Published : 29 Apr 2015 10:25 PM
Last Updated : 29 Apr 2015 10:25 PM

நேபாளத்தில் இருந்து 47 தமிழர்கள் சென்னை திரும்பியுள்ளனர்

நிலநடுக்கத்தின்போது நேபாளத்தில் சிக்கிய 367 தமிழர்களில் இதுவரை 47 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சுற்றுலா பயணிகளும், ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட பக்தர்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 367 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்பட்டு, பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில், ‘‘நேபாளத்தில் சிக்கிய தமிழகப் பயணிகளையும், பக்தர்களையும் கணக்கிடுவதில் குழப்பங்கள் நீடித்தன. 29-ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 367 பேர் அங்கு சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களில் 34 பேர் தமிழக அரசின் ஏற்பாட்டில் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் தாங்களாகவே சென்னை திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களும் ஓரிரு நாளில் சென்னை அழைத்து வரப்படுவார்கள்’’ என்றார்.

50-க்கும் அதிகமானோர் நேபாளத்தில் இருந்து டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனியார் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் சென்றவர்களில் பலர் பாதுகாப்பாக டெல்லி திரும்பியுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x