Published : 15 Oct 2019 02:53 PM
Last Updated : 15 Oct 2019 02:53 PM

இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : பூரம்  முதல் சுவாதி வரை


ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரம்
போராடி போராடி வெற்றி பெறுபவர்கள் நீங்கள். இந்த வாரம் போராட்டங்கள் இருந்தாலும் இறுதியில் வெற்றியைக் காண்பீர்கள். மனச்சோர்வு அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்கள் ஏற்படும். எடுக்கின்ற முயற்சிகள் கடைசிநேரத்தில் சாதகமாக மாறும்.

உத்தியோகம் - வேலையில் அழுத்தங்கள் அதிகரிக்கும். அடுத்தவர் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். உடலும் மனதும் ஓய்வுக்காக ஏங்கும். ஆனாலும் பணிச் சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். அலுவல் வேலையாக பயணங்கள் ஏற்படும். உயர் அதிகாரியின் அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கும்.

தொழில் - தொழிலில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருந்து கொண்டே இருக்கும். இந்த வாரம் ஒரு சில நற்பலன்கள் கிடைக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறிது குறையும் அவர்களைப் பேசி சமாதானப்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக வராத தொகை இப்போது வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக இருக்கும். காய்கறி வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். மின்சாதனம், ஹார்டுவேர் கடை வைத்திருப்பவர்கள் நல்ல வியாபாரமும் கூடுதல் லாபமும் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு -அதிர்ஷ்டத்தின் வாயிலாக பரிசுகளைப் பெறுவீர்கள். குலுக்கல் சீட்டு போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை வாங்கி மகிழ்வீர்கள். பணியிடத்தில் அழுத்தங்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு _படிப்பில் கவனம் சிதறும், ஆடம்பர விஷயங்களில் நாட்டம் ஏற்படும். சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருங்கள். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காதீர்கள்.

கலைஞர்களுக்கு _பணவரவு சரளமாக இருக்கும். ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாலின சர்ச்சைகளில் சிக்க வேண்டியது வரும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

பொதுப்பலன் - எதிர்பாலினத்தவரோடு பழகும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளப் பயன்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் யோக பலன்களை தரும். லாபம் உண்டாகும். வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எந்த பேச்சுவார்த்தைகளிலும்,ஒப்பந்தங்களையும் செய்யக்கூடாது. பயணங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் - காலபைரவர் வழிபாடு, பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்வது பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும். மேலும் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும்.

***********************************************************************************************************

உத்திரம்
எளிமையாக இருந்துகொண்டே வெற்றிகளைக் குவிப்பவர் நீங்கள். இந்த வாரம் நல்ல பலன்களும் தொந்தரவுகளும் மாறி மாறி வரும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சில சில அச்சுறுத்தல்கள் வரும். ஆனால் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. வீடு மாறுவது வீட்டை விற்பது போன்ற விஷயங்கள் மனநிம்மதியை பாதிக்கும். சேமிப்புகள் கரையும்.

உத்தியோகம் - ஒருநாள் வேலைப்பளுவும் மறுநாள் வேலை அழுத்தங்கள் ஏதுமில்லாமலும் இப்படி மாறி மாறி இருக்கும். சக ஊழியர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என இனம் புரியாமல் குழம்பிப் போவீர்கள். யார் நெருக்கமாக இருந்தாரோ அவரே எதிர்ப்புகளையும் தருவார். உயரதிகாரிகளின் எரிச்சலுக்கு ஆளாக வேண்டியது வரும். பொறுமையைக் கடைபிடித்தால் அனைத்தும் மாறும். கட்டிடத் தொழிலாளிகள் சிறு சிறு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் பணிச்சுமை அதிகமாகும். கூடுதல் நேரம் என்னும் ஓவர் டைம் வேலை உண்டாகும். உடல் அசதி, உடல்வலி போன்ற உபாதைகள் வரும்.

தொழில் - தொழிலில் கவனமாக இல்லாவிட்டால் அரசின் நெருக்கடிக்கு ஆளாக வேண்டியது வரும். வருமான வரி தாக்கல் போன்ற முக்கியமான விஷயங்களில் அசட்டையாக இருக்கக்கூடாது. காசோலைகள் வழங்கும்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு தர வேண்டும், வங்கிக் கடன் கெடுபிடிகள் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்றாகவே இருக்கிறது பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. .தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு - பணத் தட்டுப்பாடு இருக்காது. ஆனால் இடுப்பு வயிறு போன்ற பகுதிகளில் உபாதைகள் இருக்கும். அதற்கான மருத்துவச் செலவுகள் ஏற்படும், பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது.

மாணவர்களுக்கு - கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆடம்பரங்களை தவிர்த்து விடுங்கள். நல்ல நண்பர்களின் சகவாசத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கலைத்துறை, சின்னத்திரை, இசைத்துறை இப்படி எல்லா கலைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் வரும். ஒரு சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

பொதுப் பலன் - மருத்துவச் செலவுகள் உண்டாகும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சர்க்கரை நோயாளிகள் சரியான மருந்தை எடுப்பது மட்டுமல்லாமல் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். இந்த வாரம் செவ்வாய் புதன் வியாழன் சனி இந்த நான்கு நாட்களும் தனவரவு, சொத்துக்களால் லாபம், கமிஷன் லாபம் உண்டாகும். வெள்ளி மற்றும் ஞாயிறு இந்த இரண்டு நாட்களிலும் பெரிய நன்மைகள் ஏதும் நடக்காது. முக்கிய வேலைகள் ஏதும் இருந்தால் அடுத்த நாளைக்கு தள்ளிப் போடுங்கள். ஒப்பந்தங்கள், பயணங்கள் கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள். ஆரோக்கியத்தைக் காப்பார். தடைகளை அகற்றுவார். மன தைரியத்தை தருவார்.

************************************************


அஸ்தம்


மகிழ்ச்சியைக் கொண்டாடி தீர்ப்பவர்கள் நீங்கள். எல்லோரிடமும் எளிதாக பழகுபவர்கள் நீங்கள். இந்த வாரம் வரவுகளும் வரவுக்கு ஏற்ற செலவுகளும் சமமாக இருக்கும். கையில் வந்த பணம் கணநேரத்தில் கரையும். காரணம் செலவுகள் வரிசையாக காத்துக் கொண்டிருக்கும்.

உத்தியோகம் - வேலைப்பளு அதிகரித்தாலும் அதன் பாரம் உணராமலேயே கடந்து செல்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். விரயங்களும் உண்டு. அலுவலகப் பணத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். இது வங்கிப் பணியில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். உடல் அசதி ஆயாசம் ஏற்படும். ஒருசிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளும் உண்டாகலாம். இதன் காரணமாக விடுமுறை எடுக்க நேரிடலாம்.

தொழில் - இந்த வாரமும் தொழில் சுமுகமாகவே செல்லும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நிறுவனங்களில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்தினால் பணத்தேவைகள் குறையும். ஊழியர்கள் வருத்தத்துடன் இருப்பார்கள். அவர்களின் கவலைகளை முடிந்தவரை சரி செய்யுங்கள், வெளிநாட்டிலிருந்து வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும். அவரால் பொருளாதார உதவிகளும் கிடைக்கும். அரசு நிர்வாகத்துடன் மோதல் போக்கை கைவிட வேண்டும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சில நிறுவனங்களுக்கு வருமான வரி சோதனை ஏற்படலாம். கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், நகைக் கடை வைத்திருப்பவர்கள் இவர்களெல்லாம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது அவசியம். கடன் சுமைஅதிகரித்தாலும் கட்டுக்குள்ளேயே இருக்கும். வழக்குகள் ஏதேனும் இருந்தால் தள்ளிப்போகும்.

பெண்களுக்கு - மனச் சுமைகள் இருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பீர்கள், பரபரப்பாக இயங்கி பல சாதனைகளைச் செய்வீர்கள். வியாழக்கிழமைக்கு மேல் அதிர்ஷ்ட வாய்ப்பு காத்திருக்கிறது.

மாணவர்களுக்கு - படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் வேண்டாத நட்புகளால் கவனம் சிதறும் எச்சரிக்கையாக இருங்கள்.

கலைஞர்கள் - பலவித கவலைகள் இருந்தாலும் பணவரவு தாராளமாக இருக்கும்.செலவுக்கு ஏற்ற வருமானம் வந்து கொண்டே இருக்கும். செலவுகளும் இருந்து கொண்டே இருக்கும். புதிய திரைப்பட ஒப்பந்தங்கள் பேசி முடிக்கப்படும். அது தொடர்பான வேலைகள் தொடங்குவீர்கள்.

பொதுப் பலன் - உடல் நலத்திற்காக மருத்துவச் செலவுகள் அவ்வப்போது ஏற்படும். அதிலும் திங்கள் செவ்வாய் புதன் இந்த மூன்று நாட்களும் மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும்.
வியாழன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்கள் உங்களுக்கு சாதகமாகவும் நிறைய நன்மைகளை தருவதாகவும் இருக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாக நடக்கும். ஆரோக்கியம் சீராகும்.

**********************************************************************************************

சித்திரை -
பயணங்களில் பெரு விருப்பமும் நண்பர்கள் அதிக அளவிலும் வைத்திருப்பீர்கள். இந்த வாரம் தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் வாரக் கடைசி நாட்களில் நன்மைகள் நிறைய நடக்கும்.

உத்தியோகம் - பணியிடத்தில் இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அமைதியாக இருங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். சக ஊழியர்கள் மட்டுமல்லாமல் உயர் அதிகாரிகளிடமும் அளவோடு பேசுங்கள். வியாழக்கிழமைக்குள் எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உடல் உழைப்பைக் கொண்ட தொழிலாளர்கள் அதிக வேலைப்பளு வுக்கு ஆளாவார்கள். இந்த வாரம் பெரிய நன்மைகளும் இல்லை. அதேசமயம் தீமைகளும் அதிக அளவில் இல்லை.

தொழில் - பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. உள்ளது உள்ளபடியே இருக்கும் வளர்ச்சியும் இல்லை தளர்ச்சியும் இல்லை. சக போட்டியாளர்கள் முன்னேறிச் செல்வது போல் தெரியும். அதைப் பார்த்து கவலைப்படுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான வளர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக இந்த வாரத்தை அமைதியான முறையில் கடந்து செல்வது நல்லது.

பெண்களுக்கு - மனக் கவலைகள் அதிகரிக்கும். குடும்பத்தின் எதிர்காலம் கருதி அதிக கவலை ஏற்படும். மனம் பரபரப்பாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாது. உடல் பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள் ,உண்மையில் உடல் பலவீனம் அடையவில்லை. மனம்தான் பலவீனமாக உள்ளது. தியானம், யோகா முதலான பயிற்சிகளைச் செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு - கவனச்சிதறல் ஏற்படும். படிப்பில் நாட்டம் வராது. சலிப்பும் சோர்வும் சோம்பலும் இருக்கும். இதையெல்லாம் தாண்டி வரவேண்டும். மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

கலைஞர்களுக்கு - எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற கவலை இருக்கும். சோதனையோ வேதனையோ எல்லாம் சில காலம்தான், விரைவில் நல்ல நிலைக்கு வருவீர்கள். பணத் தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

பொதுப்பலன் - வாரத் துவக்கத்தில் வியாழக்கிழமை வரை மன உளைச்சலும் தடைகளும் ஏற்படும். வெள்ளி சனி இரண்டு நாட்கள் மட்டுமே உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. அந்த நாட்களில் மட்டும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகள் கிடைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் - விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதும், அனுமன் சாலிசா கேட்பதும் துயரங்களைக் குறைக்கும்.

***************************************************************************************************************

சுவாதி -
எல்லோரும் நமக்கு நண்பர்களே என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும். பகைவரையும் முடிந்தவரை அனுசரித்துச் செல்வீர்கள். இந்த வாரம் வியாழக்கிழமை வரை எல்லா நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும் திருமண ஏற்பாடுகள் சாதகமாகும். கூட்டுத்தொழில் நல்லபடியாக இருக்கும். வருத்தங்கள் தீரும்

உத்தியோகம் - வேலையில் சுறுசுறுப்பும் ஆர்வமும் இருக்கும். உங்களுக்கு எதிரான ஊழியர் கூட நன்மை செய்ய முன்வருவார். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே நிறைவேறும். குழுவாக வேலை செய்பவர்கள் ஒருமித்து வேலை பார்ப்பார்கள். இது அலுவலகத்திற்கு மட்டுமல்ல கட்டிடப் பணி முதலான அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். உணவகத்தில் வேலை புரிவோர் ஊதிய உயர்வு, சிறப்பு ஊதியம் பெறுவார்கள்.

தொழில் - வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். இலக்கு வைத்து உற்பத்தி செய்து வெற்றி காண்பீர்கள். செய்கின்ற தொழிலுக்கு இணையான வேறு தொழில் செய்வதற்கு முயல்வீர்கள் அதற்கான வழி வகைகளும் கிடைக்கும். நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உற்சாகத்தோடும் உண்மையோடும் உழைப்பார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி ஒரு ஆயாசம், சலிப்பு ஏற்படும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். புதிய தொழில் முனைவோர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். கூட்டாக தொழில் செய்யும் திட்டங்களோடு இருப்பவர்கள் நல்ல கூட்டாளிகளை இந்தவாரம் அடையாளம் காண்பீர்கள். உணவுத் தொழில், காய்கறி வியாபாரிகள், மளிகைக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் காண்பார்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷன் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான பாதையை காண்பார்கள்.

பெண்களுக்கு - மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய பொருளை வாங்குவீர்கள், குறிப்பாக வீட்டு உபயோகப் பொருளாகவும் இருக்கலாம். ஆபரணங்களாகவும் இருக்கலாம், விலை உயர்ந்த உடையாகவும் இருக்கலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். அல்லது அதற்கான முயற்சிகளில் இறங்கி வழிவகை காண்பீர்கள். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். அரசு பணி எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் வந்து சேரும்.

மாணவர்களுக்கு - அருமையான வாரம். கல்வியில் இருந்த சந்தேகங்கள் தீரும். பாடம் சம்பந்தமான விளக்க புத்தகம் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - நீண்ட நாளாக போராடிய ஒரு விஷயம் இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வெளிநாடு செல்லும் யோகம் கூட உண்டு.

பொதுப்பலன் - இந்த வாரம் வியாழக்கிழமை வரை உங்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும். நினைத்தது நிறைவேறும், கேட்டது கிடைக்கும், . வெள்ளி சனி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் அமைதி காப்பதும், ஓய்வு எடுப்பதும் நல்லது.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீ வாராகி அன்னையை வணங்குவதும்,ஸ்ரீ வாராகி மூல மந்திரத்தை பாராயணம் செய்வதும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x