Published : 28 Oct 2019 03:27 PM
Last Updated : 28 Oct 2019 03:27 PM

இந்த வாரம் இப்படித்தான்!  நட்சத்திர பலன்கள் :  (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை)    திருவோணம் முதல் ரேவதி வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவோணம் -
இதுவரை எடுத்த முயற்சிகள் அனைத்திலும் சாதகமான பலன்களைக் கண்டிருப்பீர்கள். இன்று குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார். எனவே இந்த வாரம் நற்பலன்கள் நடப்பதில் எதுவும் குறையாது. இன்னும் சொல்லப்போனால் இப்போது சொந்த வீடு வாங்கும் திட்டங்கள், திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்தல். குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மொட்டை போடுதல், காதணி விழா, உபநயனம் செய்வித்தல் போன்ற சுப விசேஷ முயற்சிகளில் இறங்குவீர்கள்.
ஆம். இப்போது சுபவிரயங்களுக்கான நேரம் தொடங்கி விட்டது. பணவரவில் தடை இருக்காது ஷேத்ராடனம் என்னும் ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும். தர்ம சிந்தனை மேலோங்கும்.


உத்தியோகம் - வேலையில் எந்த பிரச்சினையும் இருக்காது. விரும்பிய இடமாற்றம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களுக்கு உதவுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகப் பணிக்காக அயல் நாடு செல்வீர்கள். அயல் நாட்டில் வேலைக்காக விண்ணபித்திருந்தவர்கள் இப்போது சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம்.


வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரக் கடைகளில் வேலை செய்பவர்கள், பராமரிப்புப் பணிகள் செய்பவர்கள் என அனைவருக்கும் இப்போது நல்ல வாய்ப்புகளும் அதிக வருமானமும் பெறுவார்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும், நேர்முகத்தேர்வில் தேர்ச்சி அடைவீர்கள், பணி ஆணை கிடைக்கும்.


தொழில் - தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்கள் தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கிளை நிறுவனங்கள் தொடங்குவீர்கள். உங்கள் தொழிலோடு இணைந்த ஒரு புதிய தொழிலை செய்யும் சிந்தனை வரும். அதை செயல்படுத்த முயற்சிகள் ஆரம்பிக்கும்.


புதிய தொழில்நுட்பங்களை தொழிலில் புகுத்துவீர்கள். புதிய தொழில் முனைவோர் சரியான ஆதரவு கிடைத்து தொழிலை ஆரம்பிப்பீர்கள். பெரு வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவருக்கும் வளர்ச்சியை உண்டாக்கும். ஆடை உற்பத்தியாளர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். அரசின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.


பெண்களுக்கு - சொத்துச் சேர்க்கை உண்டு. உங்கள் பெயரில் இப்பொழுது ஒரு சொத்து வாங்கப்படும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலையில்லாத பெண்கள் இப்போது நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. நினைத்ததை முடிப்பீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டு கல்விக்கு முயற்சி செய்யலாம் .


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் வந்து குவியும் . அயல்நாடுகளில் கலைச் சேவை செய்ய வாய்ப்புகள் வரும். அரசு கவுரவம் கிடைக்கும். அரசின் நலத்திட்டங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.


பொதுப் பலன் - நல்ல வளர்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஒரு சில காரியங்கள் நன்மையில் முடிந்தாலும் ஆதாயம் பிறருக்கு பங்கிட்டு தர வேண்டியது வரும். சொந்த வீடு கனவுகள் நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.


வாரிசு இல்லாத உறவினரின் சொத்து கிடைக்கப் பெறலாம். குலதெய்வ வழிபாடும், ஆன்மிக பயணங்களும் ஏற்படும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனைகள் ஏதும் இருக்காது. இந்த வாரம் செவ்வாய், வியாழன் சனி, ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். திங்கள் புதன் வெள்ளி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மைகள் பெருகும்.

******************************************************************************************

அவிட்டம் -


குருவின் அருளால் தடைகள் அகன்று முன்னேற்றம் ஏற்படும்.


இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். ஆதாயங்கள் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். கடன்கள் அடையும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும்.


உத்தியோகம் - வேலையில் பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது. சுமுகமாக இருக்கும். அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலக விஷயமாக வெளியூர் சென்று வருவீர்கள். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும்.


அரசு ஊழியர்கள் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். உயரதிகாரிகளிடம் இருந்த மோதல் போக்கு மாறும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். விற்பனைப் பிரதிநிதிகள் மிக எளிதாக தங்கள் இலக்குகளை எட்டி விடுவார்கள். பராமரிப்பு சேவை செய்பவர்கள் மராமத்து பணி செய்பவர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். நண்பர் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவீர்கள்.


தொழில் -தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். தொழில் சூடுபிடிக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும். அரசு வழியிலிருந்த பிரச்சினைகள் சுமூகமாக தீரும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முற்படுவீர்கள். புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள் இப்போது தொடங்கலாம், அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது. பங்கு வர்த்தகத் துறையில் லாபம் உண்டாகும். வணிக கடைகள் நடத்துபவர்கள் கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய டீலர்ஷிப் கிடைக்கப்பெறுவீர்கள். மொத்த வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள்.


பெண்களுக்கு - இதுவரை மனதில் இருந்து வந்த வேண்டாத கற்பனைகள் இனி வராது. ஏதோ ஒரு பயம் இருந்துகொண்டே இருந்திருக்கும். இனி அந்த பயம் நீங்கும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களோடுசேர்ந்து தொழில் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க முயல்வீர்கள். சேமிப்பு உயரும் .


மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் ஒன்று. அடுத்து வர இருக்கும் உயர் கல்விக்காக இப்போது உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள்.


கலைஞர்களுக்கு - நீண்டநாள் இழுபறியாக இருந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து ஒப்பந்தம் உண்டாகும். நீண்ட நாளாக வராத பணம் இப்போது கிடைக்கும். நண்பர்களால் உதவிகளும், ஆதாயமும் பெறுவீர்கள்.


பொதுபலன் - பதவி உயர்வில் இருந்த தடைகள் அகலும். தேவையற்ற இடமாற்றம் ரத்து செய்யப்படும். ஆன்மிகப் பயணங்கள் உண்டாகும்.குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். அலைச்சல்கள் குறையும். ஒரு சிலர் சொந்த வீடு வாங்குவதற்காக கடன் பெறுவீர்கள்.


இந்த வாரம் திங்கள், புதன் வெள்ளி ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் நடக்கும். தனவரவு திருப்தி தரும்.
செவ்வாய் வியாழன் சனி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீகருமாரி அம்மனுக்கு சிவப்புநிற புடவை சாத்தி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். முயற்சிகள் வெற்றியாகும்.

*********************************************************************************************************

சதயம் -


குருவின் அருளால் நன்மைகள் பெருகப் போகிறது. இனி தடைகள் வராது. தாமதங்கள் ஏற்படாது. வருமானம் குறை இருக்காது. சேமிப்பு அதிகமாகும். கடன்கள் தீரும். அலைச்சல்கள் இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். வருத்தங்கள் மறையும். குடும்பத் தேவைகளை இப்போது பூர்த்தி செய்வீர்கள்.


நெருக்கடி தந்த கடன் இப்போது சிறிதுசிறிதாக அடைக்க முயற்சி செய்வீர்கள். அந்த முயற்சி வெற்றி பெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு இப்பொழுது ஆண் வாரிசு உருவாகும்.


உத்தியோகம் - வேலையில் இருந்த நெருக்கடிகள் தீரும். பதவி உயர்வில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து பதவி உயர்வு கிடைக்கும். விரும்பாத இடம் மாற்றத்தில் இருப்பவர்கள் இப்போது விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள்.


இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். கல்வித் தகுதிக்கு குறைவான வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கு தடையாக இருந்த பிரச்சினைகள் விலகும். பாஸ்போர்ட் குளறுபடிகள் தீர்க்கப்படும். சிறு நிறுவனங்களில் பணியாற்றுவோர் வேறு நல்ல நிறுவனத்திற்கு மாறுவார்கள். சேவை சார்ந்த வேலை செய்வோர் இப்பொழுது நெருக்கடிகளில் இருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வார்கள். ஒருசிலர் உத்தியோகத்தை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஒருசிலர் வேலையை விட்டுவிட்டு ஆலோசகர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள்.


தொழில் -தொழிலில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும். நெருக்கடிகள் குறையும். கடன்கள் தீர வழி கிடைக்கும். புதிதாக வங்கிக் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள். புதிதாக தொழில் தொடங்க இருந்த தடைகள் எல்லாம் விலகி தொழிலை ஆரம்பிப்பீர்கள். வசதி படைத்த ஒருவர் கூட்டாளியாக சேர முன்வருவார்.


விவசாயம் தொடர்பான தொழில் செய்பவர்கள் வளர்ச்சி பெறுவார்கள். ரசாயனம் தொடர்பான தொழில் விரிவடையும். வியாபாரிகள் தேக்க நிலையிலிருந்து வளர்ச்சிப்பாதைக்கு மாறுவார்கள். கமிஷன் ஏஜெண்டுகள் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவார்கள்.


பெண்களுக்கு - குழப்ப நிலைகள் மாறும். குடும்பத்தில் அமைதி நிலவும். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சொந்த வீடு கனவு நனவாகும். வியாபாரம் செய்யும் பெண்கள் இப்போது வியாபாரத்தில் வளர்ச்சி காண்பார்கள். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த தடைகள் விலகும். கல்வியில் ஆர்வம் ஏற்படும். பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயில ஆரம்பிப்பீர்கள்.
கலைஞர்களுக்கு - கவலைகள் தீரும். ஒப்பந்தங்கள் ஏற்படும். நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு ஒப்பந்தம் ஒன்று நிறைவேறும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கி பணவரவு தாராளமாகும்.


பொதுபலன் - குழப்ப நிலையில் இருந்து வெளியே வருவீர்கள். தெளிவான சிந்தனை உண்டாகும். முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். அக்கம்பக்கத்தினர் பகை மறையும். ஆரோக்கிய குறைபாடுகள் சரியாகும். இனி மருத்துவச் செலவுகள் இருக்காது. பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினை பொது மனிதர் ஒருவரால் தீர்க்கப்படும். கடன்கள் தீர வழி கிடைக்கும். ஒருசிலர் சொத்துக்களை அடமானம் வைத்து தனிநபர் கடன்களை அடைப்பார்கள்.


இந்த வாரம் திங்கள் செவ்வாய் வியாழன் சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் தரும். முயற்சிகள் வெற்றியாகும்.
புதன் வெள்ளி ஞாயிறு சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - முருகப்பெருமானுக்கு சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள் நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

*****************************************************************************************

பூரட்டாதி -


குருவின் அருளால் தடைகள் நீங்கும். பதவியில் ஏற்பட்ட பின்னடைவுகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். குலதெய்வ நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள்.


தவறான முடிவுகளை எடுத்து சிரமப்பட்டு வந்தீர்கள், அந்த முடிவுகள் இப்பொழுது சரியாகும். நண்பர்களுக்கு உதவி செய்து சிக்கலில் மாட்டியவர்கள் இப்பொழுது அந்த சிக்கலில் இருந்து விடுபடுவார்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


உத்தியோகம் - ஒருசிலருக்கு பதவி இறக்கம் ஏற்பட்டிருக்கும். அல்லது வேலையிலிருந்து நீக்கப் பட்டிருப்பீர்கள், அல்லது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் இப்பொழுது பிரச்சினைகள் தீர்ந்து மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் உண்டாகும். இதுவரை நடந்த நேர்முகத் தேர்வுகளில் தோற்றவர்கள் இந்த முறை நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்வீர்கள்.


அலுவலகத்தில் சக நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடியவர்கள் இப்பொழுது அந்தக் கடனை முழுவதுமாக அடைப்பீர்கள். வெளிநாட்டிற்குசென்று வேலைசெய்யும் வாய்ப்புகளை ஒருசிலர் பெறுவார்கள். அலைச்சல் மிக்க பணியில் இருப்பவர்கள் இப்பொழுது அலைச்சல் குறைந்து தங்களுடைய இலக்கை எட்டுவார்கள்.


தொழில் - தொழிலில் இருந்த நெருக்கடிகள் தீரும். அரசின் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் இப்பொழுது அந்த பிரச்சினையை எளிதாக முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசின் சிறப்பு அனுமதி ஒருசிலருக்கு கிடைக்கும்.
தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் உடையவர்கள் இப்பொழுது அந்த முயற்சியில் ஈடுபடலாம். புதிதாக தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். மொத்த வியாபாரிகள் தேக்க நிலை மாறி வளர்ச்சிக்கு வழி கிடைக்கும். சிறு வியாபாரிகள் தங்கள் இடத்தை மாற்றியமைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.


பெண்களுக்கு - குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். அந்த சுபநிகழ்ச்சிகளில் உங்களுக்கு சாதகமான நற்பலன்கள் நடக்கும். தூரத்து உறவினர் ஒருவர் உங்களுக்கு உதவுவார்.


மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த தடுமாற்றம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய மொழிப் பாடத்தை தேர்வு செய்து பயில ஆரம்பிப்பீர்கள்.


கலைஞர்களுக்கு - நீண்டநாள் பேசிவந்த பேச்சு வார்த்தை இப்பொழுது முடிவுக்கு வந்து ஒப்பந்தமாக மாறும். பணவரவில் இருந்த தடைகள் அகலும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.


பொதுப்பலன் - பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி உண்டாகும். குழப்பங்கள் தீரும். தெளிவான முடிவுகளை இப்போது எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். இறை நம்பிக்கை அதிகமாகும்.


குரு போன்ற வழிகாட்டி ஒருவரை அடையாளம் காண்பீர்கள். அவரால் மனத்தெளிவு உண்டாகும். நீண்ட நாள் கனவு இப்பொழுது நிறைவேறும். அது சொந்த வீடு வாங்குவதாக இருக்கலாம் அல்லது திருமண முயற்சிகளாக இருக்கலாம்.


இந்த வாரமே அதற்கான அறிகுறிகள் தென்படும். இந்த வாரம் திங்கள் செவ்வாய் வியாழன் சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும். புதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீதுர்கைஅம்மனுக்கு செவ்வரளி மலர் சூட்டி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஸ்ரீ துர்கா அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும், மனதில் நம்பிக்கை பிறக்கும்.

************************************************************************************************************


உத்திரட்டாதி -


எந்த முடிவுகளையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுங்கள். குருப் பெயர்ச்சி நன்மைகளை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது. வேலையை அவசரப்பட்டு விடக்கூடாது. அழுத்தங்கள் இருந்தாலும் போராடி வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் எனவே விட்டுக்கொடுத்துச் செல்வது இருவருக்கும் நல்லது. கணவன் மனைவி வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர் சென்று வேலை பார்க்க நேரிடும். நண்பர்களால் தொல்லைகள் உண்டாகும்.


உத்தியோகம் - பணியிடத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கும். வேலையை விட்டுவிடலாமா என்கிற எண்ணம் தோன்றும், அல்லது நிறுவனமே உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். வேறு நிறுவனங்களுக்கு இப்போது விண்ணப்பிப்பது நல்லது. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யுங்கள் அந்த வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். ஒருசிலருக்கு பதவி இறக்கம் ஏற்படும் அதிலும் அரசு ஊழியராக இருந்தால் பதவி மாற்றம் பணியிடை நீக்கம் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். வியாபார கடைகளில் பணிபுரிபவர்கள் பொருட்களை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும்.


தொழில் - தொழிலில் இருந்த மந்த நிலைகள் மாறும். தேக்க நிலையிலிருந்து விடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி இப்போதைக்கு வேண்டாம். இன்னும் சில மாதங்கள் காத்திருந்தால் தானாக வழி கிடைக்கும். தொழில் சார்ந்த இயந்திரங்களை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் செலவுகள் அதிகமாகும். டிராவல்ஸ் டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் செய்பவர்கள் வாகனப் பழுதுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும். மொத்த வியாபாரிகள் தங்கள் இருப்புக்களை சரியாக பராமரிக்க வேண்டும். சிறு வியாபாரிகள் நாணயத்தை தவற விடக்கூடாது. இல்லை என்றால் உங்கள் மீதான நம்பிக்கை குறைந்து போகும். கட்டுமானத் தொழில் சீராக இருக்கும். லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகப்படுத்த வேண்டியது வரும்.


பெண்களுக்கு - சமூகவலைதள பயன்பாடுகளை குறைத்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால் அதன் மூலமாகவே அவப்பெயர் ஏற்படும். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஒருசில பெண்களுக்கு சொத்துக்களை அடமானம் வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் வளர்ச்சி உண்டு. அதேசமயம் ஆடம்பர நாட்டங்களிலும் ஆர்வம் ஏற்படும். எனவே மனதை ஒருநிலை படுத்துங்கள்.


கலைஞர்களுக்கு - கிடைக்கின்ற வாய்ப்புகளை கவனமாக ஏற்றுக்கொள்ளுங்கள். ஒப்பந்தங்கள் போடும்பொழுது சரியாக படித்து அதன்பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள். பணவரவில் தடையிருக்காது. சேமிப்புகள் குறையும்.


பொதுபலன் - நன்மைகளும் பாதகங்களும் மாறி மாறி வரும். மனம் தளராமல் எல்லாவற்றையும் பக்குவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தெய்வ நம்பிக்கையே உங்களைக் காப்பாற்றும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம். தொலைதூரப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் முழு வெற்றி பெறும். சபலங்களுக்கு ஆளாக கூடாது, சபலத்தால் அவப்பெயர் ஏற்படும்.


இந்த வாரம் செவ்வாய் புதன் வியாழன் சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
திங்கள் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - காலபைரவருக்கு செவ்வரளி மாலை சூட்டி மிளகு சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். தடைகள் அகலும். பிரச்சினைகள் குறையும். மன தைரியம் அதிகமாகும்.

**************************************************************************************************

ரேவதி -


எந்தச் செயலையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெற முன்னோர்ள் வழிபாடு தேவை. அவர்களின் ஆசி இருந்தால் வெற்றி சுலபமாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.


நீண்ட நாட்களாக வராத பணம் இப்போது கைக்கு வந்து சேரும். அதை வங்கியில் டெபாசிட் செய்வது நல்லது, கையில் வைத்திருந்தால் வீண் செலவுகளால் காணாமல் போகும், அல்லது வீடு-மனை போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். வழக்குகள் ஏதும் இருந்தால் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. அரசு நிர்வாகத்துடன் மோதல் போக்கை மேற்கொள்ளக் கூடாது.


உத்தியோகம் - வேலையில் பணிச் சுமை அதிகமாகும். அடுத்தவர் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிலை வரும். வேலையில் கவனம் இருக்காது. மனம் எங்கெங்கோ அலைபாயும் எனவே மனதை கட்டுப்படுத்துங்கள். தேவையற்ற அல்லது அர்த்தமற்ற சிந்தனைகளை மேற்கொள்ளாதீர்கள். ஒரு சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்படும். ஒருசிலர் உயரதிகாரிகளின் கேள்விக்கு ஆளாக நேரிடும். கட்டிடத் தொழிலாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள். ஓட்டுநர் உத்தியோகம் பார்ப்பவர்கள் அலைச்சல் அதிகரிக்கும், அதேசமயம் பணவரவு திருப்தி தரும்.


விற்பனை பிரதிநிதி வேலை செய்பவர்கள் அலைச்சல் அதிகரிக்கும். இலக்குகளை எட்ட கடினமாக இருக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் குறித்த நேரத்தில் முடித்து கொடுக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.


தொழில் - தொழிலில் வளர்ச்சி ஏற்படும். அதேசமயம் ஒரு சில பின்னடைவுகளும் ஏற்படும். உதவி செய்வதாக வாக்களித்த ஒருவர் உதவி செய்ய முடியாமல் போகலாம். எதிர்பார்த்த வங்கிக் கடன் தள்ளிப்போகும். பராமரிப்பு செலவுக்காக ஒரு பெரும் தொகை ஒதுக்க வேண்டியது வரும். ஊழியர்களின் அலட்சியத்தால் சில பாதிப்புகள் உருவாகும். ஹோட்டல் தொழில் செய்பவர்கள் தங்கள் உணவு வகைகளை தரமாக தயாரிக்க வேண்டும். தவறினால் அரசின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி வரும். ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளில் குறைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எனவே அதிக கவனம் செலுத்த வேண்டும். தரகு தொழில் செய்பவர்கள் மேற்கொள்ளும் வியாபாரங்கள் தள்ளிப்போகும்.


பெண்களுக்கு - திருமண முயற்சிகள் கைகூடும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சொத்துச் சேர்க்கை உண்டு. சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருங்கள். புதிய நபர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள் மற்றவர்களின் விமரிசனத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


மாணவர்களுக்கு - கல்வியை தவிர மற்ற அனைத்து ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கல்வி பற்றிய சிந்தனை சிறிதும் இருக்காது. எனவே மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துங்கள்.


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறும். அரசு வழி ஆதாயம் கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி மையங்கள் ஆரம்பிக்க முற்படுவீர்கள்.


பொதுபலன் - அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது. பயணங்களால் ஓரளவு லாபம் உண்டு. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். தெய்வ நம்பிக்கை அதிகமாகும். பெரிய பெரிய கற்பனைகள் உருவாகும். ஆசைகள் அதிகரிக்கும். சபல எண்ணங்கள் தோன்றும். வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். நண்பர்களுக்கு உதவுவதில் எச்சரிக்கையோடு இருங்கள்.


இந்த வாரம் - செவ்வாய் புதன் வெள்ளி ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நன்மைகள் தரும். திங்கள் வியாழன் சனி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - சித்தர்கள் ஜீவசமாதி ஆகியுள்ள ஆலயங்களுக்குச் சென்று வாருங்கள். ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். மனம் தெளிவாகும். தேவையற்ற சிந்தனைகள் வராது. நன்மைகள் நடக்கும்.

*************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x