Published : 14 Nov 2019 04:24 PM
Last Updated : 14 Nov 2019 04:24 PM

12 ராசிக்கும் அதிர்ஷ்ட பரிகாரங்கள்! 


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ஜோதிடத்தில் ஒவ்வொரு இடங்களும் ஒவ்வொரு விஷயங்களை நமக்கு சொல்லித்தருகின்றன. . அதன்படி பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களைப் பார்ப்பதற்கு தன வாக்கு குடும்ப ஸ்தானம் என்று அழைக்கப்படும் இரண்டாம் இடமும் - சுக ஸ்தானம் என்று சொல்லப்படும் 4 -ம் இடமும் - பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஒன்பதாம் இடமும் - லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடமும் மிகமிக முக்கியமானதாக கருதப்படுகிறது.


இதில் பாக்கிய ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஒன்பதாமிடம் ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் மிக மிக முக்கியமான இடமாகும். அதன்படி பார்க்கும்போது ஒன்பதாம் இடத்திற்கு பலவித காரகத்துவங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானது பூர்வீகச் சொத்து. தந்தையார் பற்றிய குறிப்புகள் - பூர்வ புண்ணிய பலம் - அதிர்ஷ்டம் ஆகியவை மிக முக்கியமானவை.


அதன்படி ஒருவருக்கு அதிர்ஷ்டம் எவ்வகையில் வரும் என்பதையும் - அதிர்ஷ்டத்தை வரவழைக்கக் கூடிய எந்த விதமான பரிகாரங்கள் செய்யலாம் என்பதையும் ஒன்பதாமிடத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.


அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டங்கள் கைகூடும் என்பதைப் பார்க்கலாம்.


மேஷ ராசிக்காரர்கள்

சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதும் முன்னோர்கள் வழிபாட்டினை மேற்கொள்வதும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நன்மை அளிக்கக்கூடிய பரிகாரம்.


ரிஷப ராசிக்காரர்கள்

விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதும் நன்மையைக் கொடுக்கும். மேலும் நீல நிற ஆடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.


மிதுன ராசிக்காரர்கள்

காவல் தெய்வம் மற்றும் பைரவர் வழிபாடு செய்தால், தடைகளை நீக்கி அதிர்ஷ்டங்களை கொடுக்கும். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுவது காவல் தெய்வத்திற்கு படையல் போடுவது ஆகியவையும் மிகுந்த நன்மைகளைக் கொடுக்கவல்லது. இவர்கள் அடர் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நன்மையைக் கொடுக்கும்.


கடக ராசிக்காரர்கள்

முருகன் வழிபாடு செய்வதும் கந்த சஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்வதும் பாக்கியத்தைக் கொடுக்கும். மேலும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.


சிம்ம ராசிக் காரர்கள்

சிவ வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். மேலும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். முடிந்தவரை கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.


கன்னி ராசிக்காரர்கள்

சுமங்கலி வழிபாடு மற்றும் ஐயப்பன் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால், அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய பரிகாரமாகும். இவர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்வது மிகப்பெரிய மாற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.


துலாம் ராசிக்காரர்கள்

பெருமாள் வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும். தினசரி எழுந்தவுடன் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளைச் சாப்பிடுவது மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். மேலும் நீல நிற ஆடைகளை அணிந்து கொள்வது மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.


விருச்சிக ராசிக்காரர்கள்

அம்பாள் வழிபாடு செய்து வருவதும் அம்மன் ஆலயங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் நன்மையைக் கொடுக்கும். தினசரி அபிராமி அந்தாதி பாராயணம் செய்வதும் பௌர்ணமி பூஜைகளில் கலந்து கொள்வதும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு புஷ்பம் வாங்கிக் கொடுப்பது மற்றும் பெண்களுக்கு வளையல்கள் வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.


தனுசு ராசி காரர்கள்

சிவ வழிபாடு செய்வதும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பு. இதனால் அவர்களுக்கு நன்மையைக் கொடுக்கும். மேலும் பிரம்மமுகூர்த்த வேளையான அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கவல்லது. தினசரி தீப ஒளி தியானம் செய்வதும் இவர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.


மகர ராசிக்காரர்கள்

பெருமாள் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். மரிக்கொழுந்து மலரை பெருமாளுக்கு அர்ப்பணிப்பது மேலும் பெருமாள் கோயிலில் வழங்கக்கூடிய தீர்த்தப் பிரசாதங்கள் வாங்கிக் கொடுப்பது பெருமாள் கோயிலில் நடைபெறக்கூடிய புனருத்தாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இவையெல்லாம் இவர்களுக்கு மிகுந்த நன்மையைக் கொடுக்கவல்லது. இவை தவிர கஷ்டப்படக் கூடிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய பரிகாரம்.


கும்ப ராசிக்காரர்கள்

மகாலட்சுமி வழிபாடு செய்வதும் அம்பாளை வழிபாடு செய்வதும் மிகுந்த நன்மையைக் கொடுக்கவல்லது. எங்கெல்லாம் அம்பாளுக்கு ஆராதனைகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது - அம்பாள் கோயிலில் நடக்கக்கூடிய கும்பாபிஷேகம் மற்றும் விசேஷ நாட்களில் அன்னதானம் செய்வதும் இவர்களுக்கு மிகப்பெரிய பரிகாரம். இவை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.


மீன ராசிக்காரர்கள்

முருகன் வழிபாடும் சிவன் வழிபாடும் செய்து வந்தால், மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியது. வருடத்திற்கு இரண்டு முறை திருச்செந்தூர் சென்று அங்கு தங்கி கடலில் நீராடி முருகனை வழிபாடு செய்து வருபவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அற்புதமான பரிகாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x