Published : 20 Feb 2015 12:06 PM
Last Updated : 20 Feb 2015 12:06 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வழக்கு: விசாரணையை விரைவுபடுத்த அரசு நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்கக் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழக மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருவதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர் கே.உலகநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்), காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் மேலாண்மை குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசும்போது கூறியதாவது:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை ஆணை வெளியிட்டு 6 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆணை அரசிதழில் பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி அரசாணை பெற்றுத்தந்தார். கடந்த 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் இறுதி ஆணை வெளியிட்ட பிறகு, அந்த ஆணையின் பரிந்துரைப்படி, காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்குமாறு பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மத்திய அரசு மேற்கண்ட வாரியத்தையும் குழுவையும் அமைக்காததால் அவற்றை உடனடியாக அமைக்குமாறு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 18.3.2013 அன்று ஓர் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இறுதி ஆணையை செயல்படுத்த தற்காலிக ஏற்பாடாக மத்திய நீர்வளத்துறை செயலரின் தலைமையில் மாநில தலைமைச் செயலர்களைக் கொண்டு காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.

அதன்படி, 22.5.2013 அன்று இடைக்கால ஏற்பாடாக காவிரி மேற்பார்வைக் குழு அமைத்து மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இக்குழுவின் கூட்டங்கள் இதுவரை 4 முறை நடைபெற்றுள்ளன. இந்த குழு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைக்க உத்தரவு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 11.11.2013 அன்று ஓர் இடைக்கால மனுவை தாக்கல் செய்தது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி 5.12.2014 அன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 12.12.2014 அன்று பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேற்கண்ட இரு அமைப்புகளையும் உடனடியாக அமைக்கக்கோரி கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினை குறித்து ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x