Published : 03 Sep 2014 12:29 PM
Last Updated : 03 Sep 2014 12:29 PM

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க விரைவு நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும், 63 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை சிறைப்பிடித்துச் செல்வதும் தொடர்கிறது. இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த 1-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

அதில் ஒரு விசைப்படகு இயந்திரக் கோளாறு காரணமாக மூழ்கியது. அதிலிருந்த மீனவர்கள் தப்பி மற்றொரு படகில் ஏறினர். ஆனால், அப்போது அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் 9 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர். காங்கேசன்துரை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் 9 பேரையு செப்டம்பர் 16 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல், கடந்த 2-ம் தேதி (நேற்று) ராமநாதபுர மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில், பாரம்பரிய கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 319 பேர், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களது 62 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசின் முயற்சியால் 319 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும், 63 படகுகளையும் உடனடியாக விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x