Published : 21 Oct 2019 03:15 PM
Last Updated : 21 Oct 2019 03:15 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை - பூரம் முதல் சுவாதி வரை

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரம் -

எண்ணியது எண்ணியபடியே நிறைவேறும். தடைகள் அகலும். மனதில் உற்சாகம் பிறக்கும். மனதில் எழுந்த வேண்டாத கற்பனைகள் இனி வராது. விரக்தியிலிருந்து வெளியே வருவீர்கள். வேலையில் இருந்த அழுத்தத்தால் ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள் நீங்கும். இனி மருந்து மாத்திரைகள் தேவைப்படாது. சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற நல்ல வழி கிடைக்கும். சகோதர ஆதரவு கிடைக்கும்.

உத்தியோகம் - பணிச்சுமை படிப்படியாக விலகும். முடிக்க முடியாமல் திணறிய வேலைகள் இப்போது முடிப்பீர்கள்.அலுவலகத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி சகஜ நிலைக்கு வருவீர்கள். இடமாற்றம் விரும்பியவர்கள் இன்னும் சில வாரங்களில் கிடைக்கப் பெறுவீர்கள், அதற்கான முன்னேற்பாடுகள் இந்த வாரம் தெரியும். வங்கிப் பணியாளர்கள் பணத்தை கையாளும்போது கவனம் தேவை. டிராவல்ஸ் நிறுவனங்களில் பணிபுரிவோர் ஊக்கத்தொகை அதிகம் பெறுவார்கள். பங்கு வர்த்தகத் துறையில் பணிபுரிவோர் தனியாகச் செயலாற்றும் எண்ணம் வரும். அரசு ஊழியர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரும்.

தொழில் - தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் திருப்தி தரும். அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். வீட்டில் இருந்தபடியே செய்யும் சிறு தொழில்கள் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். பங்கு வர்த்தகத்துறையினர் லாபகரமான பாதைக்கு வருவார்கள். தரகுத் தொழில் செய்பவர்கள் இந்த வாரம் பணப்புழக்கம் அதிகம் பெறுவார்கள். மொத்த வியாபாரிகள் அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவிலான தொழில் தொடங்க முற்படுவீர்கள். சிறிய அளவிலான சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணமும் ஒரு சிலருக்குத் தோன்றும்.

பெண்களுக்கு - எந்த பிரச்சினையையும் எளிதாக கையாண்டு சுமுகமாக முடிப்பீர்கள். நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறும். திருமணமுயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாற்று மருத்துவ முறையை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் செயற்கை கருத்தரிப்புக்கும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் உருவாகும்.

மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த குழப்பமான பாடங்களுக்கு தெளிவு கிடைக்கும். கல்வியில் ஆர்வம் ஏற்படும்.

கலைஞர்களுக்கு - அரசின் ஆதரவு, கெளரவம் கிடைக்கும். ஒரு சிலர் அரசு செலவில் அயல்நாடு செல்வர். முயற்சிகள் வெற்றியாகும்.

பொதுப் பலன் - சொந்த வீடு வாங்க முற்படும் எல்லாச் செயல்களும் வெற்றி தரும். அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள், அரசின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பிரச்சினைகள் வரும். அவப்பெயர் உண்டாகும். வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். டிராவல்ஸ் டிரான்ஸ்போர்ட் நடத்துபவர்கள் மெதுவாக வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவார்கள். வழக்குகள் பேசித் தீர்க்கப்படும். நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறுவீர்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், சனி இந்த நாட்களும் நற்பலன்கள் உண்டாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - ஐயப்பன் கோயிலில், விளக்கேற்ற நெய் வாங்கி கொடுங்கள். பிரச்சினைகள் காணாமல் போகும். நல்ல பலன்கள் நடக்கும்.

***********************************************************************************

உத்திரம் -

செயல்களில் சிறிது சுணக்கம் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் எல்லாம் சரியாகும். முயற்சிகள் தொடரும். உடல்நலம் சிறிது பாதிப்பு ஏற்படும். சலிப்பு ஆயாசம் உண்டாகும்.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள். ஏற்படும் மனம் தெளிவில்லாமல் அலைபாயும். பணியில் கவனச்சிதறல் ஏற்படும். உயரதிகாரி உங்கள் மீது வருத்தம் கொள்வார். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் பிரச்சினைகள் ஏதும் வராது. பணியிட மாற்றம் ஏற்படும். விரும்பத்தக்கதாக இருக்கும். கட்டுமானத் தொழிலாளிகள் உழைப்பு அதிகமாகும். ஊதியம் குறைவாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும்.

தொழில் - வேண்டாத பிரச்சினைகள் வந்து சேரும். அரசு வழியில் அழுத்தங்கள் ஏற்படும். வழக்குகளால் மனசோர்வு ஏற்படும். அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் தள்ளிப்போகும். தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு - சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். ஒரு சிறிய தொகை திடீரென கைக்கு வரும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாது.

மாணவர்களுக்கு - ஞாபக மறதி அதிகமாகும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. நண்பர்களோடு பொழுதைக் கழிக்க வேண்டியது வரும்.

கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதைத் தேர்ந்தெடுப்பது என புரியாமல் விழிப்பீர்கள். பொறுமையாகத் தேர்ந்தெடுப்பது நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன் - மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். மனம் அலைபாயும். தியானம் யோகா செய்வது நல்லது. ஆரோக்கியம் ஒரே மாதிரி இருக்காது. சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சினையை தீர்க்கும்போது அடுத்த பிரச்சினை வரும். வீடு மாற்றம் ஏற்படும். வாகனப் பழுது ஏற்படும். இந்த வாரம் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் சாதகமாக இருக்கும். திங்கள் புதன் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீநரசிம்மருக்கு மலர்களால் அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

*************************************************************************

அஸ்தம் -

அலைச்சலைத் தவிர்க்க முடியாது. உடல் சோர்வு இருக்கும். தொலைதூரப் பயணங்கள் உண்டாகும். மனமும் உடலும் ஓய்வு எடுக்க ஏங்கும். உடல் நலம் பாதிக்கும். ஆனால் பெரிய பிரச்சினைகள் வராது. வீண் விரயங்கள் ஏற்படும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாது. குடும்பத்தினர் தேவைகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் அதிகமாகும். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கத் திணறுவீர்கள். வங்கிப் பணியாளர்கள் பணத்தைக் கையாளும் போது கவனம் தேவை. இல்லையென்றால் உங்கள் பணத்தை இழக்க வேண்டியது வரும். ஓட்டுநர்கள் பயணம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் சாலைகளில் கவனமாக இருக்க வேண்டும். தரகர்கள் அலைச்சல் அதிகமாகி கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போகும்.

தொழில் - இருப்பதை இருப்பது போலவே செய்து கொள்ளுங்கள். எவரிடமும் உதவி கேட்காதீர்கள். உங்கள் சுய பலத்தால் வெல்ல முடியுமே தவிர மற்றவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாது. கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். வழக்குகளை தள்ளிப்போட முயற்சி செய்யுங்கள். வியாபாரிகள் கடன் தருவதை நிறுத்துங்கள். பாக்கிகள் வசூலாவதில் சிரமம் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் தராதீர்கள். கடனையும் நீங்களே கட்ட வேண்டியது வரும். டிராவல்ஸ் நிறுவனங்கள் வாகனங்களை சரியாகப் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அதிக செலவுகளை ஏற்படுத்தும். இருசக்கர வாகனங்கள் செலவுகளை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு - செலவுகள் அதிகமாக இருக்கும். சகோதரர் சகோதரிகளுக்கு நீங்கள் உதவ வேண்டியது வரும். வேலையில் இருந்தால் அடுத்தவர் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டியது வரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு - கேளிக்கைகள் தவிருங்கள். கவனச்சிதறல் ஏற்படும். ஞாபகசக்தி குறையும். கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை உருவாகும்.

கலைஞர்களுக்கு - பணவரவு திருப்தியாக இருக்கும். நண்பர்கள் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

பொதுப்பலன் - ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறிய பிரச்சினை என்றாலும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. முதுகுத் தண்டுவட பிரச்சினை இருப்பவர்கள் சரியான மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வயதானவர்களாக இருந்தால் மூட்டுவலி, கால் பாதத்தில் பிரச்சினைகள் வரும். மனதில் தைரியம் குறையும். தன்னம்பிக்கை குறையும்.

இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, சனி ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நற்பலன்கள் தரும். செவ்வாய், வியாழன் இந்த இரண்டு நாட்களும் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - சூரிய வழிபாடு செய்யுங்கள். ஆதித்ய ஹிருதயம் கேட்பதும் நல்ல பலன்களைத் தரும்.

********************************************************************************

சித்திரை -

மனதில் அச்ச உணர்வு உண்டாகும். இனம்புரியாத பயம் ஏற்படும். மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். முடிவுகள் எடுப்பதில் குழப்பம் ஏற்படும். செலவுகளும் அதற்கேற்ற வரவுகளும் சமமாக இருக்கும். உறவினர்கள் பகை ஏற்படும். சகோதரர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். முடிந்த வரை அவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்தியோகம் - வேலையில் அதிக அழுத்தம் ஏற்படும். அதேசமயம் ஊதிய உயர்வு ஏற்படும். எதிர்பார்த்த இடமாற்றம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும். அதற்கான முயற்சிகள் இப்போது நடக்கும். ஒத்துழைப்பு தந்த உயரதிகாரிகள் இப்போது ஒத்துழைப்பு குறையும். உங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்புவார்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள். வியாபாரக் கடையில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொருட்களைக் கையாளும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்கள் நஷ்டம் அடைய வேண்டியது வரும். வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை கவனமாக ஓட்டுங்கள்.

தொழில் - தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. வழக்குகள் தள்ளிப்போகும் எதிர்பார்த்த கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை உண்டு. வியாபாரிகள் லாபம் பார்ப்பார்கள். சந்தைகளில் வியாபாரம் செய்து வருபவர்கள் அதிக லாபம் பார்ப்பார்கள். ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும். அயல் நாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இருந்தாலும் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிப்பது நல்லது.

பெண்களுக்கு - செலவுகளை கட்டுப்படுத்த தெரியாமல் திணறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடுகள் செய்வீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு - எவ்வளவு படித்தாலும், மனப்பாடம் செய்தாலும் மனதில் ஒட்டாது. ஞாபக மறதி, கவனச்சிதறல் போன்றவை உண்டாகும்

கலைஞர்களுக்கு - அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். எப்போதோ பேசி முடித்த விஷயங்கள் இப்போது நடைமுறைக்கு வரும்.

பொதுப்பலன் - வரவும் செலவும் சமமாக இருக்கிறது. எனவே எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். ஒரு சிலருக்கு காது வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். பயணங்கள் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். வாகனங்களை சரிவர பராமரிக்க வேண்டும்.

இந்த வாரம் செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு இந்த நான்கு நாட்கள் நல்ல பலன்களைத் தரும். முயற்சிகள் வெற்றியாகும்.

திங்கள் மற்றும் புதன் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்கு தேன் வாங்கித் தாருங்கள். உங்கள் பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

*************************************************************************************

சுவாதி -

திட்டமிட்ட காரியங்களைச் சொல்லி அடிப்பீர்கள். வெற்றிகளைக் குவிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். ஆன்மிகப் பயணம் ஏற்படும். வழிகாட்டக்கூடிய குருநாதரை சந்திப்பீர்கள். சொத்துக்களால் லாபம் ஏற்படும். வெளிநாட்டு பண உதவி கிடைக்கும்.

உத்தியோகம் - பணியிடத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் இருக்கும். வேலைகளை குறித்த நேரத்திற்கு முன் முடித்து விடுவீர்கள். சக நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு போட்டியில் வெற்றி பெறுவீர்கள். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவார்கள்.

அலுவலக குழுவிற்கு தலைமை ஏற்பீர்கள். வியாபார நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நண்பர்களோடு சேர்ந்து தொழில் திட்டம் தீட்டுவீர்கள். மொத்தத்தில் மகிழ்ச்சிகரமாக இந்த வாரம் இருக்கிறது.

தொழில் - தொழில் எதிர்பாராத வெற்றிகளையும் முன்னேற்றத்தையும் தரும். போட்டியாளர்கள் பின் வாங்குவார்கள். அரசுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். வருமானவரி பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை மேலோங்கும், அல்லது இணை நிறுவனங்கள் ஆரம்பிக்க முற்படுவீர்கள். தொழில்முனைவோர் பொருளாதார ஆதரவு கிடைக்கப் பெற்று தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை, மற்றும் அனைத்துத் துறையினரும் வெற்றிகரமான வளர்ச்சியை முன்னேற்றத்தை அடைவார்கள்.

பெண்களுக்கு - எல்லையில்லா மகிழ்ச்சி உருவாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர்கள் உதவுவார்கள். சொந்த வீடு கனவு இப்போது நிறைவேறும். வேலையில்லாத பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது ஆண் வாரிசு உண்டாகும்.

மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டில் சென்று கல்வி பயில வாய்ப்பு உண்டாகும்.

கலைஞர்களுக்கு - சாதிக்க முடியாத ஒன்றை சாதித்துக் காட்டுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பணம் பலவழிகளிலும் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள்.

பொதுபலன் - இந்த மாதம் முழுவதும் சாதகமாக இருந்தாலும் குறிப்பாக இந்த வாரம் அநேக நற்பலன்கள் கிடைக்கும். பணவரவு தாராளமாய் இருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். பழையசொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்குதல். உங்கள் பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் செய்தல். குடும்பத்தோடு சுற்றுலா செல்லுதல், குறிப்பாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகுதல் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

இந்த வாரம் திங்கள் புதன் வெள்ளி ஞாயிறு இந்த நான்கு நாட்களும் சாதகமான பலன்களை தரும்.

செவ்வாய், வியாழன், சனி இந்த மூன்று நாட்களும் பெரிய நன்மைகள் தராது.

வணங்க வேண்டிய தெய்வம் - நவகிரகத்தில் உள்ள சூரியபகவானுக்கு கோதுமையால் செய்த இனிப்பு நைவேத்யம் செய்து தானம் தாருங்கள். நன்மைகள் பெருகும். ஆதித்ய ஹிருதயம் கேளுங்கள். இன்னும் வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x