Published : 29 Jan 2020 11:27 AM
Last Updated : 29 Jan 2020 11:27 AM

பிப்ரவரி மாத பலன்கள் - மேஷம் முதல் கன்னி ராசி வரை! 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்:


மேஷ ராசியினரே. நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்தமாதம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பணத் தேவை உண்டாகலாம். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.


குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும்.


தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்கப் பணிகளை தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.


அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கிப் பழகுவது அவசியம். அவர்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டு செயல்படுத்துவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


கலைத்துறையினருக்கு : வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். பிரபலங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.


பெண்களுக்கு : மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.


மாணவர்களுக்கு : பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்வினி:
இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அதிகரிக்கும். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்து நின்று வெற்றி கொள்வீர்கள்.


பரணி:
இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சில சமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சினை இருக்காது.


கிருத்திகை:
இந்த மாதம் கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களின் வார்த்தைகள் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.


பரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி வர மனக்குறைகள் அனைத்தும் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11

*******************************************************************************************


ரிஷபம்:


ரிஷப ராசியினரே. இந்த மாதம் கோபத்தைக் குறைத்து கவனமாகச் செயல்படுவது நல்லது. அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பொறுமையுடன் செல்வதன் மூலம் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.


குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும்விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளைத் தள்ளிப் போடுவது நல்லது.


தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப் பளுவால் மனச்சலிப்பும் உண்டாகும். திடமான மனதுடன் செயல்பட்டால் சில நல்ல பலன்களை அடைவீர்கள்.


அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது கவனமுடன் செயல்படுவது அவசியம்.


கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.


பெண்களுக்கு : மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.


மாணவர்களுக்கு : பாடங்கள் படிப்பது எதிர்பார்த்தது போல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும்.


கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள்:
இந்த மாதம் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு செலவு செய்ய பணப் பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். கவலை வேண்டாம். நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.


ரோகிணி:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடை போட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். எதையும் தீர ஆலோசித்து முடிவு எடுக்கவும்.


மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதங்கள்:
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல் இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை வீண்போகாது. முழு முயற்சியுடன் ஈடுபட்டால் நீங்கள் நினைத்தது நடக்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.


பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்க பணப்பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20,
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

*******************************************************************************************
மிதுனம்:


மிதுன ராசியினரே. இந்த மாதம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தைப் பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்தக் காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.


குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.


தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப் பளுவும் ஏற்படலாம்.


அரசியல்வாதிகளுக்கு : தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.


கலைத்துறையினருக்கு : பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.


பெண்களுக்கு : மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.


மாணவர்களுக்கு : புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.


மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்:
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், மனதில் ஏதோ ஒரு உணர்வு உங்களை வழி நடத்திச் செல்லும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான அழைப்பு வரலாம். திடீரென வரும் வாய்ப்புகள் மனதிற்கு சற்று மகிழ்ச்சியைத் தரும்.


திருவாதிரை:
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். திடீர் செலவுகள் உங்களை வருத்தத்தை ஏற்படச் செய்யும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனை நடைபெறும்.


புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம். வேலை விசயமாக வெளியூர் செல்ல நேரலாம். அது உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்றதாக அமையும். உடன் பிறந்தவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள்.


பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வந்து அர்ச்சிக்க நினைத்தது நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15

******************************************************************************************
கடகம்:


கடக ராசியினரே. இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். .


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி வழிபடுவீர்கள்.


தொழில் : வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாகப் பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய தொழில் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நல்லபடியாக நடந்தேறும். புதிய ஆர்டர்களும் வந்து சேரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து விடுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் தரும். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.


அரசியல் துறையினருக்கு : சாதகமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.


கலைத்துறையினருக்கு : புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.


பெண்களுக்கு : மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களைப் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
மாணவர்களுக்கு : மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.


புனர்பூசம் 4 ஆம் பாதம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சிலர் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.


பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் உள்ளவர்களை திருப்திப்படுத்த நீங்கள் மிகவும் உற்சாகமாக செயல்படுவீர்கள். தூரத்து உறவினர்கள் உங்களுக்கு உதவிபுரிவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூருக்குச் செல்ல வேண்டி வரும். உடல் நலத்திலும் அக்கறையுடன் செயல்படுங்கள்.


ஆயில்யம்
இந்த மாதம் நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வேலைப்பளுவால் உடல் அசதி ஏற்பட்டு மறையும். நேர்மையாக நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.


பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி பகவானுக்கு பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17, 18

*******************************************************************************************


சிம்மம்:
சிம்ம ராசியினரே. நீங்கள் வசீகரப் பேச்சாற்றல் கொண்டவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தைத் தரும். குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.


தொழில் : வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும். சிறு தொழிலாளர்கள் கூட நன்மை அதிகம் அடைவார்கள். தந்தையார் தொழிலில் ஈடுபட்டவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.


அரசியல்வாதிகளுக்கு : மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுகப் போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.


கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினைத் தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.


பெண்களுக்கு : மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.


மாணவர்களுக்கு : மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.


மகம்:
இந்த மாதம் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் நீங்கப் பெறுவீர்கள். கண் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் சென்று ஆலோசனை எடுத்துக் கொள்ளுங்கள்.


பூரம்:
இந்த மாதம் உங்கள் நிலைமை மாறும். நீங்கள் விரும்பியதை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். கன்சல்டன்சி துறைகளில் வேலை செய்பவர்கள் தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர்களும் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் குடிகொண்டிருக்கும்.


உத்திரம் 1 ம் பாதம்:
இந்த மாதம் அலைச்சல் இருக்கும். சிலர் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் குழந்தைகளால் சிற்சில பிரச்சினைகள் வரலாம். அதற்காக உங்களின் குழந்தைகள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் வரும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுங்கள். சிக்கனத்தைக் கடைபிடியுங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.


பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை மனதார சொல்லி வாருங்கள். நிம்மதி கிட்டும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

*******************************************************************************************


கன்னி:
கன்னி ராசியினரே. இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்களைத் தரும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும் ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும்.


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாகப் பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்பு வரும்.


தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. அரசாங்க காரியங்கள் அனைத்தும் சாதகமான பலன் தரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நினைத்தபடி எல்லாம் நடக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் தாராளமாக கிடைக்கும்.


கலைத்துறையினருக்கு சிறு முயற்சியிலேயே வாய்ப்புகள் கிடைத்து வருமானமும் அதிகரித்து காணப்படும். இயக்குனர்கள் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து படம் இயக்குவதற்கு சாதகமாக கிரகநிலைகள் அமைந்துள்ளன.


அரசியல் துறையினர் கட்சியில் முக்கியப் பொறுப்பு ஒன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். அதைக் கண்டு சிலர் பொறாமை பட நேரிடும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புது வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது.


பெண்களுக்கு : வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.


மாணவர்களுக்கு : மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.


உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள்:
இந்த மாதம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களைப் பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும். புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும்.


ஹஸ்தம்:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம் இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளைச் செய்வது நன்மையைத் தரும். எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மையைத் தரும்.


சித்திரை 1, 2ம் பாதங்கள்:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினைக் கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது. தீடீரென நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும்.


பரிகாரம்: ஐயப்பனின் சரண கோஷத்தைச் சொல்லி வழிபட வெற்றிகள் குவியும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22
***************************************
****************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x