Published : 28 Oct 2019 02:42 PM
Last Updated : 28 Oct 2019 02:42 PM

இந்த வாரம் இப்படித்தான்! நட்சத்திரப் பலன்கள் :  (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை)   விசாகம் முதல் உத்திராடம் வரை

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம் -

நல்ல பலன்கள் தொடர்ந்து நடைபெற குருபகவான் துணையாக இருப்பார். தாமதப்பட்ட முயற்சிகள் இனி தடையில்லாமல் முடிவடையும். சகோதரர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் சண்டை சச்சரவுகள் சமாதானமாகும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். வாடகை வீடே சொந்த வீடாக மாறும். திருமணமுயற்சிகள் தாமதம் இல்லாமல் உறுதியாகும் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சேமிப்பு கரையும். மாமனார் வீட்டு வழியில் அசையா சொத்து கிடைக்கும்.


உத்தியோகம் - பிரச்சினைகள் ஏதும் இல்லை. அலுவலகத்தில் சகஜ நிலையே இருக்கும். பதவி உயர்வு அல்லது பதவி மாற்றம் ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு பணி இடமாற்றம் வேலையில் கூடுதல் அழுத்தங்கள் உண்டாகும். பராமரிப்புப் பணியாளர்களுக்கு தொடர் வேலைகளும் அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும்.விற்பனைப் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அலைச்சல் ஏற்படும் அதே சமயம்இலக்குகளை எளிதாக எட்டுவார்கள். வியாபாரக் கடைகளில் பணிபுரிவோர் அலுவலகப் பணிக்கு மாற முயற்சி செய்வார்கள். வீடு பராமரிப்புப் பணிகளைச் செய்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்கப்பெறுவார்கள்.

தொழில் - தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும். உறவினர் ஒருவர் தொழிலில் பங்குதாரராக சேர முன்வருவார்.வேற்று மொழி இனம் சார்ந்தவர் ஒருவர் தொழிலுக்கு உதவியாக வந்து சேர்வார். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சி உடையவர்கள் வெற்றி காண்பார்கள்.


சிறு வியாபாரிகள், தேநீர்க் கடை வைத்திருப்பவர்கள் வியாபாரம் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் ஆலோசித்து முதலீடு செய்ய வேண்டும். பயிற்சி வகுப்புகள் நடத்திக்கொண்டிருப்பவர்கள் மாணவர்கள் சேர்க்கை திருப்தியாக இருக்கும். தரகு தொழில் செய்பவர்கள் வட்டித் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.


பெண்களுக்கு - எதிர்பார்த்த ஒரு சுபவிஷயம் இனிதே நடந்தேறும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிப்பு தொடங்குவீர்கள். ஒரு சிலருக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு வந்து சேரும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலை தேடுவோர் இப்போது பணி ஆணை பெறுவார்கள்.
மாணவர்கள் - இப்போது தேர்வுகள் ஏதும் இருந்தால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஏற்கனவே எழுதி முடிக்காமல் இருந்த தேர்வுகளையும் இப்போது முடித்துக் காட்டுவீர்கள்.


கலைஞர்களுக்கு - நல்ல ஒப்பந்தங்கள் கிடைத்து வருமானம் பெருகும். அசையாச் சொத்து வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. அயல்நாட்டுப் பயணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்.


பொதுப்பலன் - எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பயணங்களால் லாபமும் உண்டாகும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது. தந்தையின் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும். ஒருசிலருக்கு தந்தையின் உடல் நலத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.


உங்கள் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது. சிறுசிறு தொந்தரவுகள் வரும். வந்த வேகத்திலேயே மறைந்து போகும். இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி இந்த நான்கு நாட்களும் சாதகமான நாட்கள். நல்ல பலன்களை உண்டுபண்ணும். வியாழன், சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - காவல் தெய்வங்களான முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற தெய்வங்களை வணங்கி வாருங்கள். தடைகள் அகலும். பிரச்சினைகள் தீரும். தன்னம்பிக்கை பிறக்கும்.
******************************************************************
அனுஷம் -


இதுவரை இருந்த பிரச்சினைகளில் ஏறக்குறைய 90 சதவீதம் இனி சரியாகும். குருவின் பெயர்ச்சியால் இனிமேல் மன அழுத்தங்கள் இருக்காது. மனநிலையில் இருந்த தேவையற்ற அச்சம் இருக்காது. மனம் தெளிவடையும். அசாத்திய தைரியம் பிறக்கும். எந்த பிரச்சினைகளையும் அனாயசமாகக் கையாளுவீர்கள்.


விலகிச் சென்ற சொந்தங்கள் நண்பர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் நீங்கும். சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் சிக்கி வழக்குகள் நடந்து கொண்டிருந்தால் இனி அது கைவிடப்படும். அல்லது நீங்கள் அந்த வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவிற்கு தடை இருக்காது.


உத்தியோகம் - ஒரு சிலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பீர்கள் அந்த பிரச்சினை இப்போது எளிதாகத் தீர்வு கிடைத்து உங்கள் வேலை மீண்டும் கிடைக்கும். இதுவரை இருந்த பணிச் சுமைகள் நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். சக ஊழியர்களின் பகைக்கு ஆளாகி இருப்பீர்கள். இனி பகை மறந்து நட்பு துளிர்க்கும். கல்வித்தகுதி முதல் எல்லா தகுதிகளும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் தங்கள் மீது இருந்த களங்கத்தைத் துடைத்து நல்ல பெயர் எடுப்பார்கள். வரவேண்டிய நிலுவைத் தொகை இப்போது கிடைக்கும். இடமாற்றம் ரத்து செய்யப்படும். அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும்.


தொழில் - தொழிலில் சராசரி நிலை நீடிக்கும். வர வேண்டிய தொகைகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் வருமானம் பெருகும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். கூட்டாளிகள் இடையே .இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலுக்காக வெளிநாடு சென்று வருவீர்கள். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் ஏற்படும். ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். நல்ல வாய்ப்புகள், உதவிகள் கிடைக்கும். கடை வைப்பதற்காக இடம் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல இடம் அமையும்.


பெண்களுக்கு - மனம் மகிழும் சம்பவங்கள் குடும்பத்தில் நடக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடியவர்கள் இனி பணவரவில் தடை இருக்காது. ஒரு சிலர் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுவீர்கள்.


மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த மந்த நிலை மாறும். கல்வியில் ஆர்வம் ஏற்படும்.. தோற்றுப் போன தேர்வுகளை எழுதி முடிப்பீர்கள்.


கலைஞர்களுக்கு - வந்த வாய்புகள் எல்லாம் கடைசி விநாடியில் கை நழுவி போய்க் கொண்டிருந்த நிலை மாறி ஒப்பந்தம் போடப்படும் நிலைக்கு இப்போது வரும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும்.நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.


பொதுப் பலன் - ஒரு சிலர் வாழ்வதே வீணோ என விரக்தியில் இருந்திருப்பீர்கள். இனி வாழ்ந்து காட்டுவோம் என்ற மன தைரியம் உண்டாகும். எல்லா வழியிலும் தடைப்பட்டிருந்த பணவரவுகள் இனி ஒவ்வொன்றாக தடைகள் நீங்கி பணம் வரும் வழி அறிவீர்கள். குழப்பமான மன நிலை மாறி தெளிவான சிந்தனை தோன்றும். ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும். நெருக்கடி தந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிரிகள் காணாமல் போவார்கள். துரோகிகளை அடையாளம் காண்பீர்கள். இனி அனைத்தும் வெற்றிதான் .


இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், சனி இந்த ஐந்து நாட்களும் நற்பலன்கள் நடக்கும். வெள்ளி மற்றும் ஞாயிறு சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் -
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன நிம்மதி தரும்.

*************************************************************************************************


கேட்டை -
உச்சந்தலையில் அடிக்கப்பட்ட ஆணி இப்போது பிடுங்கப்பட்டு வலி குறைந்து கண்களில் ஒளி தோன்றும். காரணம் குருவின் இடப்பெயர்ச்சி . இனி குழப்பமில்லாத தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கூட இருந்தே குழிபறித்த துரோகிகளை இனம் காண்பீர்கள்.


பணவரவில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் ரத்து செய்யப்படும். வாழ்ந்து காட்டுவேன் என்ற உத்வேகம் பிறக்கும்.


உத்தியோகம் - பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். உங்கள் மீதான தவறான கண்ணோட்டம் மாறும். உயர் அதிகாரிகளின் விசாரணையில் நீங்கள் குற்றமற்றவர் என்று முடிவாகும். வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சி வெற்றியைத் தரும். ஒரு சில பிரச்சினைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் இப்போது கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். அங்கு வேலை உடனடியாக கிடைக்கும். கல்வித் தகுதிக்கு குறைவான வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது தகுதியான பணி கிடைக்கும். அரசு வேலைக்கு முயன்றவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.


தொழில் - தொழிலில் இருந்த பிரச்சினைகள் அகலும். ஊழியர்கள் உங்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகளைக் காட்டியிருப்பார்கள். இப்பொழுது அந்த எதிர்ப்புகள் அகன்று உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்படும். ஊழியர்களிலேயே துரோகிகளை அடையாளம் கண்டு வெளியேற்றுவீர்கள். சட்ட திட்டங்களைக் கொண்டு வந்து ஊழியர்களை ஒழுங்குபடுத்துவீர்கள். வெளிநாட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரம் விருத்தியாகும்.தேங்கிக் கிடந்த பொருட்கள் மளமளவென விற்பனையாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலுவைத் தொகைகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும்.


பெண்களுக்கு - குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் இனி இருக்காது. உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். பணவரவுகள் தாராளமாகும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.


மாணவர்களுக்கு - படிப்பே வேண்டாம் என்றிருந்த மனநிலை மாறி இப்போது கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். தோல்வி அடைந்த தேர்வுகளை இப்போது எழுதி தேர்ச்சி அடைவீர்கள்.


கலைஞர்களுக்கு - தடைபட்டிருந்த பணவரவுகள் இப்பொழுது வரும் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகமும் சொந்த வீடு வாங்கும் கனவும் நனவாகும்.


பொதுப்பலன் - மனக்குழப்பங்கள் இருந்து விடுதலை கிடைக்கும். பல்வேறு விதமான பிரச்சினைகளில் சிக்கித் தவித்த நீங்கள் ஒவ்வொரு பிரச்சினையாக இப்போது தீர்த்து விடுவீர்கள் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும். வெளிநாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலையும் குடியுரிமையும் கிடைக்கும்.


நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். அவப்பெயரும் சொந்த வீடு கனவு நனவாகும். மருத்துவ செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். கடுமையான வயிற்றுவலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சினைகளில் இருந்தவர்களுக்கு இப்போது அந்த பிரச்சினையிலிருந்து வெளிவர வீரியம் வெளி வருவீர்கள். போலியான நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். அவர்களை விலக்கி வைப்பீர்கள்.


இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும் ஆதாயம் உண்டாகும் திங்கள், சனி,ஞாயிறு இந்த மூன்று நாட்களும் ஆதாயம் இல்லை. சாதகமாக இருக்காது.


வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாற்றி வழிபடுங்கள். அனுமன் சாலீசா கேளுங்கள். மன தைரியம் பிறக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். தனவரவு தாராளமாகும்.

****************************************************************************************************


மூலம் -
இதுவரை விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயமாக இருந்தது. இப்பொழுது குரு பகவான் உங்கள் நட்சத்திரத்தில் இன்று வர இருக்கிறார். ஏற்கனவே உங்கள் ராசியான தனுசுவில் சனி கேது இருக்கிறார்கள். இப்போது குருவும் வந்து இணையப்போகிறார்.


இனி எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுத்தால் உங்களுக்கு பாதகமாக மாறும். அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. புதிதாக தொழில் செய்கிறேன் என முதலீடுகள் செய்யக்கூடாது. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் கணவன் மனைவி ஒற்றுமை மிக முக்கியம்.


விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. இனி ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாகக் கையாள வேண்டும். பல பிரச்சினைகள் உங்களை நோக்கி வர காத்துக் கொண்டிருக்கிறது. அசட்டையாக இருந்தால் அத்தனையும் உங்களை தொற்றிக்கொள்ளும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.


உத்தியோகம் - அவசரப்பட்டு வேலையை ராஜினாமா செய்யக்கூடாது. அலுவலகத்தில் நீங்கள் எப்போது தவறு செய்கிறீர்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே வேலையில் அதிக கவனம் வேண்டும். அலட்சியம் கூடாது.வேறு வேலைக்கு மாறும் முயற்சிகள் அவ்வளவு சாதகமாக இல்லை. எனவே இருக்கின்ற வேலையை சரியாக செய்தாலே பெரிய பாதிப்புகள் ஏற்படாது.


அலைச்சல் மிகுந்த தொழில் செய்பவர்கள் இன்னும் கூடுதல் அலைச்சலைச் சந்திக்க வேண்டியது வரும். இலக்குகளை எட்ட அதிகம் உழைக்க வேண்டியது வரும். இயந்திரங்களில் பணியாற்றுபவர்கள் மின்சாரப் பணி செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களோடு பணிபுரிய வேண்டும். வேலைக்கு முயற்சி செய்பவர்கள் கிடைத்த வேலையை முதலில் ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்கள் கழித்து நல்ல வேலைக்கு மாறிக்கொள்ளலாம். வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலைகள் இப்போது கிடைக்கும். எனவே வெளிநாட்டு வேலைக்கு முயற்சி எடுத்தால் வெற்றி பெறலாம்.


தொழில் - கவனம் பிசகினால் தொழிலில் பின்னடைவைச் சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கும். எனவே கவனமாக எச்சரிக்கை உணர்வோடு தொழிலைச் செய்ய வேண்டும். வியாபாரிகள் ஊழியர்களைக் கண்காணிக்கவேண்டும்.
பொதுவாகவே இப்போது ஊழியர்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். பின்னலாடை நிறுவனங்கள் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் உங்களுக்கு இழப்பு ஏற்படும். வெளிநாட்டு நிறுவனத்தோடு இணைந்து தொழில் செய்பவர்களுக்கு பாதிப்புகள் பெரிதாக இருக்காது. பணவரவுகள் தாமதமாகவே வரும்.
எனவே காசோலைகள் தரும்பொழுது கவனமாக இருக்கவேண்டும். அரசின் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு. அரசு தொடர்பான கணக்கு வழக்குகளை சரியாக பராமரியுங்கள்.


பெண்களுக்கு - அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் அலட்சியம் வேண்டாம். கவனச் சிதறல்கள் உண்டாகும். தேர்வுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டியது வரும்.


கலைஞர்களுக்கு - ஒப்பந்தங்கள் உண்டாகும். உங்கள் தகுதிக்குக் குறைவான ஊதியமே கிடைக்கும். சிலகாலம் பொறுமையாக இருக்க வேண்டும்.விரைவில் அனைத்தும் சரியாகும்.


பொதுப்பலன் - தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். வங்கிக் கடன்களை சரியாக திட்டமிட்டுச் செலுத்துங்கள். வாகனங்களைச் சரியாக பராமரியுங்கள்.
பயணங்களில் கவனம் வேண்டும் .போக்குவரத்து விதிகளைக் கடைபிடியுங்கள். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆடம்பரச் செலவுகள் இனி வேண்டாம்.


இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இந்த ஐந்து நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். செவ்வாய் மற்றும் ஞாயிறு இந்த இரண்டு நாட்கள் சாதகமாகஇல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அன்னையை வணங்குங்கள். அபிராமி அந்தாதி படியுங்கள். பிரச்சினைகள் அகலும். தீமைகள் நெருங்காது. கஷ்டங்கள் வராது.

*************************************************************************************************

பூராடம் -
தேவையற்ற விரயங்கள் இனி இருக்காது. இப்போது ஏற்படும் விவரங்கள் அனைத்தும் சுப விரயங்கள் ஆக இருக்கும். எந்த முடிவாக இருந்தாலும் தள்ளி வையுங்கள். நன்கு ஆலோசனை செய்த பிறகு செயல்படுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். இல்லை என்றால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வரும். வார்த்தைகளில் கவனம் வேண்டும். சில விஷயங்களை பெரியவர்களிடம் ஆலோசித்து முடிவெடுங்கள்.


ஒருசிலருக்கு நின்றுபோன திருமணப் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்கும். திருமணம் உறுதியாகும். வீடு மாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்.


உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் கூடும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் செய்ய வேண்டியது வரும். உயரதிகாரிகள் ஒத்துழைப்பு தர மாட்டார்கள். வேலை மாற்ற சிந்தனை உடையவர்கள், இப்பொழுது வேலைக்கு மாறிக்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் வேலையில் கவனம் இல்லாவிட்டால் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள்.


அலைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள் இன்னும் அலைச்சல் அதிகமாகும் இலக்குகளை எட்ட கடுமையாக போராட வேண்டியது வரும். வணிக நிறுவனங்கள் கடைகள் போன்றவற்றில் வேலை செய்பவர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், கவனம் சிதறினால் நஷ்டத்துக்கு நீங்கள் ஆளாவீர்கள்.


தொழில் - இப்போது இருக்கும் தொழிலை அப்படியே தொடருங்கள். அகலக்கால் வைக்க வேண்டாம்.போட்டி நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணமுடையவர்கள் இன்னும் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். கட்டுமான தொழில் செய்பவர்கள் நிதானமாக செயல்படுங்கள். சுயதொழில் செய்பவர்கள் பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் அதிக முதலீடுகளை செய்ய வேண்டாம். வியாபாரிகள் தங்கள் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.
பெண்களுக்கு - தேவைகளையும் ஆசைகளையும் குறைத்துக்கொள்ளுங்கள். பணியில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருங்கள். சொத்துப் பிரச்சினையில் அவசரம் வேண்டாம்.


மாணவர்களுக்கு - கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடாதீர்கள். கல்வி முக்கியம் என்பதை உணருங்கள்.


கலைஞர்களுக்கு - கிடைக்கின்ற ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஊதியம் குறைவாக இருந்தாலும் இப்போதைக்கு ஏற்றுக்கொள்வதே உங்கள் பொருளாதார தேவைகளுக்கு நல்லது.


பொதுப்பலன் - அவசர முடிவுகளை எடுக்கக் கூடாது. தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபடக் கூடாது. நண்பர்களுக்கு ஜாமீன் தரக்கூடாது பொதுக் காரியங்களில் உள்ளவர்கள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தேவையற்ற விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும்.


ஒருசில பாதிப்புகள் கடுமையாக இருக்கும். எனவே சரியான மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணம் நிச்சயிக்கப்படும். அரசு சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.


இந்த வாரம் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். சாதகமாக இருக்கும்.
திங்கள் மற்றும் புதன் இந்த இரண்டு நாட்களும் சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - ஐயப்பனின் அபிஷேகத்திற்கு நெய் வாங்கித் தாருங்கள். உங்கள் பிரச்சினைகள் தீரும். கவலைகள் மறையும்.

*******************************************************************************************


உத்திராடம் -
இதுவரை விரயங்கள் இருந்தாலும் அதில் ஆதாயம் இருக்கும். ஆனால் இப்போது சேமிப்புகள் கரையும்படியான சுபவிரயங்கள் ஏற்படும். காரணம் குருவின் இடப்பெயர்ச்சி . சொந்த வீடு வாங்குதல், இல்லத்தில் திருமணம் நடப்பது. பிள்ளைகளின் கல்விக்குச் செலவிடுவது என சுபவிரயங்களாக ஏற்படும்.


மருத்துவச் செலவுகள் கட்டுப்படும். தொலைதூர பயணங்கள் ஏற்படும்.வெளிநாடு செல்லும் யோகம் உண்டு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் திசைக்கு ஒருவராக இருப்பார்கள். சகோதரர்களால் மன வருத்தம் ஏற்படும்.


உத்தியோகம் - வேலையில் இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். குறைந்தபட்சம் பணி செய்யும் இடத்திலேயே கூட மாற்றங்கள் இருக்கலாம். வேறு நிறுவனத்துக்கு மாறும் எண்ணம் உண்டாகும். ஒரு புதிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிறு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் பெரிய நிறுவனங்களுக்கு மாற முயற்சி செய்வார்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டு. விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும் இலக்கை எட்ட அதிகம் உழைக்க வேண்டியது வரும்.


தொழில் - தொழில் முன்னேற்றங்கள் உண்டு. முதலீடுகளை அதிகமாகச் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க ஆலோசனை செய்வீர்கள். போட்டி நிறுவனங்களைச் சமாளிக்க புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


உணவுத் தொழில் செய்பவர்கள் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். வியாபாரிகள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கமிஷன் ஏஜெண்டுகள் போராடி வெற்றி பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் இரட்டிப்பாக வரும்.

பெண்களுக்கு - ஆதாயம் தரும் தொழில் அமைப்பு உருவாகும். சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாக தீரும். வேலைவாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.


மாணவர்களுக்கு - கல்வியில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி அதீத ஆர்வம் ஏற்படும். ஆசிரியரின் வழிகாட்டுதல் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், இசைக்கச்சேரிகள் நடத்தவும், நாடகங்கள் நடத்தவும் வாய்ப்புகள் கிடைக்கும். பணம் தாராளமாக வரும்.


பொதுப்பலன் - செலவுகள் அதிகம் இருந்தாலும், வரவு திருப்திகரமாக இருக்கும். அவசர முடிவுகளை மட்டும் எடுக்காமல் இருந்தால் செலவுகள் மிச்சமாகும். சொந்த வீடு கனவு இப்போது நனவாகும். பாதியில் நின்ற வீட்டு வேலைகள் இப்போது முழுமை பெறும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு மூட்டு வலி, முதுகுப் பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு போன்றவை உண்டாகலாம்.


இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நல்ல பலன்கள் தரும். செவ்வாய் மற்றும் வியாழன் சாதகமாக இருக்காது.


வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். வெற்றிகள் கிடைக்கும்.
*************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x