Published : 29 Apr 2015 09:15 PM
Last Updated : 29 Apr 2015 09:15 PM

நேபாளத்துக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி நிதி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளும், சொத்து இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நேபாள எல்லையில் அமைந்துள்ள பிகார், மேற்குவங்க மாநிலங்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்துக்கு புனித யாத்திரை சென்றவர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து நேபாளத்துக்குச் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நிலநடுக்கத்தில் சிக்கி பரிதவித்தனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம், பேரிடர் நிர்வாக அலுவலகம் ஆகியவற்றிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் இருந்து திரும்புபவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இலவசமாக தங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்படும் என அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x