Published : 28 Oct 2019 11:31 AM
Last Updated : 28 Oct 2019 11:31 AM

இந்த வாரம் இப்படித்தான்! நட்சத்திரப் பலன்கள் :  (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3ம் தேதி வரை)   திருவாதிரை முதல் மகம் வரை

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவாதிரை -


இதுநாள் வரை சரியாக முடிவெடுக்க முடியாமலும் குழப்பத்திலும் இருந்த நீங்கள், இனி குருவின் பார்வையால் தெளிவான முடிவை எடுப்பீர்கள். குழப்பங்கள் தீரும். பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்றுசேர்வார்கள். உறவினர்கள் பகை மாறும்.


குலதெய்வ வழிபாடு, ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஏன்? எதற்கு? என்றே தெரியாமல் வாங்கிய கடன்கள் எல்லாம் இப்பொழுது ஒவ்வொன்றாக அடைப்பீர்கள்.பறிபோன சொத்துக்கள் திரும்ப வரும்.


உத்தியோகம் - மலைபோல் குவிந்து இருந்த வேலைகளையெல்லாம் இப்போது மளமளவென முடிப்பீர்கள். வேலையில் இருந்த சோம்பல் நீங்கும். உத்தியோகத்தில் ஆர்வமும் உற்சாகமும் ஏற்படும். விலகியிருந்த நண்பர்கள் மீண்டும் இணைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றியாகும். அயல்நாட்டில் குடியுரிமைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இதுநாள் வரை தாமதம் ஆகியிருக்கும். இப்போது தடைகள் நீங்கி குடியுரிமை பெறுவீர்கள்.


உத்தியோகத்தில் பணி நீட்டிப்பு பெறுவீர்கள். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். கட்டுமானத் தொழிலாளர்கள் புதிதாக வேலையைத் தொடங்குவார்கள். விற்பனைப் பிரதிநிதிகள் நல்ல இலக்கை எட்டி கூடுதல் வருமானம் பார்ப்பார்கள்.
தொழில் - முடங்கிக் கிடந்த தொழில் வேகம் எடுக்கும். புதிய யுக்திகளை பயன்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பீர்கள். நண்பர்களோடு சேர்ந்து புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இப்போது கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். அரசு ஆதாயம் கிடைக்கும். வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.


வரவேண்டிய பாக்கிகள் தடையில்லாமல் வரும். விற்பனை ஆகாத பொருட்கள் எல்லாம் இப்போது விற்பனையாகும். சிறு நிறுவனங்கள், வியாபாரிகள், கடை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். புதிய தொழில் முனைவோர் எந்த தடையும் இல்லாமல் தொழில் ஆரம்பிப்பீர்கள்.


பெண்களுக்கு - மன மகிழ்வு உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வாடகை வீட்டில் இருப்போர் இப்போது சொந்த வீடு வாங்குவீர்கள். திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் கிடைக்கும். நீண்டநாளாக தொந்தரவு தந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.


மாணவர்களுக்கு - கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள், பொழுதுபோக்குக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நண்பர்களோடு பொழுதைக் கழிப்பதை நிறுத்துங்கள். இதையெல்லாம் செய்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.


கலைஞர்களுக்கு - பலவிதமான வாய்ப்புகள் தேடி வரும். அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அல்லது அதில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும் . சொத்துக்கள் வாங்க முற்படுவீர்கள்.


பொதுப்பலன் - குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். மறந்து போன குலதெய்வம் இப்பொழுது தெரியவரும். சொந்த வீடு கனவு நனவாகும். அக்கம்பக்கத்தினர் உடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். பகை மறையும். கடன்கள் தீரும். அடகு வைத்த சொத்துக்களை மீட்பீர்கள். அதற்கான வழிவகைகள் வருமானத்திற்கு ஆதாரங்கள் இந்தவாரம் உண்டாகும்.


ஒருசிலருக்கு கால்பாதம் மூட்டுக்களில் வலி பாதிப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு ஒரு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். சிறிய அளவிலான அறுவை சிகிச்சையாக இருக்கலாம். இந்த வாரம் திங்கள், செவ்வாய், வியாழன், சனி இந்த நான்கு நாட்கள் நற்பலன்கள் நடக்கும், தனவரவு திருப்தி தரும். ஆதாயங்கள் அதிகமாகும்.


புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் நற்பலன்கள் தராது. சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். அல்லது ஸ்ரீ ராமர் ஆலயம் அருகில் இருந்தால் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். ஆரோக்கியம் மேம்படும். நல்லதே நடக்கும்.

*********************************************

புனர்பூசம் -


தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் அதிகம் சந்தித்திருப்பீர்கள். இன்றிலிருந்து குருபார்வை இருப்பதால் இனி தடுமாற்றங்கள் இருக்காது. ஏமாற்றங்கள் உண்டாகாது. குடும்பத்தில் அமைதி நிலவும். பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சொந்த வீடு கனவு இப்போது நனவாகும். அதற்கான கடன் உள்ளிட்ட உதவிகள் இப்போது தானாக கிடைக்கும். இளைய சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாக தீரும். சகோதரர்கள் சமாதானம் ஆவார்கள்.


இதுவரை வீண் அலைச்சலாக இருந்த வேலைகள் அனைத்தும் இனி ஆதாயம் தரும். ஒருசிலருக்கு வீட்டிலிருந்து சற்று தூரமாக இடமாற்றம் ஏற்படும். கடன்கள் தீர வழி கிடைக்கும். சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மீதமிருக்கும் பணத்தை குழந்தைகள் பெயரில் முதலீடுகள் செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்புகளில் பாதிப்படைந்தவர்கள் இனி, பங்கு வர்த்தகத்தால் லாபம் மட்டுமே பார்ப்பார்கள். இழப்பு என்பதே இனி இருக்காது. இனி தங்கு தடையில்லாமல் பணவரவு தாராளமாக இருக்கும்.


உத்தியோகம் - வேலையில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் இருந்த சலிப்பு ஒரு வித ஆயாசம் இனி இருக்காது. வேலையில் நல்ல ஆர்வம் ஏற்படும். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். நீங்களும் அடுத்தவர் வேலையை செய்து கொடுத்து அவர்களையும் மகிழ்ச்சி படுத்துவீர்கள். .உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அதற்கான நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு இந்த வாரம் கிடைக்கும். பத்திரிகை, எழுத்து போன்ற துறைகளில் இருப்பவர்கள், ஆசிரியர் வேலை பார்ப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். இடமாற்றம் பதவி உயர்வோடு இருக்கும்.


தொழில் -மந்த நிலையில் இருந்த தொழிலை தூக்கி நிறுத்த அனுபவம் வாய்ந்த ஒருவர் உங்களோடு இணைவார். அவரால் தொழில், வளர்ச்சியை நோக்கிப் போகும். அயல்நாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைவது, ஒப்பந்தம் போடுவது போன்றவை நடக்கும். ஊழியர்களின் ஒத்துழைப்பு பெருகும். தொழில் பகை மறையும். போட்டி நிறுவனங்கள் இனி தொல்லைகள் தர மாட்டார்கள். தொழிலை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அதற்கான கடன்தொகை உதவிகள் கிடைக்கும்.


ஒருசிலருக்கு அரசு வழி ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் உதவியோடு தொழில் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணமுடையவர்கள் அதற்கான பணிகளை இப்போது தொடங்கலாம்.


பெண்களுக்கு - மன நிறைவு உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் இருந்து புதிதாக தொழில் மையம் ஆரம்பித்து பலருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்டர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். நிச்சயதார்த்தம் நடக்கும்.


மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு, விடுபட்ட தேர்வுகளை முடிப்பீர்கள், தோல்வியடைந்த பாடங்களையும் முடிப்பீர்கள். சிறப்பான வாரம் .


கலைஞர்களுக்கு - இசை நாட்டியம் போன்ற துறையினருக்கு அதிக அளவில் ஒப்பந்தங்கள் உண்டாகும். சின்னத்திரை நட்சத்திரங்கள் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள். பெரிய திரை நட்சத்திரங்கள் நல்ல சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப் படுவீர்கள்.


பொதுப்பலன் -சோம்பலை விடுத்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டிய நேரம் ஆரம்பித்துவிட்டது. இனி சம்பாதிப்பதும், சம்பாதித்ததை சேமிப்பதையும் சரியாக திட்டமிட்டால் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எனவே இந்த வாரமே ஒரு சங்கல்பம் ஆக எடுத்துக்கொண்டு செயல்படுங்கள். வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீடு வாங்குவார்கள். எப்போதோ காலி மனை வாங்கி வைத்திருந்தவர்கள் இப்போது அதில் வீடு கட்டுவார்கள்.கடன்கள் தீரும். இனி கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் வராது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சற்று பலவீனமாகும். ஒரு சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரும். குடல்வால், ஆசனவாய் போன்ற இடங்களில் பாதிப்புகள் உண்டாகும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.


இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். அனைத்தும் சுபமாக இருக்கும். வியாழன், சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் சுப பலன்கள் நடக்காது. சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - தட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். முடிந்தால் கொண்டைக்கடலை சுண்டல் செய்து நிவேதனம் செய்யுங்கள்.

******************************************************************************************************


பூசம் -


சுபச் செலவுகள் அதிகமாகும். அது வீடு கட்டுவதாக இருக்கலாம். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதாக இருக்கலாம். தொழில் முதலீடுகளாக இருக்கலாம். குடும்பம் அமைதியாகவும் திருப்திகரமாக இருக்கும். கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்ப்புகள், எதிரிகள் இல்லாமல் போவார்கள். இது எல்லாம் குரு பகவானின் பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள்.


வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். எதிரிகள் தோற்றுப் போவார்கள். துரோகிகள் அடையாளம் காணப்படுவார்கள். வீட்டைப் புதுப்பித்தல், பராமரித்தல் போன்ற செலவுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். பழைய கடனை அடைக்க புதிய கடன் பெறுவீர்கள், அடகு வைத்த சொத்துக்களை மீட்பீர்கள், நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து ஒன்று இப்போது விற்பனையாகும்.


எதையும் அனுசரித்து போகும் நீங்கள் இனி தைரியமான முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். பின் விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் அசாத்திய தைரியம் மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். விடாமுயற்சி, போராட்ட குணம் வெற்றியை பெற்றுத் தரும்.


உத்தியோகம் - இடமாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு குழுவின் தலைமைப் பதவி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலகக் குரல் கொடுத்த சக ஊழியர்கள் கூட இனி உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். ஒரு சிலர் வேறு நிறுவனங்களுக்கு மாறுகின்ற செல்லும் வாய்ப்பு 100% கிடைக்கப்பெறும். அதுவும் பணி உத்தரவு பெற்று வெளிநாடு செல்வீர்கள். ஒருசிலர் அங்கேயே குடியுரிமை பெற்று தங்குவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் பணிபுரியும் இடத்திலேயே சகோதரர்களுக்கும் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவீர்கள்.


தொழில் - தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அதற்காக ஒரு பெரும் கடன் வங்கியில் பெறுவீர்கள். புதிய இயந்திரங்கள், புதிய தொழில் நுட்பங்களை உங்கள் தொழிலகத்தில் செயல்படுத்த முனைவீர்கள். தொழில்நுட்ப வல்லுநர்களை பணிக்கு அமர்த்துவீர்கள். தொழில் நிறுவனங்கள் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து ஊழியர்களை அதற்கு தக்கவாறு செயல்பட வைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பது அல்லது செய்கின்ற தொழிலோடு இணைந்த மாற்று தொழில் ஒன்றை தொடங்குவீர்கள்.
மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் தங்கள் கடைகளை புதிதாக மாற்றி அமைப்பீர்கள். உணவகத் தொழில் செய்பவர்களுக்கும், கேட்டரிங் தொழில் செய்பவர்களுக்கும், விடுதிகள் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் என அனைவருக்கும் வளர்ச்சியும், முன்னேற்றமும் உண்டாகும்.


பெண்களுக்கு - உங்கள் பெயரில் இப்போது சொத்து ஒன்று வாங்கப்படும், அல்லது உங்கள் பெயரில் தொழில் நிறுவனம் ஆரம்பிக்கப்படும். வேலை இல்லாத பெண்களுக்கு வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவ சிகிச்சை மேற் கொண்டவர்களுக்கு இப்போது அதற்கான பலனை பெறுவார்கள்.


மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிதாக ஏதாவது ஒன்றை பயில முற்படுவீர்கள். ஆசிரியர் ஒருவர் வழிகாட்டியாக இருப்பார்.


கலைஞர்களுக்கு - அற்புதமான வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் உண்டாகும். நண்பர்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் .அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு.


பொதுப்பலன் -சொந்த வீடு வாங்குவீர்கள், ஒருசிலர் விவசாய நிலங்களை வாங்கி புதிய முயற்சியில் ஈடுபட்டு விவசாயத்தில் புரட்சி செய்வீர்கள். கடன் அதிகமாகும். ஆனாலும் கவலைப்படதேவை இல்லை, வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் முதலீடாக மாறும். வருமானம் பெருகும். கடன் வாங்கி வீடு வாங்குதல், வாகனங்கள் வாங்குதல், ஆபரணங்கள் வாங்குதல் போன்றவை நடக்கும்.


பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியைக் காண்பார்கள், இழந்ததை மீட்டு எடுப்பார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒவ்வாமை பிரச்சினை அதாவது அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் மட்டும் கவனமாக இருந்தால் போதும். வெளி உணவைத் தவிர்க்க வேண்டும்.


இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் நடக்கும்.செவ்வாய்க்கிழமை சுமாரான பலன்கள் நடக்கும். வெள்ளி மற்றும் ஞாயிறு சாதகமாக இல்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - புற்று உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு அபிஷேக பொருட்கள் கொடுத்து விளக்கு ஏற்றி வழிபடுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.

************************************************************************************


ஆயில்யம் -


போராட்டக் குணமும் விடாமுயற்சியும் உங்களுக்கு கைவந்த கலை. இப்போது உங்களுடைய விடா முயற்சிக்கு பல வெற்றிகளைக் காணப்போகிறீர்கள். அதற்கு குரு பகவான் துணையிருப்பார் இந்த குரு பெயர்ச்சியில் நல்ல பலன்களை கிடைக்கப்பெறுவீர்கள்.
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு பிரச்சினை இப்போது உங்களுக்கு சாதகமாக முடியும். கடன் பற்றிய கவலை மாறும். ஊக்கத்தோடு செயல்பட்டு சாதனைகள் புரிவீர்கள். ஒரு சிலர் அயல்நாடு சென்று பணிபுரிவீர்கள். அதிலும் வளைகுடா நாடுகளாக இருக்கும். முகம் தெரியாத நபர்கள் கூட உங்களுக்கு உதவ முன்வருவார்கள். குடும்பத்தினர் ஒத்துழைப்பு இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியாகும். வழக்குகள் சாதகமாகும். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினைகள் சுமுகமாகும். எதிர்ப்புகளும் எதிரிகளும் காணாமல் போனார்கள்.


உத்தியோகம் - இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைத்து சிலர் வேறு நிறுவனங்களுக்கு மாறுவார்கள். பல நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். சிறந்ததை நீங்களே தேர்ந்தெடுங்கள். கல்வித் தகுதிக்கு மாறான வேலையில் இருப்பவர்கள் இப்போது தகுதியான வேலை கிடைக்கப் பெறுவார்கள். பணிபுரியும் ஊழியர்கள் உழைப்புக்கேற்ற உரிய அங்கீகாரம் பெறுவார்கள். ஒருசிலர் வேலையை விட்டுவிட்டு ஆலோசனை தரும் பணியை மட்டும் செய்வார்கள்.


இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். சிறு நிறுவனங்கள், கடைகள் / வியாபார நிறுவனங்கள் போன்ற இடங்களில் வேலை செய்பவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவார்கள்.


தொழில் - நிலையற்றதாக ஏற்ற இறக்கங்களோடு சென்றுகொண்டிருந்த தொழில் இப்போது நிதானத்திற்கு வரும். புதிய ஒப்பந்தங்கள் பெற்று வளர்ச்சியை நோக்கிச் செல்லும். தகுதியற்ற ஊழியர்களை நீக்கி புதிய ஊழியர்களை நியமிப்பீர்கள். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.


தரகு, கமிஷன் தொழில் செய்பவர்கள் லாபகரமான வியாபாரம் ஒன்றை முடிப்பீர்கள். மொத்த வியாபாரிகள் அதிக ஆர்டர்கள் பெற்று வியாபாரம் செழித்து வளரும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிக் கடன் கிடைத்து தொழில் தொடங்குவார்கள். வருகின்ற வருமானங்கள் அனைத்தும் முதலீடுகளாக .மாற்றுவீர்கள். பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களைப் பெறுவீர்கள்.


பெண்களுக்கு - சேமிப்புகள் கரையும். ஆனாலும் கவலைப்பட மாட்டீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும்..சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். தையல் தொழில் தொடங்குவீர்கள். ஒரு சிலர் ஆடை வியாபாரம் ஆரம்பிப்பார்கள்.


மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஞாபக சக்தி அதிகரிக்கும். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு - கௌரவம் கிடைக்கும், பதவிகள், பட்டங்கள் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.வெளி நாட்டு பயணம் மேற்கொள்வீர்கள்.


பொதுப் பலன் - கடன்கள் அதிகம் ஆனாலும் கவலை வேண்டாம். அவை அனைத்தையும் எந்த கவலையும் இல்லாமல் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எளிதாக அடைப்பீர்கள். கடன் வாங்கித்தான் உங்களுடைய வளர்ச்சி இப்போது உண்டாகும். வாகன மாற்றங்கள் ஏற்படும். வீட்டை புதுப்பித்தல் போன்ற செலவுகள் ஏற்படும்.


ஒருசிலர் வேலையை விட்டுவிட்டு சொந்த தொழில் செய்ய முற்படுவீர்கள். வெளிநாட்டு வியாபாரம் ஒன்று வெற்றியாகும். வெளிநாட்டில் இருக்கும் நபர் ஒருவர் உதவுவார். மருத்துவத் துறையினர் நல்ல வளர்ச்சி காண்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி மாற்றம் ஏற்படும். நல்ல பதவி கிடைக்கும். எதிர்தரப்பினர் அடங்கிப் போவார்கள்.


ஆரோக்கிய பாதிப்புகள் பெரிய அளவில் ஏதுமில்லை, ஆனால் சிறுநீரக தொற்று, மற்றும் ஆசன வாயில் புண் உண்டாகும். மூலம் சம்பந்தப்பட்டபிரச்சினைகள் அதிகமாகும்.


இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி இந்த நான்கு நாட்களும் சாதகமாக இருக்கும். நற்பலன்கள் நடக்கும். பணவரவு இருக்கும்.
திங்கள், சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் சாதகமாக இல்லை.


வணங்கவேண்டிய தெய்வம் - துர்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, ஒன்பது விளக்குகள் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். வெற்றி உண்டாகும்.

******************************************************************************************************


மகம் -


பாடாய் படுத்திக் கொண்டிருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குருவின் பார்வையால் முற்றிலும் குணமாகும்.வரவை விட செலவுகள் அதிகமாக இருந்த நிலை மாறி இனி செலவுகள் மட்டுப்படும். காரணம் தெரியாமால் செலவு வைத்த வாகனப்பழுதுகள் இனி இருக்காது. வீட்டு ரிப்பேர் செலவுகள் இனி இருக்காது.நெருக்கடி தந்த கடன்கள் இனி அவகாசம் பெறப்பட்டு அடைப்பீர்கள். கவலை தந்த தாயாரின் உடல் நலம் ஆச்சரியப்படும் வகையில் குணமாகும்.


இந்த ஐப்பசி மாதம் முழுவதும் எடுக்கின்ற முயற்சிகளில் லேசான தடுமாற்றம் வருவதை தடுக்க முடியாது. தன்னம்பிகை குறையும். ஆனாலும் பணவரவுக்கும் மகிழ்ச்சிக்கும் குறை இருக்காது.


உத்தியோகம் - பணி நிமித்தமான அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருந்த அழுத்தங்கள் குறையும். வேலையில் முழு ஈடுபாடு இல்லாமல் வேறு சிந்தனைகளில் மூழ்கி இருந்த நிலை இனி இருக்காது. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கவலையில் இருந்தவர்களுக்கு இப்போது தகுதியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை இப்போது கிடைக்கும்.ஊதிய உயர்வு கிடைக்கும்.இடமாற்றம் உண்டு. வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகள் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும்.


வணிகம் சார்ந்த கடைகளில் வேலை செய்வோர் தங்கள் மேலதிகாரிகள் அல்லது உரிமையாளர்களின் கோபத்துக்கு ஆளாகியிருந்தால் அந்த நிலை மாறும். ஒரு சிலர் வேறு நல்ல வேலைக்கு மாறுவார்கள்.விற்பனை பிரதிநிதிகளுக்கு வீண் அலைச்சல்கள் குறைந்து இலக்குகளை எளிதில் எட்டுவார்கள்.


தொழில் -தொழிலில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீர்வதற்கு வழி கிடைக்கும். அரசு பணியில் இருந்த நெருக்கடிகள் தீரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும். தொழில் முதலீட்டுக்காக விற்க நினைத்த சொத்து இப்பொழுது விற்பனையாகும். ஊழியர்களின் மனக்கசப்பு நீங்கும். உற்பத்தியான பொருட்களின் தேக்க நிலைகள் மாறி விற்பனை அதிகரிக்கும். பங்குவர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு சரிவிலிருந்து மீண்டு வருவீர்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு விற்பனையாகாத பிளாட்டுகள் இப்போது விற்பனை ஆகும். வியாபாரிகள், தரகுத் தொழில் செய்பவர்கள், கமிஷன் ஏஜெண்டுகள் என அனைவருக்கும் வியாபார ரீதியாக வருமானங்கள் பெருகும். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் இப்பொழுது நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள்.


பெண்களுக்கு - உடல் ஆரோக்கியம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். மனக் கவலைகள் தீரும்.
மாணவர்களுக்கு - உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி கல்வியில் ஆர்வம் ஏற்படும். தேடிக்கொண்டிருந்த .கல்வி தொடர்பாக குறிப்பேடுகள் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் வரும்போது ஏதோ ஒரு தடை ஏற்பட்டு பின்னடைவைச் சந்தித்திருப்பீர்கள். இனி அந்த மாதிரியான பிரச்சினைகள் இருக்காது. வாய்ப்புகள் உறுதியாகும். ஒப்பந்தங்கள் ஏற்படும்.


பொதுப்பலன் - மிக முக்கியமாக நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். வீடு, வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை மிகுந்த செலவுகள் வைத்திருக்கும். இனி இந்த வீண் செலவுகள் இருக்காது.


விற்பனையாகாத வீட்டுமனைகள் இப்பொழுது விற்பனையாகும். முக்கியமான செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இனி பணத் தட்டுப்பாடு இருக்காது. ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு மொட்டை போடுதல், காது குத்து, உபநயனம் போன்ற சுப விசேஷங்கள் செய்வீர்கள்.


ஆன்மிகம் சார்ந்த குருவைச் சந்திப்பீர்கள். அவரின் அருளாசி உங்களுக்குக் கிடைக்கும். சோர்வுகளை தவிர்க்கவேண்டும். சுறுசுறுப்பை கூட்டிக் கொள்ளுங்கள், இனி தடைகள் தாமதங்கள் என்பதே இருக்காது.


இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இந்த ஐந்து நாட்களும் உங்களுக்கு சாதகமான நாட்கள். எந்த முயற்சியும் வெற்றிகரமாக முடியும்.


செவ்வாய் மற்றும் ஞாயிறு இந்த இரண்டு நாட்களும் சாதகமான பலன்களைத் தராது.


வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீமகாலட்சுமி தாயாருக்கு வெண் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். நல்ல பலன்கள் நடக்கும்.

*****************************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x