Published : 15 Oct 2019 10:21 AM
Last Updated : 15 Oct 2019 10:21 AM

இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : அஸ்வினி முதல் மிருகசீரிடம் வரை


ஜோதிடர் ஜெயம் சரவணன்


அசுவினி
வெற்றிகள் குவிக்கும் வாரம் இது. தடைகள் அகன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனக்கவலை தீரும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பல தரப்பட்ட சிந்தனைகள் மேலோங்கும். இந்த வாரம் பரபரப்பாக இயங்குவீர்கள். வருமானத்தை இருமடங்காக உயர்த்த வழி வகை செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகம் - பணியில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த அழுத்தங்கள் குறைந்து சகஜ நிலைக்குத் திரும்புவீர்கள். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மனக் கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தபட்ட விஷயங்கள் சுமூகமாக இருக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் அதிலும் அயல்நாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்கள் இந்த வாரம் வியாழன் அன்று நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள்.

தொழில் - சுய தொழில் செய்பவர்கள் கடும் போராட்டத்துக்கு பின் சாதிப்பீர்கள். பழைய கடன் பாக்கி அழுத்தத்தைத் தந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் இருக்கும்.வியாபாரிகளாக இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை, லாபம் குறையாது. ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல லாபம் ஈட்டும் வியாபாரம் பேசி முடிக்கப்படும். மார்க்கெட்டிங் துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவீர்கள்.

பெண்களுக்கு - மனக் கவலைகள் தீரும். உறவினர் வருகை அல்லது உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என மனமகிழ்வை தரும் வாரம் இது. பணியில் இருந்த வேலைப் பளு குறையும். ஒரு சிலருக்கு ஆபரணம் பரிசாக கிடைக்கும்.

மாணவர்களுக்கு _ மந்த நிலையில் இருந்து விடுபடுவீர்கள். சுறுசுறுப்பு தொற்றிக் கொள்ளும். கல்வியில் ஆர்வம் ஏற்படும் உயர் கல்வி பயில்பவர்கள் கவனத்தை திசை திருப்பாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

கலைஞர்களுக்கு - புதிய ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை தொடங்கும். ஒரு சிலருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அனைத்தும் வெற்றிகரமான முயற்சிகளாகவே அமையும்.

பொதுப் பலன்_ திங்கள், செவ்வாய், வியாழன், சனி இந்த 5 நாட்களும் வெற்றியைத் தரும். புதன்கிழமை பயணங்கள் மற்றும் புதிய ஒப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள் பிரச்சினைகள் தேடி வரும். காது அல்லது தொண்டை வலி வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீஐயப்ப சுவாமியை வணங்குங்கள். தடைகள் அகலும்.

************************************************************

பரணி
இதுவரை எவ்வளவோ முயன்றும் முடியாத காரியங்கள் இந்த வாரம் எளிதாக முடியும். முட்டுக்கட்டை போட்டவர்கள் காணமல் போவார்கள். யாரெல்லாம் எதிர்பாளர்களோ அவர்களே வந்து உதவுவார்கள். அதாவது எதிரிகளால் நன்மை ஏற்படும்.

உத்தியோகம் - வேலையில் பம்பரமாகச் சுழன்று கடினமான வேலையையும் எளிதாக முடிப்பீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு பெருகும். உயர் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தச்சர், பிளம்பர் போன்ற வேலை செய்பவர்களுக்கு இடையறாத பணி ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

தொழில் -இதுவரை இருந்த தேக்க நிலை மாறி தொழில் சூடு பிடிக்கும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலுக்கான வங்கிக் கடன் இந்த வாரம் கிடைக்கும். வழக்குகள் தள்ளிப்போகும். தரகு மற்றும் கமிஷன் ஏஜண்ட் தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். மருந்துக்கடை மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில் செய்பவர்கள் வரவு திருப்திகரமாக கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு _ நீண்ட நாட்களாக விற்க முடியாத நிலம் வீடு போன்ற சொத்துக்கள் லாபத்தோடு விற்பீர்கள், அதற்கான ஒப்பந்தம் ஏற்படும். ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும்.

மாணவர்களுக்கு - கல்வியில் இருந்த ஆர்வமற்ற தன்மை மாறி இப்போது கல்வியில் ஆர்வம் உண்டாகும். கல்வியைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாதீர்கள்.

கலைஞர்களுக்கு - நண்பர்களின் உதவியோடு புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். பண உதவி கிடைக்கும். ஊடகத் துறையினர் பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

பொதுப் பலன் - திருமணம் நிச்சயம் ஆகும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது அந்த பாக்யத்துக்கான சேதி தெரியவரும். சொந்த வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும் அதற்கான திட்டம் தீட்டுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகள் நன்மைகள் அதிகம் நடக்கும். வியாழன் மற்றும் சனிக் கிழமைகள் பயணங்கள், ஒப்பந்தங்கள், புதிய பேச்சுவார்த்தைகள் தவிர்க்க வேண்டும். தலைவலி மற்றும் அலர்ஜி வர வாய்ப்பு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீமாரியம்மன் அன்னையை வணங்குங்கள் எல்லாம் நன்மையாகும்.

***********************************************


கார்த்திகை
விரக்தியின் விளிம்பில் இருந்தீர்கள். இனி மகிழ்ச்சியின் உச்சியில் திளைக்கப் போகிறீர்கள். தடைகள் எல்லாம் கானல் நீராக மாறுவதை கண்கூட பார்க்கப் போகிறீர்கள். எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகள் சாதகமாக மாறும். எதிர்தாரர் சமாதானமாகப் பேச வருவார். பூர்வீகச் சொத்து பாகப் பிரிவினை சுமூகமாகத் தீரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி வேகமெடுக்கும். திருமணப் பேச்சு வார்த்தை உறுதியாகும்.

உத்தியோகம் - பணியிடத்தில் சக ஊழிய நண்பர்கள் உதவியோடு பணிகளை முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றம் ரத்தாகும். உங்கள் மீதான வீண் பழி விசாரணைக்கு பின் உங்களுக்கு சாதகமாகும்.இடமாற்றம் வேண்டுவோர் இப்போதே முயற்சி செய்யுங்கள். அடுத்த ஒரு சில நாட்களில் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

தொழில் - புதிய தொழில் முனைவோர் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். மனம் தளராமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.தொழிலில் மந்த நிலை மாறி வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும் .வருமான வரி போன்ற துறைகளின் கெடுபிடிகள் சமூகமாக மாறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இப்போது ஈடேறும். கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் இப்போது தொழில் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்வீர்கள்.

பெண்களுக்கு _ மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.வேலைவாய்ப்புகள் உங்களுக்கு இப்போது எளிதாக கிடைக்கும்.பாகப்பிரிவினை சம்பந்தமான சொத்துப் பிரச்சினைகள் தீரும். திருமணம் உறுதியாகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்பொழுது புத்திரபாக்கியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வழிகாட்டி அல்லது ஒரு ஆசிரியர் துணை இப்போது உங்களுக்கு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு _ கஷ்டங்கள் நீங்கி பணவரவு திருப்தியாக இருக்கும்.கிடப்பில் போடப்பட்ட விஷயங்கள் மீண்டும் உயிர் பெறும். உற்ற நண்பர் ஒருவரின் உதவியோடு புதிய வாய்ப்பு ஒன்று கிடைக்கும்.

பொதுப்பலன் -திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடந்தேறும் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி இந்த ஐந்து நாட்களும் உங்களுக்கு நன்மைகள் பெருமளவில் நடக்கும்.

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது, பயணங்கள் முதலானவை செய்யக்கூடாது. அதேபோல புதிய பொருட்கள் வாங்குதல், காசோலை கொடுத்தல், கணக்கு வழக்குகள் பார்த்தல் போன்றவை கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் - சிவாலய வழிபாடும், நமசிவாய மந்திரமும் தடைகளை அகற்றி நன்மைகளை அதிக அளவு உண்டாக்கும்.

*****************************************************************************************


ரோகிணி
எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் எந்த வேலையும் நடக்க மாட்டேன் என்கிறது என்ற புலம்பல் இனி இருக்காது, இனி எல்லா காரியங்களும் எளிதாக நிறைவேறும். நீங்கள் நினைத்தது நினைத்தபடியே அனைத்தும் நடக்கும்.அலைச்சல் அதிகரித்தாலும் லாபம் குறையாது. ஒரு சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும். எதிர்பார்த்த பணம் சிறிது தாமதமானாலும் கைக்கு வந்து சேரும்.

உத்தியோகம் - இதுவரை வேலையிலிருந்த அழுத்தங்கள் குறைந்து மன நிறைவு தரும். உயரதிகாரியின் ஆதரவோடு புதிய பணியை ஏற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். ஊதிய உயர்வு உண்டு. பதவி உயர்வும் உண்டு. சிறு நிறுவனங்களில் பணிபுரிவோர் பெரிய நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெறுவார்கள், அதாவது வேலை மாற்றம் ஏற்படும்.

தொழில் -நெருக்கடிகள் இருந்தாலும் அதையெல்லாம் சமாளித்து நெருக்கடிகளைக் கடந்து செல்வீர்கள். போட்டி நிறுவனங்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளை அலட்சியமாகக் கையாளுவீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களின் தேவையை இப்போது பூர்த்தி செய்வீர்கள்.

பெண்களுக்கு _ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். திருமணம் நிச்சயமாகும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும், மருத்துவச் செலவுகள் குறையும். மன நிறைவு பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு _கல்வியில் அதிக ஆர்வம் ஏற்படும். இப்போது தேர்வுகள் ஏதும் நடந்தால் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.

பொதுப்பலன் -பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வெளிநாடு தொடர்பு உடைய வியாபாரங்கள் விருத்தியாகும்.
செவ்வாய், புதன், வியாழன், சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்களை வாரி வழங்கும். தனவரவு, புதிய வாகனங்கள் வாங்குதல், வீடு வாங்கும் யோகம் போன்றவை நடக்கும். திங்கள், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்களும் எந்த புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது. புதிய ஒப்பந்தங்கள் போடக்கூடாது, பிரச்சினைகளை பேசித் தீர்க்கக் கூடாது. அது உங்களுக்கு எதிராக போகும். பயணங்கள் கூடாது.

வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகப் பெருமானை அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள், விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்கள். தடைகள் அகன்று நன்மைகள் அதிகமாகும்.

************************************************************************************************************

மிருகசீரிடம்
உழைப்பதற்கு சலிக்காதவர். உழைப்பே உயர்வு தரும் என்பதை முழுமையாக நம்புபவர் நீங்கள். இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியங்களில் முனைப்புடன் இறங்கி வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் செய்வீர்கள். வீடு மாறும் எண்ணம் உண்டாகும். நல்ல வீடு அமையும்.

உத்தியோகம் - பணிபுரியும் இடத்தில் இருந்த எதிர்ப்புகள் காணாமல் போகும். வேலையில் மன நிறைவு உண்டாகும். உங்கள் கருத்துக்கு அனைவரும் மதிப்பளிப்பார்கள். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதன் மூலம் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

தொழில் - முடங்கிப் போய் விடுவோமோஎன்று நினைத்த தொழில் இப்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும். அதற்கான வழிவகைகள் இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கும். பழைய வங்கிக் கடனை அடைத்து புதிய கடன் பெற்று தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அயல்நாட்டிலிருந்து தொழிலுக்கு உதவி கிடைக்கும்.அயல்நாட்டு ஒப்பந்தங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. கட்டுமானத் தொழில், நிலம் பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மனம் மகிழும் வகையில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும், எண்ணெய் வியாபாரிகளுக்கு வியாபாரம் அபிவிருத்தியாகும். தரகு மற்றும் கமிஷன் துறைகளில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும்.

பெண்களுக்கு _இல்லத்தில் சுபகாரிய விசேஷங்கள் நடைபெறும்.சொத்துக்களால் லாபம் ஏற்படும். நீண்டகாலமாக விற்க முடியாத நிலம் அல்லது வீடு இப்போது விற்பதற்கான வழிவகை கிடைக்கும். உங்கள் மகளுக்கோ மகனுக்கோ திருமண வாய்ப்புகள் உண்டாகும். திருமணமாகாத பெண்களாக இருந்தால் இப்போது திருமணம் நடப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட காலம் ஏங்கியவர்களுக்கு இந்த வாரம் சாதகமான ரிசல்ட் கிடைக்கும்.வேலை கிடைக்காத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு _உங்களின் அசாத்திய துணிச்சலால் தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி பயில்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களால் கவனச்சிதறல் ஏற்படும்.

பொதுப்பலன் -பயணங்களால் ஆதாயம் உண்டு. நிலம், பூமி சம்பந்தப்பட்ட லாபம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புகள் உண்டு.

திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இந்த 5 நாட்களும் உங்களுக்கு யோகங்களையும் நல்ல பலன்களையும் தரும். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பெரிய நன்மைகள் ஏதும் நடக்காது.

வணங்க வேண்டிய தெய்வம் : விஷ்ணு துர்கைக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். நெய் தீப வழிபாடு இன்னும் நல்ல நல்ல பலன்களைத் தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x