Published : 01 Sep 2014 07:01 PM
Last Updated : 01 Sep 2014 07:01 PM

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றும் அ.தி.மு.க. ஆட்சி: கருணாநிதி

மாற்றுத் திறனாளிகளிடம் பரிவு காட்ட அதிமுக ஆட்சிக்கு மனமில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடித வடிவ அறிக்கை வருமாறு:

மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய் பேச முடியாதவர் களாய், கைகால்களைப் பயன்படுத்த இயலாத வர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனை வரையுமே “ஊனமுற்றோர்” என்பதற்குப் பதிலாக, ஓர் அவயவத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றைய திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் அவர்களை “மாற்றுத் திறனாளிகள்” என்று அழைக்கின்ற முறை குறித்து 2007ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதத்தின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் இணக்கஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அதில் நமது இந்திய நாடு ஏழாவது நாடாகக் கையொப்பம் இட்டுள்ளது. அந்த இணக்க ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் நாள் முதல், “சர்வதேச மனிதஉரிமைச் சட்டம்” ஆக அமைந்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இனி “ஊன முற்றோர்” என்ற சொல்லால் அழைக்கப்படு பவர்கள், “மாற்றுத் திறனாளிகள்” என அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தேன்.

அதனைத் தொடர்ந்து 19.3.2010 அன்று புதிய சட்டப்பேரவையில் முதன்முதலாக அளிக்கப்பட்ட 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் “மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும்” என அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், தலைமைச் செயலகத்தில் “மாற்றுத் திறனாளிகள் நலத்துறை” எனும் புதிய துறை 27.3.2010 அன்று உருவாக்கப்பட்டு, அத்துறையின் அரசுச் செயலாளராக ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பொறுப்பேற்றார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும்,“ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகம்” “மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகம் (Commissionerate for the Welfare of the Differently Abled)எனவும்,“தமிழ்நாடு ஊனமுற்றோர் நல வாரியம்” “தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் (Tamil Nadu Welfare Board for the differently abled)எனவும் குறிப்பிடப்படும் என்றும்,“ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர்” “மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் (Commissioner for the Differently Abled)) எனவும்,

“மாவட்ட ஊனமுற்றோருக்கான மறுவாழ்வு அலுவலர்” “மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (District Differently Abled Wellfare Officer) எனவும், குறிப்பிடப்படுவார்கள் என்று கழக அரசு 27.3.2010 அன்று ஆணை பிறப்பித்து, நடைமுறைப்படுத்தியுள்ளது.

2010-2011இல் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கெனப் பேரவையில் தனியே, “மானியக் கோரிக்கை” அளிக்கப்பட்டு, அதன்மீது மாற்றுத் திறனாளிகள் நலம் குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய திட்டங்களை உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006 ஆம் ஆண்டில் 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில்; கழக அரசு மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி ஒதுக்கீட்டினைப் படிப்படியாக உயர்த்தி, 2010-2011ஆம் ஆண்டில் 176 கோடி ரூபாய் என மூன்றரை மடங்கு உயர்த்தி ஒதுக்கீடு செய்தது.

தமிழக முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் 26.4.2010 அன்று தி.மு. கழக ஆட்சியில் திருத்தி அமைக்கப்பட்டது. 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினராக பதிவு செய்யப்பட்டனர். கழக ஆட்சிக் காலத்தில் 1 இலட்சத்து 99 ஆயிரத்து 856 மாற்றுத் திறனாளி கள் நல வாரிய உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

நான் கதை வசனம் எழுதிய இளைஞன் திரைப் படத்திற்காக கிடைத்த 45 இலட்சம் ரூபாய் தொகையினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, பின்னர் அதனை 2010-2011ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளித்திட தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்திற்கு வழங்கப்பட்டது.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர்கள் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, 200 மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் நாகராஜன் என்பவர் “ஒவ்வொரு ஆண்டும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல கோடி ரூபாய் செலவிடப் படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் மடக்கு குச்சிகள், கண்ணாடி போன்றவற்றை வழங்கி யதைத் தவிர்த்து, வேறு எதையும் நடைமுறைப் படுத்தவில்லை” என்று அ.தி.மு.க. அரசின் மீது குற்றஞ்சாட்டிய செய்தி “தினமலர்” நாளேட்டில் 19-9-2013 அன்று வெளிவந்தது.

ஆனால், தி.மு. கழக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்திய போது அரசின் அணுகுமுறை என்ன தெரியுமா? சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக காலை ஏடுகளில் செய்தியைப் படித்துவிட்டு, காலை உணவு கூட அருந்தாமல் அப்படியே கீழே இறங்கி காரில் ஏறி நேராக அவர்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கே சென்று அவர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்படும் என்று கூறி போராட்டத்தை நிறுத்தச் செய்தவன் நான்.

மாற்றுத் திறனாளிகளை அ.தி.மு.க. அரசு சந்திக்கவே பல முறை மறுத்து, அவர்கள் போராட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் பெயரால் சில அறிவிப்புகள் மட்டும் வந்தன. அந்த அறிவிப்பில் “பி.எட்., படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பி.எட்., பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப் பணியிடங்களிலும் பணி அமர்த்தப்படுவர்” என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் “இதற்கான அரசாணை கூட இன்னும் வராமல் மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று 24-11-2013 தேதி “தி இந்து” (தமிழ்) செய்தி வெளியிட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் பார்த்து உதவித் தொகை பெறலாம் என்று நம்பிக்கையோடு வந்த செல்வராஜ் என்ற மாற்றுத் திறனாளியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து விட்ட காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டு மாண்டுவிட்டார் என்ற செய்தியும் இந்த ஆட்சிக் காலத்திலேதான் வந்தது.

கழக ஆட்சிக் காலத்தில் மாற்றுத் திறனாளி களுக்காக எந்த அளவுக்கு சாதனைகளைச் செய்தோம் என்பதற்கு மாறாக இன்று அ. தி.மு.க. ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நிலை என்ன? இதோ இன்று (1-9-2014) வெளி வந்துள்ள செய்தி!

“தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான சட்டம், கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது என்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவி ஜான்சி ராணி கூறும்போது, தமிழகத்தில் 2011இல், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் எண் ணிக்கை 22 இலட்சம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 2014இல் அ.தி.மு.க. ஆட்சியில் 16 இலட்சம் எனக் குறைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கான கணக்கெடுப்பு, புள்ளி விவரம், ஆவணம் எதுவும் வெளியிடப்படவில்லை. எதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைந்தது, அதற்கான காரணங்களை அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். பல ஆண்டாகக் கோரியும் மாற்றுத் திறனாளிக்கு பராமரிப்புத் தொகையாக 1000 ரூபாய் வழங்க அரசு முன்வரவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே மாற்றுத் திறனாளிக்கான சான்று அளிக்கப்பட்டு, நிதி உதவிச் சலுகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 60 சதவீதம் தொடங்கி அதற்கும் அதிகமான ஊனம் இருந்தால் மட்டுமே, மாற்றுத் திறனாளி அங்கீகாரம் வழங்கப்பட்டு நல உதவி பெறும் நிலை உள்ளது. அத்துடன் அந்தக் குடும்பத்தின் சொத்து, 5000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது. அக்குடும் பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் இருக்கக் கூடாது. ஆண்டு வருவாய், 24 ஆயிரம் ரூபாய்க் குள் இருக்க வேண்டும். இங்கு மாற்றுத் திறனாளிக்கு எதிரான சட்ட விதிமுறை கடுமை யாகப் பின்பற்றப்படுகிறது” என்று மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தலைவி ஜான்சி ராணி தெரிவித்திருக்கிறார்.

இதிலிருந்து மாற்றுத் திறனாளிகள் இந்த ஆட்சியிலே எப்படியெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இன்று வந்துள்ள செய்தியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இங்கே சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட இதர ரேஷன் பொருள்கள் வழங்குவது கிடையாது என்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான சட்ட விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது என்றும் அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றத்தின் மூலமே பெற வேண்டி உள்ளது என்றும் அந்த அம்மையார் வேதனைப்பட்டுள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தாமல் அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது என்றும் எந்த ஒரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்றும் அந்தச் செய்தியிலே கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சலுகைகளைப் பெற வருவாய் வரம்பு இருப்பதாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கழக ஆட்சியில் 2010-2011ஆம் ஆண்டு பேரவையில் நிதியமைச்சர் பேராசிரியர் படித்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 42, பத்தி 89இல் “மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்ச வரம்பு முற்றிலும் நீக்கப்படும். மாற்றுத் திறனுடையோர் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களித்த கழக அரசு, வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக் கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்களிக்கும்” என்றெல்லாம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆண்டு வருவாய் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டுமென்று நிர்ணயம் செய்திருப்பது மாற்றுத் திறனாளிகளுக்கு பெரும் பின்னடைவாகவே ஆகிவிடும்.

கழக ஆட்சியில் படிக்கப்பட்ட அந்த நிதிநிலை அறிக்கையிலேயே “தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, வருவாய் உச்ச வரம்பு இன்றி, 500 ரூபாய் வீதம் மாதாந்திர உதவித் தொகையை கழக அரசு வழங்கி வருவதால் 50 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். கண் பார்வையற்றோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு உதவித் தொகைகள் இரட்டிப் பாக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆசிரியப் பணி புரிய சிறப்பு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காது கேளாதோருக்குக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிறப்புக் கல்வி அளிக்கும் பள்ளிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்பட்டுள்ளன. கை, கால் ஊனமுற்றோருக்குப் பயணச் சலுகைகளுடன், நாட்டிலேயே முதல் முறையாக மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டிகள் முதலான பல்வேறு உதவிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற பார்வையற்றோருக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டம், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுபடுத் தப்பட்டு 60 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் 2008-2009ஆம் ஆண்டிலிருந்து 1000 பேருக்கு மாத உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2005-2006ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலனுக்குச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 49 கோடி அளவாக இருந்ததை, வரும் நிதியாண்டில் ரூபாய் 176 கோடியாக உயர்த்தியுள்ளதுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துறை என்னுடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும்”என்று கழக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையிலே எழுதப்பட்டிருந்தது. இந்த விவரங்களிலிருந்து மாற்றுத் திறனாளிகள் கழக ஆட்சியில் எந்த அளவுக்கு பாதுகாக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், தற்போது அவர்கள் எந்த அளவுக்கு அவதியுறுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். காது கேளாதோர் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பதற்கோ, கண் தெரியாதோர் தமது தேவைகளைத் தெரிவிக்க வந்தால் அவர்களைக் கண் திறந்து பார்ப்பதற்கோ, வாய் பேச முடியாதோரின் வாழ்க்கை நிலையை வாய் விட்டுப் பேசுவதற்கோ, கை கால்களைப் பயன்படுத்த இயலாதோருக்கு உதவிக் கரம் நீட்டுவதற்கோ ஜெயலலிதா ஆட்சியினர் யாரும் முன்வரவில்லை; மொத்தத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் பரிவு காட்ட அ.தி.மு.க. ஆட்சிக்கு மனமில்லை.

இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x