Last Updated : 20 Dec, 2014 02:56 PM

 

Published : 20 Dec 2014 02:56 PM
Last Updated : 20 Dec 2014 02:56 PM

வெள்ளை அடிக்க வண்ண வண்ண யோசனைகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனப் பண்டிகைகள் வரிசையாக அணிவகுத்து நிற்கும் காலம் இது. உங்கள் வீட்டைப் பண்டிகைகளுக்கு ஏற்பக் கோலாகலமாக மாற்றப் பல திட்டங்கள் தீட்டிக் கொண்டிருப்பீர்கள். புது வருடம் பிறந்தால் வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது நம்மிடையே காலங்காலமாக இருந்துவந்த வழக்கம். முன்பெல்லாம் வீட்டு உறுப்பினர்களே ஒன்றிணைந்து சுவருக்குச் சுண்ணாம்பு பூசி, வண்ணம் தீட்டுவார்கள். அதில் கிடைக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் அலாதியானது. ஏனோ அந்த வழக்கம் இப்போது அருகிவிட்டது. உங்கள் வீட்டை நீங்களே புதுப்பிக்க இதோ சில சுலபமாக வழிகள்:

முதலில் செய்ய வேண்டியவை

வெள்ளை அடிப்பது என்பது வீட்டைப் புதுப்பிக்கும் ஒரு முறை. இதை வருடா வருடம் முறையாகச் செய்யும்போது வீட்டுச் சுவர்களின் தன்மையும், பளபளப்பும் பாதுகாக்கப்படும். அதிலும் வெள்ளை நிறத்தைப் பூசும்போது வீடு விசாலமாகக் காட்சி அளிக்கும். ஆனால் எடுத்தயெடுப்பில் சட்டென வெள்ளை பெயிண்டை எடுத்து சுவரில் பூசிவிடக் கூடாது. வண்ணம் பூசுவதற்கு முன்னால் உங்கள் வீட்டுச் சுவரை வெள்ளை அடிப்பதற்கு ஏற்ற மாதிரி தயார்படுத்த வேண்டும்.

சோப்பு கரைத்த தண்ணீரை கொண்டு சுவரில் படிந்திருக்கும் புகை, எண்ணெய்க் கறை, திட்டு திட்டாகப் படிந்திருக்கும் உணவுப் பண்டங்களின் கறை போன்றவற்றை முதலில் துடைத்தெடுக்க வேண்டும். உடைப்பு, துவாரங்கள், விரிசல் இருந்தால் மக்கு பூசுவது சிறந்தது. உடைப்பு பெரிதாக இருக்குமானால் சிமெண்ட் பூசி அப்பகுதியைச் சமன்படுத்தி 48 மணி நேரம்வரை உலரவிட வேண்டும்.

கலவை தயாரிப்பு

1 கிலோ சுண்ணாம்புப் பொடியில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். பார்ப்பதற்கு நீர்த்துப்போனது போலத் தோன்றும். ஆகையால் 24 மணி நேரம் இந்தக் கலவையை அசைக்காமல் ஒரு இடத்தில் வைக்கவும்.

அடுத்த நாள் ஒரு சல்லாத் துணியில் சுண்ணாம்புக் கலவையை ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 20 கிராம் அளவில் ஃபெவிகாலை எடுத்துச் சுடு நீரில் கலந்து சுண்ணாம்புக் கலவையில் ஊற்றவும். மொத்தக் கலவையில் 3 கிராம் இண்டிகோ நிறத்தைக் கரைத்தால் சுவரில் பூச ஏதுவான சுண்ணாம்புக் கலவை தயார்.

பூசலாம் வாங்க!

சுவரில் சுண்ணாம்பு பூசுவது என்பது ஒரு தனிக் கலை. அதற்கென்று சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தூரிகை மேலிருந்து கீழே வீசுவது அல்லது இடதுபுறத்திலிருந்து வலது புறத்திற்கு வீசுவதுதான் சுண்ணாம்பு தீட்டும் முறை. குறுக்கு மறுக்காகப் பூசினால் திட்டுதிட்டாகக் காட்சியளிக்கும். முதல் பூச்சு நன்கு காய்ந்த பின்னரே அடுத்த கோட்டிங் தர வேண்டும். உங்கள் தூரிகையின் அச்சு தெரியாதபடி பூசுவதே சிறந்த பூச்சு முறை. முதலில் கூரை, பரணில் சுண்ணாம்பு பூசிவிட்டுப் பின்னர் சுவரில் பூச வேண்டும். உங்கள் சுவருக்கு வண்ண பெயிண்ட் பூசுவதாக இருந்தால், இரண்டு பூச்சு வெள்ளை அடித்தப் பின்னரே நீங்கள் தேர்ந்தெடுத்த பெயிண்டைப் பூச வேண்டும்.

இப்போது பாருங்கள் உங்கள் வீட்டை நீங்களே புதுப்பித்துவிட்டீர்கள். நீங்களும் உங்கள் இனிய இல்லமும் இணைந்து புத்தாண்டை வரவேற்கத் தயார்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x