Last Updated : 25 Feb, 2015 10:18 AM

 

Published : 25 Feb 2015 10:18 AM
Last Updated : 25 Feb 2015 10:18 AM

வடகொரியா கோரிக்கை நிராகரிப்பு: ராணுவ பயிற்சி நடத்துவதில் தென்கொரியா, அமெரிக்கா உறுதி - மார்ச் 2-ல் தொடங்குகிறது

தென் கொரியா - அமெரிக்கா ராணுவங்கள் மார்ச் 2-ம் தேதியில் இருந்து ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

ஆண்டுதோறும் இந்த கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது. ‘இந்தக் கூட்டுப் பயிற்சி எங்கள் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை' என்று கூறி வடகொரியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்தக் கூட்டுப் பயிற்சி தங்களின் ராணுவத்திறனை பரிசோதிக்கவே நடத்தப்படுகிறது என்று தென்கொரியாவும் அமெரிக்காவும் கூறிவருகின்றன.

இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சியை நிறுத்தினால், தான் அணு ஆயுதசோதனைகளை மேற்கொள்வதை நிறுத்திக்கொள்வதாக வடகொரியா கூறியிருந்தது. ஆனால் அதனை இருநாடுகளும் ஏற்கவில்லை. மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் தென்கொரியாவில் இருநாட்டு ராணுவங்களும் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன. இந்த முகாமில் `கீ ரிசால்வ்' மற்றும் `ஃபோல் ஈகிள்' என இரண்டு விதமான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஒரு வார `கீ ரிசால்வ்' பயிற்சியில் கணினி தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ விவகாரங்களில் பயிற்சியளிக்கப்படும். 8 வார `ஃபோல் ஈகிள்' பயிற்சியில் முப்படைகளும் கலந்துகொள்கின்றன. 2 லட்சம் தென் கொரிய வீரர்களும் 3,700 அமெரிக்க வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

பயிற்சிகள் ஏப்ரல் 24-ம் தேதி முடிவடையும். வடகொரியாவின் விமர்சனங்கள் எதுவும் இந்தக் கூட்டுப் பயிற்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று என்று தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x