Published : 11 Nov 2019 10:56 AM
Last Updated : 11 Nov 2019 10:56 AM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (நவம்பர் - 11 முதல் 17 வரை ) அசுவினி முதல் மிருகசீரிடம் வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்

அசுவினி -
பரபரப்பாக இயங்கி பல சாதனைகளைச் செய்வீர்கள். சொந்த வீடு வாங்கும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு 100% இந்த வாரம் அருமையான, அழகான, மனதிற்கு பிடித்த வீடு அமையும். பத்திரப் பதிவு செய்வீர்கள்.வாடகை வீடு தேடிக் கொண்டிருந்தவர்களுக்கும் இந்த வாரம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் வீடு அமையும். ஆதாயம் தரும் விஷயங்களாகவே உங்களைத் தேடி வரும். எதையும் விட்டு விடாதீர்கள். நல்ல நேரம் நடக்கும்போதே நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள்.
உத்தியோகம் - பதவி உயர்வு நிச்சயம் உண்டு.குழுவுக்கு தலைமை ஏற்பீர்கள். உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து பெரிய பொறுப்பை வழங்குவார்கள், வேறு நிறுவனங்களுக்கு பதவி உயர்வோடு மாற்றம் ஏற்படும். அயல்நாட்டில் வேலை தேடுவோர் இந்த வாரம் அதற்கான சாதகமான தகவலை எதிர்பார்க்கலாம். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கும், நல்ல வேலை அமையாதவர்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்வோர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்றம் தரும் வாரமிது.
தொழில் - இனி ஓய்வு என்பதே கிடையாது. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் வந்து குவியும். உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும். உங்களுடன் கூட்டு சேர பலரும் முன்வருவார்கள். ஒரு சிலருக்கு வட்டியில்லாத முதலீடுகள் கிடைக்கும். வங்கிகள் தாமக முன் வந்து கடன் தரும்.சிறு வியாபாரிகள், பெரு வியாபாரிகள், பங்கு வர்த்தகம், வணிகர்கள், ஆன்லைன் வர்த்தகர்கள் என அனைவருக்கும் உற்சாகமாக முன்னேற்றம் ஏற்படும். கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு அயல்நாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்படும்.

பெண்களுக்கு - திருமணமுயற்சிகள் கடந்த சில மாதங்களாக தள்ளிப் போய் கொண்டே இருந்திருக்கும். அல்லது எந்த பதிலும் வந்திருக்காது. இனி நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்! ஆம்,பிள்ளை வீட்டார் அவர்களாகவே வந்து திருமணத்தை உறுதி செய்வார்கள். பணி நிரந்தரம் ஆகும். பதவி உயர்வு கிடைக்கும்.புத்திர பாக்கியம் உண்டாகும். கணவருக்கு பதவி உயர்வு உண்டாகும்.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு, தேர்வுகளில் நீங்கள் படித்து வைத்து எதிர்பார்த்த கேள்விகளே வந்து ஆச்சர்யப்படுத்தும். வெற்றி உறுதி.
கலைஞர்களுக்கு - நீண்ட நாள் ஓய்விலிருந்தது போதும். வந்த வாய்ப்புகளை செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது. சாதனைகளைப் புரிவீர்கள்.
பொதுப் பலன் - திருமணம் உறுதியாகும்.புதிய நட்புகள் ஏற்படும், அவர்களால் பெரிய ஆதாயம் ஏற்படும். அரசு வழியில் காரியம் சாதிப்பீர்கள். அதன் மூலமும் ஆதாயம் ஏற்படும்.சொத்துக்கள் வாங்குவீர்கள்.இந்த வாரம் பொன்னான வாரம். எந்த வாய்ப்பையும் வீணடிக்காதீர்கள். பணவரவு, சகோதர ஆதரவு, பூர்வீக சொத்தில் பங்கு, அயல் நாடு செல்லுதல், பழைய பாக்கிகள் வசூலாகுதல், கடன்கள் அறவே தீருதல் என அனைத்தும் சுபமாக இருக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - சாப்பிடக்கூட நேரம் இருக்காது, ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். பயணம் ஏற்படும்.
செவ்வாய் - எடுத்த முயற்சிகளில் அனைத்தும் வெற்றி ஏற்படும்.ஒரு தோல்வி கூட இருக்காது. எதிர்பார்த்த பணம், எதிர்பாராத பணம் என பணப்புழக்கம் தாராளாமாய் இருக்கும்.
புதன் - கையாளும் பொருட்களில் கவனம் வேண்டும். வாகனப் பழுது ஏற்படும். முன் கோபம், படபடப்பு ஏற்படும்.
வியாழன் - தரகு, கமிஷன் போன்றவை லாபம் தரும். ஆரோக்கியம் சீராகும். சொத்துக்கள் வாங்கும் பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.
வெள்ளி - உங்களிடம் உதவி கேட்டு பலரும் நச்சரிப்பார்கள், நீங்களும் ஒரு சிலருக்கு உதவி செய்வீர்கள்.
சனி- இன்று எடுத்துச் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பண வரவு தாராளமாய் இருக்கும்.பிரச்சினை தந்து கொண்டிருந்த ஒரு கடனை அடைப்பீர்கள்.
ஞாயிறு - யாரிடமும் எதற்காகவும் வாதம் செய்ய வேண்டாம். உங்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பிடுங்கி உங்களுக்கு எதிராக மடை மாற்றுவார்கள். தனிமையும் அமைதியும் நன்மை தரும்.
வணங்க வேண்டிய தெய்வம் - சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள். முடிந்தால் திருவண்ணாமலை சென்று வாருங்கள்.

************************************************************************************


பரணி -
வெற்றிகரமான வாரம் . எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த வீட்டுக்கடன் இப்போது கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். திருமணம் உறுதி செய்து நிச்சயதார்த்தம் செய்யவும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகம் - எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலக நண்பர்களோடு சுற்றுப்பயணம் செல்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு பணிநீட்டிப்பு கிடைக்கும். குடியுரிமை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
தொழில் - பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். ஒரு சிலர் அதிக முதலீடுகள் செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பீர்கள். புதிய தொழில் முனைவோருக்கு முதலீடுகள் கிடைக்கப் பெற்று தொழிலைத் தொடங்குவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் விருத்தியடையும். அரசு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்பவர்கள் வளர்ச்சி பெறுவார்கள்.
பெண்களுக்கு - மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் வெற்றியாகும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடமிருந்து பரிசுகளைப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உயர்கல்வி வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - பல்வேறுவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
பொதுப்பலன் - சொந்த வீடு அமையும்.புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களிடம் வருத்தம் ஏற்படும். பூர்வீகச் சொத்து சில பிரச்சினைகளுக்கு பின் தீர்க்கப்படும். திருமண முயற்சிகள் கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். அரசின் திட்டங்களால் லாபம் ஏற்படும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். மன வருத்தங்கள் தீரும்.


இந்த வாரம் -
திங்கள் - வெளிநாடு செல்லும் முயற்சி இன்று உறுதியாகும். அதற்கான .விசா இன்று கைக்கு கிடைக்கும். பலவித நன்மைகள் தானாக வந்து சேரும்.
செவ்வாய் - பயணங்கள் அதிகரிக்கும். இடமாற்றங்கள் ஏற்படும். புதிய குழப்பம் ஒன்று வந்து சேரும்.
புதன் -பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தாமதமாகிக் கொண்டிருந்த காசோலை இன்று வங்கியில் பணமாக உங்கள் கணக்கில் சேரும்.
வியாழன் - தேவையற்ற பயணங்கள் தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். படபடப்பும் பதட்டமும் இருக்கும்.
வெள்ளி -ஆதாயங்கள் அதிகமாகும். ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். வீடு, நிலம் போன்றவற்றால் ஆதாயம் ஏற்படும்.
சனி -நண்பர்களுக்காக உதவுவீர்கள். அதிலும் குறிப்பிட்ட ஒரு நண்பருக்காக பிரச்சினைகளை முடித்துக் கொடுப்பீர்கள்.
ஞாயிறு - எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வங்கிக்கடன் போன்றவற்றில் இன்று ஒரு முன்னேற்றமான தகவல் கிடைக்கும். ஆதாயம் ஏற்படும் ஒரு காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - சிவாலயத்தில் நந்தியம் பெருமானுக்கு மலர்மாலை சூட்டி, பழங்கள் நிவேத்தியம் செய்து வழிபடுங்கள். நன்மைகள் பெருகும், தடைகள் அகலும்.

***********************************************************************************************

கார்த்திகை -
எதிர்பார்த்த ஒன்றிரண்டு காரியங்கள் கடைசி நேரத்தில் முடியும். அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எரிந்து விழுவீர்கள். இயலாமையும் வெறுப்பும் மனதை பாதிக்கும். ஆனாலும் எதிர்பார்க்கின்ற பண உதவி கடைசிநேரத்தில் கிடைத்து மனதை சமாதானப்படுத்தும். கடன் வாங்க வேண்டிய நிர்பந்தங்கள் உண்டாகும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
உத்தியோகம் - விரும்பாத இடமாற்றம் ஏற்படும். வேறு வேலைக்கு செல்லலாமா என்கின்ற எண்ணம் தோன்றும். அலுவலகத்தில் சக நண்பர்கள் கூட உதவ முடியாத சூழ்நிலைகள் உருவாகும். செய்த வேலையை திரும்பத் திரும்ப செய்ய வேண்டியது வரும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு உறுதியாக வேலை கிடைக்கும். அரசுப் பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு உண்டாகும்.
தொழில் - தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதமாக கிடைக்கும். ஒரு பெரிய கடனுதவி எதிர்பார்த்து காத்திருப்பீர்கள், அது தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் தொழில் வளர்ச்சிக்காக சொத்துக்களை அடமானம் வைக்கும் சூழ்நிலை உருவாகும். கடன் நெருக்கடி சற்று அதிகமாகவே இருக்கும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத் துறை தொழிலில் இருப்பவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து அதன் பிறகு முடிவெடுங்கள், தேவையற்ற நட்டத்தை நீங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. குடும்பத்தினரோடு ஆன்மிகப் பயணம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். பண வரவு திருப்தியாக இருக்கும்.
மாணவர்களுக்கு -கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது தேர்வுகள் ஏதும் இருந்தால் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி முயற்சிகள் வெற்றியாகும்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சில ஒப்பந்தங்கள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு.


பொதுப்பலன் - தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிதாக கடன் எதுவும் வாங்காதீர்கள். இப்போது வாங்கப்படும் கடனை திரும்ப அடைக்க கடும் சிரமம் ஏற்படும். ஏற்கனவே இருக்கும் கடன்கள் நெருக்கடி தந்தாலும் ஓரளவுக்கு சமாளித்து வருவீர்கள். ஆரோக்கியத்தில் சில உபாதைகள் ஏற்படும். வங்கியில் கடன் உதவி எதிர்பார்த்திருந்தால் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியைத் தரும். வெளிநாட்டு வேலைக்கான விசா கிடைக்கும். சரியாக திட்டமிட்டால் இந்தவாரம் எளிதாக பிரச்சினை இல்லாமல் கடக்க முடியும்.
இந்த வாரம் -
பயணங்களால் லாபம் ஏற்படும். நண்பர்கள் உதவி செய்வார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.
செவ்வாய் -செலவுகள் இருந்தாலும் வரவுகள் அதிகமாக இருக்கும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.
புதன் - சிந்தனை அதிகமாகும். மனதில் தேவையற்ற அச்ச உணர்வு ஏற்படும். குழப்பமான மனநிலை இருக்கும்.
வியாழன் -இன்று எந்த முயற்சி எடுத்தாலும் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.பணம் தாராளமாக வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
வெள்ளி - பயணங்களில் கவனம் வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும்.
சனி- உடல் நல பிரச்சினை தீரும். கடன்கள் அடைபட வழி கிடைக்கும். பண ஆதாயம் உண்டு.
ஞாயிறு - இன்று மேற்கொள்ளும் எந்த வேலையும் மற்றவர்களுக்குத்தான் ஆதாயம் கிடைக்கும் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
வணங்க வேண்டிய தெய்வம் - முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர் மற்றும் மரிக்கொழுந்து மாலை சூட்டி வணங்குங்கள் பிரச்சினைகள் தீரும். மனக் கவலைகள் அகலும்.

********************************************************************************************


ரோகிணி -
இந்த வாரம் சுபச்செலவுகள் அதிகமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகளும் உண்டு. மனதில் தேவையற்ற பயம் இருக்கும். முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிதாக கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.
உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். நிர்வாக தரப்பில் இருந்து வேலையை விட்டு விலகச் சொல்லி அழுத்தம் தருவார்கள். வேறு வேலைக்கு இப்போதே முயற்சி செய்வது நல்லது. சுய ஜாதகத்தில் இருக்கும் சனியை கோச்சார குரு 5, 7, 9 இதில் ஏதாவது ஒரு பார்வை சனிக்கு இருந்தால், வேலையைப் பற்றிய பயம் தேவையில்லை. ஆனால் பணிச் சுமைகளும், அழுத்தங்களும், பணி தொடர்பான அலைச்சல்களும் உண்டாகும். உயரதிகாரிகளின் எரிச்சலுக்கு ஆளாவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தொழில் - தொழிலில் சராசரி வளர்ச்சி உண்டு. பெரிய ஆதாயங்கள் ஏதுமில்லை. ஏற்றுமதி இறக்குமதி தொழில் மந்தமாக இருக்கும். தொழில் நிர்வாகத்திற்காக ஒரு சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வங்கிக்கடன் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். வழக்குகள் மனச்சுமையை உண்டாக்கும். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் கவனமாக முதலீடுகளை செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலீடுகள் முடங்கிப் போகலாம் அல்லது நஷ்டம் அடையலாம். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில் சுமாராகவே இருக்கிறது.
பெண்களுக்கு - ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். தேவையற்ற பொருட்களை வாங்குவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணியிட மாற்றம் ஏற்படும், அல்லது வேறு நிறுவனத்திற்கு வேலைதேடும் சூழ்நிலை உருவாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் கவனம் சிதறும். ஆடம்பர நாட்டங்கள் ஏற்படும். நண்பர்களோடு சுற்றுலா செல்ல முற்படுவீர்கள். கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள்.
கலைஞர்களுக்கு - இன்னும் சில வாரங்கள் காத்திருந்தால் ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் தானாக கிடைக்கும். பொறுமை அவசியம். நிதானத்தை இழக்க வேண்டாம்.
பொதுப்பலன் -ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். என்ன நோய் என இனம் கண்டுபிடிக்க முடியாமல் அவஸ்தை நேரிடும். உணவு கட்டுப்பாடு அவசியம். பெரிய லாபம் கிடைக்கும் என்று புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
இந்த வாரம் -
திங்கள் -அவசரப்பட்டு எந்த வேலைகளையும் செய்ய வேண்டாம், அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும். நிதானம் தேவை.
செவ்வாய் - வேலை சம்பந்தமாக உதவிகள் கிடைக்கும். வேலை மாற்ற முயற்சிகள் வெற்றி கிடைக்கும்.
புதன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். நண்பர்கள் அதிக அளவில் உதவுவார்கள். பணவரவு உண்டு.
வியாழன் - முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். குழப்ப நிலை உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும். பணத்தேவைகள் கடைசி நிமிடத்தில் பூர்த்தியாகும்.
வெள்ளி - கடந்த ஐந்து நாட்களாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். யாரிடம் பேசும்போதும் கவனமாகப் பேச வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது. காசோலைகள் தரக்கூடாது.
ஞாயிறு - ஆரோக்கியம் சீராகும். வியாபாரப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பணவரவு மனதிற்கு ஆறுதலைத் தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீரங்கநாதரை பலவித மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். பணவரவில் இருக்கும் தடைகள் அகலும். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

*******************************************************************************************************

மிருகசீரிடம் -
குடும்பச் சூழ்நிலைகளையும், கடன்களையும் நினைத்து மனதில் பெரிய பாரம் உருவாகும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலையில் நிம்மதி இருக்காது, எந்த நேரம் வேலை பறி போகுமோ? என்ற கவலை வாட்டும். வழக்குகள் நெருக்கடியை உண்டாக்கும். தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். ஒரே ஆறுதல் என்னவென்றால்... ஒரு பெரிய கடன் கிடைத்து சிறு கடன்களை எல்லாம் அடைக்க வாய்ப்பு உண்டாகும்.
உத்தியோகம் - வேலையில் மனதை செலுத்த முடியாது. செய்கின்ற வேலையில் குளறுபடிகள் ஏற்படும். தவறுகள் செய்வீர்கள். உயரதிகாரிகள் வருத்தப்படுவார்கள். ஒருசிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள். வேறு வேலை மாறும் சிந்தனை அதிகமாகும். வெளிநாடு சென்று பணி புரிய நல்ல வாய்ப்பு உண்டு. அந்த முயற்சியை எடுத்தால் நீங்கள் வெளிநாடு செல்லலாம்.
தொழில் - தொழிலில் சராசரி வளர்ச்சி உண்டு. பெரிய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ள வேண்டாம். வழக்குகளை கவனமாகக் கையாளுங்கள், முடிந்தவரை தள்ளிப்போடுங்கள். புதிய நபர்களை நம்பி தொழில் வளர்ச்சிக்காக கடன் பெறும் முயற்சியை கை விடுங்கள், நீங்கள் ஏமாற்றப்படலாம். தொழில் செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் உருவாகும். அதை சாமர்த்தியமாகக் கையாளவேண்டும். தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள உள்ளவர்களோடு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும். எனவே கவனமாக இருங்கள். சின்ன பிரச்சினையாக இருக்கும் பொழுதே சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள். தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். அகலக் கால் வைக்காதீர்கள்.
பெண்களுக்கு - உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வாழ்வதைப் போல் நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். அதுபோன்ற எண்ணங்களைத் தவிர்த்துவிடுங்கள். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாது. சேமிப்புகள் கரையும்.


மாணவர்களுக்கு - கல்வியில் சற்று மந்தநிலை ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். படிப்பைத் தவிர மற்ற ஆடம்பர நாட்டங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு - ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல ஒப்பந்தங்கள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. பணவரவு தேவைக்குத் தகுந்தாற்போல் கிடைக்கும்.
பொதுப்பலன் -கவலைகளை எண்ணிக்கொண்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு நிச்சயமாக உண்டு என்பதை நம்புங்கள். ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு பணத் தேவைகள் பூர்த்தி ஆகி கொண்டே இருக்கும். எனவே கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உத்தியோக ரீதியாக வெளிநாடு செல்லும் முயற்சி முழு வெற்றியை தரும். அந்த முயற்சியை எடுங்கள்.
இந்த வாரம் -
திங்கள் - எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். பணவரவுகள் இருக்கும். ஆரோக்கியம் சீராகும். தொல்லை தந்து கொண்டிருந்த சிறுசிறு கடன்களை அடைக்க வழி கிடைக்கும்.
செவ்வாய் -அமைதியாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணலாம். எதையும் கவனமாகக் கையாளுங்கள்.
புதன் - உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். கையிருப்பு அதிகமாகும்.
வியாழன் -அதிக நன்மைகள் நடக்கும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.
வெள்ளி - பயணங்களும், பயணங்களால் அலைச்சல்களும் அதிகமாகும். தேவையற்ற செலவு ஒன்று ஏற்படும். மனதில் குழப்பம் இருக்கும்.
சனி- எதிர்பார்த்த பண உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். குடும்ப பிரச்சினை ஒன்று நல்ல முடிவுக்கு வரும்.
ஞாயிறு - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களோடு ஊர் சுற்ற வேண்டாம். நண்பர்களே பகைவராக மாற நீங்களே காரணம் ஆவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - நேரம் இருந்தால் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யுங்கள். இல்லாவிட்டால் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்,
பிரச்சினைகள் தீரும், மனம் அமைதியாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x