காரணமாக நிறைய ஏமாற்றங்களை சந்திப்பவர்கள்.

உணவு விருப்பம் என பார்த்தால், பெரிய ஆசைகள் ஏதும் இருக்காது. இருப்பதைச் சாப்பிட்டு திருப்தி காண்பார்கள். இனிப்பு வகைகளில் ஆசை அதிகம் இருக்கும். இதன் காரணமாக பல்வலி, ஈறுகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

திருவாதிரையானது உடலில் மூச்சுக்குழல், காது, மூக்கு, தொண்டை இவற்றைக் குறிக்கும். எனவே பிரச்சினை என வந்தால் இது தொடர்பான நோய்களே வரும். அதேபோல உடலில் இருக்கும் 9 ஓட்டைகளும் (நவ துவாரங்கள்) திருவாதிரையைக் குறிக்கும். எனவே இது தொடர்பாகவும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளன.

இவர்கள் சற்று அசட்டையாக இருப்பதுபோல் தோன்றினாலும் அதீத எச்சரிக்கை உணர்வு உள்ளவர்கள். வரும்முன் அறியும் சக்தி உள்ளவர்கள். எனவே ஒரு பிரச்சினை வரப்போகிறது என தெரிந்தவுடன் அதிலிருந்து தன்னை எப்படி காத்துக்கொள்ள வேண்டும் என்பதை சரியாக அறிந்து வைத்திருப்பார்கள்.

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள். ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சோக ரேகை ஓடிக் கொண்டிருக்கும். தனிமை விரும்பிகள். அதிகப்படியான சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள். புதிய சிந்தனைகளை உருவாக்குபவர்கள். புதிய யுக்திகளை கையாளுபவர்கள். எளிதில் வதந்திகளை பரப்புபவர்கள். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் பேசுபவர்கள். சுய இரக்கம் உடையவர்கள். தனக்கேற்பட்ட பிரச்சினைகளை, பார்க்கிற எல்லோரிடமும் சொல்லி புலம்புபவர்கள்.

இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள். ஆனால் வெளியே, பெரிய ஈடுபாடு இல்லாதது போல் பேசுபவர்கள். உதவி கேட்டால்... எப்பாடுபட்டாவது முடிந்த அளவு உதவுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் என்ன செய்தால் நல்லது? எதைச் செய்யாமல் இருக்க வேண்டும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x