Last Updated : 25 Apr, 2015 11:05 AM

 

Published : 25 Apr 2015 11:05 AM
Last Updated : 25 Apr 2015 11:05 AM

வண்ணம் பூசும் முன்...

பொங்கல் பண்டிகை வந்தால் பலருக்கு வீடுகளுக்கு வண்ணம் பூசுவதும் ஞாபகத்துக்கு வந்துவிடும். இப்போதேல்லாம் பொங்கல் பண்டிகை காலம் மட்டுமல்ல, எப்போது வேண்டுமானாலும் வீடுகளுக்கு வண்ணம் பூசுகிறார்கள். எப்போது வண்ணம் பூசினாலும் சரி, அதற்கு முன்பு திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

ஒரு காலத்தில் ஒரே நாளில் வீட்டில் வெள்ளை அடித்துவிடுவார்கள். பெரும்பாலும் சுண்ணாம்பு பூச்சாக இருக்கும் என்பதால் அதற்கு ஒரு நாளே போதுமானதாக இருந்தது. இப்போது அப்படியல்ல. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு வண்ணம் பூசுபவர்கள் இருக்கிறார்கள். எனவே வண்ணம் பூசுவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். ஒரே நாளில் முழு வீட்டுக்கும் வண்ணம் பூசப் போகிறோமா, தவணை விட்டு அறை, அறையாக வண்ணம் பூசப்போகிறோமா என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

வீட்டில் உள்ள அறைகளில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே ஆராயுங்கள். அந்தப் பொருளின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். இதுதொடர்பாக இணையதளத்தில் பயனுள்ள தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் சந்தையில் கிடைக்கும் பெயிண்டுகள் குறித்து விசாரியுங்கள். அளவு, தரம், வண்ணப் பொருத்தம் ஆகிய ஆலோசனைகள் சந்தையில் கிடைக்கும்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தால் வீட்டின் உள்பகுதி பற்றி மட்டும் யோசித்தால் போதுமானது. தனி வீடாக இருந்தால் வெளிப்புறத்துக்கு வண்ணம் பூசுவது குறித்தும், அதற்கு மழை, வெயிலில் தாங்கும் அளவுக்கு வண்ணம் பூசுவது பற்றித் திட்டமிடுவது நல்லது.

சுவர்களை அளந்தால் எவ்வளவு பெயிண்ட் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறியலாம். சிலர் பெயிண்டை அதிகமாக வாங்கிவிட்டு அதை வீணாக்கிவிடுவார்கள். இதைத் தவிர்க்க முன்கூட்டியே திட்டமிடலாம். சுவரின் மேற்பரப்பு எந்த இயல்பில் உள்ளது என்பதைப் பொறுத்தும் பெயிண்டின் அளவும், வகையும் மாறுபடும். ஒரு வேளை ஏற்கெனவே இருந்த வண்ணத்தையே மீண்டும் அடிக்க விரும்பினால், குறைவான அளவு பெயிண்ட்தான் தேவைப்படும்.

பெயிண்ட் அடிக்கப்போகும் சுவரில் ஏற்கனவே வெளிர் நிறத்தில் வண்ணம் பூசியிருந்தால், குறைவான அளவு பெயிண்ட்டே தேவைப்படும். அடர் நிறமாக இருந்து, புதிய வண்ணம் பூச விரும்பினால், புதிய பெயிண்டை இரண்டு முறை பூச வேண்டியிருக்கும்.

வண்ணம் பூச தொழிலாளர்களை அழைத்தால், வண்ணம் பூசுவதற்குத் தேவைப்படும் எல்லாப் பொருட்களையும் கொண்டு வந்துவிடுவார்கள். ஒரு வேளை நீங்களே பெயிண்ட் அடிக்க முடிவு செய்தால் , வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது நல்லது. ஏணி, பெயிண்ட்டையும் பிரைமரையும் கலக்க காலி டப்பாக்கள், சுவர்கள் மற்றும் மேற்கூரையைச் சுத்தப்படுத்த உப்புத்தாள், தரையில் சிந்தும் பெயிண்ட் துளிகளைத் துடைக்க துணி, தரமான ப்ரஷ், ரோலர்கள், ஸ்ப்ரே கன் ஆகியவை வேண்டும்.

வண்ணம் பூசுவதற்கு முன்பு சுவரை உப்புத்தாள் கொண்டு தேய்க்க வேண்டும். பலரும் இப்படிச் செய்யமாட்டார்கள். பழைய வண்ணத்தை முழுமையாக அகற்றினால்தான் புதிய வண்ணம் பூசும்போது நன்றாகச் சுவரில் ஒட்டும். சுவர்களில் விரிசலோ, ஓதமோ இருந்தால் வண்ணம்பூசுவதற்கு முன்பே அதைச் சரிசெய்துவிடுங்கள். சுவர் மற்றும் மேற்கூரைகளுக்கு வண்ணம் பூசிய பின், கதவு, ஜன்னல்களுக்கு வண்ணம் பூசலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x