Published : 21 Oct 2019 12:50 PM
Last Updated : 21 Oct 2019 12:50 PM

இந்த வார நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை -  திருவாதிரை முதல் மகம் வரை 

- ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவாதிரை -


போராடினாலும் சோர்வே தெரியாது. ஏமாற்றம் இருந்தாலும் முகத்தில் தெரியாது. அதேசமயம் சாதித்தாலும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பீர்கள். இதுதான் இந்த வாரம் நடக்கும். குழப்ப மனநிலையிலிருந்து வெளிவருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர், சகோதரி இல்லத்தில் சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் பிணக்கு ஏற்பட்டு சரியாகும். நண்பர்கள் தொல்லைகள் கொடுப்பார்கள். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் நன்மையாகும். குழந்தை பாக்கியத்திற்காக மருத்துவ முயற்சிகள் மேற்கொண்டவர்களுக்கு இப்போது சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகம் - பெரிய தொந்தரவுகள் ஏதும் இல்லை. சக ஊழியர்களிடம் கேலி கிண்டல் செய்ய வேண்டாம். அது வருத்தத்தில் முடியும். உயரதிகாரிகளிடம் எதிர்த்து பேச வேண்டாம். பணி மாறுதல் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் எண்ணம் உடைவர்கள் இப்போதே அதற்கான முயற்சிகளில் இறங்கலாம். கட்டுமானத் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் அதிக உழைக்க வேண்டியது இருக்கும்.

தொழில் - சீராக இருக்கும். அடுத்த கட்ட சிந்தனைகள் வலுப்பெறும். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மன வருத்தம் அடைவார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லுங்கள். பேச்சுவர்த்தை ஏதும் நடத்த வேண்டி வந்தால் அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடுங்கள். புதிதாக தொழில் செய்யும் எண்ணம் உடையவர்களும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுபவர்களும் இன்னும் ஒரு வாரம் கழித்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகள் தொடரும். எண்ணெய், நெய் உள்ளிட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டு.மளிகை உள்ளிட்ட சிறு வியாபாரிகள் அளவான வளர்ச்சி காண்பார்கள்.

பெண்களுக்கு - குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் உறுதியாகும். வேலை இல்லாதவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். பணியிடத்தில் வெளியிடத்தில் அக்கம்பக்கத்தினருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவர்களுக்கு - கல்வியில் குழப்பம் நீடிக்கும். தேர்வுகளில் சரியான விடை எது என தெரியாமல் குழம்பிப் போவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள் எல்லாம் சரியாகும்.

கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் உருவாகும். அதற்கான வழிவகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வங்கிக்கடன் எதிர்பார்த்தால் இப்போது கிடைக்கும்.

பொதுப்பலன் - நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் இவர்களோடு அளவாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கருத்துவேறுபாடுகள் மனவருத்தங்கள் பிரச்சினைகள் உண்டாகும். ஆஸ்துமா மற்றும் தைராய்டு போன்ற பிரச்சினைகள் அதிகமாகும். நீரிழிவு பாதிப்பு அதிகமாகும், தகுந்த மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்களைத் தரும். பணவரவு திருப்தியாக இருக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றியைத் தரும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சொத்துக்கள் விற்பது வாங்குவது இவற்றால் லாபம் கிடைக்கும்.
செவ்வாய், வியாழன், சனி இந்த மூன்று நாட்களும் சாதகமாக இல்லை. பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவேண்டும். ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை செய்யக்கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு மாலை சூட்டி நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் மனக்குறைகள் நீங்கும். மனம் தெளிவாகும்.

**********************************************************************


புனர்பூசம் -
சோதனைகள் விலகும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த காரியத்தை எப்படியாவது போராடி ஜெயிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மன பாரம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். அசாத்திய துணிச்சலோடு சில காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாகும். சகோதரர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒற்றுமை பலப்படும்.

உத்தியோகம் - பணியில் எந்த பிரச்சினைகளும் இருக்காது. சகஜ நிலையே இருக்கிறது. பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வேலை கிடைக்க முயற்சிகள்மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் கடன் வேண்டி விண்ணப்பம் செய்வீர்கள். ஒருசிலர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெறுவீர்கள்.

தொழில் - தொழிலில் உள்ள கடன்கள் நீடிக்கும். அந்தக் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணத்தை சற்று கடுமை காட்டி வசூலிப்பீர்கள். மாற்றுத் தொழில் செய்யும் சிந்தனை உருவாகும். அதன் செயல் வடிவம் முழுமை பெற இன்னும் மூன்று மாத காலம் இருக்கிறது. எனவே நிதானமாகவே திட்டமிடுங்கள். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். தேவைகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் ஏற்படும். புதிய வியாபாரம் ஆரம்பிக்க முற்படுவீர்கள். இந்த சூழ்நிலைகள் இன்னும் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும்.

பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணத் தேதி குறிக்கப்படும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது நல்ல தகவல் கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்யும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் அந்த முயற்சி வெற்றியாகும்.

மாணவர்களுக்கு - கல்வியில் திடீர் தடைகளும் போராட்டங்களும் உண்டாகும். பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்வதில் தடை ஏற்படலாம்.

கலைஞர்களுக்கு - எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு பின்னடைவு உண்டாகும். இசைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திரைத்துறை சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும்.

பொதுபலன் - தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக்கொள்ளுங்கள். ஒருசிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். தூரத்து உறவினர் ஒருவரால் ஆதாயம் உண்டு. தோல் அலர்ஜி சுவாச அலர்ஜி ஏற்படும். ஒருசிலருக்கு கால் பாதங்களில் வெடிப்பு, கால் ஆணி வரும். அலைச்சல் மிகுந்த தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். வாடகை வீட்டில் இருப்போர் வேறு வீடு மாற சூழ்நிலைகள் உருவாகும்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்கள் தரும். பணவரவையும் மனநிறைவையும் தரும்.
புதன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களில் பெரிய நன்மைகள் ஏதும் நடைபெறாது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும். மனதில் தைரியம் உண்டாகும்.

************************************************************************************

பூசம் -
நினைத்தது நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். செலவுக்கேற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள்.போட்டி என்பதே இருக்காது. வீடு வாங்கும் யோகம் உண்டு.காலி மனை வாங்கவும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகம் - பணியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். உங்கள் கருத்து ஏற்கப்பட்டு செயல் வடிவமாகும். அலுவல் விஷயமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். பிரபல நிறுவனங்களில் பணியாற்ற அழைப்பு வரும். விற்பனைப் பிரதிநிதிகள் முதல் கடைகளில் வேலை செய்வோர் வரை அனைவருக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எளிதாக முடியும்.

தொழில் - வளர்ச்சிப் பாதையில் செல்லும். பங்கு வர்த்தகத் துறையினர் கணிசமான லாபம் பெறுவார்கள். அரசின் ஆதரவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.போட்டி நிறுவனம் பின் வாங்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.ஏற்றுமதி தொழில் விரிவடையும்.தொழில் விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். ஊழியர்கள் உற்சாகமாக பணியாற்றுவார்கள். அரசு ஒப்பந்தம் பெறவும் வாய்ப்பு உள்ளது. நெசவுத் தொழில், சாயத் தொழில், நூல் வியாபாரம் வளர்ச்சியும் லாபமும் அடையும். பழைய கடன்கள் தீரும். உணவகத்தொழில் உச்சம் அடையும்.

பெண்களுக்கு - நினைத்தது நிறைவேறும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். வேலை கிடைக்கும். பதவி உயர்வு உண்டு. ஊக்கத் தொகை கிடைக்கும். திருமணம் உறுதியாகி திருமணத் தேதி குறிக்கப்படும்.

கலைஞர்களுக்கு - மனநிறைவு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அயல் நாடு செல்லும் வாய்ப்பும் அதன் மூலம் வருமானமும் கிடைக்கும்.

பொதுப் பலன் - கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள். எல்லா வாய்ப்புகளும் பொன்னான வாய்ப்புகள் என உணருங்கள். சிறிய வாய்ப்பும் பின்னாளில் பெரும் வாய்ப்புகளை பெற்றுத் தரும். பணவரவு தாராளமாய் இருக்கும். சிக்கனம் கடைபிடியுங்கள். எதிரிகள் காணமல் போவார்கள். துரோகிகள் மன்னிப்பு கேட்பார்கள். சொந்த வீடு திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.
இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் அருமையான நாட்கள். வியாழன் மற்றும் சனி இந்த இரு நாட்களும் சுப காரியங்கள் முதல் பயணங்கள், ஒப்பந்தங்கள் என எதுவும் தவிர்ப்பது நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் - பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேத்தியம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும்.

****************************************************************************

ஆயில்யம் -
நினைத்தது நடக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். அல்லது கடன்கள் தீர வழி வகைகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் உதயமாகும். அதை செயல்படுத்த பல வகையிலும் உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். திருமணம் உறுதியாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்போது வேலைக்கான உத்தரவு கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும். குலதெய்வ வழிபாடு உண்டாகும்.

உத்தியோகம் - எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டு. அலுவலகத்தில் பரபரப்பாக செயல்பட்டு வேலைகளை துரிதமாக முடிப்பீர்கள். பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அவருடைய பரிந்துரையின் பேரில் பதவி உயர்வு உள்ளிட்ட நன்மைகள் நடக்கும். சிறிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனங்களுக்கு நல்ல பதவியோடு ஊதிய உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும். கட்டுமான ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். அயல்நாட்டில் வேலை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் அதற்கான பணி ஆணை பெறுவீர்கள்.

தொழில் - நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவது அல்லது கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பது போன்ற காரியங்கள் எளிதாக நடைபெறும். .புதிய நிறுவனம் ஆரம்பிக்க இடம் தேடிக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது நல்ல இடத்தை அடையாளம் காண்பார்கள். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்கள் பொருளாதார ஆதரவு கிடைக்கப் பெற்று தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் சலுகைகள் அறிவித்து ஆதாயம் பெறுவார்கள். தரகு கமிஷன் தொழில் செய்பவர்கள் லாபம் பார்ப்பார்கள். சில்லறை வணிகம் செய்பவர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்களுக்கு - இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். அரசு வேலை கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி மையத்தில் சேர்வீர்கள்.

கலைஞர்களுக்கு - ஒப்பந்தங்களும் வருமானமும் உண்டாகும். நீண்டநாளாக பேசி வந்த விஷயம் இந்த வாரம் முடிவு செய்யப்படும். பலருடைய ஒத்துழைப்பு கிடைக்கும். நாட்டியக் கலைஞர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுப்பலன் - பம்பரமாகச் சுழன்று எல்லா விஷயங்களையும் சாதுரியமாக முடிப்பீர்கள். அதனால் லாபமும் முன்னேற்றமும் அடைவீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகனங்கள் வாங்கும் யோகம் . உண்டு வங்கி பணி இன்சூரன்ஸ் தபால் துறை போன்ற பணிகளில் இருப்பவர்கள் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். சேமிப்புகளை முதலீடாக மாற்ற முற்படுவீர்கள். இந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நற்பலன்களும், யோகங்களும் உண்டாகும். வியாழன் மற்றும் சனி இந்த இரண்டு நாட்களும் பெரிய நன்மைகள் எதுவும் நடக்காது. பேச்சுவார்த்தைகளை தவிருங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம். பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - சக்கரத்தாழ்வாருக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து தானம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். நல்லதே நடக்கும்.

******************************************************************************

மகம் -
தடைகள் மெல்லமெல்ல விலகுவதை நீங்களே உணர்வீர்கள். இனி தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கவலைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும். உதவாமல் ஒதுக்கியவர்கள் கூட இப்போது ஓடிவந்து உதவ முன்வருவார்கள். அடிக்கடி ஏற்பட்ட வாகனப் பழுதுகள் இனி இருக்காது. வீட்டில் ஒருவருக்கொருவர் சரியாக பேசக்கூட முடியாமல் இருந்தவர்கள் இனி சகஜ நிலைமைக்கு மாறுவார்கள். தாய்வழி உறவினர்கள் பகையை மறந்து ஒன்று சேர்வார்கள். தாயார் உடல் நலம் இப்போது சீராகும். மருத்துவ ச் செலவுகள் குறையும். வீடு விற்கும் எண்ணம் மாறி வேறு வகையில் பணம் புரட்ட முற்படுவீர்கள். வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சி ஆரம்பிப்பீர்கள்.

உத்தியோகம் - பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். பணிச்சுமை குறையும். அலுவலகத்திலிருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். அலுவலகத்தில் வாங்கிய கடனை அடைக்க புதிய கடன் பெறுவீர்கள். பணியிட மாற்றம் ரத்து செய்யப்படும். ஊர் ஊராகச் சுற்றி அலுவல் பணி செய்தவர்கள் இனி அலுவலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பார்கள். அதாவது இனி அலைச்சல் என்பது இருக்காது. காவல் துறை பணியாளர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி பெறுவார்கள். இதுவரை வேலை இல்லாமல் தவித்தவர்கள் இந்த வாரம் பணிஆணை பெறுவீர்கள்.

தொழில் - நாலாபக்கமும் பிரச்சினை, என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கிய நிலைமை இனி இருக்காது. இந்த வாரத்திலிருந்து தொழில் மெல்ல வளர்ச்சிப் பாதை நோக்கிச் செல்லும். வர வேண்டிய நிலுவைத் தொகை வர ஆரம்பிக்கும். மின்சாரம் மற்றும் மின்னணுத் தொழில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி சோதனை முயற்சிகள் ஆரம்பிப்பீர்கள். எண்ணெய் உற்பத்தியாளர்கள் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, இதன் தொடர்பான வியாபாரிகள் விற்பனை அதிகரிப்பு இந்த வாரம் முதல் அதிகமாவதை கண்கூட பார்ப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வலர்கள் இதுவரை கிடைக்காத ஆதரவை இப்போது கிடைக்கப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு - மனபாரம் நீங்கும். உடல் நலம் சீராகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மருத்துவச் செலவுகள் குறையும். வீட்டு நிலைமை பற்றிய கவலை தீரும். சொத்து சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும்.

மாணவர்களுக்கு - மறதி என்கிற பிரச்சினை தீர்ந்து ஞாபகத்திறன் அதிகரிக்கும். கல்வியில் ஆசிரியர் ஒருவரின் உதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - விரக்தியிலிருந்து வெளிவருவீர்கள். வாய்ப்புகள் ஒன்றிரண்டாக வர ஆரம்பிக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

பொதுப் பலன் - அக்கம் பக்கத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். வீட்டு ரிப்பேர் செலவுகள் குறையும். வாகனப்பழுது செலவுகள் இனி குறையும். திருமண ஏற்பாடுகள் தீவிரமாகும். மனதில் இருந்த அச்ச உணர்வு மறையும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் வழக்குகள் தீரும். இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்கள் நன்மை தரக்கூடிய நாட்கள் ஆகும்.
திங்கள் மற்றும் சனி எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அல்லது எருக்கம் பூ மாலை சாற்றி வழிபடுங்கள். விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் விரைந்து நடக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x