Published : 24 Dec 2019 03:18 PM
Last Updated : 24 Dec 2019 03:18 PM

பொருளாதாரம் உயரும்; ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும்!  2020-ம் ஆண்டின் பொதுப்பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விகாரி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 15ம் தேதி பின்னிரவு 16ம் தேதி முன்னிரவு, 01 ஜனவரி 2020, புதன்கிழமையும் சுக்ல சஷ்டியும் சதய நட்சத்திரமும் வ்யதீபாத நாமயோகமும் கௌலவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு 12 மணிக்கு கன்னியா லக்னத்தில் ரிஷப நவாம்சமும் மகர திரிகோணமும் கொண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது.

ராசிநிலை - பாதசார விபரம்:


லக்னம் - ஹஸ்தம் 2ம் பாதம் - சந்திரன் சாரம்


சூரியன் - பூராடம் 1ம் பாதம் - சுக்கிரன் சாரம்


சந்திரன் - சதயம் 3ம் பாதம் - ராகு சாரம்


செவ்வாய் - விசாகம் 4ம் பாதம் - குரு சாரம்


புதன் - பூராடம் 2ம் பாதம் - சுக்கிரன் சாரம்


குரு - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்


சுக்கிரன் - திருவோணம் 3ம் பாதம் - சந்திரன் சாரம்


சனி - பூராடம் 3ம் பாதம் - சுக்கிரன் சாரம்


ராகு - திருவாதிரை 2ம் பாதம் - ராகு சாரம்


கேது - மூலம் 4ம் பாதம் - கேது சாரம்


ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண்: 2020:


இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 0 = 4. நான்கு என்பது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண். துர்கைக்கும் வாராஹி தேவிக்கும் உகந்த எண் நான்காகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதனும் சுக சப்தமாதிபதி குருவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில்காரகனான சனி சுக ஸ்தானத்தில் விரயாதிபதி சாரம் பெற்றிருக்கிறார். தொழில் வளர்ச்சி அடையும். பங்குச்சந்தைகள் நல்ல வளர்ச்சி காணும். பணம் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் மெல்ல மெல்ல சரியாகும். இந்த ஆண்டு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலைமை உச்ச நிலைக்கு செல்லும். ரியல் எஸ்டேட் துறை படிப்படியாக முன்னேற்றம் அடையும். அதிகமான திருமணங்கள் நடைபெறும். குழந்தைபிறப்பு விகிதம் அதிகமாகும். அதிகமான கோயில்களுக்கு புனரமைப்பு நடந்து கும்பாபிஷேகங்கள் நடைபெறும். அரசாங்கம் ரீதியாக பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும். இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து அதிகமான பிரச்சினைகள் ஏற்படலாம். ராணுவம் பலம் பெற்று நாட்டைக் காப்பாற்றும். மழை வளம் சிறப்பாக இருக்கும்.

பொதுப் பலன்கள்:
குருவின் சஞ்சாரத்தால் கன்னியருக்குத் தகுந்த மணம் நடைபெறும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்யமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துத்துறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயனம் - ஆன்மிகம் - சோதிடம் - வழக்கறிஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுக்கிரன் தனது யோகஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்கு பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இருக்காது. உணவு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்கு பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணெய் - சமையல் எண்ணெய் விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும் போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழைப் பொழிவு நன்றாக இருக்கும். சராசரி வெயில் அளவை விட இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையை கணித்துக் கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராகப் பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.

இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் - வாக்கிய பஞ்சாங்கப்படி:


ராகு கேது பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் ஆவணி மாதம் 16ம் நாள் (01.09.2020) செவ்வாய்கிழமை அன்று ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும் - கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

குருப் பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீசார்வரி வருஷம் ஐப்பசி மாதம் 30ம் நாள் (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை அன்று குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கன்னி ராசியையும் பார்க்கிறார்.

சனிப் பெயர்ச்சி:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் மார்கழி மாதம் 14ம் நாள் (29.12.2020) செவ்வாய்கிழமை அன்று சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறுகிறார். மகர ராசிக்கு மாறும் சனி பகவான் தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x