Published : 21 Feb 2020 11:13 AM
Last Updated : 21 Feb 2020 11:13 AM

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் 15 -  ‘சம்பாதிப்பதில் கெட்டி’, ‘எதிரிகளை வீழ்த்துவதில்  வல்லவர்கள்’ - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.


மிருகசீரிடம் நட்சத்திரத் தன்மைகளையும் மிருகசீரிட நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களையும் பார்த்து வருகிறோம். இன்னும் பார்ப்போம்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள், ரொம்பவே அச்சப்படுபவர்கள். ஆனால் கோழைகள் அல்ல. எவ்வளவு வெறுப்பை உமிழ்ந்தாலும் அவர்களிடமும் பாசத்தைக் காட்டுகிற உயர்ந்த குணம் கொண்டவர்கள். பிரதிபலன் பார்க்காமல் உதவுபவர்கள்.


இனி, ஒவ்வொரு பாதத்தையும் விரிவாகப் பார்ப்போம்.


மிருகசீரிடம் 1ம் பாதம்-
மிருகசீரிடம் 1-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள், நேர்மையின் அடையாளமாகத் திகழ்பவர்கள். உண்மையின் உரைகல்லாக விளங்குபவர்கள்.
மிருகசீரிடத்தின் 1-ம் பாதக்காரர்கள், பொய் பேசாதவர்கள். ஒருவேளை, பொய் பேசினாலும் உடனடியாக மாட்டிக்கொள்வார்கள். தவறான செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அப்படியே ஈடுபட்டாலும் தன்நெஞ்சே தன்னைச் சுட்டுவிடும் என்பதை அறிந்து வருந்துபவர்கள். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் மன்னிக்கும் பரந்த மனம் கொண்டவர்கள் இவர்கள்!


மிருகசீரிடம் 1-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள், அளவாக உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் சூடான உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். உணவுகளில் எந்த சத்தான பாகத்தையும் விட்டுவிடாதவர்கள்.


இயல்பாகவே இவர்களுக்கு எலும்பு மற்றும் பற்கள் வலுவானதாக இருக்கும். உஷ்ணமான தேகத்தைக் கொண்டவர்கள் இவர்கள். குளித்துவிட்டு உடலைத் துடைக்கும் போது ஈரப்பதம் அறவே இல்லாத அளவுக்கு தன் உடலை துடைத்துக்கொள்வார்கள்.


உஷ்ணமான தேகம் உள்ளதால், நடுத்தர வயதில் மிருகசீரிடம் 1ம் பாதக்காரர்கள், கண்ணாடி அணியவேண்டி வரும். தீர்க்கமான அதேசமயம் கருணை நிறைந்த பார்வை உடையவர்கள். எளிதில் எதிராளியை வசப்படுத்திவிடும் ஆற்றலும் இவர்களுக்கு உண்டு.


இவர்களில் அதிகம் பேர் வேலைக்குச் செல்வதை விட சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை வேலைக்குச் செல்பவராக இருந்தால் அதிகாரம் உள்ள பதவிகளில் இருப்பார்கள்.


அரசு, அரசியல் தொடர்பு நிச்சயம் இருக்கும். அரசுப் பணிகளில் இருப்பார்கள். அரசியல்வாதியாகவும் பதவிகளில் இருப்பார்கள். நேர்வழியில் சம்பாதிப்பதே நிலைக்கும், மாறாக குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பணம் நிலைக்காது, கெளரவத்தையும் இழக்கச் செய்யும் என்பதை இவர்கள் புரிந்து உணரவேண்டும்.


தன் தேவைகளுக்குத் தகுந்தாற்போல் வரவு ஈட்டக்கூடியவர்கள் இவர்கள். மிருகசீரிடம் 1-ம் பாதக்காரர்களுக்கு சொந்த வீடு என்பது நிச்சயமாக இருக்கும். இப்போது இல்லாவிட்டாலும் சரியாகத் திட்டமிட்டு எதிர்காலத்தில் வீடு வாங்குவார்கள். தன் பிள்ளைகளால் ஆதாயம் அடைவார்கள். பிள்ளைகளால் பெருமையும், கௌரவமும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை மற்றும் நிர்வாகத்தில் மிகச்சரியாக இருப்பார்கள்.

எப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கும் இவர்களிடம் தீர்வு கிடைக்கும். பிரச்சினைகளின் ஆழம் அறிந்து சரியான தீர்ப்பு வழங்குவதில் வல்லவர்கள்.
ஆரோக்கியம் என பார்த்தால் கண் தொடர்பான பிரச்சினைகளும், எலும்பு மற்றும் முதுகு தண்டுவடப் பிரச்சினைகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. செயற்கை உணவுப் பொருட்கள், பழைய உணவுகள் எனச் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் ரொம்பவே இம்சை பண்ணும்.


இறைவன் - சிவ வழிபாடு
விருட்சம்- கருங்காலி மரம்
திசை - தென்கிழக்கு
வண்ணம்- ஆரஞ்சு, மற்றும் தூய வெள்ளை
*******************************************



மிருகசீரிடம் 2ம் பாதம்

எப்போதும் கலகலப்பு, மகிழ்ச்சி, நண்பர்கள் குழாம் என்று மிருகசீரிடம் 2-ம் பாதக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் இவர்களின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பார்கள்.


சுற்றுலாப் பயணத் திட்டமா? முதலில் இவர்களிடம் கேட்டுவிட்டுத்தான் பயணத் திட்டம் போடுவார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொண்டவர்கள் இவர்கள்.


ஆயிரம்தான் கேலி, கிண்டல், கூத்து என இருந்தாலும் படிப்பில் படு கில்லாடிகள். படிக்கும்போதே வேலையை உறுதி செய்யும் திறனும் கொண்டவர்கள்.


மிருகசீரிடம் 2-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள், திரைத்துறை, கலைத்துறையில் சாதிப்பவர்கள். கல்லூரி விரிவுரையாளர், ஆசிரியர், வங்கி அதிகாரி, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பத்திரப்பதிவு, திட்ட அலுவலர், நடன ஆர்வம், புத்தகக் கடை, பதிப்பாளர்கள், கதாசிரியர்கள், நடிப்பு மற்றும் நடிப்பு பயிற்சி, தூதரக பணி, போன்ற துறைகளில் இருப்பார்கள்.


உணவு விஷயத்தில் பெரிய முக்கியத்துவம் தரமாட்டார்கள். எந்த உணவு கிடைத்தாலும், அது எந்த இடமாக இருந்தாலும் கௌரவம் பார்க்காமல் சாப்பிடும் குணம் கொண்டவர்கள்.


பணம் சம்பாதிப்பதில் காட்டும் ஆர்வம் அக்கறை உண்டு. ஆனால், அதை காப்பாற்றிக்கொள்ளத் தெரியாது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள். ஆயிரமாயிரம் நண்பர்கள் இருந்தாலும், இக்கட்டான நேரத்தில் அனைவரும் காணாமல் போவார்கள். இப்படி பல அனுபவம் இருந்தாலும் தன்னை திருத்திக்கொள்ளவே மாட்டார்கள் என்பது இவர்களின் இயல்பு! .


சொந்தத் தொழில் செய்வதில் அதிக ஆர்வம் இருக்காது. வேலைக்குச் செல்வதில்தான் ஆர்வம் இருக்கும். தான் சார்ந்த துறையில் சாதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். உயர்பதவிகளை மிக எளிதாக அடைவார்கள்.


அலுவலகத்தில் அனைத்து வகையான கடனுதவிகளையும் பெறுவார்கள். வீடு வாகனம் என வங்கி கடன் பெற்றே வாங்குவார்கள். தன் வீட்டை படு நேர்த்தியாக வைத்திருப்பார்கள்.


ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் டயாபடிக் போன்ற பிரச்சினைகளும் இடுப்பு மற்றும் அடிவயிற்றில் பிரச்சினைகளும், சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகளும், குடல்வால் பிரச்சினைகளும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிறிய அளவிலான அறுவை சிகிச்சை நிச்சயம் ஏற்படும்.

இறைவன்- திருப்பதி வெங்கடேச பெருமாள்.
விருட்சம் - ஆச்சா மரம்
திசை - தெற்கு
வண்ணம் - இளம் பச்சை
***********************************************************************


மிருகசீரிடம் 3ம் பாதம்-

ஆயிரம் கவலைகள் இருந்தாலும், வெளியே சிறிதும் வெளிக்காட்டாமல் மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இந்த மிருகசீரிடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் இப்படிப்பட்ட குணாதிசயத்தைக் கொண்டவர்கள்.


கடன்சுமை கழுத்தை நெரிக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். உடல்நலம் குன்றியிருக்கும். ஆனால் வெளிக்காட்ட மாட்டார்கள். எப்போதும் போல வலம் வருவார்கள்.


எப்படியும் பணம் பண்ணுவார்கள். அதில் கெட்டிக்காரர்கள். அதிகம் உழைக்காமல்... இருந்த இடத்திலேயே பணம் சம்பாதிப்பார்கள் இவர்கள்.
மிருகசீரிடம் 3-ம் பாதக்காரர்கள், வசதியான வாழ்க்கையை வாழ்பவர்கள். சொந்தத் தொழில் ஆர்வத்தைவிட பணியில் இருப்பதையே விரும்புவார்கள்.


கலைத்துறை, திரைத்துறை இரண்டிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். அழகு நிலையம் நடத்துதல், பெண்களுக்கான ஆடை ஆபரண வியாபாரம், கவரிங் நகைக்கடை, விளையாட்டுப்பொருள் விற்பனை, செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருள் விற்பனை, வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்பும் நிறுவனம் முதலான தொழிலில் இருந்தால், உயர்ந்த நிலையை அடைந்து லாபம் சம்பாதிப்பார்கள்.


ஆண் பெண் பாகுபாடு இல்லாத நட்பு வட்டம் இவர்களுக்கு உண்டு. நண்பர்களை அதிகம் நம்புவார்கள். வாழ்க்கைத்துணை மேல் அலாதி அன்பு கொண்டவர்கள்.


ஆரோக்கிய விஷயத்தில் இவர்கள் அலட்சியமாக இருப்பார்கள். பாலியல் தொடர்பான நோய் பிரச்சினைகளும், தைராய்டு, சிறுநீரகப் பிரச்சினை, டான்சில்ஸ், ஆண்மைக் குறைபாடு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் முதலான பிரச்சினைகளும் வரும் வாய்ப்புகள் உள்ளன.


இறைவன் - மகாவிஷ்ணு
விருட்சம் - வேப்ப மரம்
திசை - தென்மேற்கு
வண்ணம் - நீலம், ஆடம்பர நிறங்கள்
********************************************************
*


மிருகசீரிடம் 4ம் பாதம் -
எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் ஆதாயம் எவ்வளவு என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எடுத்த வேலைகளை, மற்றவர்களைவிட வேகமாக முடித்துக்காட்டுவார்கள். சுறுசுறுப்பானவர்கள். அதிபுத்திசாலிகள்.


ஒருவேலையை எப்படிச் செய்யவேண்டும்? எப்போது முடிக்க வேண்டும்? என்பதில் படு கச்சிதமாக திட்டம் தீட்டுவார்கள். ஆனால் அதில் தனக்கு என்ன லாபம்? என்பதில் குறியாக இருப்பார்கள் மிருகசீரிட 4-ம் பாதக்காரர்கள்.


உதவி கேட்டு வருபவர்களுக்கு தயக்கம் இல்லாமல் உதவுவார்கள். ஆனால் அதை சொல்லிக்காட்டியே பல ஆதாயங்களைப் பெறுபவர்கள். அவசரச் செயல்பாடுகளால் சில சமயம் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்கள்.


எதிரிகளையும், தனக்கு துரோகம் செய்தவர்களையும் காத்திருந்து சமயம்பார்த்து பழிவாங்கும் குணம் மிருகசீரிடம் 4-ம் பாதக்காரர்களுக்கு உண்டு. எதிரிகளின் வீழ்ச்சியை ரசிப்பவர்கள் இவர்கள்.


மிருகசீரிட நட்சத்திரத்தின் 4-ம் பாதக்காரர்களின் கையால் பணம் பெற்று தொடங்கப்படும் எதுவும் ஆலமரமாய் விரிவடையும். அப்படியொரு கைராசிக்காரர்கள் இவர்கள். அதேபோல், இவர்களின் கையால் மருந்து எடுத்துக் கொண்டால், நோயாளிகளுக்கு விரைவில் நோய் தீரும். அப்படியொரு ராசி இவர்களுக்கு உண்டு.


எந்த வேலையாக இருந்தாலும் பார்க்கத் தயங்காதவர்கள். திரைத்துறை, நாடகம், கிராமியக்கலை, கூரியர் சர்வீஸ், மருந்துக்கடை, உர விற்பனை, ரசாயனப் பொருள் விற்பனை, பட்டாசு வியாபாரம், திருமணத்தகவல் மையம், தரகர், கமிஷன் வியாபாரம், நிலத்தரகர் முதலான துறைகளில் ஜொலிப்பார்கள்.


அறுவை சிகிச்சை நிபுணர், எலும்பு முறிவு மருத்துவம், ரத்த வங்கி போன்ற தொழில்கள் அமையும்.
ஆரோக்கியத்தில் ரத்தசோகை, நீர்க்கடுப்பு, பாலியல் நோய்கள், அந்தரங்க உறுப்பில் பிரச்சினை,கர்ப்பப்பைக் கோளாறுகள், தோல் நரம்பு பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.

இறைவன் - துர்கை
விருட்சம் - நீர்க்கடம்பு
திசை - வடமேற்கு
வண்ணம் - சிவப்பு, இளம் சிவப்பு

மிருகசீரிட நட்சத்திரங்களின் குணங்களையும் ஒவ்வொரு பாதத்துக்கான தெளிவான விஷயங்களையும் தெரிந்திருப்பீர்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் இருப்பின், ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.


தில்லையம்பல நடராஜ பெருமானின் உன்னதமான நட்சத்திரம் எது தெரியும்தானே. திருவாதிரை. ’திரு’ என்னும் அடைமொழி கொண்ட இரண்டே நட்சத்திரங்களில் முதன்மையானதுமான ’ஆதிரை’ எனும் திருவாதிரை நட்சத்திரத்தைப் பற்றிச் சொல்லுகிறேன்.


- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


********************************************************************

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x