Published : 13 Jan 2015 08:26 PM
Last Updated : 13 Jan 2015 08:26 PM

ராமேசுவரம் மீனவர்கள் மீது மது பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல்

இலங்கையில் புதிய அதிபர் சிறிசேனா அரசு அமைந்துள்ள நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து எறிந்து மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு 6 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் 10க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்ததுடன் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலுக்குள் கொட்டினர். மேலும் குடிபோதையில் மது பாட்டில்களை மீனவர்களின் படகுகளில் எறிந்ததில் ராமர் என்ற விசைப்படகு ஓட்டுநர் காயமடைந்தார். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் பலர் பாதியிலேயே கரை திரும்பினர்.

இலங்கையில் ராஜபக்சே ஆட்சி முடிவுக்கு வந்து புதியதாக அதிபர் சிறிசேனா பதிவியேற்றுள்ள நிலையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் தாக்குதலை தொடர்ந்துள்ளது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இனியும் தொடராமல் மத்திய, மாநில அரசுகள் அதிபர் சிறிசேனா தலைமையிலான புதிய அரசிடம் பேசி நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x