Published : 09 Feb 2020 12:11 PM
Last Updated : 09 Feb 2020 12:11 PM

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 11 -  ‘ரோகிணி நட்சத்திரம்; லாபம் தரும் நட்சத்திரக்காரர்கள்; குழி பறிக்கும் நட்சத்திரக்காரர்கள்!’ 

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அன்பு மிகுந்த வாசகர்களுக்கு வணக்கம்.


ரோகிணி நட்சத்திரத்தின் தன்மைகளையும் ரோகிணி நட்சத்திரக்காரங்களின் கேரக்டர்களையும் பார்த்து வருகிறோம்.
இன்னும் பார்ப்போம்.


ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கற்பனை வளம் மிக்கவர்கள். எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் பார்த்தோம்.


ரோகிணியின் வடிவம் கூம்பு போன்றது. பார்ப்பதற்கு தேர் போலவும், உச்சிக் குடுமி போலவும் தோன்றுகிற அமைப்பு இது.
எனவே உச்சியாக இருப்பதெல்லாம் ரோகிணி என்கிறது ஜோதிடம். சிவபெருமானின் உச்சியில் இருக்கும் பிறை சந்திரன். அவரிடமிருந்து வெளிவரும் கங்கை, இடது கண் என அனைத்தும் ரோகிணி.


நம்முடைய குரல் வளம், ஓயாமல் பேசும் நாக்கு, பற்களைத் தாங்கி நிற்கும் ஈறுகள் ஆகியவையும் ரோகிணியின் அம்சங்கள்!
இன்னொரு விஷயம்... இருப்பதாக நம்பப்படுகிற எங்கே இருக்கிறது என அறியப்படாத மனம் என்பதும் கூட ரோகிணி அம்சம்.
கற்பனையில் தோன்றி அதைச் செயலாக வடிவமைப்பது ரோகிணி. கதை,கவிதை, பாடல், கட்டுரை, விழிப்பு உணர்வு கொண்ட எழுத்து மற்றும் பேச்சு, ஓவியம், நாட்டியம் என அனைத்தும் ரோகிணியின் அம்சங்கள்; வடிவங்கள்; குணங்கள்!


வயல்வெளி, நெல், பசுமைக் காடுகள் என்பவையும் ரோகிணிதான்!


பணப்பிரச்சினை என்பது இவர்களுக்கு வராது. அதாவது தேவை எதுவோ, எவ்வளவோ அது சரியான நேரத்திற்கு கண்டிப்பாகக் கிடைத்துவிடும்.
இல்லையென்றால் பணம் செய்யும் வித்தை அறிந்தவர்கள் என்பதால் கணநேரத்தில் முடிவெடுத்து பண வரவை உறுதி செய்து விடுவார்கள்.
பொதுவாக, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் எழுத்துத்துறையிலும், திரைத்துறையிலும், ஊடகப்பணியிலும், பத்திரிகைத் துறையிலும் பணி செய்வார்கள், செய்யவேண்டும் என்பது ஜோதிட சாஸ்திர விதி.


அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை, விலை உயர்ந்த தானியங்கள் விற்பனை (முந்திரி, பாதம்), ஆடம்பரப் பொருட்கள் விற்பனை போன்ற தொழில்களை ரோகிணி நட்சத்திரக்காரர்கள் செய்வது சிறப்பாக இருக்கும்.

சந்தை வியாபாரம், மொத்த விற்பனை, காய்கறி வியாபாரம், பால், தயிர், நெய் வியாபாரம், தேநீர்கடை, உணவகம், மளிகை வியாபாரம் போன்றவையும் சிறப்பாக இருக்கும். அதேபோல ஆடு, மாடு வளர்ப்பு, பால் பண்ணை அமைத்தல் போன்றவையும் நல்ல லாபம் தரும்.

ரியல் எஸ்டேட், பங்கு வர்த்தகம், தவணைத் திட்டம், சீட்டு நிறுவனம், (சிட்பண்ட்) போன்ற தொழிலும் சிறப்பாக இருக்கும்.
இவர்கள் எந்த வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும், எந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தாலும் இந்த நட்சத்திரங்களில் தொடங்குவது வெற்றியை உறுதியாகத் தரும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள் அதாவது நட்சத்திரக்காரர்கள்-

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இந்த நட்சத்திர நாட்களில் தொடங்கும் எதுவும் ஏமாற்றம் தராது. இரு மடங்கு லாபம் தரும் என்பதை ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

வீடு வாகனம் வாங்குதல், கட்டிடப் பணிகள் தொடங்குதல், ஆதாயம் தரும் பயணங்கள் செய்தல் போன்றவற்றை புனர்பூசம், விசாகம் ஆகிய நட்சத்திர நாளில் செய்யுங்கள்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி. - இந்த நட்சத்திர நாட்களில் கடன் வாங்குதல், கடன் அடைத்தல், தொழில் முதலீடு செய்தல் போன்றவை செய்தால் பணம் இரட்டிப்பாக உயரும்.

பூரம், பூராடம், பரணி - இந்த நட்சத்திர நாட்களில் எதுசெய்தாலும் நன்மைகள் அதிகம் நடக்கும். உதவிகள் எதிர்ப்பார்த்து நடக்கும் சந்திப்புகளால் நன்மை உறுதியாக உண்டாகும்.

வாழ்க்கைத்துணையாக, உற்ற நண்பர்களாக இருக்க வேண்டியவர்கள் யார் யாரெல்லாம் தெரியுமா?


கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரக்காரர்களால் அதிக நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லவேண்டும்.


வாழ்க்கைத்துணையாக கார்த்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரங்களைத் தேரந்தெடுக்கும்போது கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், ரிஷப ராசி கார்த்திகை மற்றும் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாறாக, மேஷ ராசி கார்த்திகை நட்சத்திரம், மிதுன ராசி மிருக சீரிட நட்சத்திரம் என்றிருந்தால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இந்த காம்பினேஷன் கூடாது. கூடவே கூடாது.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள், மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நட்சத்திர நாட்கள் மற்றும் நட்சத்திரக்காரர்கள். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த மூன்று நட்சத்திரங்களையும் அருகில் கூட சேர்க்கக் கூடாது. இந்த மூன்று நட்சத்த்திர நாட்களில் பயணங்கள் கூடாது. எந்த ஒன்றையும் தொடங்கக்கூடாது, ஒப்பந்தங்கள் போடக்கூடாது. முக்கிய சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி-
இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் ஒரு சதவீதம் கூட லாபம் இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்கள் பேரைச்சொல்லி லாபம் அடைவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம் -
இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை இவர்களைத் தவிர்ப்பது நல்லது. பழகினால் ஏதாவதொரு சூழ்நிலையில் உங்களை சிக்கலில் சிக்கவிட்டுவிடுவார்கள். இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்த வேலையும் உங்களுக்கு எதிராகத் திரும்பும், முக்கியமாக வழக்குகள் இந்த நட்சத்திர நாட்களில் நடத்தினால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பும்.

பூரட்டாதி நட்சத்திரத்தை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுப்பதையும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும், வேதனையையும் தரக்கூடியவர்கள்.

ரோகிணி குறித்த மேலும் முக்கியமான சில விஷயங்கள்-

தேவதை - பிரம்மா

அதிதேவதை - கிருஷ்ணர்

விருட்சம் - நாவல் மரம் -
உங்களுக்கு சவுகரியமான இடங்களில் இந்த நாவல் மரத்தை நட்டு வளர்த்து வாருங்கள். அதாவது பள்ளி வளாகங்கள், பூங்காக்கள், நடைபாதை ஓரங்கள், வீடு அல்லது தோட்டம் இருந்தால் அங்கேயும் நட்டு வளர்த்து வாருங்கள்.

மலர் - வெள்ளை அல்லி

மிருகம் - ஆண் நாகம் - புற்றுள்ள அம்மன் ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள்.

ஆலயம் - திருப்பதி - வருடத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக சென்று தரிசித்து வாருங்கள்.

ரோகிணி நட்சத்திரம் குறித்து இன்னும் பல விசேஷ தகவல்கள் உள்ளன.


ரோகிணி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியாக குணநலன்களையும் பார்ப்போம்.


- வளரும்
******************************************************************

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x