Published : 05 Feb 2015 09:50 AM
Last Updated : 05 Feb 2015 09:50 AM
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 81 படகுகளை விரைந்து தமிழகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கையிலுள்ள இந்தியத் தூதருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹாவுக்கு, தமிழக கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் டாக்டர் எஸ்.விஜயக்குமார் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
இந்திய வெளியுறவுத்துறை இணைச் செயலர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசின் வசம் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 81 படகுகளை மீட்பது குறித்து, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரை அணுகுமாறு தெரிவித்துள்ளார். படகுகளை மீட்பது குறித்து அதன் உரிமை யாளர்கள் இலங்கை அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி விண்ணப்பம் அளிக்க வேண்டு மென்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியத் தூதர் தெளிவாக விளக்க வேண்டும். கடந்த காலங்களில் மீனவர்கள் விடுதலை செய்யப்படும்போதே அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன. விடுதலையாகும் மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை மீனவர்கள் விடுதலையான பிறகும் படகுகள் இலங்கை அரசின் வசமே உள்ளன. படகுகளுக்காக தனியாக விண்ணப்பிக்கும் முறை இதுவரை இல்லை.
படகுகள் பாதிப்பு
தமிழக அரசு இந்தப் பிரச்சினைகளில் பல முறை கடிதம் மூலமாக படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வந்தது. தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் பாதுகாப்பற்ற முறையில் நீரில் நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதால், அவை கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த படகுகளை விரைந்து தமிழகத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இதுகுறித்து இரு நாட்டு தூதர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT