Published : 19 Jan 2020 11:49 AM
Last Updated : 19 Jan 2020 11:49 AM

இந்த வார நட்சத்திர பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள் (ஜனவரி 20 முதல் 26 வரை) புனர்பூசம், பூசம், ஆயில்யம்

- 'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

புனர்பூசம் -
குழப்பங்கள் தீர்ந்து தெளிவாக முடிவு எடுக்கக் கூடிய ஆற்றல் உருவாகும். நன்மைகள் அதிக அளவில் ஏற்படும். எதிர்ப்புகள் காணாமல் போகும். வழக்குகள் சாதகமாகும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
இதுவரை தொழில் செய்யாதவர்களும் கூட தொழில் தொடங்கும் முனைப்பை இந்த வாரம் எடுப்பார்கள். இல்லத்தில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கு வழி கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

இந்த வாரம் -

திங்கள்-
எடுத்துக்கொண்ட வேலைகளில் கடைசி நேரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏற்படும்.அலுவலகத்தில் அதிகப்படியான வேலைப்பளு கூடும்.

செவ்வாய்-
அலுவலகத்தில் உங்கள் வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் தொடர்பாக ஒரு சில சந்திப்புகளில் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவு தாமதமாகும்.

புதன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் சரியாக செய்து முடித்து விடுவீர்கள். அலுவலக விஷயமாக பயணமும் ஏற்படும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சீரான வளர்ச்சியைக் காண்பார்கள். தொல்லை தந்து கொண்டிருந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள். ஆரோக்கியத்தில் இந்த பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் சரியாகும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

வெள்ளி-
வெளிநாட்டு வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான அழைப்பு கிடைக்கும். பெண்கள் பழைய ஆபரணங்களை மாற்றி புதிய ஆபரணங்கள் வாங்குவார்கள்.தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று வருமானம் இருமடங்காக இருக்கும்.

சனி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். காசோலை தொடர்பான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். அசையாச் சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

ஞாயிறு-
திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் இன்று முடிவாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினை ஒன்று பேசி முடிக்கும் வாய்ப்பு உள்ளது. பெரிய மனிதரின் உதவியால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிவடையும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுங்கள். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் புடவை உள்ளிட்ட பொருட்களை தானமாக வழங்குங்கள்.
***********************************************************

பூசம் -
தாமதமாகிக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இந்த வாரம் சாதகமாக முடிவடையும். அலுவலகத்தில் இடமாற்றம் பதவி உயர்வு போன்றவை ஏற்படும். தொழிலில் நீண்டநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதலீடு இந்த வாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பெண்களின் திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கலைஞர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து அழைப்பு கிடைக்கப்பெற்று ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள்.


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும், ஆதாயம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு தேவையான ஆதரவு கிடைக்கும்.


இந்த வாரம் -

திங்கள்-
பல்வேறு விதமான நன்மைகள் நடைபெறும். தேவையான உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுடைய கருத்துக்கு மதிப்பு மரியாதை கிடைக்கும். உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இரு மடங்கு வருமானம் கிடைக்கப் பெறுவார்கள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எந்த தொழில் அல்லது வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் லாபம் பல மடங்காக இருக்கும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

செவ்வாய்-
எடுத்துக்கொண்ட வேலையில் அதிக கவனம் வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பொறுமை நிதானம் கடைபிடிக்கவேண்டும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

புதன்-
நிலம் பூமி தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் தொடர்பான உதவிகள் எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இன்று அந்த உதவி கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

வியாழன்-
தொல்லை தந்து கொண்டிருந்த எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.குலதெய்வ வழிபாடு செய்யும் எண்ணம் ஏற்படும்.

வெள்ளி-
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்று அதுதொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய நிறுவன ஒப்பந்தங்கள் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

சனி-
குடும்பத்தினருடனும் அக்கம்பக்கத்தினரிடமும் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். கவனமாக இருக்கவேண்டும். எதிலும் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். பேசுகின்ற வார்த்தை களில் அதிக கவனம் தேவை.

ஞாயிறு-
வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரப் பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுமூகமான முடிவு ஏற்படும். மருத்துவச் செலவுகள் அடியோடு தீரும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
மகா விஷ்ணுவுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். பெருமாளுக்கு நெய் பொங்கல் நிவேதனம் செய்து பிரசாதமாக தானம் தாருங்கள். நன்மைகள் மேலும் கூடுதலாகும். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.
************************************************************

ஆயில்யம் -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த உதவிகள் இந்த வாரம் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முழு வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். இட மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


பெண்களின் திருமண முயற்சிகள் கைகூடும். இதுவரை வேலையில்லாமல் இருந்த பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். சகோதர வழியில் இருந்த சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை ஒன்று இந்த வாரம் முடிவுக்கு வரும். வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் முழு வெற்றி கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்காலம் தொடர்பான ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்புகளை அதிகப்படுத்த திட்டம் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் தொடர்பான தகவல் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

செவ்வாய்-
வருமானம் பலவழிகளில் வரும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபகாரிய விஷயம் தொடர்பான பேச்சுக்கள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இன்று கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

புதன்-
வியாபாரத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பணிச்சுமை அதிகமாகும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன்-
நிலம் பூமி தொடர்பான வியாபாரிகள் லாபம் கிடைக்கும் வகையில் இன்றைய நாள் அமையும். தேவைகள் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாக முடிவடையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

வெள்ளி-
அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுக்காக வெளியூர் செல்ல வேண்டியது வரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த சந்திப்புகள் தள்ளிப் போகலாம்.

சனி-
தாமதமாகிக் கொண்டிருந்த பணிகள் அனைத்தும் இன்று விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் வளர்ச்சி அபாரமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணத்தை பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வருமானம் இருமடங்காக இருக்கும்.

ஞாயிறு-
தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் பொறுமையாக படித்துப் பார்க்க வேண்டும். முக்கியமான சந்திப்பு வேறு ஏதும் இருந்தால் தள்ளி வையுங்கள். குடும்பத்தினரிடம் தேவையில்லாமல் கோபத்தை வெளிக்காட்ட வேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம்-
விஷ்ணு சகஸ்ரநாமம் காலை மாலை இருவேளைகளிலும் கேளுங்கள்; முடிந்தால், பாராயணம் செய்வது இன்னும் சிறப்பு. நன்மைகள் அதிகமாகும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். மன நிறைவு உண்டாகும்.
************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x